நினைவெல்லாம் கணினி!
நினைவெல்லாம் கணினி!
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
டிசம்பர் 11, 2019
உங்கள் வேலை கொடுத்த நினைவு!
கோவை என். தீனதயாளன்
கணினிப் பிரிவில் பணி புரிந்தவன் நான். தற்போது உள்ள கணினிகளின் ஆற்றலில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆற்றல் பெற்ற கணினிகளுடன் வேலை செய்த காலம் அது. விவர சேகரிப்பு அளவு (data storage), நினைவகம் (memory), வேகம் (speed) என எல்லாவற்றிலும் ‘ஆயிரத்தில் ஒரு பங்கு’ என்னும் கருத்து பொருந்தும்.
‘கணினியிலிருந்து வெளிவரும் முடிவுகளில் எந்தத் தவறும் இருக்காது - இருக்கக் கூடாது’ என்பது பொதுவான கருத்து. எல்லாவற்றிலும் கணினி நுழைந்து கொண்டிருந்த காலம் என்பதால், மற்ற துறைகள் எல்லாம் ‘மகனே, ஏதாவது தப்பு வந்தது தொலைஞ்சே’ என்கிற ரீதியிலேயே பார்வையை வைத்திருக்கும்.
ஆனால் Pitfalls என்று சொல்லக் கூடிய எதிர்பாராத அபத்தங்கள் அவ்வப்போது நேரும். சரியான உள்ளீடுகளும் (input) சரியான நிரல்களும் (program), சரியான சோதனைகளும் (testing) இல்லை என்றால் சரியான வெளியீடு (output) கிடைக்காது என்பது நிதரிசனம்.
மன்னிக்கவும். ரொம்பவும் தொழில் நுட்பத்தில் நுழைவதற்கு இது இடமல்ல.
ஒரு முறை, சம்பளப்பட்டியல் தயாரித்து முடித்து ஊதியவிவரத்தாள் பணியாளர்களுக்கு வழங்கப் பட்டது. அவரவருக்கான வருவாய், பிடித்தம், கடன் பிடித்தம், கையில் கிடைக்கும் சம்பளம் (take home pay) போன்ற விபரங்கள் அடங்கியதுதான் ஊதியத்தாள்! (payslip)
சுமார் ஒரு மணி நேரத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் இருந்து ஊதியத்தாளில் சிக்கல் என்று அழைப்பு வந்தது. விழுந்தடித்துக் கொண்டு ஓடினோம். அவர் அந்த மாதம் வீட்டுக் கடன் சில லட்சங்கள் பெற்றிருந்தார். ஆனால் அதில் அவர் பெற்றிருந்தது சில ஆயிரங்கள் என காண்பித்தது! உயர் அதிகாரிக்கே தவறு நேர்ந்து விட்டது என்று பெரிதாகப் பேசுவார்களே! எனவே தொடர்ந்து ஆய்வு செய்ததில், கணினியில், வீட்டுக் கடனை அச்சடிக்க என அதிக பட்சமாக (அதற்கு மேல் கடன் வாங்கும் தகுதி யாருக்கும் இருக்காது என்பதால்) ஆறு இலக்கங்களே ஒதுக்கப் பட்டிருந்ததும் – ஆனால் - அவர் பெற்றிருந்த கடன் தொகை ஆறு இலக்கத்தைத் தாண்டி இருந்ததால் ஏற்பட்ட குளறுபடி எனவும் கண்டு பிடித்தோம்! (இலக்கங்களை ஒதுக்க வேண்டியது அந்த காலத்து கணினி தொழில் நுட்பத்தின் கட்டாய கட்டமைப்பு)
கோவை என். தீனதயாளன்
9994291880