ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 5
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 5
டிசைனர் சேலை
நவீன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபன். எல்லோரையும் போல் அவனும் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரிப் படிப்பு என்று தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பவன். அதிகமாக யாரிடமும் பழகுவதில்லை.
இன்று அவர்கள் வீட்டில் பெரியப்பா பையனுக்கு திருமணம். அவர்கள் குடும்பத்தில் தனிக்குடித்தனம் என்ற சொல் சொல்லப்பட்டதில்லை. பெரிய குடும்பம் என்பதால் வீடும் பெரிது. நவீன் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் படிப்பதும் எழுதுவதுமாக தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பான்.
வீடு கல்யாணகளையில் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.ஆனால் நவீன் அறையிலேயே அடைபட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அவன் அறை ஜன்னலின் அருகே கொலுசு சத்தமும் சிரிப்பு சத்தமும் கேட்டன.மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே வந்து பார்த்தான்.
வெளியே ஹாலில் தாவணி அணிந்த இளம் பெண்கள் சிலர் பாடி ஆடிக்கொண்டு இருந்தார்கள்.அவர்களில் ஒரு பெண்ணின் இனிமையான குரலும் அவளது நளினமான ஆடலும் நவீனின் மனதை கொள்ளை கொண்டன.இதைத்தான் ‘முதல் காதல்' என்பார்களோ!
அந்த பெண்ணின் பெயர் ருக்மணி. அனைவரும் அவளை ருக்கி,ருக்கி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்ததை கவனித்தான். அவனது மாமாவின் மனைவி அத்தை ராதாவின் தங்கை மகள் தான் இந்த ருக்மணி. திருமணத்திற்காக அனைவரும் வந்திருந்தார்கள். கதவைத் திறந்து வாசலில் வந்து நிற்கவும் அவன் எதிரே ஆடியபடி ருக்மணி வரவும் சரியாக இருந்தது. நவீனை எதிர்பார்க்காத ருக்மணி ஒரு கணம் திகைத்து நோக்கினாள்.கண்கள் கலந்தன.
திருமணம் முடிந்து உறவினர்கள் அனைவரும் புறப்பட்டுப் போனார்கள். வீடு அமைதியாயிற்று. ஒரு ஆண்டு கழித்து கல்லூரிப் படிப்பை முடித்த நவீனுக்கு வேலையும் அமைந்தது.சராசரி பெற்றோர்கள் போலவே நவீனின் பெற்றோர் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். நவீனும் சராசரி இளைஞன்தான்.
நர்மதாவை பெண் பார்க்கப் போன போது பெண் வீட்டாரின் வசதியான வாழ்க்கையை பார்த்ததும் எல்லோரையும் போல அவனும் திருமணத்திற்கு சம்மதித்தான். நர்மதா படித்த நாகரீகம் தெரிந்தபெண்.நவீனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். ஒரு குழந்தையும் பிறந்தது. நவீனின் வாழ்க்கை கல்லூரி, படிப்பு, வேலை, குடும்பம், குழந்தை என படிப்படியாக ஓடிக்கொண்டிருந்தது.
குழந்தைக்கு ஒரு வயது. பிறந்த நாளை நர்மதா மிகச் சிறப்பாக கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள்.உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்தாள். குழந்தையின் பிறந்த நாளன்றும் நவீனுக்கு ஆபீஸில் வேலை. சாயங்காலம் வேலை முடிந்து கேக் வெட்டும் நேரத்தில் தான் நவீன் வீட்டிற்குள் வர முடிந்தது.
கேக் வெட்டிய பின் வந்த உறவினர்கள் அனைவரையும் கவனிக்கச் சொல்லி நவீனிடம் நர்மதா சொன்னதால் ஒவ்வொருவராக நலம் விசாரிக்க அவர்கள் பக்கம் திரும்பினான். அப்போதுதான் மீண்டும் அந்தக் கண்களைப் பார்த்தான்.ருக்மணி அங்கே வந்திருந்தாள். அத்தை ராதாவின் பக்கத்தில் தான் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.’அத்தை நலமா’,என கேட்டுக்கொண்டே அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் நவீன்.
அத்தையும் புன்முறுவலுடன்,”நல்லா இருக்கேன்பா” என்றார். பின்னர் ஏதோ நினைவு வந்தவராக, உற்சாகத்துடன் அனைவரையும் உபசரிக்கும் நர்மதாவை பார்த்தபடி,” நல்ல மனைவி,அழகான குழந்தை என செட்டில் ஆகிவிட்டாய்”என்று கூறியவர் ருக்மணி பக்கம் பார்த்து,”இவளுக்கும் இப்படி எல்லாம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று விருப்பம் தான்; நிறைவேற வேண்டுமே….” என பெருமூச்சு விட்டார்.
”ஏன்……அத்தை,ருக்கிக்கு என்ன குறைச்சல்….” என்று நவீன் சொல்ல ஆரம்பித்ததும்,”அவளுக்கு நேரமே சரியில்லை;மூன்று மாதங்களுக்கு முன்னால் அவள் அம்மா அப்பா ஆக்சிடெண்டில் இறந்து விட்டார்கள்; அதன் பின் அவளை கவனிக்க ஆளில்லை.
சொத்து, நகை, பணம் என்று எதுவும் கிடையாது. இருக்கும் படிப்பை வைத்து வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஸ்கூல்ல இருந்து டீச்சராக வேலை பார்த்து தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். இப்படிப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்ய யார் முன்வருவார்கள்…………..நீயே சொல்……”என்றதும் பதில் சொல்ல நவீன் சிறிது நேரம் தடுமாறி விட்டான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த நேரத்தில் கூட தன் மனதைச் சிதறவிடாமல் ருக்கி ஒரு சேலையில் ஜரிகை வேலைப்பாடு செய்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த டிசைனர் சேலை அனைவர் கவனத்தையும் கவர்ந்தது.என்ன ஒரு நேர்த்தியான வேலைப்பாடு!
நர்மதா புடவையைப் பார்த்து,”என்ன ஒரு வேலைப்பாடு! நம் கல்யாண நாளுக்காக இந்த புடவையை வாங்கி இருந்தேன். அதை ருக்கி எவ்வளவு அழகாக மாற்றிவிட்டாள் பாருங்கள்.” என நவீனிடம் சொன்னதும் நவீனின் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்த முதல் காதல் மீண்டும் துளிர்விட நினைத்து தோற்றது.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் அனைவரும் புறப்பட்டுப் போனார்கள்.திருமண நாள் வந்ததும் நர்மதா,” என்ன புடவை கட்ட?” எனக் கேட்டுக்கொண்டே தன் அலமாரியைத் திறந்தாள். நவீன் உடனே அந்த டிசைனர் புடவையைக் கட்டிக்கொள்ள சொன்னதும் காதல் ததும்பும் கண்களோடு கணவனைப் பார்த்து சிரித்துவிட்டு ருக்மணி தைத்துக் கொடுத்த டிசைனர் புடவையைக் கட்டிக்கொண்டாள் நர்மதா.
வசதியான வாழ்க்கையை மட்டுமே எண்ணி நவீன் போன்ற இளைஞர்கள் முதல் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை இனி மாறுமா? முதுகெலும்பை இழக்காமல் முன்வந்து ருக்கி போன்ற பெண்களுக்கு வாழ்வளிக்க இன்றைய இளைஞர்கள் முயற்சிப்பார்களா? வாசகர்களே,நீங்கள் தான் பதில் கூற வேண்டும்…….