பாதை எங்கே! பயணம் எங்கே!
பாதை எங்கே! பயணம் எங்கே!
நான் கடந்து வந்த பாதைகள்
என் எதிர்காலத்திற்கான
அடித்தளமா?
நான் கடந்து வந்த மனிதர்கள்
எனக்கான வாழ்க்கைப்
புரிதல்களா?
நான் கடந்து வந்த அனுபவங்கள்
எனக்கானதா? பிறர்க்கானதா?
நான் கடந்து வந்த உறவுமுறைகள்
உண்மையில் எதற்கானது?
அவர்களுக்கானதா? எனக்கானதா?
ஓடிச் செல்லும் காலமும்
கூடவே
கூடித்தேயும் ஆயுளும்
யாருடைய கணக்கு?
இன்று மாளிகையும்
நாளை
மண் தரையும்
யார் ஆடும் விளையாட்டு?
ஆறாம் அறிவுக்கு
பின்னால் உள்ள
எட்டாத அறிவு
யாருடையது?!
நானும் அணுக்களின்
கூட்டமாய் இருக்கின்ற போதிலும்
என்னில் மட்டும் ...
ஏன் இந்த சிறப்பியல்புகள்?
எனக்குள் பஞ்ச பூதங்கள் இருந்தாலும்...
நான் எனும்
மகாபூதம் எங்கிருந்து வருகிறது?!
காண்பன யாவும் கரைந்து போகும் காண்பவனும் கரைந்து போவான்
சாட்சி மட்டும் அப்படியே... நித்தியமாய்?! எப்படி?!
விடைகளைத் தேடி புத்தகம் விழைந்தால்... விடை என்னவோ பூச்சியமாய்!
மாய கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்து மாய நாடகம்
நான் ஆடுகின்றேனா? ஆட்டுவிக்கப்படுகின்றேனா?
கணக்கில்லாத முரண்பாடுகள் காலக்கணக்கில் எப்படி தான் வரவு வைக்கப்படுகிறதோ?
அதிசயங்கள் நிறைந்த உலகில்
ரகசியங்கள் புதைந்த அடர் பிரபஞ்ச காட்டிற்குள்
பாதை எங்கே?
பயணம் எங்கே?
எண்ணிலடங்கா கேள்விகள் எனக்குள்ளே?
இதுவும்...
எனக்கானதா?
நமக்கானதா?
