ஒரு கெழவனின் தாய்க்கு
ஒரு கெழவனின் தாய்க்கு
60 வயதுக் கிழவன் , தள்ளாத வயதில் இருக்கும் தன் தாயைப் பற்றி எழுதும் கடைசி வரிகள்..!
----
ஒவ்வொரு முற நான் ஜெயிக்கும் போதும் தாயே,
என்னவிட நீ அதிகமாய் பூரிச்ச..
எம்மேல மொத காதல் கொண்டவ நீயே என்பதாலா?
உன் திளைப்ப பார்த்து என் இதயமல்லவா துள்ளிக் குதிக்கும்..
அதுல பாயும் இரத்தம் நீ தந்ததாலா?
இரவெல்லாம் கண் முழிச்சி எனையே நெனச்சி மகிழுற,
வலிகளோட நான் கண்ட வெற்றிகள நெனச்சோ?
எத்தன வலி வந்தா என்ன, எல்லாத்தயும் நீயே தான் எடுத்துக்குற,
உனக்கு வலி தந்தே வெளி வந்தவன எப்படி நீ மன்னிக்கிற ??
ஊரெல்லாம் மார் தட்டி என் மகன் ஜெயிச்சானு பாட்டு படிக்கிற,
அது சரி, வயித்துல எட்டி ஒதச்சதையே பல பேருக்கு சொல்லி தற்பெரும கண்டவளாச்சே..
ஊர் கூட்டி கல்யாணம் பன்னிவச்ச
சாமிகிட்ட எனக்காக வேண்டி வச்ச..
நான் பெத்த புள்ளையையும் சீராட்டி வளத்துப்புட்ட,
கெழவி உனக்காக காசுன்னு எத சேத்து வச்ச ?
வயதாகி பழுத்த என் நரைய பாக்கும் போதெல்லாம்,
நீ கொடுத்த பாலெல்லாம் மேலேறி எனைக் காக்குதோனு தோணுதம்மா..
பேரப் புள்ள நானெடுத்து வாழும்போதும்,
காரக் கொழம்பு நீ வச்சி என் கபத்த போக்குறயே தாயே..
அப்பஞ்செத்த சடங்குலயும், என் நாக்கு ருசிக்கு
கறிக்கொழம்பு எடுத்து வச்ச கிறுக்கச்சியே..
எல்லாருக்கும் தொப்புள் கொடி ரெண்டு நாளு..
எனக்கு மட்டும் எதுக்கு தந்த இருபத்தி ரெண்டாயிரம் நாளு ?
தொண்ணூறத்தொட்ட உனக்கு தொலைதூரத்துல நாள் இல்லனு தெரிஞ்சும்,
தொட்டிலிட்டு ஆட்டும் குழந்தையா இந்தக் கெழவன நெனைக்குறியே..
தொள்ளாயிரம் ஜென்மம் கண்டாலும் நா பட்ட கடன் உனக்கு தீருமா ??