Siva Kamal

Drama Tragedy

4.4  

Siva Kamal

Drama Tragedy

அலட்சியம்

அலட்சியம்

7 mins
367


திருப்பூரில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல பைப் அருகே குடங்கள் தண்ணீருக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் மண்ணில் கவலை இன்றி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரு நிறுவனங்கள் தவிர பல சிறு , குறு நிறுவனங்கள் , தங்களது நிறுவனங்களுக்கு பெரிய பூட்டாக போட்டு பூட்டிவிட்டன.இருந்தும் திரும்பிய பக்கமெல்லாம் பேக்கரிகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.வடமாநில படையெடுப்பினால் குட்டி பீகராய் மாறியிருந்தது.நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரௌனியன் இயக்கம்போல் இருந்தது(பௌதிகம் தெரிந்தவர்களுக்கு புரியும்). பேனர்கள், கொடிகளுடன், மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காகத் திட்டிக் கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக் கட்டு ஜனங்கள் கோயிலின் வாசலில், வற்றிய நொய்யல் சாக்கடையால் வற்றவில்லை, பாவம்…இந்தியாவின் டாலர் நகரம் திருப்பூர்!


நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தன் மகள் பாப்பாத்தியுடன் திருப்பூர் பெரியாஸ்பத்திரியில் ஓ.பி. டிபார்ட்மெண்டின் காரிடாரில் காத்திருந்தாள். நேற்றைய தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்ட்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டி விட்டார். ‘‘உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போ’’ என்றார்.


அதிகாலை பஸ் ஏறி…பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தாள். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக்கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன நெற்றியில் விபூதிக் கீற்று.உடல் நெருப்பாய் கொதித்தது. மார்புவரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி ஜுரத் தூக்கத்தில் இருந்தாள். வாய் திறந்திருந்தது.வாய் வழியே மட்டுமே மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.


பெரிய டாக்டர் அவள் தலையைத் திருப்பிப் பார்த்தார். கண் இரப்பையைத் தூக்கிப் பார்த்தார். கன்னங்களை விரலால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்து பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர். போஸ்ட் கிராஜுவேட் வகுப்புகள் எடுப்பவர்கள், ப்ரொஃபஸர், அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள்.


‘Acute case of Meningitis. Notice this…’’


வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாஷணையின் ஊடே தன் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குள்ளே பார்த்தார்கள். ‘‘டார்ச்’ அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள். குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள்.


பெரிய டாக்டர்,‘‘அட்மிட் திஸ் கேஸ் இமீடியட்லி’’ என்றார்.


வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், ‘‘இத பாரும்மா, இந்தப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்கார்ந்திருக்காரே, அவர் கிட்ட போ. சீட்டு எங்கே?’’ என்றார்.

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

‘‘சரி, அவரு கொடுப்பாரு போ"

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, ‘‘அய்யா, குழந்தைக்குச் சரியாய்டுங்களா?’’ என்றாள்.


‘‘முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம். டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேஸைப் பார்க்கிறேன். ஸீ தட் ஷி இஸ் அட்மிட்டட். எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கிறேன்.’’


மற்றவர்கள் புடை சூழ அவர் ஒரு மந்திரிபோல் கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டுப் பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.


சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.


‘‘இங்கே வாம்மா. உன் பேரு?… டேய் சாவு கிராக்கி! அந்த ரிஜிஸ்டரை எடுடா!’’


‘‘வள்ளியம்மாள்.’’


‘‘பேஷண்ட் பேரு?’’


‘‘அவரு இறந்து போய்ட்டாருங்க.’’


சீனிவாசன் நிமிர்ந்தான்.

"பேஷண்ட்டுன்னா நோயாளி… யாரைச் சேர்க்கணும்?’’


‘‘என் மகளைங்க.’’


‘பேரு என்ன?’’


‘‘வள்ளியம்மாளங்க.’’


‘‘ உன்னோட ரோதனையா போச்சு? உன் மக பேரு என்ன?’’


‘‘பாப்பாத்தி ங்க’’


‘பாப்பாத்தி!.. இந்தா, இந்தச் சீட்டை எடுத்துக்கிட்டுப்போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுக்கிட்டு ஒருத்தர் உக்கார்ந்திருப்பார். வருமானம் பாக்கறவரு. அவருகிட்ட கொடு.’’


‘‘குழந்தைங்க?’’


‘‘குழந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்திருக்கட்டும். கூட யாரும் வல்லையா? நீ போய் வா… விஜயரங்கம் யாருய்யா?’’


வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை. அந்த க்யூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இறந்து போன தன் கணவன்மேல் கோபம் வந்தது.


அந்தச் சீட்டைக் கொண்டு அவள் எதிரே சென்றாள். நாற்காலி காலியாக இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள். அவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால் பாகத்தால் பார்த்தார். ‘‘இரும்மா, அவரு வரட்டும்’’ என்று காலி நாற்காலியைக் காட்டினார். வள்ளியம்மாளுக்குத் திரும்பத் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில், காத்திருப்பதா குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிந்தது.


‘‘ரொம்ப நேரமாவுங்களா?’’ என்று கேட்க பயமாக இருந்தது அவளுக்கு.


வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமகனை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார். ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்ச்சீப்பைக் கயிறாகச் சுருட்டித் தேய்த்துக் கொண்டு சுறுசுறுப்பானார்.‘‘த பார், வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்பூச்சி மாதிரி வந்தீங்கன்னா என்ன செய்யறது?’’


வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.


‘‘டாக்டர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா. டாக்டர் கையெழுத்தே இல்லையே அதில!’’


‘‘அதுக்கு ‘‘எங்கிட்டுப் போவணும்?’’


‘‘எங்கேருந்து வந்தே?’’


‘‘மூனாண்டிப்பட்டிங்க!’’


கிளார்க், சிரித்துவிட்டு. ‘‘மூணாண்டிப் பட்டி! இங்கே கொண்டா அந்த சீட்டை.’’


சீட்டை மறுபடி கொடுத்தாள். அவர் அதை விசிறி போல் இப்படித் திருப்பினார்.


‘உன் புருசனுக்கு என்ன வருமானம்?’’


‘‘புருசன் இல்லீங்க’’


‘‘உனக்கு என்ன வருமானம்?’’


அவள் புரியாமல் விழித்தாள்.


‘‘எத்தனை ரூபாப மாசம் சம்பாதிப்பே?’’


‘‘அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் குளத்து வேளைக்கு போனா தொண்ணூறு ரூபா குடுப்பாங்க!’’


‘‘மாச சம்பளம் கிடையாதா!… சரி. ஆறாயிரம் போட்டு வெக்கறேன்.’’


"மாசங்களா?’’


‘‘பயப்படாதே. சார்ஜு பண்ணமாட்டாங்க. இந்தா இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு இப்படியே நேராப் போய் இடது பக்கம் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும். 48_ஆம் நம்பர் ரூமுக்குப் போ.’’


வள்ளியம்மாள். அந்தச் சீட்டை இருகரங்களிலும் வாங்கிக் கொண்டாள். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க, காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்குப் படிக்க வராது. 48_ஆம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பிப் போய் அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.ஏகப்பட்ட அறைகளும் , பல தளங்களும் கொண்ட மருத்துவமனை அந்த படிப்பறிவில்லாத ஏழை தாய்க்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.விவரம் தெரிந்தவர்களுக்கே குழம்பி போகும் போது அந்த கிராமத்து தாய் என்ன செய்வாள்.


'சத்தம் போடாதீங்க, கும்பல் போடாதீங்க' என்கிற மருத்துவமனைக்கே உரிய நர்ஸ்களின் குரல் எல்லா அறைகளிலும் கேட்டுக் கொண்டே இருந்தது.ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு நோயாளிகள் உட்கார்ந்து கொண்டு, பாதிபடுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தின் சாம்பார். சாதம் நகர்ந்து கொண்டிருந்தது வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தது. அலங்கரித்துக்கொண்டு, வெள்ளைக்கோட் அணிந்து கொண்டு, ஸ்டெதாஸ்கோப் மாலையிட்டு, பெண்டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்ஸ்கள் எல்லோரும் எல்லாத் திசையிலும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்குப் பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை.


ஒரு அறையின் முன் ஒரு பெண் தன் கணவர் இறந்த செய்தி கேட்டு படுத்து அழுது கொண்டிருந்தாள்.அந்த பெண்ணிடம் அங்கிருந்த கம்பவுண்டர்கள், நர்ஸ்கள், கிளீனர்கள்,போவோர்கள்,வருவோர்கள், நிற்பவர்கள், பார்த்தவர்கள் எல்லோரும் காசு கேட்டனர்.

அதைப் பார்த்து வள்ளியம்மாள் மனம் வெம்பியது.

ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு ஆள் அவள் சீட்டுப் போலப் பல பழுப்புநிற சீட்டுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் தன் சீட்டைக் கொடுத்தாள் வள்ளியம்மாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கிக் கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தி எப்படி இருகிறாளோ என்ன செய்கிறாளோ என்ற கவலை வந்தது.சீட்டுக்களைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாகஅவர்களை உட்கார வைத்தான் பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்தச் சீட்டைப் பார்த்து, ‘‘இங்க எதுக்குமா இந்த சீட்ட கொண்டு வந்த இது ஸ்கேன் எடுக்குற இடம்! இந்தா" சீட்டைத் திருப்பிக் கொடுத்து, ‘‘நேராப்போ,’’ என்றான். 


வள்ளியம்மாள், ‘‘அய்யா இடம் தெரியலிங்களே’’ என்றாள். அவன் சற்று யோசித்து எதிரே சென்ற ஒருவனைத் தடுத்து நிறுத்தி, ‘‘அமல்ராஜ், இந்த அம்மாளுக்கு ‘‘48_ஆம் நம்பரைக் காட்டுய்யா. இந்த ஆள் ‘பின்னாடியே போ. இவர் அங்கேதான் போறார்’’ என்றான்.


அவள் அமல்ராஜின் பின்னே ஓடவேண்டி இருந்தது.


அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு வட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கிக் கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.


அரை மணி கழித்து அவள் அழைக்கப்பட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக ஒருவர் உட்கார்ந்து பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பிப் பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்.


‘‘ஓ.பி.டிபார்ட்மெண்டிலிருந்து வரியா?’’


இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.


‘அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக் காலையிலே சரியா ஏழரை மணிக்கு வந்துடு. என்ன?, இங்கயே நேரா வா, என்ன?’’


வள்ளியம்மாளுக்கு அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் தனியாக விட்டு வந்துவிட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று. அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. ஒரே ஆசாமி திரும்பத் திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. ஒரு வார்டில் கையைக் காலைத் தூக்கி கிட்டி வைத்துக்கட்டி பல பேர் படுத்திருந்தார்கள். ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன. மிஷன்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக அவளுக்குத் திரும்பவும் வழி புரியவில்லை.


‘அம்மா’’ என்று ஒரு பெண் டாக்டரைக் கூப்பிட்டு தான் புறப்பட்ட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். ‘‘நிறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க, பணம் கொடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. எம் புள்ளையை அங்கிட்டு தனியா விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா!’’என கலங்கிய படி கூறினாள்.


அவர் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு வார்டு பாய் அவளை பார்த்து "நடுவுல நின்னு அழாதமா, அப்படி ஓரமாக ஒதுங்கி நின்னு அழு" என சொல்லி விட்டு சென்றான். அழாதனு கூட சொல்ல ஆளில்லை.அந்தஇடத்தில் அவள் அழுவது அந்தஇடத்து அஸெப்டிக் மணம்போல் எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.


பாப்பாத்தி! பாப்பாத்தி கண்ணூ! உன்னை எங்கிட்டுப் பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்?’’ என்று பேசிக் கொண்டே நடந்தாள். ‘ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதன் கேட்டைத் திறந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.


வெளியே வந்துவிட்டாள். அங்கிருந்துதான் தொலை தூரம் நடந்து மற்றொரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!


ஆனால் வாயில்தான் மூடப்பட்டிருந்தது. உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரெச்சரில் கண்மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.


‘‘அதோ! அய்யா, கொஞ்சம் கதவைத் திறவுங்க. எம்மவ அங்கே இருக்கா.’’


‘‘சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்.’’ அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள் அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான் அவன் கேட்டது அவளுக்குப் புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக்கொண்டு யாருக்கோ அவன் வழிவிட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்.


பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வார்டுக்குச் சென்றார். அவருக்குக் காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது. B.M.J யில் சமீபத்தில் புதிய சில மருந்துகளைப் பற்றி அவர் படித்திருந்தார்.கோடியில் ஒருவருக்குதான் அந்த நோய் வரும்.


‘‘இன்னிக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா?’’


‘‘இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர்’’


‘‘என்னது? அட்மிட் ஆகலையா? நான் ஸ்பெஸிஃபிக்காகச் சொன்னேனே! தனசேகரன். உங்களுக்கு ஞாபகம் இல்லை?’’


‘‘இருக்கிறது டாக்டர்!’’


‘‘குமார்! கொஞ்சம் போய் விசாரிச்சுட்டு வாங்க. அது எப்டி மிஸ் ஆகும்?’’


குமார் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளார்க்குகளிடம் விசாரித்தார்.


‘‘எங்கேய்யா! அட்மிட் அட்மின்னு. நீங்க பாட்டுக்கு எழுதிப்புடறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது!’’


‘‘யோவ்! சீஃப் கேக்கறார்!’’


‘‘அவருக்குத் தெரிஞ்சவங்களா?’’


‘‘இருக்கலாம். எனக்கு என்ன தெரியும்!’’


‘‘பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ப பக்கம் வரலை. வேற யாராவது வந்திருந்தாக்கூட எல்லாரையும் நாளைக்கு காலை 7.30க்கு வரச் சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூனு பெட் காலியாகும். எமர்ஜன்ஸினா? முன்னாலேயே சொல்லணும்! இல்லை, பெரியவருக்கு அதிலே இண்ட்ரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை!.. உறவுக்காரங்களா?’’


வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை 7.30 வரை தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள்.பஸ் ஸ்டாண்டு பக்கமாக நடந்தாள்.திரும்ப இந்த ஆஸ்பத்திரிக்கே வரக்கூடாது என முடிவெடுத்தாள்.


‘‘வாட் நான்ஸென்ஸ்! நாளைக்குக் காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்தப் பொண்ணு செத்துப் போய்டும்யா!..

டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி. யிலே போய்ப் பாருங்க. அங்கேதான் இருக்கும்! இந்த வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிபார்ட்மெண்ட் வார்டிலே பெட் இருக்குது. கொடுக்கச் சொல்லுங்க! க்விக்!’’


‘‘டாக்டர்! அது ரிஸர்வ் பண்ணி வெச்சுருக்கு!’’


‘‘I don’t care. I want that girl admitted now. Right now!’’


பெரிய டாக்டர் அம்மாதிரி இதுவரை இருந்ததில்லை. பயந்த டாக்டர் தனசேகரன், குமார், ஹேமா என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளைத் தேடி ஓ.பி. டிபார்ட்மெண்டுக்கு ஓடினார்கள்.


‘‘வெறும் சுரம்தானே? உனக்கு ஒன்னும் ஆவாதுடா தங்கம்.பேசாம மூனாண்டிப் பட்டிக்கே போய்டலாம்.பூசாரியிடம் காட்டி விடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கும் போக வேணாம். அந்த டாக்டர்தான் பயங்காட்டி திருப்பூருக்கு விரட்டினார்.தாயத்துக்கட்டி போட்டு விபூதி மந்திரிச்சு விட்டா எல்லாம் சரியாப் போய்டும் .’’ பஸ் ஸ்டாண்டை அடைந்தாள் வள்ளியம்மாள், பாப்பாத்திக்குச் சரியாய்ப் போனால் கருப்பராயன் கோவிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன்,திருவிழாவில் தீ மிதிக்கிறேன்’’ என்றும் வேண்டிக் கொண்டாள்.


Rate this content
Log in

Similar tamil story from Drama