STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 14 மாறியும் மாறாத ஒப்பந்தங்கள்

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 14 மாறியும் மாறாத ஒப்பந்தங்கள்

3 mins
165


                 கதையின் நாயகி நர்ஸ் மேரி. பொதுவாக ஆஸ்பத்திரியில் எல்லோருக்கும் அவளை சிஸ்டர் மேரி என்பதைவிட சிடுமூஞ்சி மேரி சிஸ்டர் என்று சொன்னால்தான் புரியும். அந்த அளவிற்கு சிடுசிடுவென ஆஸ்பத்திரியில் வலம் வரும் மேரியின் சிறுமிப் பருவம் குறும்புத்தனமும் கும்மாளமுமாக இருந்தது தான்.

                     நம் நாடு சுதந்திரம் வாங்கிய போது மக்கள் தொகை 30 கோடி. மக்கள் தொகை கட்டுப்பாடு பேசப்படாத காலகட்டம். மேரியின் தாய் தகப்பனாருக்கு அந்த சமயத்தில் மொத்தம் எட்டு குழந்தைகள்; முதல் நான்கு பெண் குழந்தைகளுக்கு பின் வரிசையாக மூன்று ஆண் குழந்தைகள்; இவர்களின் கடைக் குட்டியாக பிறந்தவள்தான் மேரி, கடைக்குட்டி என்பதாலேயே மிகுந்த செல்லம். 4,5 வயது சிறுமியாக இருக்கும்போது சுட்டித்தனம் அதிகமாயிற்று. குடும்பத்தினருடன் ஞாயிறுதோறும் சர்ச் போவது வழக்கம். சர்ச்சில் வழிபாடு நடக்கும் போது மேரி மட்டும் தன் வயது குழந்தைகளோடு சர்ச்சுக்கு வெளியே உள்ள திறந்த வெளியில் ஓடிப் பிடித்து விளையாடுவாள். அங்கே இருக்கும் கடைகளில் தான் கேட்பதை அப்பா வாங்கி கொடுக்காவிட்டால் தரையில் விழுந்து புரண்டு அழுவாள். 7,8 வயதிலும் வழிபாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு சர்ச்சுக்குப் பக்கத்து மாந்தோப்பில் சுவர் ஏறி குதித்து சென்று மாங்காய் அடித்து சாப்பிடுவாள். அப்பா கூப்பிடும் சத்தம் கேட்டால் மீண்டும் சுவர் ஏறி குதித்து ஓடி வரும் போது காலில் அடிபட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துள்ளிக் குதித்து ஓடி வருவாள். இவ்வாறு சுட்டித்தனத்துடன் தான் அவளது சிறுமிப் பருவம் கடந்தது.


       அவளுக்கு வயது வரும் சமயத்தில் வீட்டில் மூத்த பெண்கள் திருமணமாகி ஒவ்வொருவராக தத்தம் கணவருடன் மாமியார் வீடு போய் விட்டார்கள். அண்ணன்களும் கல்லூரி, படிப்பு,வேலை என வெளியூரில் தங்க ஆரம்பித்தனர். மேரி மட்டுமே வீட்டில் அப்பா அம்மாவுடன். எப்போதும் போல் இப்போதும் மேரி சர்ச்சில் வழிபாட்டில் உட்காராமல் வெளியேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அன்று விளையாட ஒரு புதுப் பையன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் ஜோசப். பார்க்க அழகாக நிறமாக இருந்தான். சுருள்முடி அவன் முகத்திற்கு வசீகரத்தை அளித்தது. முதல்நாள் சந்திப்பிலேயே மேரிக்கும் ஜோசப்பிற்கும் பிடித்துப்போனது. இருவரும் நட்புடன் பேசி சிரித்து விளையாடினர்.


      ஒரு நாள் ஜோசப் மேரியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். இரண்டும் கெட்டான் வயது என்பதால் மேரிக்கு முதலில் எதுவும் புரியவில்லை. சில மாதங்கள் ஆயின. மேரிக்கும் ஜோசப்பின் மீது நம்பிக்கை வரலாயிற்று. இருவரும் பள்ளிப்படிப்பு முடிந்ததால் அவரவர் பாதையில் செல்லும் காலம் வந்தது. மேரிக்கு வாழ்க்கையின் லட்சியம் நர்சாக வேண்டும் என்பது. உள்ளூர் கல்லூரியில் நர்ஸ் கோர்ஸ் இருந்ததால் மேல்படிப்பை தொடர தடை இல்லாமல் இருந்தது. ஆனால் ஜோசப் சிரித்து சிரித்துப் பேசினாலும் தன் வாழ்க்கை லட்சியத்தை அடைய எந்த ஊருக்கும் செல்ல புறப்படத் தயாராக இருந்தான். அவன் விருப்பப்படியே பெங்களூரு ஏரோநாட்டிக் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்ததும் கிளம்ப ஏற்பாடாயிற்று.


            புறப்படும் முன் சர்ச்சின் வெளியே வழக்கம்போல் சந்திக்கும் இடத்தில் மேரியை சந்தித்து அவள் கையில் சத்தியம் செய்து கொடுத்தான்.தான் படிப்பு முடிந்து வந்ததும் அவளை ஏற்றுக் கொள்வதாக.

            வருடங்கள் ஓடின. மேரியின் நர்ஸ் ட்ரெயினிங் முடிந்து உள்ளூர் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை கிடைத்தது அவளுக்கு மட்டுமல்ல அம்மா அப்பாவிற்கும் சந்தோஷம். ஏனென்றால் அவ்வயதானவர்களை கவனிக்க தற்சமயம் மேரியை விட்டால் வேறு யாருமில்லை. மற்ற பிள்ளைகள் அனைவரும் தத்தம் வாழ்க்கையில் பிஸியாகிவிட்டனர்.


   மேரிக்கும் நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டி அம்மா அப்பா இருவரும் ஞாயிறுதோறும் சர்ச்சில் கர்த்தரிடம் வேண்டிக்கொள்வார்கள். மேரி இப்போதெல்லாம் சர்ச் வழிபாட்டில் மிகவும் ஈடுபாட்டோடு கலந்து கொள்ள ஆரம்பித்தாள். படிப்பு முடிந்து ஜோசப் லீவில் ஊருக்கு வந்தான். மேரி மிக ஆவலுடன் அவனைப் பார்க்கச் சென்றாள். சர்ச்சில் இருவரும் சந்தித்தனர். ஜோசப்பின் நடை உடை பாவனைகள் மிகவும் மாறித் தெரிந்தன. அவன் பைலட் டிரெயினிங்கிற்காக மீண்டும் பெங்களூரு செல்ல வேண்டும். வேலை கிடைத்தபின் பல நாடுகளுக்கு பறக்கும் கனவில் மிதந்து கொண்டிருந்தான்.


மேரியும் தன் வாழ்க்கை கனவுகளோடு அவனைப் பார்த்தாள். அவனோ தத்துவம் பேசினான்,” நாம் வாழ்க்கையில் சில நேரங்களில் சில விஷயங்களை அட்ஜஸ்ட் செய்து போவதுதான் எல்லோர் முன்னேற்றத்திற்கும் நல்லது. மூன்று வருடங்களுக்கு முன் நமக்குள் பக்குவம் இல்லாமல் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை இப்போது பரிசீலனை செய்ய வேண்டும்; உன் பாதை வேறு; லட்சியம் வேறு; என் பாதை வேறு; என் லட்சியம் வேறு; எனவே நாம் நடந்ததை மறப்போம்; இனி நடக்கப் போவதை நினைத்து வாழ்வோம்.” என மிக அலட்சியமாக அவன் பேசுவதை கேட்ட மேரிக்கு ஏமாற்றத்தை விட வியப்புதான் அதிகமானது. ஜோசப் மாறுவான் என்று அவள் கனவிலும் நினைத்தது இல்லை. அவனை மனப்பூர்வமாக நம்பினாள். அவனோ அசால்ட்டாக அவளை உதறி விட்டு போய்விட்டான்.

        

 மேரி அழவில்லை; அரற்றவில்லை; அமைதியானாள். ஜோசப்பை பொறுத்தவரை அது மாறிய ஒப்பந்தம். ஆனால் மேரியை பொறுத்தவரை அது மாறியும் மாறாத ஒப்பந்தமாக அவள் வாழ்வில் நிலைத்து விட்டது. திருமண ஆசைகளை உதறிவிட்டு, வலி வேதனை என வரும் நோயாளிகளின் உலகத்தில் அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாள். வேலையில் மனதை செலுத்தி ஒரே நினைவாக வலம் வந்தாலும் அவள் முகம் மட்டும் அவ்வப்போது சிடுசிடுவென கடுப்பாகிவிடும்.அதனாலேயே ஐம்பது வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிடுசிடுவென வலம் வரும் மேரியை பலரும் சிடுமூஞ்சி மேரி என அழைப்பது வழக்கம் தானே !



Rate this content
Log in

Similar tamil story from Classics