உடம்பு
உடம்பு
மண் தீண்டும் உடல் மீது
இந்த மனதுக்குத் தான்
ஆசை என்ன...
பொன்னும் பொருளும் சேர்த்த உடம்பு...
போகமும் மோகமும் தீர்த்த உடம்பு...
நான் எனது என அலைந்த உடம்பு...
நான் யார் தெரியுமா ? எனத் தெரியாமல் கேட்ட உடம்பு...
ஆசை வலையில் அகப்பட்ட உடம்பு...
கவலைக் கடலில் துவண்ட உடம்பு...
கோபம் கொண்டு கொதித்த உடம்பு...
மோகம் தீண்டித் தவித்த உடம்பு...
அறுசுவை உணவையும் அழகாய் புசித்த உடம்பு...
அழகாம் இவ்வுலகை களித்த உடம்பு...
வேண்டுவோர்க்கு வேண்டிய தருணம்
உதவிய உடம்பு...
உறவில் பல பெயர் கொண்டு உலவிய உடம்பு...
ஈன்று தொழில் செய்து உழைத்த உடம்பு...
ஈகையால் உள்ளம் சிலிர்த்த உடம்பு...
பரமனை அவ்வப்போது நினைத்த உடம்பு...
வாதும் சூதும் பல பார்த்த உடம்பு...
தேசங்கள் யாவினும் சென்று அலைந்த உடம்பு...
தேனாம் பல கலை கலதில் மெய் மறந்த உடம்பு...
பெரியோரின் சொற்கேட்டு வாழ்ந்த உடம்பு...
நட்பிலே உறவாடி புன்னகைப் பூத்த உடம்பு...
எழுபத்திரிண்டாயிரம் நாடி நரம்புகள் இயங்கும் உடம்பு...
உணவை ரசம் இரத்தம் மாமிச மேதா அஸ்தி மஜ்ஜை சுக்கிலம் என மாற்றும் உடம்பு...
பஞ்சேந்திரியங்கள் நவத்துவாரங்கள்
ஞானேந்திரியங்கள் கொண்ட உடம்பு...
சக்கரங்கள் ஏழும் சுழலும் உடம்பு...
மனமெனும் மாயப்பெட்டகம் தரித்த உடம்பு...
ஆனந்தம் கீர்த்தி அமைதி ஏகாந்தம் உணர்ந்த உடம்பு...
உடம்பே உன்னை என்னவென்று
புகழ்வேன்...
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று...உடம்பை
யானிருந்து ஓம்புவதைத் தவிர...!...
நன்றியுடன்...MK🎶🕊️
