STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை

3 mins
255

         

                   சென்னை மாநகரின் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோவில் அமைந்த மயிலாப்பூர் பகுதி. சதுர வடிவில் அமையப்பெற்ற கோவில் குளத்தைச் சுற்றி தெருவோரக் கடைகள் இருந்தாலும் பொது சுவர் கொண்டு இடைவெளியின்றி அமைந்த பழமையான வீடுகளும் உள்ளன. சில இடங்களில் பழமையான பொதுச்சுவர் வீடுகளை இடித்து கட்டிய மார்டன் அடுக்குமாடி வீடுகள் உள்ளன. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மயிலாப்பூரில் அமைந்ததுதான் சில்வர் டவர்ஸ் என்னும் நடுத்தர வர்க்க மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி. இங்கே வாழும் இரண்டு பெண்கள்தான் சுகந்தி, மாலதி. இவர்களைப் பற்றிப் பார்ப்போமா!


                                     சுகந்தி வீட்டைப் பராமரிக்கும் குடும்பப் பெண்ணாக வீட்டிற்குள் வளைய வருபவள். மாலதி வேலைக்குப் போகும் பெண்.சுகந்தி எப்பொழுதும் புடவை கட்டி, தலைவாரி பின்னலிட்டு, பூ வைத்து நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு, கைகளில் தங்க வளையல்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்து, எப்பொழுதும் அடுப்படியிலும்,வீட்டு வேலையிலும் கவனமாக நாளையும் பொழுதையும் கழிப்பவள்.


                             மாலதி ஆபீஸ் பஸ்ஸில் செல்ல வேண்டி இருப்பதால் பயணவசதிக்காக சுடிதார் போட்டு செல்வது வழக்கம். வீட்டில் ஓய்வு எடுக்கும் பொழுது ஹவுஸ்கோட் போட்டுக் கொள்வாள். இரவில் படுக்கச் செல்லும்போது நைட்டியை அணிந்து கொள்வாள். அவளைப் பொறுத்தவரை சேலை என்பது பாரம்பரிய உடை; அதை திருமணம் போன்ற வைபவங்களுக்கு போகும்போதும், கோவிலுக்குப் போகும் போதும், பண்டிகை காலங்களிலும் உடுத்தினால் போதும் என்பது அவள் எண்ணம்.

                சுகந்தியின் வீடு முதல் மாடியிலும் மாலதியின் வீடு மூன்றாவது மாடியிலும் உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காலை 8:30 மணிக்கு தங்கள் குடியிருப்பு பகுதியில் பார்க்கிங் பகுதியில் தான் பார்த்துக் கொள்ள முடியும். ஒரு சின்ன புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வார்கள். சில சமயங்களில் மாலை வேளையில் மாலதி ஆபீஸ் விட்டு திரும்பும்போது சுகந்தியும் லிஃப்ட்டுக்குப் பக்கத்தில் நின்று இருந்தால் லிப்டில் ஏறும் போது சேர்ந்து ஏறுவார்கள். சிறிது நேரம் பேசிக் கொள்ள வாய்ப்பும் கிடைக்கும்.


 “தினமும் ஆபீஸிலிருந்து களைப்பா வருவீங்க இல்லையா” என சுகந்தி கேட்கும்போது மாலதிக்கு தானும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என எண்ணத் தோன்றும். ஆனால் சுகந்தியோ அதற்கு மேலும் சிறுபிள்ளைத்தனமாக,”ஆனால் ஆபீஸில் வேலை பார்ப்பது, பஸ்ஸில் போவது, உடன் வேலை பார்க்கும் தோழிகளைப் பார்த்து பேசுவது இதெல்லாம் எவ்வளவு ஜாலியாக இருக்கும்! இல்லையா!!” எனக் கூறும் போது மாலதி மேலோட்டமாக சிரித்துக் கொள்வாள். வேலைக்குப் போகும் பெண்களின் நிலை பற்றி சுகந்திக்கு தெரிய வாய்ப்பில்லை.


           காலையில் அரக்கப் பரக்க குளித்து, டிபன்,மதியம் சாப்பாடு இரண்டையும் தயார் செய்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, கணவரையும் கவனித்து அனுப்பிவிட்டு, கையில் டிபன் பாக்ஸ், ஹேண்ட்பேக், குடையுடன் வீட்டைப் பூட்டி பஸ் ஸ்டாண்டுக்கு ஓடி நிற்கும் போது சில சமயங்களில் அப்போதுதான் அவள் செல்ல வேண்டிய பஸ் கிளம்பி போவதைப் பார்க்கும்போது மனதில் ஏற்படுமே ஒரு அங்கலாய்ப்பு….. அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. காலை நேரத்தில் பரபரப்பாக இயங்கும் சென்னை மாநகரத்தில் டவுன் பஸ் பயணம் அவ்வளவு எளிதானதா என்ன? எப்படியும் ஆபீஸ் போய் சேர அரை மணி நேரம் ஆகும் என்பதால் சீட் கிடைத்தால் நல்லது என நினைப்பாள் மாலதி. ஒருமுறை முன்பக்க சீட் காலியானதைப் பார்த்து வேகமாக அந்த சீட்டை நோக்கி நகரும்போது முன்வாசல் வழியாக ஏறிய ஒரு பெண் அந்த சீட்டில் உட்கார்ந்ததும் தன் நிலையை எண்ணி ஒரு கணம் வேதனைப்பட்டாள்.


                   மாலதி தினமும் முடிந்த வரையில் ஆபிஸ்க்கு சரியான நேரத்திற்கு போய் சேர்ந்து விடுவாள். என்றாவது ஒருநாள் தப்பித்தவறி லேட்டாக போனால் போதும் மேனேஜர் எல்லோர் முன்னாலும் வந்து நின்று கொண்டு,” நீங்களெல்லாம் ஏன் வேலைக்கு வர்றீங்க? கல்யாணம் ஆச்சுன்னா குழந்தை குட்டிகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதுதானே!” எனக் கத்த ஆரம்பித்து விடுவார். காலையில் இப்படி அரக்கப்பரக்க பறக்க வேண்டி இருக்கிறது மாலையில் கொஞ்சம் ரிலாக்சாக வீட்டிற்கு போகலாமே என்று எண்ணலாம்; அதுவும் முடியாது ; கணவர் கண் கொத்தி பாம்பாக வீட்டு வாசலை திறந்து வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து இருப்பார் மனைவி நேரத்திற்கு வீடு திரும்புகிறாளா எனப்பார்க்க.


         சுகந்தியைப் பொறுத்தவரை வெளிக்காற்றே சுதந்திரக் காற்று என்ற எண்ணம்; ஏனென்றால் அவள் கணவர் தன் பொறுப்பில் மனைவி, குடும்பம் இருப்பதால் அவனுக்குள் ஒரு ஆணாதிக்க கர்வம் அவ்வப்போது தலைதூக்கும். இதனால் சுதந்திரக் காற்றை வெளியில்தான் சுவாசிக்க முடியும் என்பது சுகந்தியின் எண்ணம்.

 ஆனால் மாலதியைப் பொறுத்தவரை கணவருக்கும் குழந்தைகளுக்கும் மூன்று வேளையும் சுடச்சுட சமையல் செய்து போட்டு, துணி துவைத்து, பாத்திரம் கழுவி, டிவி பார்த்து, இரவில் படுக்கை போட்டு தூங்கப்போகும் சுகந்தியின் வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை என்ற எண்ணம். இதைத்தான் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பார்களோ!



Rate this content
Log in

Similar tamil story from Classics