ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 11 பிங்க் பட்டுப் பாவாடை
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 11 பிங்க் பட்டுப் பாவாடை
கதை 11
பிங்க் பட்டு பாவாடை
நடுத்தரக் குடும்பங்களில் வானவில்லைப் போல், வாண வேடிக்கைகளைப் போல் கணத்தில் வண்ணமயமாக தோன்றி மறையும் முதல் காதல் அனுபவம் மிகவும் விசித்திரமானது.
20 வருடங்களுக்கு முன் மோனிகாவும் மோகனும் பள்ளியில் பயிலும் பாலகர்களாக இருந்த நேரத்தில் ஒரு திருமண வீட்டில் இருவரும் சந்தித்தனர். திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே உறவினர்களால் வீடு நிரம்பி இருந்தது.மறுநாள் மண்டபம் செல்ல எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரத்தில் பள்ளிப் பருவத்து பாலகர்கள் பலரும் ‘அந்தாக்ஷரி’ என்னும் பாட்டு போட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று கரண்ட் போனது. அரை மணி நேரம் ஆகியும் கரண்ட் வரவில்லை. வீட்டுப்பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் போட்டியை இருட்டிலும் விடாமல் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு குரூப்பில் மோகனும், மற்றொரு குரூப்பில் மோனிகாவுமாக பாடிக் கொண்டிருந்தார்கள்.
“ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்………ம்….ம………….”
“ மாமா உன் பொண்ண கொடு டு டு …உ….”
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…..
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்….ம்…..ம….”
மோகன் குரூப்பில் பழைய பாடல்கள் பாடப்பட்டது. மோனிகா குழுவினர் திண்டாட ஆரம்பித்தார்கள்.அவர்கள் தோற்றதாகக் கூறி மோகன் குரூப்பினர் சிரித்து கேலி பேசினர். மோனிகாவால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் அழ ஆரம்பித்தாள். அழுவதைப் பார்த்தால் கேலி செய்வது அதிகமாகும் என்பதால் ஒரு தூணின் பின்னால் நின்று கண்ணீர் வடித்தாள். இதை கவனிக்காத மற்றவர்கள் சிரித்து பேசிக்கொண்டு உறங்கப் போனார்கள். மோகன் மட்டும் மோனிகாவை கவனித்து விட்டான்.
மெழுகுவர்த்தி ஒளியில் அவளது பிங்க் பட்டுப் பாவாடையும், சட்டையும், இரட்டை பின்னலில் பிங்க் ரிப்பன்,மேட்சாக பின்க் கலர் ரோஜா மலர்கள் சூடி இருந்ததால் அவள் ஒரு பிங்க் பியூட்டி தேவதை போல் ஒரு கணம் மோகனது கண்களுக்கு தோன்றினாள். அவள் அருகே சென்று தேற்ற அவன் மனம் விரும்பியது. ஒரு கணம்தான். அனைவரும் அவளை கூப்பிடவும் அவள் அங்கிருந்து சிட்டாகப் பறந்து ஓடினாள்.
இப்பொழுது மோனிகா ஒரு குடும்பத்தலைவி. மோகனும் கல்லூரி, படிப்பு,வேலை, குடும்பம் என வளர்ந்து விட்டான்.ஆனாலும் அவனால் தன் மனதின் ஒரு மூலையில் மலர்ந்த அந்த முதல் காதலை அவனால் மறக்க முடியவில்லை. மோனிகா இருக்கும் இடம் தெரிந்ததும் முதலில் போன் செய்து தன் வரவை உறுதி செய்தான்.
போனில் அவன் குரலைக் கேட்டதுமே மோனிகாவிற்கு புரிந்தது. காலிங் பெல் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்தாள். மோகன் தான் வந்திருந்தான்.
“உள்ளே வாருங்கள்.அவர் ஆபீஸிலிருந்து இன்னும் வரவில்லை. உட்காருங்கள்” என்றாள்.
“ நான் உன்னைத்தான் பார்க்க வந்தேன். என்னை நினைவிருக்கிறதா?”என்று கேட்டான்.
“ஆ….ஆமாம்…. உங்களை பார்த்திருக்கிறேன்.”
“20 வருடங்களுக்கு முன்னால் மீனா மாமி வீட்டு கல்யாணத்தின் போது பார்த்த ஞாபகம் இருக்கா? நீங்கள் அப்போது பிங்க் பட்டு பாவாடை, சட்டை அணிந்து இருந்தாய்.” மிகவும் ஆவலாக மோகன் விவரிக்க ஆரம்பித்தான். ஆனால் மோனிகா கண்கள் விரிய கேட்டுக் கொண்டாளே தவிர எதுவும் பேசவில்லை.
அப்போது வாசலில் காலிங் பெல் சத்தம். ஸ்கூல் விட்டு குழந்தைகள் வந்து சேர்ந்திருந்தனர். குழந்தைகளைப் பார்த்ததும் மோனிகா,” அங்கிளுக்கு வணக்கம் சொல்லுங்கள்” என்றாள். அந்த நேரத்தில் வேலைக்காரி காபி கொண்டு வந்து வைத்தாள்.
“ காபி சாப்பிடுங்கள்”என்று மோனிகா கூறினாள்.
மோகனும் காபியை அருந்தியபடி மிகவும் யோசித்தான்.” நாம்தான் மிகவும் ஆவலாக இங்கு வந்துவிட்டோம். அவளுக்கு நினைவில்லை.” இந்த எண்ணம் வந்ததுமே அவனுக்குள் ஏமாற்றம் ஏற்பட்டது.” நான் போகவேண்டும், வருகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.
வாசல்வரை வந்து படியை தாண்டாமல் அங்கேயே நின்று கொண்டாள் மோனிகா. மிகவும் ஏமாற்றத்தோடு செல்லும் மோகனை பார்த்துக்கொண்டு நின்ற அவள் மனதில் ஒரு எண்ணம் ஓடியது.” நீ ஆண்மகன். உன் ஆவலை வெளிப்படுத்தி விட்டாய். நான் தமிழ்ப்பெண்.அதுவும் ஒரு குடும்பத் தலைவி. எப்படி என் கணவனையும் குழந்தைகளையும் என் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டிருக்கின்றேனோ அதுபோல் அறியாப் பருவத்து காதல் நினைவுகளையும் முந்தானையின் ஓரத்தில் முடிந்து தான் வைக்க முடியும். என்னால் அவிழ்த்துவிட முடியாது.