ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 4
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 4
எவ்வளவு காலம்தான் நானும்…..
வீட்டில் இன்று இரவு விருந்துக்கு ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது வினித் அமெரிக்காவிலிருந்து படித்து முடித்து வந்திருக்கிறான். அங்கேயே வேலைக்கும் ஏற்பாடு செய்து விட்டான். அவன் திரும்பும் முன் அவனுக்கு மணம் முடிக்க பெற்றோர் விரும்பினர். வனிதா வினித்தின் மாமா பெண்; சென்னை நகரில் பிறந்து வளர்ந்த நாகரிக பெண்; அவள் தாயார் ரோஸி டெல்லியில் பிறந்து வளர்ந்தவள். தன்னைப் பற்றியே மிகப் பெருமையாக நினைப்பவள். வனிதாவை மார்டன்கேளாக வளர்ப்பதாகச் சொல்லி அவளை எப்பொழுதும் கவுன், பேன்ட்- சட்டை போடச் சொல்வாள்.
வீட்டிற்கு யார் வந்தாலும், அவர்கள் இளைஞர்களாக இருப்பினும், அவர்களை தானே வரவேற்று உபசரித்து பேசுவாள். அவர்களின் கைகளைப்பிடித்துக் குலுக்குவது,தோள்மேல் தட்டித்தட்டி பேசி சிரிப்பது எதுவுமே மகள் வனிதா விற்கு பிடிப்பதில்லை; அவள் அப்பாவிற்கும் பிடிக்காது என்று தெரியும்.ஆனால் இருவருமே ரோஸியிடம் இது பற்றிப் பேசத் தயங்கினர்.
ஆனால் எவ்வளவு காலம்தான் வனிதாவும் பொறுப்பாள்…..அம்மா அவளை இன்றும் விருந்திற்காக என்றும் போல் கவுன் போடச்சொல்லி எடுத்து வைத்து விட்டுப் போனாள். வனிதா மனதில் ஓர் முடிவு எடுத்தாள். அழகான அவள் வெண்ணிறஅழகுக்கு பொருத்தமான ரோஜா கலர் புடவையை அதற்கு மேட்சாக கண்கவர் டிசைனர் பிளவுஸ் போட்டு அணிந்துகொண்டாள்; தலையை பின்னலிட்டு நெற்றிச்சுட்டி அணிந்து,அலங்கார பொட்டிட்டு, மல்லிகை மலர் சூடி, பெண்ணுக்கு உரிய நளினத்துடன் விருந்து நடக்கும் அறைக்கு வந்தாள்.
வினித் மட்டுமல்லாமல் அனைவரும் அவளை வியப்புடன் பார்த்தனர். வினித்தின் பார்வையில் காதல் தெரிந்ததும் ரோஸியின் தாயுள்ளம் தடம்புரண்டது; அவள் சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மற்ற வேலைகளை கவனிக்க………..