நான்
நான்
இயக்கத்திலுள்ள இயக்கமற்ற நிலையே " நான்"
நான் அணுவுக்கும் முந்தைய ஆற்றலாவேன்...
தோற்றம் மறைவு இல்லாதவன் நான்...
தோற்றங்களுக்கெல்லாம் தோற்றுவாய் நான்...
மாற்றங்களை எல்லாம் மாற்றுபவன் நான்...அதனால் எழும்
மாயையும் நான்...
காந்தம் உண்டு...
அலை உண்டு...
காந்தப்புலம் உண்டு...வெவ்வேறு
அலைநீளம் உண்டு...எனக்குள்...
சுய முனைப்பினால் முகிழ்த்தவன் நான்...
தேவைகளையும்
தேடுதல்களையும்
தேவைக்கு ஒப்ப
தோற்றங்களையும்
தோன்றி மறையச் செய்பவனும் நானே....
எல்லா எண்ணங்களும்
அதன் வினை விளைவும்
எனக்குள் அடக்கம்...
நான் இல்லாத இடமில்லை...இருப்பதின்
ரகசியம் அறியவேண்டி
எனக்குள் எனக்கு ஆடும்
மாய விளையாட்டே
பிரபஞ்சத் தோற்றம்...
காணும் உயிரினங்களின்
தேடலின் விளைவு
நீ எனில்...அந்தத் தேடலின்
தொடக்கமும்... முடிவும்...நான் !
சஹஸ்ர நாமங்கள் கூறும்
என் பலவித தோற்றங்கள் ...தன்மைகள்... அவதாரங்கள்... அறிவியலும் அறிய வொண்ணா சூக்சுமம் ...
மதங்கள் கூறும் என் பெயர்கள்
மாய வடிவங்கள்...
உச்சியில் ஒரு காந்தம்...
மூலத்தில் ஒரு காந்தம்...
இடையிலே காந்தப்புலம்...
புலத்தின் விசையாலே
இயங்கும் பற்சக்கரங்கள்...
அலையதின் தன்மையதாய்
அடங்காத மனம் வெளி ஓடி...
அறியவொண்ணா குவியல்களாய்
அடைக்குது பார் சக்கரங்களில்...
சக்கரங்களின் இயக்கம் தானே
உடல் மன உயிர் இயக்க ஆதாரம்...
ஆதாரங்கள் வலுவிழக்க...
அஸ்திவாரம் ஆட்டம் காண...
அடங்கி ஒடுங்கிடும்
ஆரவாரக் கட்டிடம் ... வெளிக்கிளம்பும் உயிர்த்தன்மையோ
உருக்கொள்ளும் வெவ்வேறு
உலகம் செல்லும்
நன்மை தீமைக்கு ஒப்ப...மீண்டும்
பிறப்பெடுக்கும்...மாயச் சுழலில் சிக்கும்...தவிக்கும்...செய்வதறியாது
திகைக்கும்...அன்றியும்
குற்றம் களைந்தவர்
தனை உணர்ந்தவர்
வினை விளைவை எமக்களித்தவர்
என்னையே சரண் அடைந்தவர்
எண்ணத்தில் சொல்லில் செயலில்
தூய்மை கண்டவர்...
சக்கரங்கள்
தூய்மை பெற்று
சரண் புகுவர் ...
இருமை அறுப்பர்...என்னையே
எங்கும் காண்பர்...என் தன்மை பெறுவர்...
அமரத்துவம் இதுவே...
ஆழம் காண நீந்திச் செல் !
நான் எனும் மமதையே
அதள பாதளம்...
நான் எனும் எண்ணமே என்னை
உனக்கு மறைக்கும் மந்திரச் சொல்...
நீ இருக்கும் வரை
நான் தெரிவதில்லை...
நீ இருக்கும் போது
இறந்து போனால்...அப்போது
அங்கே இருப்பேன் "நான்" !!!
I