நீயே என் ஜீவனடி 27
நீயே என் ஜீவனடி 27
ஜீவன்💖27💖
ஆனந்தி அவள் வீட்டை வந்தடைந்த போது தான் மனதில் அழுத்தம் அதிகமானது.
தந்தையிடம் எப்படிசொல்வது என வருத்தம் ஏற்பட்டாலும் அவரிடம் கூறித்தான் ஆக வேண்டும் என மனதை திடப்படுத்தி கேட்டை திறந்து உள்ளே நுழைந்தாள்.
வீட்டின் முன் இருந்த தோட்டத்து பகுதியில் வித்தியாசமான பேச்சு சத்தம் கேட்க அதை கூர்ந்து கவனித்தாள்.
" இந்த மருதமுத்தும் அவன் பொஞ்சாதி எங்கனே போய் இருப்பாங்க. நாமளும் அவங்க வருவாங்க வருவாங்கன்னு அவங்க வீட்டிலேயே காவல் காத்தது தான் மிச்சம்.
அந்த ஆனந்தியும் அரவிந்தும் கல்யாணம் ஆனதுல இருந்து எங்க மறந்து இருக்காங்கன்னு தான் தெரியல."
" தெரிஞ்சா மட்டும் என்ன பண்ண முடியும்.."
" தெரிஞ்சா நம்ம சிதம்பரம் ஐயா அவுகள வெட்டி போட்டுற மாட்டாங்க"
"கிழிப்பாங்க. நீ வேற அவுக எல்லாம் அரவிந்த் அய்யா பாதுகாப்பில இருக்கிறவரை எதுவும் செய்ய முடியாது.
எதுவும் தெரியாத அந்த பிஞ்சு வயசுலேயே இரண்டு கொலை பண்ணினவருல அரவிந்த் அய்யா.
இப்போ 30 வயசுல சும்மா சிங்கம் மாட்டோம் உடம்ப வச்சிருக்காக. அவரோட பார்வையை போதும் நம்ம சிதம்பரம் ஐயாவை பஸ்பமாக்க."
" நீ என்னல அந்த பொடி பையனுக்கு ஒத்து ஊதுற"
" ஒத்து ஊதலல. உண்மையைச் சொன்னேன். அப்படியே ஒத்து ஊதினாலும் தப்பு இல்லையே. அவுக அப்பா போட்ட சோறு என்னமோ இன்னும் என் உடம்பில் ரத்ததமா தான்ல கலந்து இருக்கு.
அரவிந்த ஐயா அடிதடி பண்ணாலும் அவுக அப்பாவோட இரக்க குணமும் வள்ளல் தன்மையும் அப்படியேதான் இருக்கு."
" நீ சொல்றது வாஸ்தவம்தான். இருந்தாலும் இப்போ நமக்கு சோறு போடுறது சிதம்பரம் தான்ல."
" மனசார சோறு போடுறதுக்கும் கடமைக்குன்னு பாதி சம்பளம் தர கஞ்சம்பட்டிக்கும் வித்தியாசம் இருக்குல."
"அங்க யாரோ நிக்குறாங்கலே... ஓய் யாருலேய் அது...." என எழுந்து வர,
அவர்கள் தன்னை பார்த்து விட்டதை அறிந்து அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள், ஆனந்தி.
வீட்டின் மற்றொருபுறம் ஓடி ஒளிந்தவள் எட்டிப் பார்க்க அரிவாளுடன் சிதம்பரத்தின் ஆட்கள் அங்குமிங்கும் தேடிக்கொண்டு இருப்பதை பார்த்து பயத்தில் நடுங்கினாள்.
யாரோ அவளை தன் பலம் கொண்டு இழுக்க, இழுத்த வேகத்தில் அவன் மேல் மோதி நிற்க, நிமிர்ந்து அந்த ஆண்மகனை கண்டவள் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
அரவிந்த அங்கு தன்னை சமன் செய்து கொண்டவன், ஆனந்திக்கு அனைத்தையும் புரிய வைத்துவிடும் நோக்கில் அவளைத் தேடிச் சென்றான். வீடு முழுவதும் அவளை தேடி அவள் இல்லை என்பதை உணர்ந்தவன் காவலாளியை விசாரிக்க, அவன் இப்பொழுதுதான் இரவு உணவை முடித்து விட்டு வந்ததாக கூற, தனியாக அவள் எங்கே சென்று இருப்பாள் என்ற பயம் உயிரின் உள் வரை சென்று வலித்தது.
சிதம்பரத்திடம் சிக்கிவிட்டால் நினைக்கவே அவன் இதயம் துடிக்க மறுத்தது.
சேகரை தொலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறி அவர்களுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டான்.
அந்த ஆறடி ஆண்மகனை இறுக்கி அணைத்தும், அவளின் உடல் பயங்கரமாகநடுங்க, கண்களில் நீர் கசிய, அவளின் முதுகை ஆதரவாக தடவினான், அவன்.
" ஒன்னுமில்ல. நான்தான் இருக்கேன்ல."
"நீ ஏன் ராம் எங்களை விட்டுப் போன. என் லைஃப் எப்படி மாறிடுச்சு தெரியுமா ..." என மேலும் விசும்ப,
" என் செல்லம்ல நீ. அழாத டா. நீ அழுதால் நான் தாங்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா. எதுவா இருந்தாலும் நம்ம வீட்ல போய் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து போலாம்." என அவளை யாரும் பார்த்திடா வண்ணம் அடைகாத்து அழைத்துச் சென்றான்.
' இதுதானே நம்ம வீடு' என குழம்பியவள் சூழ்நிலை கருதி எதுவும் கேட்காமல் அவன் பின்னே சென்றாள்.
மருதமுத்துவும் அவரது மனைவி பர்வதமும் கூடத்தில் அமர்ந்திருக்க, ராமுடன் வந்த ஆனந்தியை பார்த்து அதிர்ந்தார்.
"ராம் நீ எங்கடா போன இந்த நேரத்துல.ஆனந்தி எப்படி உன் கூட.... அதுவும் இந்த நேரத்துல... ஏன் இங்க கூட்டிட்டு வந்த."
" அப்பா இந்தியா வந்ததும் ஆனந்தை பார்க்காமல் ஒரு மாதிரி இருந்தது. நீங்க வேற நாளைக்கு அத்தான் கிட்ட கேட்டு பாக்கலாம்னு சொன்னீங்க. அதுவர என்னால ஆனந்தி ய பார்க்காம இருக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாம பின்னாடி டோர் யூஸ் பண்ணி ஆனந்தியை பார்க்க போனேன்.
ஆனா வழிலயே ஆனந்தியை பார்த்தேன். அவ எங்கயோ ஆட்டோல போயிட்டு இருந்தா. இந்த நேரத்துல எங்க போறன்னு பார்த்தா நம்ம வீட்டுக்கு போய்கிட்டு இருந்தா.
அங்க தான் சிதம்பரத்தோட ஆளுங்க இருந்தாங்கன்னு நான்தான் ஆனந்தியை அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன்."
" நீ எதுக்குடா .... ஆனந்தி.... ஆனந்தி...." என அவளை உலுக்கினார், மருதமுத்து.
தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருத்தப் பட்டு, ராம் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் தன் தந்தை தன் முன் நிற்பதை கூட உணரவில்லை.
அவர் அவளை உலுக்க சுயநினைவிற்கு வந்தவள் தன் தந்தையைக் கண்டு தாயைக் கண்ட சேயைப் போல அவரை கட்டிக்கொண்டு கதற தொடங்கினாள்.
" ஆனந்தி என்னடா ஆச்சு... ஏன்டா அழுகிற ...நீ ஏன்டா தனியாக வந்த... மாப்பிள்ளை எங்க...." மருதமுத்து 'மாப்பிள்ளை' என கூறியதும் எங்கிருந்துதான் வந்ததோ அந்த கோபம் அவரிடமிருந்து விலகியவள்,
" போதும்பா இன்னொரு தடவை அந்த கொலைகாரனை மாப்பிள்ளைன்னு சொல்லாதீங்க"
" அனந்தி நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா..."
இந்தமுறை கணீரென்ற குரல் ராமிடம் இருந்து வந்தது.
அந்தக் குரலில் கோபம் இருந்ததோ என்னவோ....
" ஆமா நான் தெரிஞ்சு தான் பேசுறேன். உங்களுக்கு தான் எதுவும் தெரியாது.
என்னோட வாழ்க்கையை மொத்தமா மாறி போயிடுச்சுண்ணா. என்னை அந்த அரவிந்து ரொம்ப நாளா லவ் பண்றான்னு நினைக்கிறேன். அவன் திட்டம் போட்டு எல்லாரையும் ஏமாத்திட்டான். நம்ம சித்து (சித்தப்பா) கூட ஈவன் கொன்னு இருக்கான். "
"ஆனந்தி, சித்துவ அரவிந்த் அத்தான் ஒன்னும் கொல்லல. அது ஒரு ஆக்சிடெண்ட் நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி பேசாத...."
" இல்ல எனக்கு தெரியும் அவன் ஒரு வுமனைசர். என்னை அடைவதற்காக...." என அவள் முடிக்கும் முன் ராமின் கைகள் அவள் கன்னத்தை சிவக்க வைத்திருந்தது.
மருதமுத்துவும் பர்வதமும் ஒரு நிமிடம் அதிர்ந்தனர்.
தன் அண்ணனா தன்னை அடித்தது. எப்போதும் தான் எவ்வளவு சீண்டினாலும் தன் மேல் உயிரையே வைத்திருந்த அண்ணனா இப்படி என்னை காயப்படுத்தியது என நினைக்கும் போதே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
" அந்தக் கொலைகாரனுக்காக..." கேட்டுக் கொண்டிருக்கும் போதே பளார் என்று அறை மீண்டும் அவளை தஞ்சமடைந்தது.
"டேய்... அவ சின்ன பொண்ணு டா..." மருதமுத்து முன்னே வர,
" போதும்பா. சின்ன பொண்ணுன்னு நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்திட்டீங்க. இனி வேணாம். எவ்வளவு தைரியம் இருந்தா அத்தானை பத்தி இவர் தப்பா பேசுவா... இனி ஒரு வார்த்தை பேசி பார்க்கட்டும் அப்புறம் என்ன பன்றேன்னு மட்டும் பாருங்க.
அவள் கலங்கிய கண்களுடன் ராமனைப் பார்க்க,
"என்ன தெரியும் உனக்கு அவரைப்பத்தி.
அவரைப் பத்தி பேசுறதுக்கு கூட உனக்கு அருகதை இல்லை. நீ தான் உலகம்னு உனக்காக வாழ்ந்துகிட்டு இருக்காரு பாரு அவர சொல்லணும்.
என்ன சொன்னா வுமனைசரா. அவரோட காதல் எப்படிப்பட்டது உனக்கு தெரியுமாடி. உன் வயசு என்ன...."
ராம் கோபம் குறையாமல் அவள் கண்களைப் பார்த்து கேள்வி கேட்க, இந்த கேள்வி எதற்கு என தெரியாமல் அவள் அவனை பார்க்க,
" உன்னை தான் கேட்கிறேன்.... உன் வயசு என்னன்னு...."
" 19 "என்றால் திக்கியவாறு,
" 19 வயசு தான் ஆகுது. ஆனா 20 வருஷமா அரவிந்த் உன்னை லவ் பண்றான்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா...."
அவள் புரியாமல் முழிக்க,
" புரியலலே.... உன்னால நம்பவும் முடியாது. ஆனா அது தான் உண்மை. நீ உன்னோட அம்மா வயித்துல ஒரு துளி உதிரமாய் இருக்கும் போதிலிருந்தே உன்ன அவரோட பொண்டாட்டி நினைச்சி வாழ்ந்துகிட்டு இருக்காரு அவரு."
ஆனந்தி இப்பொழுதும் அதை நம்பாமல் பர்வதத்தை ஏறிட,
" அங்க என்ன பாக்குற... அது என் அம்மா."
"ராம்...." என மருதமுத்து விடமிருந்து அதிகாரமான குரல் வர,
" அப்பா, இது அவளுக்கு தெரிஞ்சே ஆகணும்.அப்டி இல்லேனா அவ அத்தானை பத்தி தப்பா தான் நினைச்சுக்கிட்டு இருப்பா... அவர் கொலைகாரர இருக்க அவளும் ஒரு காரணம் னு அவளுக்கும் தெரியட்டும்." என தந்தையிடம் கூறியவன், ஆனந்திடம் திரும்பி,
உன்னை எல்லோரும் மகாலட்சுமி மாதிரி இருக்கே ன்னு சொல்லுவாங்களே. அது ஒன்னும் கடவுள் மகாலட்சுமி இல்ல. உன்னோட அம்மா மகாலட்சுமி தான்.
ஆமா நீ ஒன்னும் மருதமுத்து பர்வதத்தோட பொண்ணு இல்ல. சிவனேசன் மஹாலஷ்மி யோட பொண்ணு...." என கூற அவள் காதுகளை கூட நம்ப முடியாமல் இருந்தாள்.
ஆனந்தி தான் இத்தனை நாள் தாய் தந்தை என பாவித்தவர்கள், அவர்களுடைய தாய் தந்தை இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மருதமுத்துவை ஏறிட்டவள்..." அப்..நா.... இ... இதெல்..லாம்..."
' இதெல்லாம் பொய்' என கூறி விட மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்புடன் அவரை பார்க்க, அவர் 'ஆமாம்' என தலையசைத்தார்.
பின்பு மகாலட்சுமி பற்றி கூற ஆரம்பித்தார்.
மடிசேனை, பரந்து விரிந்த வயல் வரப்புகளையும் அடர்ந்து தொடர்ந்த தோப்புகளையும் உடையது.
பசி என்னவென்றும் வறுமை என்னவென்றும் அறியாத கிராமம். விவசாயிகளே ஜாம்பவான்களாக இருந்த ஊர்.
காமராஜர் உத்தரவிடும் முன்னே கட்டாய ஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய கிராமம் அது. படித்து முடித்து வெளியூர்களுக்கு சேவை செய்யாமல் வெளியூர்களில் படித்து முடித்து அவர்களின் கிராமத்திலேயே சேவை செய்யும் மக்களை கொண்ட கிராமம் அது.
அவர்கள் கிராமத்தில் கல்லூரி இல்லை. அந்த கிராமத்தில் மட்டுமல்ல. அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏன் பக்கத்து ஊர்களிலும் கூட இல்லை.
ஆனால் அந்த கிராமத்தில் கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார் நடராஜன்.
அந்தப் பெரிய வீட்டின் மூத்த வாரிசு.
பெரிய வீடு என மற்றவர்கள் அழைக்கப்படும் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் சந்திர நாராயணன்.
அந்த கிராமத்தின் முக்கால்வாசி நிலத்திற்கு சொந்தக்காரர்.
வறுமை என வருபவர்களை கூட வள்ளல் ஆக்கிவிடும் எண்ணம் கொண்டவர்.
அந்த கிராமமே அவரின் உயிர்நாடி.
அவருக்கு மூன்று வாரிசுகள் இருந்தனர்.
மூத்தவர் நடராஜன் தந்தையின் நகல். பொறுப்பு அவருடைய சிறப்பு.
இரண்டாவது சிதம்பரம். எதிலும் கலந்து கொள்ள மாட்டார்.
மூன்றாவது மகாலட்சுமி அந்த வீட்டின் இளவரசி .இரண்டு அண்ணன்களுக்கும் செல்லப்பிள்ளை.
அதனாலே என்னமோ சந்திரன் நாராயணன் மகாலட்சுமியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு காலமானார்.
நடராஜனுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்க, சிதம்பரத்திற்கு திருமணமான அடுத்த வருடமே கயல்விழி பிறந்தாள்.
கயல்விழி பிறந்த சில நாட்களிலேயே நடராஜனின் மனைவி கருவுற்றார். வருடங்கள் கழிந்த பிறகு வரும் குழந்தை ஆதலால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
அத்தனை எதிர்பார்ப்புகளையும் மதித்து பிறந்தான், அரவிந்த்.
நாராயணன் வம்சத்தின் மூத்த ஆண் வாரிசு.
ஆனால் விதி அவனது தாயை விட வில்லை. அரவிந்த பிறந்த மறுநாளே ஜன்னியில் இறந்துவிட்டார்.
பிறந்த மகனை மகாலட்சுமியிடம் ஒப்படைத்து "நான் உன்னை என் மகளாக பார்த்தேன். நீ என் மகனுக்கு ஒரு அம்மாவாக பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் நான் நிம்மதியாக போகிறேன்." என கண்மூடினாள், அரவிந்தின் தாய்.
அரவிந்தின் பொறுப்பு முழுக்க முழுக்க மகாலட்சுமியிடம் வந்தது.
அவனை தாயாய் பேணினாள்.
காலை எழுப்புவதிலிருந்து இரவு படுக்க வைப்பது வரை அவனுக்கு அவனது அத்தை தான்.
அவனுடைய உலகம் அத்தை என்றே மாறிப் போனது.
" மாமா அரிசியை குடோனில
இறக்கி ஆச்சு.மண்டிக்கு போக லாரி நாளைக்கு தான் வரும்." என பேச்சு சிதம்பரத்திடம் இருந்தாலும் சிவபெருமானின் கண்கள் என்னவோ மஹாலக்ஷ்மியை தான் தேடிக்கொண்டிருந்தது.
"அத பிறவு பார்த்துக்கலாம்லேய். உன் அக்காகாரி உன்ன தான் தேடிட்டு இருந்தா. போய் பாரு." என்றார், சிதம்பரம்.
" சரிங்க மாமா..." என்றவன் வீடு முழுவதும் அக்காவை அல்லாமல் மகாலட்சுமியை தான் அலசினான்.
சிவபெருமாள், சிதம்பரத்தின் மனைவி மஞ்சுளாவின் தம்பி. மஞ்சுளாவிற்கு திருமணம் ஆனதிலிருந்து அந்த வீட்டையே சுற்றி வருபவன். மஞ்சுளாவிற்காக அல்ல. மகாலட்சுமிக்காக.
"குத்துக்கல்லாட்டம் நான் இங்க இருக்குறப்போ எங்கலேய் போற..." மஞ்சுளாவின் குரலில் தேடலை விடுத்து அவளின் அருகில் உட்கார்ந்தாலும் கண்கள் இன்னும் மகாலட்சுமி தான் தேடின.
" உன்னை பார்க்கத்தான் வந்தேன். நீ என்ன தேடினியாமே."
" நான் உன்னை தேடுறது இருக்கட்டும். நீ யாரை தேடற."
ஈஈஈஈஈ என இளித்தவன், 'கயல த்தான். பள்ளிக்கூடம் இன்னைக்கு லீவுல. அதான் அவளை பார்த்திடலாம் ன்னு தேடுறேன்."
"அவ எங்க வீட்ல இருக்கிறது. அவ அத்தை மாங்கா பறிக்க அவளயும் அரவிந்தயும் இழுத்துட்டு போய் இருக்கா."
"ஓ..." என ஏமாற்றத்தில் வருந்தினான்.
" என்னலேய் ஓன்னு இழுக்குற. நம்ம வீட்டிலேயே அம்புட்டு வேலை இருக்கும்போது நீ ஏன்லேய் இங்கேயும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுத. அம்மா உன்ன நினைச்சு புலம்புதல."
" இதுவும் நம்ம வீடு தானேக்கா... யாருக்கு செய்றேன் என் மாமனுக்கு செய்றேன்... என் மாமனுக்கு நான் செய்யாம வேற யாரு செய்வா...."
" என்னமோ ஃபோலேய்... எல்லா வேளையும் இழுத்துப் போட்டு ரா பவலா பார்க்குறியே பாவமேன்னு சொன்னா... கேட்க மாட்டிய. அது சரி. நீ எப்ப மத்தவக பேச்சை கேட்டு இருக்க...."
"நான் ஏன் கா மத்தவக பேச்சை கேக்கனும். படிப்புதான் கம்மியே தவிர அறிவு ஜாஸ்தி தான். எனக்கு என்ன புடிச்சிருக்கோ அத தான் செய்வேன். சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. கிளம்புறேன்." என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காது மாந்தோப்புக்கு சென்றான்.
கயல் ஊஞ்சலில் அமர்ந்து இருக்க பச்சை வண்ண பாவாடையும் ஆரஞ்சு வண்ண தாவணியும் அணிந்து ஊஞ்சலை ஆற்றிவிடும் பணியை செய்து கொண்டிருந்தாள், மகாலட்சுமி.
அரவிந்த் அவள் தாவணியை கையில் பிடித்தபடி நின்றிருந்தான்.
" கயல் போதும் எனக்கு கை வலிக்குது. நீ இறங்கு நான் கொஞ்சம் நேரம் ஆடுறேன். நீயும் அரவிந்தும் எனக்கு ஆட்டி விடுங்க."
"நா ஆட்டி விட மாட்டேன் . போ அத்தை."
"அடிங்கு...நீ ஆட்டி விட லேனா வேற யார் ஆட்டி விடுவா"
"நான் வேணா ஆட்டி விடவா...." என்றபடி அங்கே வந்தான், சிவபெருமாள்.
" நீங்க இங்க என்ன பண்றிங்க அத்தான்."
" மாங்காய் சாப்பிடனும் போல இருந்தது. அதான்."என்றான், சிரிப்புடன்.
" ஏன் அத்தான் மசக்கையா இருக்கீங்களா...?" என மகாலட்சுமி சிரிக்க,
'மசக்கையாக்கத் தான் ஆசை. ஆனால் எங்க....' என ஏக்கமாக முணுமுணுத்தான்.
" என்ன...?"
" ஒன்றுமில்லை. நான் ஆட்டிவிடட்டா மகா..."
" வேணாம் மாமா. என் மகா அத்தைக்கு நானே ஆட்டிவிடுவேன்." என அரவிந்த் முன்னே வர, அவனை சிவபெருமான் முறைத்துவிட்டு,
" நீ சின்ன பையன்டா. உன்னால முடியாது. அதனால மகாக்கு நானே ஆட்டிவிடறேன். "என அரவிந்திடம் ஆரம்பித்தவன் மகாலட்சுமியிடம் திரும்பினான்.
" இல்லை அத்தான். இருக்கட்டும். வந்து பொழுது ஆயிடுச்சு. மாங்கா பறிச்சுட்டு அப்படியே வீட்டுக்கு போய்டுறோம். வர்ரேன்." என்றவள் கயலுக்கும் அரவிந்துக்கும் கண்காட்டி விட்டு நகர,
"நீ வீட்டுக்கு போ மகா... நான் காய் பறிச்சு அரவிந்த் கிட்ட கொடுத்து விடுறேன்." என்று அரவிந்தை பிடித்துக்கொண்டான்.
மகாலட்சுமியும் கயலும் அவன் கண்களில் இருந்து மறைய, அரவிந்த் அளவிற்கு குனிந்த சிவபெருமாள்,
" டேய் உன்ன எத்தன தடவ சொல்றது. என் மகாவ மகான்னு கூப்பிடாதன்னு."
"உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது என் மகா அத்தைய மகான்னு கூப்பிடாதீங்கன்னு."
"அவள மகான்னு நான் மட்டும் தான் கூப்பிடனும். அந்த உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு. அதை கெடுக்கன்னே வருவியா டா. ஏண்டா எப்பப் பார்த்தாலும் உன் அத்தையவே ஒட்டிகிட்டே திரியுற.
நீ கொஞ்சம் தள்ளி இருந்தாதானே நான் உன் அத்தை கூட தனியா பேச முடியும் . "
"நீங்க என் அத்தைக் கூட தனியா என்ன பேசணும்."
" அப்பதான உன் அத்தைக்கு கல்யாணம் ஆகும்."
" ஏன் கல்யாணம் ஆகும். நான் என் அத்தைக்கு கல்யாணம் ஆக விட மாட்டேன்."
" ஏன்டா உனக்கு இந்த விபரீத ஆசை.... நான் பாவம்டா..."
" ராசாத்தி ஆத்தா தான் சொல்லுச்சு. அத்தை கல்யாணம் கட்டிகிட்டா என்ன விட்டுட்டு போயிடும்னு. அதான் அத்தைய கல்யாணம் ஆகாம பாத்துக்குறேன்."
" அது சரி நீயெல்லாம் எனக்கு எதிரியாடா...." என நொந்தபடி, "அரவிந்த் தங்கம்..."
"தங்கம்ன்னு கூப்பிடாதீங்க. அத்தை மட்டும் தான் கூப்பிடனும்."
" சரி பித்தளை..." என அரவிந்த் அவனை முறைத்தான்.
" சரி அரவிந்தா.... என்னை மன்னிச்சிடு. நான் சொல்றத கவனமா கேளு.
அத்தை கல்யாணம் ஆனா தான அத்தைக்கு குழந்தை பிறக்கும். அப்படி குழந்தை பிறந்தால் தான் நீ அவளை கட்டிக்க முடியும்."
" எனக்கு ஒன்னும் குழந்தையும் வேணாம். யாரையும் நான் கட்டிக்கவும் வேணாம். எனக்கு அத்தை தான் வேணும்."
" சரி நீ யாரையும் கட்டிக்க வேணா.உன் அத்தை கல்யாணம் கட்டிகிட்டு உன் கூடவே இருந்தா உனக்கு சம்மதமா..."
" நிஜமாவே அத்தை கல்யாணம் கட்டிகிட்டா என் கூடவே இருக்குமா..."
" நெஜமா இருக்கும் .ஆனா அதுக்கு நீ எனக்கு உதவி பண்ணனும்."
" என்ன பண்ணட்டும். "
"உன் அத்தை கல்யாணம் பத்தி பேசும் போது, சிவா மாமா கட்டிக்கனும்ன்னு உன் அத்தை கிட்ட சொல்லணும்."
"ஏன்?"
" ஏன்னா …… நீ சொன்னா உன் அத்தை சரின்னு ஒத்துக்கவா.... அதுக்குத்தான்...." என சொல்ல யோசித்தவன் பின் 'சரி' என சம்மதித்தான்.
💖💖💖💖💖