ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 13 டீ கப்
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 13 டீ கப்
பாத்திரக்கடைகளில் கண்ணாடி டின்னர் செட், பீங்கான் செட்,ஜூஸ் டம்ளர்கள், சூப் கிண்ணங்கள் என விதவிதமான டிசைன்களில், வண்ணங்களில் அடுக்கிவைத்து இருப்பதை பார்ப்பது தனி சுகம் தான். அங்கு அலமாரிகளில் ஒரு பக்கம் பெரிய அளவிலான டீ கப்புகள் பல வண்ணங்களில், விதவிதமான டிசைன்களில்,' ஐலவ்யு’,’பெஸ்ட்மதர்’,'பிரண்ட்' என்று பலவிதமான பளிச்சிடும் எழுத்துக்களோடு அடுக்கப்பட்டிருக்கும் டீ கப்புகளில் ஏன் இத்தனை விதங்கள் என்று சாதாரணமாக நினைக்க தோன்றும். ஆனால் ஸ்ரீமதி போன்ற குடும்பத் தலைவிகளுக்கு தான் அந்த டீ கப்பின் பெருமை புரியும்.
காலை 11 மணிக்கும்,மாலை 5 மணிக்கும் அவ்வளவு பெரிய டீ கப் நிறைய டீ போட்டுக் கொண்டு பால்கனி நாற்காலியில் அமர்ந்து கொண்டு, பக்கத்து பிளாட் பால்கனி பெண்மணிகளை பார்த்து கையசைத்து கொண்டோ,பக்கத்தில் உரசி வளரும் தென்னை மரத்து அணில் குதித்து குதித்து ஓடுவதைப் பார்த்துக் கொண்டோ, காற்றை சுகமாக அனுபவித்துக் கொண்டோ அந்த டீயை பருகுவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும். இதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும்.
ஸ்ரீமதிக்கு காலையில் எழுந்ததும் குடிக்கும் காபியில் சுகம் கிடையாது. பதினோரு மணிக்கும் மாலை 5 மணிக்கும் குடிக்கும் டீ தான் அவளுக்கு மிக முக்கியம். குழந்தைகள் பள்ளிக்கும், கணவர் ஆபிஸ்க்கும் கிளம்பிச் சென்றபின் வேலைக்காரி 10 மணிக்கு வந்து பம்பரமாக ஒரு மணி நேரத்தில் வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவிச் சென்றதும், சுடச்சுட டீயை தன் மனதுக்குப் பிடித்த டிசைனில் வாங்கிய அந்த குறிப்பிட்ட பெரிய டீ கப்பில் எடுத்துக்கொண்டு பால்கனியில் அமர்ந்து இயற்கை சூழலில் ஒவ்வொரு சிப்பாக டீயை அனுபவித்து குடிப்பது அவளது அன்றாட வழக்கம்.
தனிக்குடித்தனம் வந்த புதிதில் அப்படி டீ குடிக்கும் போது பிறந்த வீட்டு நினைவுகள் இதமாக வெளியேறுவதை அவள் உணர்வாள். அம்மா,அப்பா, அண்ணன், அண்ணி, தங்கை, பள்ளித் தோழிகள் என எல்லோர் நினைவும் வந்து போகும்.அவ்வாறு வந்த நினைவுகளில் ரமணனும் ஒரு நாள் வந்து போனான். ரமணன் அவரது அண்ணனின் நண்பன். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் அவர்கள் வீட்டில் 10 குழந்தைகள் இருந்தனர். அவர்களுடன் விளையாட அவ்வப்போது அண்ணன்களின் நண்பர்களும் வருவதுண்டு. ரமணனும் வருவான்.
பையன்களுக்கு அரும்பு மீசை முளைத்த ரெண்டுங்கெட்டான் வயது. ரமணன் அடிக்கடி ஸ்ரீமதி பக்கம் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிப்பதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். ஒரு நாள் அவனுக்கு நேருக்கு நேர் நின்று,” மீசை முளைத்து விட்டா…..அதுக்காக ஜன்னல் வழியே பார்த்து சிரிக்கணுமா ? நான் அப்பாட்ட சொல்லவா” எனக் கேட்டதும் அன்று போனவன் தான் அதன்பின் அவன் அவர்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை. அதை இப்போது நினைத்தாலும் அவளுக்கு சிரிப்பு தான் வரும். டீயும், ஓடும் நினைவுகளும் மறைந்ததும் காலி கப்புடன் பால்கனியை விட்டு சமையல் அறைக்குள் ஸ்ரீமதி செல்வதை காணலாம்.