வீல்சேர் அம்மா... பாசக்கார மகன்.
வீல்சேர் அம்மா... பாசக்கார மகன்.


வீல்சேர் அம்மா... பாசக்கார மகன்...' - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சோகம்
சென்னை மேற்கு மாம்பலத்தில், பூட்டிய வீட்டுக்குள் அம்மாவும் மகனும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
சென்னை மேற்கு மாம்பலம், ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர்கள், அசோக் நகர் காவல் நிலையத்துக்கு போனில் ஒரு தகவலைத் தெரிவித்தனர். பி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாகக் கூறினர். இதையடுத்து, அசோக் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது தூர்நாற்றம் வந்த வீடு, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த வீட்டின் கதவை போலீஸார் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஒரு பெண்ணின் சடலமும் ஆணின் சடலமும் அழுகிய நிலையில் கிடந்தன. அவர்கள் இறந்து 2 நாள்களுக்கு மேலானதால் தூர்நாற்றம் வீசியது.இதையடுத்து, போலீஸார் அவர்கள் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். விசாரணையில், அவர்களின் பெயர் ராஜேஸ்வரி (65), அபிராம் விக்ராந்த் (41) எனவும் தெரியவந்தது. இருவரின் சடலத்தையும் தனிமனித கவச உடையணிந்தவர்கள் பாதுகாப்புடன் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து அசோக் நகர் போலீஸார் கூறுகையில், ``ராஜேஸ்வரி, மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் விக்ராந்த், ஐ.டி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. அதனால் தாயும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி, நீரிழிவு நோயால் சிரமப்பட்டுவந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, நடக்க முடியாமல் வீல்சேரை பயன்படுத்திவந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அலுவலகத்துக்குச் செல்லாமல் விக்ராந்த், வீட்டிலேயே இருந்துள்ளார். அவர், அம்மா ராஜேஸ்வரி மீது அதிக பாசம் வைத்திருந்துள்ளார். அம்மாவை வீல் சேரில் வைத்து வெளியில் விக்ராந்த் அழைத்துச்செல்வது வழக்கம்.
கடந்தவாரம், ராஜேஸ்வரி குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆம்புலன்ஸ் வந்தது. ராஜேஸ்வரியை வீல் சேரில் வைத்து விக்ராந்த், அழைத்துவந்து ஆம்புலன்ஸில் ஏற்றினார். அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் வீடு திறக்கப்படவில்லை. இந்தச் சமயத்தில்தான் இருவரும் இறந்துள்ளனர். அவர்கள் மரணம் குறித்து விசாரித்துவருகிறோம். ராஜேஸ்வரி, விக்ராந்த் இருவரும் உயிரிழந்துள்ள நிலையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்'' என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ராஜேஸ்வரி படுக்கையறையிலும் விக்ராந்த்தின் ஹாலிலும் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவரின் சடலங்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. விக்ராந்த்தின் சகோதரி, அமெரிக்காவில் குடியிருந்துவருகிறார். அவருக்கும் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு, உடல்நலக்குறைவால் ராஜேஸ்வரி இறந்திருக்கலாம்.
அதனால் மனமுடைந்த விக்ராந்த், விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் தெரியவரும். இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் பரிந்துரைத்துள்ளோம். கடந்த வாரம் எந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள் என்றும் விசாரித்துவருகிறோம்" என்றார்