நீயே என் ஜீவனடி 9
நீயே என் ஜீவனடி 9
காலை கதிரவன் மென்மையாக அவனை தட்டி எழுப்ப,மன நிறைவுடன் எழுந்து அமர்ந்தவன் தன் முன்னால் இருந்த புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான்.
நேற்று அவனே எதிர்பாராத நேரத்தில் அவனுடைய ஆனந்தியின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டியதை நினைவு கூர்ந்தான்.
அந்த திருமணம் நடந்த இடமும் நேரமும் தவறாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த திருமணம் அவன் எதிர்பார்த்திருந்த ஒன்று.
தன் படுக்கையில் காலியாக இருந்த பகுதியில் கைகளை பரவ விட்டவன் 'எப்போ ஆனந்தி இங்க இருக்க போற' என ஏக்கமாய் பெருமூச்சு ஒன்றை விட்டான்.
தன் நெஞ்சில் பச்சை குத்தியிருந்த ஆனந்தியின் பெயரை வருடியவனுக்கு ஆனந்தியே தன் நெஞ்சாங்கூட்டில் முகம் புதைத்து இருப்பதைப்போன்ற உணர்வைத் தர, அந்த உணர்வுகளை நிஜமாக அனுபவிக்கும் நேரத்தினை எதிர்பார்த்தவனாக, குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் வேஷ்டி சட்டையில் தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தவனின் பார்வை அனிச்சையாக ஆனந்தியின் அறையின் பக்கம் சென்றது.
நேற்று இரவு அவள் அறைக்கு சென்றது ஞாபகம் வந்தது.
எப்பொழுதும் ஒரு துள்ளலோடு இருப்பவள் தனக்கு அடங்கி செய்வதறியாது தோற்றுப் போனவளாய் அவள் கதறியதற்கான தடயம் அவள் கன்னத்தில் பதிந்திருக்க, அதை கண்டவனின் இதயமும் வலிக்கத்தான் செய்தது.
அவளுடைய மனதின் வலியை ஆற்றுவதற்காக அவள் கன்னத்தில் இதழ் பதிக்க சென்றவனை ஏதோ ஒன்று தடுத்தது.
அவள் தன்னவள் என்ற போதும் அவள் தன்னை அவளுடையவனாக இன்னும் ஏற்காத போது தன்னுடைய இதழ் அவளுடைய மனதிற்கு பாரமாகவும் மாற வாய்ப்பு இருந்ததால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
கண்களால் அவளை தீண்டியவனின் பார்வை நேற்றுவரை தன்னிடம் அடைக்கலமாய் இருந்து சரியாக அவளிடம் புதைந்து கொண்டது தாலியின் மீது பதிந்தது. வெளிவந்த ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
சேலையே உடுத்திராதவள் பட்டுசேலையை கட்டிக்கொண்டு பட்டுப்போல் இருந்தவள் அசௌகரியமாய் உறங்குவதை பார்க்க மனதை நெருடியது.
அவளுக்கு மாற்று உடையை தர மறந்ததை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டான்.
" அண்ணே.... அண்ணே..." என அவன் தோள்களை தட்ட நினைவிற்கு வந்தவன்,
" ஆஹ்......" என விழித்தவனை பார்த்த மணி ,
"என்னன்ணே எப்பவும் அண்ணியை பார்த்து தான் சிலை மாதிரி நிப்பீங்க. இப்போ அண்ணியோட ரூம்ம பார்த்து சிலை மாதிரி நிக்கிறீங்க. என்னண்ணே விஷயம்...." அவன் கூறியதில் வெக்கத்தை அடக்க முடியாமல் பார்வையை அங்குமிங்கும் அழைய விட்டவன், அவனை திசை திருப்ப முயன்றான்.
" அது.... அது ....... நீ இங்க என்ன பண்ற. நான் சொன்னது என்ன ஆச்சு ?"
"அத நான் முடிச்சுட்டேன்ணே. நேத்தே பாண்டி விசயத்த நாம முடிக்க வேண்டியது . திடீர்னு நேற்று கல்யாணம் நடந்ததால முடிக்கல. நீங்க சரின்னு சொன்னா இன்னைக்கு முடிச்சிடலாம்."
" சரி நான் வரேன். நீ வண்டிய ரெடி பண்ணு." என்றவன் தன் அறைக்குச் சென்று அவன் ஆனந்திக்காக வாங்கிய சில உடைகளை அவன் கப்போர்டிலிருந்து எடுத்தவன் நேரே ஆனந்தியின் அறைக்கு சென்றான்.
அறையின் கதவை தட்ட நினைத்தவன் அவள் பூஜை செய்யும் சத்தம் கேட்டதும் தட்டாமல் விட்டுவிட்டான்.
அர்ச்சனை ஒன்றும் கடவுளுக்கு அல்ல. அரவிந்த்க்கு தான்.
( கணவனே கண்கண்ட தெய்வம் ன்னு யாரோ சொன்னது ஞாபகம் வந்திருக்கும் போல.)
" ரவுடி.... ரவுடி.... கொஞ்சமாவது அவன் மண்டையில மசாலா இருக்கா.
அவன சொல்லி என்ன பிரயோஜனம் உன் மண்டையில மசாலா இருந்திருந்தா அன்னைக்கு அவ கழுத்துல தாலியை பார்த்ததும் உஷாரா பத்தடி தள்ளி நின்றுக்கணும். அத விட்டுட்டு அவன ஓட விடுவேன் னு நீயே அவன்கிட்ட வசமா மாட்டிகிட்ட.
எனக்கு எப்படி தெரியும் நான் அசந்த நேரம் தாலியை கட்டுவான்னு.
அவன் தான் கட்டுனான்னா நீ ஏன் அவன் பின்னாடியே மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி போன.
ஒருவேளை மந்திருச்சுப்பானோ தாலி கட்டுன சாக்குல ஏதும் மைய சேர்த்து வைச்சுருப்பானோ....
இருக்கும். இருக்கும். இவனை எல்லாம் நம்ப முடியாது.
நேத்து என்னமோ பெரிய இவன் மாதிரி நான்தான் உன் புருஷன் எனக்கு உரிமை இருக்குன்னு டயலாக் பேசுனான்.
உரிமை இருக்க்னு தெரிஞ்சவனுக்கு கடமை இருக்குன்னு தெரியாதா...?
மாத்திக ஒரு டிரஸ் கூட தரல.
இங்க பாரு இந்த சேலை வேற எங்கெங்கேயோ அவுந்து தொங்குது. எதை எங்க சொருகுரதுனே தெரியல.
(சேலை ஃபிளிட்ஸ சொல்றா. பெருசா ஒன்னும் இல்ல.)
உள்ள எல்லாம் அவியுது. அந்த பிரகாஷ் அப்பா எங்கிருந்துதான் இந்த மாதிரி சேலைய எடுத்தாரோ தெரியல.
அந்த அரவிந்த் மாதிரியே முறப்பா இருக்கு.
இந்த பிரகாஷ் மட்டும் என் கையில கிடைக்கட்டும். அவன் தலையில மாவு ஆட்டுறேனா இல்லையான்னு பாரு.
ஆமாம் இந்த அரவிந்த் எதுக்கு பிரகாஷ் கிட்ட சாரி கேட்டான்.' என திரும்ப அங்கே அரவிந்த் நின்று கொண்டிருந்தான்.
அவனைப்பார்த்து தடுமாற அவன் கையில் இருந்த பையை சோபாவின் மீது வைத்தவன்,
" இதுல உனக்கான துணி இருக்கு. இத நீ போட்டுக்கோ. பால்கனி இல்ல ரொம்ப நேரம் நிக்காத."
" ஏன் இந்த வீட்ல பால்கனில நிற்கிற சுதந்திரம் கூட எனக்கு இல்லையா...?"
"பால்கனில நிக்காதன்னு சொல்லல. ரொம்ப நேரம் நிக்காதன்னு தான் சொல்லுறேன். அது உனக்கு பாதுகாப்பு இல்ல.
மத்தபடி இந்த வீட்டில் உனக்கு எல்லா சுதந்திரமும் இருக்கு. உரிமையும் இருக்கு.
டைனிங் டேபிள் மேல சாப்பாடு எப்பவும் இருக்கும். உனக்கு எப்ப வேணும்னாலும் சாப்பிட்டுக்கோ.
உன்னை எப்பவும் தேடி வந்து தான் சாப்பாடு தரணும்னு எதிர்பார்க்காத.
நான் கொஞ்சம் வெளிய போறேன். உனக்கு வீட்ல என்ன வேணும்னாலும் மயிலம்மாகிட்ட கேளு. வெளியே ஏதாவது வேணுமா பசங்க கிட்ட சொல்லு அவங்க வாங்கி தருவாங்க."
"எனக்கு இங்க இருந்து போகணும்." என்றவளை முறைத்தவன்,
" அது முடியாது."
" இல்ல நான் போய் தான் ஆகணும். கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எனக்கு கல்யாணம் ஆயிடிச்சான்னு கூட தெரியுமா தெரியாதான்னு தெரியல.
அவங்க என்னை நெனச்சு ரொம்ப கவலை பட்டு இருப்பாங்க."
" நீ இனிமே அவங்கள பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உன் புருஷன் நான் இருக்கேன். என்ன பத்தி மட்டும் கவலைப்படு.
உன்ன பத்தி கவலைப்பட நான் இருக்கேன்.
அப்புறம் உங்க அப்பா அம்மாக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது தெரியும்.
அவங்க நிலைமையை புரிஞ்சுக்கிட்டாங்க. பாதுகாப்பா இருக்காங்க. எனக்கு நேரமாச்சு நான் வரேன்."
" ஒருவேளை நான் தப்பிச்சு போயிட்டா என்ன பண்ணுவீங்க."
இது அவளிடம் இருந்து எதிர்பார்த்ததுதான். அவன் விழிகளில் குறும்புடன் நோக்கியவன்,
" முடிஞ்சா தப்பிச்சுக்கோ."
அவள் அரவிந்தை பார்க்க அவன் கிளம்பி விட்டான்.
' என்ன இவன் இவ்வளவு அசால்டா சொல்லிட்டு போறான். நான் தப்பிச்சு போகமாட்டேன்னு நினைச்சு சொல்லுறானோ.
நான் எப்படியாவது இங்க இருந்து தப்பிக்கத்தான் போறேன்.
இவன் கூடலாம் என்னால இருக்க முடியாது.
நான் இங்க இருந்து எஸ் ஆக தான் போறேன்.
முடிஞ்சா நீ என்னை பிடிச்சுக்கோ....'
என யாரும் இல்லாத அறையில் யாருக்கோ சவால் விட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் கொண்டு வந்த துணிகளை பிரித்துப் பார்த்தவள்,
' பரவாயில்ல. நம்ம டேஸ்ட்க்கு தான் எடுத்து இருக்கான்.' என அதிலிருந்த சல்வாரில் இருந்து தனக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள்.
அங்கிருந்த புது பிரஸ் ஷோப் என அனைத்தையும் உரிமையாய் எடுத்து பயன்படுத்திக் கொண்டாள்.
சிறிது நேரத்திற்கு பின் கீழே அவன் இல்லாததை உறுதி செய்து கொண்டு மெதுவாக இறங்கினாள்.
கூடத்தை நோக்கியவள் ஐந்து,ஆறு அடியாட்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதை கண்டாள்.
"என்ன அண்ணி தேடுறீங்க."
பின்னாலிருந்து ஒரு கணீர் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.
' என்னடா சாப்டுற நீ. இப்படி பூதம் மாதிரி நிக்குற.' என மனதில் நினைத்தவளை கடுப்பேற்றினான், அவன்.
"அண்ணன தேடுறீங்களா.... அண்ணே வெளிய போயிருக்காங்க..... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க..." என கூற அவள் முறைத்தாள்.
" நான் ஒன்னும் உன் அண்ணனை தேடல. சாப்பிடலாம்னு வந்தேன்."
" அப்படியா அண்ணி ..."என்றவன் மயிலம்மாவை அழைத்து ஆனந்திக்கு பரிமாற சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
காலை உணவை எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே வீட்டை நோட்டமிட்டாள்.
அவனுடைய ஆட்களை மீறி இங்கிருந்து வெளியே போக முடியாது என அறிந்தவள், தன் அறையில் இருந்த பால்கனிக்கு சென்றாள்.
அந்த பால்கனி இருப்பது வீட்டின் பின்புறம் என்பதால் அந்த பக்கம் யாரும் இல்லாமல் இருந்தனர்.
சிறிது நேரம் யோசித்தவள் நேற்று அவள் கட்டியிருந்த புடவையை எடுத்து கீழே போட்டாள்.
அதன் உயரம் பத்தாமல் போனதால் வேறு என்ன செய்வது என யோசிக்கலானாள்.
பின் நினைவு வந்தவளாக அரவிந்த் அவளுக்காக வாங்கி வந்திருந்த சல்வாரின் ஸால்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி சேலையுடன் முடிச்சிட்டாள்.
பின் சேலையை பால்கனியில் கம்பியில் இறுக்கமாக கட்டினாலும் எங்கே அவிழ்ந்து விடுமோ என்கிற பயம் ஆர்ப்பரிக்க, கடவுளிடம் தன்னை காக்குமாறு வேண்டி விட்டு பால்கனி வழியே கீழே இறங்கினாள்.
கீழே இறங்கியவளின் கைகள் சிவந்திருக்க, கை இரண்டையும் அழுந்த தேய்த்தவள் திரும்பி பார்க்க அதிர்ச்சியாக நின்றாள்.