நீயே என் ஜீவனடி 15
நீயே என் ஜீவனடி 15
ரம்மியமான காலை வேளையில் புத்தம் புதுப் பொலிவுடன் தன் வாழ்க்கையை மாற்றப்போகும் எண்ணத்துடன் புத்தம் புது மலராய் பூத்தாள், ஆனந்தி.
தொலைந்து போனதாய் எண்ணிய அவளின் ட்ரேட்மார்க் புன்னகையுடன், தன் வாழ்வின் விடியலை வரவேற்று, சுறுசுறுப்புடன் இயங்க துவங்கினாள்.
சிறிதுநேரத்தில் சிவப்பு வண்ண சல்வாரை அணிந்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்தவள் ஆச்சரியமடைந்தாள்.
'இனிமேல் வாழ்க்கையே நரகமாக தான் இருக்கும். இந்த சிரிப்பும் எப்பவுமே நமக்கு இல்லன்னு நெனச்சேன்.
ஆனா இனி அப்படி இல்ல.'
நீ அழகுடி என தன்னையே திருஷ்டி கழிக்க, காதில் ஆடிய ஜிமிக்கியும் கழுத்தில் தொங்கிய செயினும் தன் தாய் தந்தையை நினைவு படுத்த அதை ஒரே நிமிடத்தில் உதறித் தள்ளினாள்.
' ஆனந்தி சென்டி ஆகாத. சீக்கிரம் அம்மா அப்பாவ நீ பார்க்கத்தான் போற,' மனசாட்சி ஆறுதல் கூற அறையைவிட்டு வெளியேறினாள்.
"அரவிந்த்.... அரவிந்த்.... டேய் அரவிந்த்... எங்கடா இருக்க...." என அவன் கூடத்தில் அமர்ந்து இருப்பதை அறிந்தும் அவனை ஏலம் விட்டவாறே படிகளில் இருந்து இறங்கினாள்.
அவனை யாரும் இவ்வளவு அதிகாரமாக பெயர் சொல்லி அழைத்தது இல்லை. அதிலும் 'டா'வென யாரும் அழைத்தது இல்லை.
அதில் அதிர்ச்சியாகி திரும்பிப்பார்க்க, சிவப்பு வண்ண ரோஜாவாய் இருந்தவளின் மேல் கோபப்படுவதா ரசிப்பதா என தெரியாமல் தள்ளாடிக் கொண்டு இருந்தான்.
தன் அண்ணனின் மரியாதை கொடிகட்டி பறப்பதை நம்ப முடியாமல் தன் அண்ணனையும் அண்ணியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள், அரவிந்தின் ஆட்கள்.
வாயில் ஈ போனால் கூட தெரியாத அளவிற்கு வாயைப் பிளந்தவாறு, சாப்பாட்டு மேஜை அருகில் நின்றிருந்தாள், சாப்பாட்டை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த மயிலம்மா.
"ஹேய் அரவிந்த்... இங்க தான் இருக்கியாடா.... இங்கதான் இருக்கேன்னு ஒரு சவுண்ட் கொடுத்தா என்ன....?"
அவள் கேள்வியில் இயல்பு நிலைக்கு வர, தன் ஆட்கள் தன்னை வெறிப்பதை பார்த்து வேக வேகமாக எழுந்து ஆனந்தியின் அருகில் சென்று மெதுவான குரலில் கேட்டான்.
" என்ன இதெல்லாம்..."
" எதெல்லாம்..." என்றாள், அனைவருக்கும் கேட்கும் குரலில்.
" ஏன் இப்படி எல்லாம் பண்ற.."
" ஏய்... என்னாச்சு உனக்கு .... நல்ல தானே இருக்க..." என்றவள் தனது கைகளை அவள் நெற்றியிலும் கன்னத்திலும் கழுத்திலும் மாறி மாறி வைக்க, அவளின் கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.
தன்னவள் தன்னை முதன் முதலாக ஸ்பரிசிக்கும் நேரத்தைக்கூட நினைத்து பூரிக்க முடியாதவனாய்...
" என்ன பண்ற எல்லார் முன்னாடியும்..."
" ஹலோ... தொட தானே செஞ்சேன். என்னமோ ரேப் பண்ற மாதிரி reaction கொடுக்குற."
' பன்னி தான் பாரேன்' என மகிழ்ந்த மனதை அடக்கியவனால் பாவம் அவன் இதழ்களை தான் அடக்க முடியாமல் போனது.
"என்னடா இளிக்கிற. நீ சொன்னதெல்லாம் மறந்து போச்சா."
" என்ன சொன்னேன்."
" நீ தானே சொன்ன நம்ம ரிலேஷன் ஷிப்க்கு ஒரு சான்ஸ் குடுன்னு.அதான் கொடுத்து பாக்கலாம்னு நெனச்சேன்."
" நெஜமாதான் சொல்றியா.." என கேட்டான் நம்ப முடியாதவனாய்...
'வாய்ப்பு கொடுப்பான்னு தெரியும் . இவ்வளவு சீக்கிரம் கொடுக்குறது தான் நம்ப முடியவில்லை.'
" அப்ப நான் என்ன பொய்யா சொல்ரேன்..."
" சரி ... அதுக்கு எதுக்கு 'டா' போட்டு கூப்பிடுற" என கேட்டான், தயங்கியபடி.
"திரும்ப பாருடா... நீதானே சொன்ன 'நான் உன் புருசன். என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.'ன்னு.
உனக்கு தெரியுமாடா எனக்கு வரபோற புருஷன பேர் சொல்லி வாடா போடா டால்டா இப்படியெல்லாம் கூப்பிடனும்னு தான் எனக்கு ஆசை. அதுவும் இந்த சின்ன வயசுல இருந்து..."
என கைகளை அவள் சுருக்கி காட்டிய விதத்தை , அவன் இதழ்கள் விரித்து, ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் காதருகில் வந்தவன், "ஆனா, எங்க ஊர்ல புருஷன 'மாமா'ன்னு தான் கூப்பிடுவாங்க." என்றான், மெல்லிய குரலில்.
அவனிடம் இருந்து பின்னால் நகர்ந்தவள்,
" அது உங்க ஊர்ல. இங்க நாங்க எல்லாரும் இப்படித்தான் கூப்பிடுவோம்.
உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா எல்லார்கிட்டயும் நீயே கேட்டு பாரு.
அப்புறம் கேக்கனும்னு நினைச்சா ஒரு சின்ன அட்வைஸ்.....
ஸ்டோரிமிரர்ல அவங்க லவ்வரோ வொய்ஃபோ இருக்காங்களான்னு கேட்டுட்டு கேளு.
அப்படி ஒரு வேளை லவ்வர் வொய்ப் இருந்தா, அம்மு செல்லம் புஜ்ஜி ன்னு தான் கூப்பிடுவாங்கன்னு சீன் போட்டு சமாளிப்பாங்க....
அப்படி வைய்ஃபோ லவ்வரோ இல்லைன்னு வை வாடா போடா மட்டுமில்ல முண்டம் தண்டம் எருமை பன்னி இன்னும் டிசைன் டிசைனா வாங்குன எல்லா செல்ல பேரையும் அழுதே கொட்டிருவாங்க.
பெட்டர் கேர்ள்ஸ் கிட்ட கேளு. எல்லா செல்ல பேரையும் சொல்லிடுவாங்க. ஏன்னா அவங்கதான் யாருக்கும் பயப்படுறது இல்லையே...
பசங்க மாதிரி சாப்பாட்டுல ஏதாவது கலந்து இருக்குமோன்னு சாப்பிடும் போது தயங்க வேண்டியதும் இல்லை பாரு..."
"அப்படிங்கிற .... "எனக் கேட்டான் சந்தேகமான குரலில்.
" நம்பலேனா போ... சரி... ஒரு சான்ஸ் கொடுக்கலாம் னு நினைச்சேன். உனக்கு இஷ்டம் இல்லைன்னா பரவாயில்லை. நான் எப்பவும் போல தள்ளியே இருந்துகிறேன்." என ஓரக்கண்ணால் அவனை பார்க்க அவன் தடுமாறியபடி,
" இல்ல.. பரவால்ல. நீ என்ன பேர் சொல்லியே கூப்பிடு. ஆனால் இந்த 'டா' மட்டும் கொஞ்சம் தனியா இருக்கும் போது கூப்பிட்டுக்கோயேன்."
" ஏன் தனியா இருக்கும்போது மட்டும்தான் நாம புருஷன் பொண்டாட்டியா...." என அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக் கேட்டவளை அள்ளி அணைத்து முத்தமிட எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு,
" அப்படி இல்ல...யாராவது ஏதாவது நினைச்சா..."
" யாரு... என்ன நெனப்பா ..." என திரும்ப அவள் கண்ணில் பட்டான், மணி
"டேய்.. நான் என் புருஷன 'டா' போட்டு கூப்பிட்டா, நீ ஏதாவது நினைப்பியா..." என கேட்க அவன் அரவிந்தை ஏறிட்டான்.
தன் மரியாதையோடு எல்லோருடைய மரியாதையும் சேர்ந்து பறப்பதை உணர்ந்தவன், தனக்காக பொறுத்துக் கொள்ளுமாறு கண்களால் கெஞ்ச,
அதை புரிந்து கொண்டு சிரித்தவன்,
" இதுல என்ன இருக்கு, அண்ணி. உங்க புருஷன் நீங்க சாப்பிட்டுரீங்க. இதுல நாங்க நினைக்க என்ன இருக்கு...' என நக்கலாக சிரித்தான்.
"ம்ம்... பாரு.... யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க..."
" எனக்கு சரி அவங்களயும் எதுக்கு 'டா' போட்டு கூப்பிடுற."
'ம்ம்... அன்னைக்கி பன்னி ன்னு சொன்னதுக்கு திட்டுனேல. அதுக்கு ரிவென்ச்
எடுக்க...' மனதிற்குள் எண்ணியவள்,
"ஐயோ கடவுளே ஆளுதான் வளந்துருக்கான் தவிர… அறிவு வளரவே இல்லை." என்று அவன் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று சோபாவில் அமர வைத்து, அவளும் அவனருகில் அமர்ந்தாள்.
" நான் உன் பொண்டாட்டி தானே..." என கேட்க அவனோ அவள் ஸ்பரிசத்தில் லயத்திருக்க ,
'ஆமாம்' என்பது போல் தலை அசைத்தான்.
"நான் உன் பொண்டாட்டின்னா, இவங்களுக்கெல்லாம் நான் அண்ணி முறை.
already எல்லாரும் என்னை அண்ணினு தான் கூப்பிடுறாங்க. அண்ணிங்குற முறை அம்மாக்கு சமம் னு உங்க ஊர்ல சொல்லித் தரலயா...
அண்ணி அம்மா ன்னா ... இவங்கலயும் டா போட்டு கூப்பிட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு...."
((நைட்டு ஃபுல்லா இத தான் யோசிச்சா போல.... நான் கூட தயாவ மிஞ்சிருவாளோன்னு நினைச்சு பயந்துட்டேன்....))
"இருந்தாலும் வயசுல அவங்க உன்னை விட பெரியவங்க இல்லையா..."
" உறவுல நான் தான பெரியவ." என்றவள், திரும்பி, மணி சேகரை பார்த்து , "கரெக்டு தானடா" என கேட்டாள்.
"நீங்க சொன்னா கரெக்டாத்தான் இருக்கும் அண்ணி."என்றவன் அரவிந்த் புறம் திரும்பி,
"அவங்க எப்படி கூப்பிட்டா என்ன அண்ணா, அவங்க எங்க கூட பேசினாலே போதும்னா...."
எனக்காக தன்னவளை அவள் குணப்படியே ஏற்றுக் கொள்ளும் தம்பிகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அகம் மகிழ்ந்தான்.
(( ஆனந்தியை பொறுத்த வரை தான் அவர்கள் அடியாட்கள்... அவனை பொறுத்த வரை அவர்கள் அவன் சகோதரர்கள்....))
"சரி எல்லாம் விடு. வா அரவிந்த், நாம சாப்பிடலாம். எனக்கு பசிக்குது ."
தன்னவள் தன்னை முதல் முறையாக சாப்பிட அழைப்பதை நினைத்து பூரித்தவன் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை எண்ணி நொந்து கொண்டான்.
" இல்ல ஆனந்தி. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. கோர்ட் வரை போக வேண்டியது இருக்கு.நீ சாப்பிடு. நான் வெளிய சாப்பிடுகிறேன்."
"அப்படியா " என்றாள் சிறிது ஏமாற்றத்துடன்.
"லன்ச் குள்ள வந்துருவேங்களா....?"
" வந்துருவேன்."
"நிஜமா...?" அவள் கையை நீட்ட,
அவள் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையினை எண்ணி மகிழ்ந்தவாறு, அவள் கைகளில் தன் கையை வைத்து உறுதி செய்தான்.
" குணா வண்டிய எடு. மணி நீ வீட்ல இரு. சேகர் நீ என் கூட வா." என்று ஆனந்தின் புறம் திரும்பி,
" நான் சீக்கிரம் வந்திருவேன். உனக்கு ஏதாவது வேணும்னா மணிகிட்ட கேளு." என கூறியவனை வழி அனுப்பி வைத்தாள், ஆனந்தி.
வண்டி அங்கிருந்து கிளம்பியது.
" அண்ணே, அண்ணி நடந்துகுறது வித்யாசமா இருக்கு. திரும்ப தப்பித்துப்போக நினைக்கிறாங்களோ...?"
" இல்ல . அவ இனிமேல தப்பிச்சு போக மாட்டா."
" அப்போ ஏன் திடீர்னு மாறிட்டாங்க."
" அவ எதையோ நம்ம கிட்ட இருந்து எதிர்பார்க்குறா.
ஒருவேளை உண்மையை கூட நம்மக்கிட்ட எதிர்பார்க்கலாம்.
எதுவா இருந்தாலும் இனிமேல் அவ அமைதியா சந்தோஷமா இருப்பா. இப்போதைக்கு இதுவே போதும்." என்றான், மன நிறைவுடன்.
💖💖💖💖💖