STORYMIRROR

அர்விந்த் நாராயணன்

Drama Classics Others

4  

அர்விந்த் நாராயணன்

Drama Classics Others

ஊர் ஓரமா ஆற்றுப்பக்கம் தென்னந்தோப்பு!

ஊர் ஓரமா ஆற்றுப்பக்கம் தென்னந்தோப்பு!

6 mins
0

ஊர் ஓரமா ஆற்றுப்பக்கம் தென்னந்தோப்பு!


தாமரைக்குளம், நாகர்கோயில் பக்கம் உள்ள ஒரு சிறு கிராமம் அங்கே சிதம்பரம் பண்ணையார் தான் ஊர் பெரிய மனுஷன், அந்த கிராமத்தில் பாதி இடம் அவருக்கு சொந்தமானது தான், பங்களா மாதிரி வீடு, ஆடு பண்ணை, கோழி பண்ணை, வாழை தோப்பு, மாந்தோப்பு அவர் வீட்டு பக்கத்தில். தென்னந்தோப்பு, கரும்புத்தோட்டம் ஊர் எல்லைக்கிட்ட ஆற்றங்கரைப்பக்கமா. சொந்தமா இரண்டு கோவில் மக்களுக்காக கட்டி கொடுத்த பெரிய வள்ளல். ரொம்ப பசுமையான கிராமம் நிறை குறை இல்லாத வாழ்க்கை அவருக்கு மூணு ஆண் பிள்ளை.

இசக்கிமுத்து கன்னியாகுமரியை சேர்ந்தவன் வேற ஜாதிக்கார பொண்ணை காதலிச்சானு அடிச்சு ஊரை விட்டு தொரத்திட்டாங்க, கால் போன போக்கில் நடந்தே பல தூரம் வந்தான் சாப்பாடு இல்லை, பட்டினியா ரோட்டில் கிடந்தான், ஒரு அன்ன தானம் பண்ணற ஐயப்ப சாமி கூட்டம் அவனுக்கு சாப்பாடு போட்டு நாகர்கோயிலில் இறக்கி விட்டு இங்கே ஏதாவது வேலை தேடி பொழச்சுக்கோப்பான்னு விட்டுச்சு.

உழைக்க தயாரா இருந்தாலும் வேலை கொடுக்க யாருமே இல்லை கோவில் வாசல்ல யாரோ ஒருத்தன் திருடியதை இவன் தான்னு ஊர் மக்கள் துரத்த ஒரு பஸ்சுக்குள் ஏறி, நினைத்த இடத்தில் இறங்கினான், அது ஒரு ஆற்றங்கரை,பசுமையான இடம், இந்த பக்கம் ஆல மரம், ஆற்றுக்கு அந்த பக்கம் தென்னந்தோப்பு.

வாழ்க்கை வாழவே பிடிக்கலை சாகனும் முடிவு பண்ணி அங்கே ஆல மரத்தடில இருந்த அய்யனார் கோவில் கத்தியை எடுத்து கை அறுத்து சாகலாம்னு முடிவு பண்ணான், அந்த நேரத்தில், "காப்பாத்துங்க காப்பாத்துங்கனு" யாரோ அலறும் சத்தம் கேட்க, அங்கே போய் பார்த்தால், ஆற்றுக்கு அந்த பக்கம் ஒரு குடும்பம் நிற்க ஒரு குழந்தை ஆற்றில் அடிச்சுட்டு போயிட்டிருந்தது.இசக்கிமுத்து உடனே தண்ணில குதிச்சு நீந்தி அந்த குழந்தையை காப்பாத்தினான். அந்த பக்கம் கரைக்கு கொண்டு போய்  குழந்தையை பத்திரமா கொடுத்தது சிதம்பரம் பண்ணையார்கிட்ட, அது அவரோட பேரன்.

“யப்பா என் வம்சத்தையே காப்பாத்திட்டே, நீ ரொம்ப வருஷம் நல்லா இருக்கனும்” என்று சொல்லி சிதம்பரம் பண்ணையார் வாழ்த்தினார்.

இசக்கிமுத்து சிரித்துக்கொண்டே சொன்னான் “இன்னும் கொஞ்சம் நேரம் அப்புறம் விழுந்திருந்தா காப்பாத்தியிருக்க முடியாது, நானே சாகலாம்னு ஆற்றுக்கு அந்த பக்கம் சாக இருந்தேன், சத்தம் கேட்டு வந்தேன் என் முன்னாடி ஒரு குழந்தை கஷ்டப்படறது பார்க்க முடியலை அதான் காப்பாத்தினேன்” என்றான்.

“என்னப்பா இப்படி சொல்லிட்டே தாமரைகுளத்துக்குள்ள வந்துட்ட இனிமே உன்னை வாழ வைக்க வேண்டியது என் பொறுப்பு. என்ன வேலை தெரியும்?” என்றார்.

“எது கொடுத்தாலும் செய்வேன் அய்யா” என்றான் இசக்கிமுத்து.

“இதோ பக்கத்துல இருக்கிற தென்னந்தோப்பு என்னோடது தான், இனிமே இளநீர் பறிச்சு கடை போட வேண்டியது உன் வேலை, இதுக்குள்ளயே குடுசை கட்டிக்கோ என் வம்சத்தை காப்பாத்திருக்க உனக்கு இதை விட பெருசா ஏதாவது செய்யுறேன் இப்போ தென்னந்தோப்புக்கு போ” என்று இடத்தை சுற்றி காட்டினார்.

இசக்கிமுத்துக்கு மிகுந்த ஆச்சிர்யம் அக்கரைக்கு இக்கரை பச்சைனு சொல்லுவாங்க அந்த கரைல சாக இருந்தேன், இந்த கரைல வாழ ஆரம்பிச்சிருக்கேன் என்று பெருமிதம் கொண்டான்.    

மொத்தம் 14 மரங்கள் இருந்தன, மொத்த மரமும் சிறகை விரித்து பறப்பதுபோல் வானமே தெரியாத அளவில் இருந்தது, சில்லென்ற காற்றுடன் அந்த இடமே குளுமையா இருந்தது. சிதம்பரம் பண்ணையார் குடும்பத்துடன் வீட்டுக்கு போயிட்டு மாலை தென்னந்தோப்புக்கு வந்து பார்க்கும்போது, இருந்த தென்னங்கீற்றை வைத்து ஒரு சின்ன வீடு கட்டி இருந்தான் இசக்கிமுத்து.

“பரவாயில்லையே நல்ல வேலைக்காரனா இருக்கியே. இளநீர் வெட்ட தேவையான ஆயுதம் எல்லாம் தரேன், ஒரு வாரம் மரம் ஏறி பழகு, இளநீர் எடுத்து வை, ஆற்று ஓரமா கடை போடலாம் எவ்வளவுக்கு வேணாலும் வித்துக்கோ அது உன் சாமர்த்தியம் அது தான் உன் சம்பாத்தியம்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு வாரத்தில் மரம் ஏற கற்றுக்கொண்டு இளநீர் பறித்து இறக்கினான், சிறியதாக  கடை போட்டு ஆற்று ஓரமா வியாபாரம் தொடங்கினான் கம்மி விலைக்கே விற்று நிறைய இளநீர் விற்று தீர்த்தான்.

முதல் சம்பாத்தியத்தில் சிதம்பர பண்ணையாருக்கு வேட்டி சட்டையும், தென்னம் ஓலையில் நிறைய பொம்மைகள் போல் செய்து கொடுத்தான். அவன் கை வேலைகளை பார்த்து ஆச்சிர்யப்பட்ட பண்ணையார் அவனிடம் ஒரு பத்திர காகிதத்தை நீட்டினார்.

“அய்யா இது என்ன அய்யா?” என்று கேட்க,

“என் குடும்ப வம்சத்தை காப்பாத்தினதுக்கு ஒரு பரிசு, நீ இருக்கிற தென்னந்தோப்பு 1000 சதுர அடி அதை உன் பெயருக்கு எழுதி தரேன், இது என் குடும்பத்தில் பேசி முடிவு எடுத்தது வாங்கிக்கோ” என்றார்.

அவரின் வள்ளல் தன்மை பார்த்து அவன் கண் கலங்கியது அவரின் அன்புக்கு ஈடேயில்லை என்று நினைத்தான்.

சிதம்பர பண்ணையார் அவர் மகன்களிடம் பேசியபோது அந்த தென்னந்தோப்பு பராமரிக்க முடியலை அந்த மரத்தில் இளநீர் அதிகமாவும் இல்லை, ஒன்பது வருஷம் அதுக்கு பராமரிப்பு செலவு தான் ஆச்சு ஒன்னும் லாபம் இல்லை அதனால இனாமா கொடுத்தா கூட போதும் கொடுங்க என்று சொல்லியிருந்தனர்.

இப்போது தென்னந்தோப்புக்குள் வரும்போது ஒருவித இனம் புரியாத சந்தோஷம் அவனுக்குள், அந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தான். 14  மரங்கள், பின்னாடியே ஆறு இதைவிட அருமையான வாழ்க்கை யாருக்குமே கிடைக்காது என்று எண்ணினான். நாலு மரத்திற்கு நடுவில் சுவர் எழுப்பி வீடு கட்ட எண்ணினான், மிச்ச இருக்கும் இடத்தில் இன்னும் நிறைய தென்னங்கன்னு வைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.  

காலையும் மதியமும் இளநீர் கடை, அந்த கடையிலே தென்னங்கீற்றால் ஆன சிறு சிறு பொம்மைகள் அதற்கு தேவையான பொருள்கள் என்று வாங்கி அவன் வியாபாரத்தை பெரிதாக்க நினைத்தான். பொதுவாகவே தென்னம் பயன் தர எட்டு முதல் பத்து வருடம் ஆகும், இசக்கிமுத்து வந்த நேரம், நல்ல நேரம் அந்த மண் மிகவும் சக்தி வாய்ந்த மண் போல இப்போது இளநீராக காய்த்து தொங்க ஆரம்பித்தது.

ஒரு நாள் பதினைந்து இளநீர் விற்றது போக ஏகத்துக்கு இளநீர் இருந்தது பட்டணத்தில் சுற்றி உள்ள கிராமத்தில் என்று எல்லா இடத்திற்கும் விற்க முடிவு செய்தான், வேலைக்கு ஆள் இல்லாமல் எதுவும் செய்ய முடியவில்லை.

தினந்தோறும் மதிய உணவிற்கு பக்கத்தில் உள்ள சிற்றுண்டி கடைக்கு செல்வது வழக்கம் அங்கே அந்த கடை முதலாளியின் பெண் இளந்தென்றல்  பழக்கமானாள், இருவருக்கும் சில மாதத்தில் காதல் மலர்ந்தது.

வியாபாரமும் சற்று நன்றாக போக ஆரம்பித்தது, சிதம்பர பண்ணையாரிடம் விஷயத்தை சொல்லி அவர் தலைமையில் கோவிலில் இசக்கி முத்துக்கும், இளந்தென்றலுக்கும் திருமணம் நடந்தது. இப்போது சிறியதாக சுவர் எழுப்பி வீடு கட்டியிருந்தான் இசக்கிமுத்து.

இளந்தென்றலை தினமும் இளநீர் கடை பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு வாடகைக்கு வண்டி பிடித்து அடுத்த கிராமத்துக்கும், பட்டிணத்துக்கும் சென்று இளநீர் விற்கலானான். பல இடங்களில் தென்னம் மட்டை தென்னம் கீற்றுக்கு நிறைய கிராக்கியாக இருந்தது அதையும் வியாபாரம் ஆக்கினான்.

நிறைய தென்னம்கன்று வாங்கி இன்னும் நிறைய மரங்கள் நட ஆரம்பித்தான். வியாபாரம் சூடு பிடித்தது.....நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தான்.

வருடங்கள் ஓடியது,சிதம்பர பண்ணையார் மனைவி காலமாகி போக, அவர் மகன்கள் வசம் போகவேண்டிய சூழ்நிலை மூன்று மகன்களும் வெவ்வேறு ஊரில், மாறி மாறி அவர்கள் ஊருக்கு செல்லவே சரியாக இருந்தது இதற்கிடையில் சகோதரர்களுக்குள் சொத்து தகராறு வேறு. ஒரு கட்டத்தில் அவர் பங்களா வீடு இடிக்கப்பட்டு இடம் விற்கப்பட்டது மூன்று பாகமாய் பிரித்து  கொடுத்தார் பண்ணையார்.

ஆட்கள் யாரும் பராமரிக்க இல்லாததால் பண்ணை, தோப்பு, துறவு எல்லாம் அவர் கை விட்டு போக தொடங்கின, அடுத்த ஆறு வருடத்தில் சிதம்பர பண்ணையாரின் சொத்து மொத்தமும் பறி போனது, மகன்களும் பார்த்துக்கொள்ள சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.

எங்கு போவது என்று தெரியாமல் தவித்த சிதம்பர பண்ணையார் தற்கொலை செய்து சாகலாம் என முடிவு எடுத்தார், போற உசுரு நம்ம ஊரிலேயே போகட்டும்னு அங்கே இங்கே பிச்சை எடுத்து காசு சேர்த்து நாகர்கோயில் வந்து தாமரைக்குளம் வந்து சேர்ந்தார்.

அன்று இரவே சாக முடிவு எடுத்து அந்த ஆற்றங்கரையில் அவர் வாழ்ந்த ஊரை பார்த்துவிட்டு ஆற்றில் குதித்தார்.சிறிது நேரத்தில் கண் திறந்து பார்க்கும்போது அவருக்கு மேல் தென்னை மரம் பல் இளித்து வரவேற்றது, ஆமாம் இசக்கி முத்து அவரை காப்பாற்றிவிட்டான் இப்போது அதே தென்னந்தோப்பில் கட்டிலில் படுத்து கொண்டிருந்தார்.

சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிதம்பர பண்ணையார் எழுந்தார் “எதுக்குப்பா என்னை காப்பாத்தின?, என்ன பாவம் பண்ணனோ யார் கண்ணு பட்டுச்சோ என் சொத்து, சுகம், குடும்பம் எல்லாமே என்னை விட்டு போச்சு நான் அனாதை ஆனேன், இதுக்கு மேல நான் யாருக்காக இருக்கனும்”.

“அய்யா தாமரைக்குளம் வந்தவர்களை வாழ வெச்சு தான் பழக்கம்னு எனக்கு நீங்க சொன்னீங்க, உங்களால்தான் நான் வாழறேன். இது உங்க இடம் இங்கே தான் என் வீடு, எதிர்க்க தான் நான் முதலில் கட்டிய சின்ன வீடு நீங்க உங்க  காலம் முடியற வரைக்கும் என் வீட்டிலேயே இருக்கலாம்”.

“இசக்கிமுத்து உன்னை நினைச்சா பெருமையா இருக்கு சும்மாவா சொன்னாரு எங்க வாத்தியார் எம் ஜி ஆர் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்னு”.

அவர் தோப்பை இப்போது தான் திரும்பி பார்க்கிறார் இடமே மாறி இருந்தது, இப்போது 25 மரங்கள், இரண்டு பம்ப் செட், அங்கேயே பங்களா  போல வீடு கட்டியிருந்தான்.

“அய்யா இந்த இடம் மட்டுமில்லை இன்னும் ஆறு தென்னந்தோப்பு நாகர்கோயில், கன்யாகுமரி பக்கம் வாங்கி இருக்கேன். இளநீர் கடை இருபது இருக்கு. அது இல்லாம ஒரு பாக்டரிக்கு இளநீர் கொடுக்கிறோம் அவங்க இளநீரை பாட்டில் போட்டு விக்கறாங்க எல்லாத்துக்கும் நமக்கு கமிஷன்  வரும். பதினைந்து வருஷம் மேல இருக்கிற தென்னை மரம் எல்லாத்தையும் வெட்டி வித்துட்டேன் அதுக்கும் நல்ல காசு” என்றான்  இசக்கிமுத்து.

“சந்தோஷம்டா இந்த இடத்தை தான் நான் முதலில் வாங்கினேன் நானே நட்ட தென்னை மரம் எல்லாம். வருஷங்கள் ஆச்சு ஆனால் பெருசா லாபம் இல்லை. நீ தென்னைமரம் போல எல்லாத்துக்கும் பயன்படற மாதிரி ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பிச்சுட்ட நிம்மதியா இருக்கு”.

“வியாபாரத்தில் கஷ்டம் இல்லை அய்யா, ஆனால் வீட்டில் ரொம்பவே கஷ்டம் நீங்க கல்யாணம் பண்ணிவெச்சீங்களே இளந்தென்றல், பேருக்கு மட்டும் தான் அவள் இளந்தென்றல் என் வாழ்க்கைல புயல் தான் வீசிச்சு. இன்னும் குழந்தை இல்லை அதனாலேயே நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு என்னை வையரா. நானும் பார்க்காத டாக்டர் இல்லை யாருக்கு குறைன்னு தெரியலை. தென்னம் மட்டும் குலை குலையா  காய்க்குது ஆனால் எங்க வம்சம் தழைக்கவே இல்லை நீங்க கல்யாணம் பண்ணி வெச்சதால தான் இப்படி ஆச்சுன்னு என் பொஞ்சாதி சொல்லுது உங்களை இந்த நிலைமையில எப்படி விடறது, எனக்கு வாழ்க்கை கொடுத்த வள்ளல் நீங்க இந்த சின்ன வீட்டில் தங்கிக்கோங்க, நியாயமா என் வீட்ல தான் தங்க வைக்கணும் என் பொஞ்சாதி பொல்லாதவ என்ன சொல்லுவாளோ உங்களுக்கு எதுக்கு சிரமம், நீங்க அங்கே தூங்குங்க மூணு வேலை சாப்பாடு நான் போடறேன், எல்லா வசதியும் நான் பண்ணி தரேன். உங்களுக்கு உங்க வம்சத்தால பிரச்சனை எனக்கு வம்சமே இல்லைனு  பிரச்சனை” என்று ஆதங்கப்பட்டான் இசக்கிமுத்து.

நாட்கள் நகர்ந்தன சிதம்பர பண்ணையார் தென்னந்தோப்பில் காலத்தை கழிக்க ஆரம்பித்தார் தென்னம் அவருக்கு எல்லாம் தந்தது. இசக்கிமுத்து அவரை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டான், அவர் சொன்ன வைத்திய முறையும் பார்த்து குழந்தை பிறப்பதற்கான அணைத்து சிகிச்சையும் எடுத்து வந்தான்.

ஒரு நாள் மரக்கட்டிலில் தென்னந்தோப்பில் தூங்கியவர் தான் திரும்ப எழவில்லை. அவர் மகன்களுக்கு தகவல் சொல்லியும் யாரும் வரவில்லை இசக்கிமுத்து அவருக்கு உரிய மரியாதை செய்து அவரை அந்த  தென்னந்தோப்பில்லேயே  புதைத்தான். இப்போது அவனுக்கு செய்தி வந்தது இளந்தென்றலிடமிருந்து, ஆமாம் அவள் கர்ப்பமாக இருக்கிறாள்.

இசக்கிமுத்து குடும்பமும் தென்னம் போல விருத்தியானது சிதம்பர பண்ணையார் வடிவில்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama