உசந்த காலம்
உசந்த காலம்
அன்றைய...
கிராமத்து வாழ்க்கை
இன்றைய
வாழ்க்கையின்
நினைவுகளில்
மட்டுமே மிஞ்சி
நிற்கிறது...
கையில் கிடைக்கும்
பொருட்களை வைத்து
மனசுக்குள் எழுந்த
தனது கற்பனையிலும்
தமது கைத்திறனிலும்
உருவான விளையாட்டுப்
பொருட்களை கொண்டும்..
தலைமுறைகளை தாண்டிய
முன்னோர்கள் விளையாடிய
பழமையான விளையாட்டு
உபகரணங்களை வைத்தும்
நண்பர்களோடு
தெருவின் புழுதியில்
உருண்டும் புரண்டும்
விளையாடிய காலமும்
ஆற்றிலும் குளத்திலும்
கிணற்றிலும் வாய்க்காலிலும்
தவ்விக்குதித்தும்
நீச்சலடித்தும்
சாகசம் செய்தும்
குதூகலமாக விளையாடி
குளித்துவிட்டு தாமதமாக
காலம் கடந்து விட்டுக்குள்
நுழைந்து , அம்மாவிடம்
வாங்கிய அடிகளை
மறந்து விட முடியுமா??
பள்ளிப் பருவத்தில்
அணிந்த காக்கி நிற
அரைக்கால் சட்டைக்கு..
மாற்றுச் சட்டைக்கு கூட
வழி இல்லாத வறுமை
சூழ வாழ்ந்த காலம்..
இருந்த ஒரே ஒரு
கால்ச்சட்டையும்
நைந்து கிழிந்து
ஓட்டை விழுந்து
தைத்த பொத்தான்
அறுந்து விழுந்து..
கையில் பிடித்து
கொள்வதைத் தவிர்த்திட
இழுத்து பிடித்து
இடுப்பில் சொருகினும்
இமைக்கும் நேரத்தில்
நழுவி விழுந்திட
எத்தனிக்கும்
பொத்தல் உடுக்கை
உடுத்திய காலம்..
அரைக் கால்சட்டைதான்
அரைக்குக் கீழே மட்டும்
அரைகுறையாக அணிந்து
அரைமானம்காத்தஉடை...
காலையில் வீட்டின் மூலையில்
காளைகளுக்கு ஊறவைத்த
பருத்திக் கொட்டையை
ஆட்டுகல்லின் குழியினுள்
அடங்கி சுழன்று அரைத்து
தேய்ந்து போன குழவியும்,
குழவியின் தலையை
பிடித்துச் சுழற்றி சுழற்றி
களைத்துப்போன கிழவியும்
மனதுக்குள் ஒரு மூலையில்
நினைவுகளில் மட்டுமே
புதைந்து கிடக்கிறார்கள்.
ஓயாது எதையாவது இடித்த
இடி உரல்களும் உலக்கைகளும்
இணைந்திருந்த காலங்கள்
காணாமல் போனதால்
பயணில்லாத உரல்கள்
வெறும் கல்லாகவும்...
இரு முனையிலும்
இரும்புப் பூண்களோடு
இடித்த உலக்கை
மக்கிப்போய் கரையான்களுக்கு
இரையாகவும் போயின..
கள்ளங்கபடமில்லா
வெள்ளை மனங்கொண்ட
வெள்ளாந்தி மனிதர்களையும்..
கலப்படம், ஊழல், லஞ்சம்
வஞ்சனை, சூது வாது எதுவும்
அறியாத தர்மத்தை மதித்து
நெறி பிறலாது வாழ்ந்த
நேர்மையானவர்களையும்..
உதவி தேவைப்படும்
இடங்களிலும் நேரங்களிலும்
யாருங் கேட்காமலேயே
தானாக ஓடோடி வந்து
உதவிக்கரம் நீட்டிய..
எந்த விளம்பரத்தையும்
யாருடைய பாராட்டுதலையும்
எதிர்பாராத , விரும்பாத
உதவிடும் உள்ளங்களையும்
தொலைத்து விட்டதால்
தொலைந்து போன
கிராமங்களை மீட்டெடுத்தால்
அதுதான் உசந்த காலம்
கிராமங்கள்