எப்பொழுதும்...இப்பொழுதும்
எப்பொழுதும்...இப்பொழுதும்
வெளியில் தேடினேன் கிடைக்கவில்லை நீ...!கோவில்கள் அலைந்து பார்த்தேன்... பிடிபடவில்லை நீ !
தீர்த்தங்கள் நீராடித் தேடினேன்...
தென்படவில்லை நீ...!
புத்தகங்கள் ஊடுருவி புரிய முயற்சித்தேன்... புரியவில்லை நீ!
மதம் மாறினால் கிடைப்பாய் என யாரோ சொல்ல...
மாறியது மத அடையாளம் மட்டுமே ...
மாட்டவில்லை நீ...!
குருமார்கள் சரண் புகுந்தும்
நீ ஏனோ என் உளம் புகவில்லை...
ஓடி ஒளிந்தாய் நீ...!
மழலையின் புன்னகையில்
இசையின் தொனியில்
ஏழையின் சிரிப்பில்
உதவும் கரங்களில்
பெரியோரின் ஆசிகளில்
நல்லோர் தம் அறிவுரைகளில்
காணும் இயற்கை பிரம்மாண்டங்களில்...
தென்படுகிறாய் அவ்வப்போது...
போதவில்லை உன் கருணை இப்பொழுது...
மாயங்கள் பரிசளித்து
மறைந்து நின்று ஆடும்
நாடகம்...உனக்கும்
எனக்கும் மட்டுமே புரிந்த வினோதம்!
உடலில்
உயிரில்
ஒவ்வொரு அணுவில்
ஆன்மாவில்
உறைகின்ற பேரறிவே !
தாயினும் கருணையனே!
அண்ட வெளியின்
சொந்தக்காரனே !
ஏதோ உன் கருணையால்
இந்த ஜீவனும்
இந்தப் பேருலகில் ...
உன்னுடைய பிராணனை
சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கிறது...
ஒளிந்தது போதும்...
உள் உறையும் அன்னையே !
உணர்வில் நிறைந்து
உனையே துதித்து
உவப்பிலா ஆனந்தம் பருகி
உன் தாள் சரண் புகும்
வரம் அருள்வாய் ...அது போதும் உன் குழந்தையான எனக்கு!
எப்பொழுதும் ... இப்பொழுதும்!
நன்றியும் மகிழ்ச்சியும்...
மனோஹரன் கேசவன் 🎊🕊️
