கால பயணம்
கால பயணம்
24' நடிகர் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வெளியான அறிவியல் புனைகதை. கால பயணத்தை கதைக்கருவாக கொண்டிருக்கும்.
நாமும் யோசிப்போம் நம் கையில் அந்த கடிகாரம் கிடைத்தால்.... பின்னோக்கி நம்மை கூட்டி சென்றால்....
சபரிகிரிவாசன் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி. இயந்திர பொறியியலில் முதுகலை பட்டம் முடித்துள்ளவன். அறிவியலிலும் ஆர்வம் அலாதி. அவனுடைய பேராசிரியர் ஒருவர் அவனிடம் பின்னோக்கி பயணிக்க உதவும் கடிகாரம் ஒன்றை அவனின் திறமையை பாராட்டி வழங்கினார். உனக்கு மிகவும் பயன்படும் என்றும் கூறி இருந்தார். பெற்றுக்கொண்டாலும் அதனை பற்றி சபரி யாரிடமும் எதுவும் உரைக்கவில்லை.
ஒரு முறை அவனின் தூரத்து சொந்தத்தில் அக்கா ஒருவளின் கணவன் விபத்தில் சிக்கி இறந்துவிட மறுநாள் உன் கணவன் வாங்கியுள்ள கடனை திருப்பி கொடு என்று அவனின் அக்காவிடம் முறையிட்டுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சபரி உடனே அங்கு சென்றான். கடனை திருப்பி கேட்டவர்களிடம் ஆதாரத்தை கேட்டபொழுது அக்காவின் கணவன் கையெழுத்திட்டு இருந்த பத்திரம் ஒன்றை காட்டினர். அவனின் அக்கா துளியும் நம்பவில்லை. அக்காவின் செயல் அவனையும் நம்ப விடாமல் செய்தது. இரண்டு நாட்களில் தருவதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருந்தான். அங்குள்ள டீக்கடைக்காரர் ஒருவர் இது போன்ற சம்பவம் வேறொரு ஊரில் நடந்ததாக கூறிக்கொண்டிருந்தார். சபரி தன் நண்பனிடம் அலைபேசியில் இச்செய்தியை கூறும்பொழுது இதே போல் தன் பக்கத்து ஊரில் சில நாட்களுக்கு முன் நடந்ததாக கூறினான். இதில் ஏதோ உள்ளது என்று புரிந்துகொண்டான் அதை கண்டுபிடிக்க எண்ணினான். அப்போது ஒரு பெரியவர் அவனிடம் மணி என்ன என்று கேட்டார். பெரியவருக்கு மணி தெரிந்துவிட்டது அவனுக்கு வழி தெரிந்துவிட்டது.
கால பயணம் மேற்கொள்ள முடிவு செய்தான். அக்காவின் கணவர் இறந்த அந்த நாள் அன்று நடந்தவைகளை காண புறப்பட்டான். வேலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை வழிமறித்து ஒரு கும்பல் அவரை மிரட்டி ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வற்புறுத்தினர். மறுத்தால் கொன்றுவிடுவேன் என்றும் குடும்பத்தை நாசமாக்கிடுவேன் என்று மிரட்டி கொண்டிருந்தனர். அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டபின் அந்த கும்பலே அவரை விபத்தில் சிக்க வைத்து அவரின் உயிரை எடுத்தது.
நிகழ்காலம் திரும்பினான். விஷயத்தை முழுமையாக அறியும்பொருட்டு இதற்கு முன் இவ்வாறு நடந்த சம்பவங்களை தெரிந்துகொண்டு அதனையும் நேரில் சென்று பார்த்தான். முழுவிவரமும் புரிந்தது. நடுத்தர குடும்பத்தினராய் அதிலும் சற்று பயந்த சுபாவம் உடைய குடும்பத்தலைவர்களை குறி வைத்து பணம் பறிக்க செய்த செயல்கள் தான் அத்தனையும்.
தான் அறிந்த விஷயங்களை அவனுடைய காவல் அதிகாரி நண்பனிடம் தெரிவித்தான். உடன் அவன் காலப்பயணம் மேற்கொண்டபோது அவன் எடுத்த காணொளி பதிவையும் ஆதாரமாய் வழங்கினான். மேற்கொண்டு முழு உண்மை அதாவது காலப்பயணம் பற்றி வெளிக்காட்டாமல் அந்த கும்பலை பிடிப்பதாய் காவல் அதிகாரி வாக்களித்தார்.
இக்காலத்தில் அறிவியல் நம் அன்றாட வாழ்வில் அனைத்திலும் ஒன்றிப்போய்விட்டது. மனிதனுக்கு நன்மை எது தீமை எது என்று ஆராய்ந்து பார்க்கும் குணம் இயற்கையிலே உள்ளது. நல்ல விஷயங்களையே சிந்திப்போம் உபயோகிப்போம் பரப்புவோம்...
அடுத்தவரின் பொருளுக்கு என்றைக்குமே ஆசை பட கூடாது. நமக்கு வேண்டியதை கடவுள் நமக்கு நிச்சயம் தருவார்.