மீண்டும் சிறுவனாய்
மீண்டும் சிறுவனாய்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
வீட்டில் முடங்கி
அலைந்தது
அடங்கி கிடக்கும்போதுதான் ,
நான் தொலைந்(த்)ததை உணர்கிறேன்
பள்ளிக்கூடத்து சிறுவன் போல
என் உலகம் சுருங்கியது
அழகிய கிராமத்து வாழ்க்கை
அருகில் நெருங்கியது !!
சொந்த ஊருக்கு விருந்தாளியாய் வந்து செல்வேன் முன்பு
எந்த ஊருக்கும் செல்ல மனம் வராது போல உள்ளூர் சுகம் கண்ட பின்பு !!
சூரியன் வந்தவுடன்
அலாரம் இல்லாமல்
தூக்கம் கலைந்து
நாளும் தொடங்குகிறது
இருட்டியவுடன்
ஆலமரத்தடி கூட்டமும் கலைந்து
ஊரும் அடங்குகிறது !!
சிறுவயதில் முடிதிருத்தும் சிவராசின் கடை இன்னமும் இருக்கிறது
நகரத்தில் தான் வெட்டுவேன் என
மனம் அங்கு செல்ல மறுக்கிறது
கடையை கடக்கும் போதெல்லாம்
வளர்ந்து கிடக்கும் தலையைப்
பார்த்து கண்ணாடியும்
சிரிக்கிறது !!
மீனைப்போல் ஆற்றுக்குள் தினமும் துள்ளித் திரிந்த
காலத்தை மீண்டும் வாழ்கிறேன்
இயந்திரமாய் சுற்றி இறுகிப்போன வாழ்விலிருந்து
மீண்டு வாழ்கிறேன் !!
ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அம்மாவுடன்
நகரத்து சந்தைக்கு பேருந்தில்
ஒரு பயணம் ,
ஆசை வளர்த்து சிறுவயதில்
காத்திருக்கிறேன்
அதே பேருந்தில் அதே நகருக்கு இப்போதும்
சிறு பயணம் சென்றுவர
மீசை வளர்ந்த வயதிலும்
எதிர்பார்த்திருக்கிறேன் !!
இழந்த இன்பத்தை
எண்ணிப் பார்க்கையில்
உணர்ந்த ஒன்று,
உலகம் சுற்றும் ஒரு
வாலிபனின் கையில் இல்லை மகிழ்ச்சி
உலகறியா சிறுவனாய்
எளிய வாழ்க்கையிலே மகிழ்ச்சி ...