நேர்மை மாறன்
நேர்மை மாறன்
நேர்மை மாறன்
மணி இரவு 9 மணி, தரமணி ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார் மாறன். கவுண்டர் முன் சென்ற பின் "மயிலாப்பூர் ஒன்னு கொடுங்க", "15 ருபாய் சில்லரை கொடுங்க" என்று பதில் வந்தது, அப்போது தான் தான் கவனித்தார் அவரிடம் ஒரு 500 ருபாய் தாள் தான் இருந்தது.
அங்கே கூட்டமும் இல்லை மொத்தமாக ஏழு பேர் தான் இருந்தனர் அது ஊரடங்கு போட்டிருந்த காலம், இரவு 9.30 மணி வரை தான் ரயில் இயங்கும், அங்கே ஓர் இளம்பெண் அப்போது தான் வேகமாக உள்ளே வந்தாள், நல்ல மாநிறம் அழகான பெண் 25 வயதிற்குள் தான் இருப்பாள். அவளிடம் கேட்க, கையிலிருந்த 100 ரூபாயை கொடுத்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே சென்று நின்றாள்.மாறன் டிக்கெட், மற்றும் சில்லறையை வாங்கி கொண்டு திரும்ப, ரயில் வந்திருந்தது, ஓடோடி ரயிலில் ஏறி அமர்ந்தார்,
இவர் ஏறியதும் அந்த பெண் ஏறியதும் பக்கத்து பக்கத்து கம்பார்ட்மெண்ட் இங்கிருந்து அங்கே போக முடியாது ஜன்னல் வழியே பார்க்க தான் முடியும் அந்த பெட்டியின் டிசைன் அப்படி. இவர் ஏறிய பெட்டியில் இவர் மட்டுமே அமர்ந்திருக்க அவள் ஏறிய பெட்டியில் இன்னும் மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.
ரயில் கிளம்பியது, கையில் இருக்கும் 85 ருபாய் சில்லறையை அந்த பெண்ணிடம் கொடுக்க எண்ணி அவளை கை அசைத்து பார்த்தார் அவள் ஏதோ யோசித்தபடியே அமர்ந்து கொண்டு இவரை பார்க்கவில்லை.
அவருக்கு மூட்டு வலி பிரச்சனை வேறு இருக்கிறது, தரமணி ஸ்டேஷன் கவுண்டர் முதல், ரயில் ஏறும் வரை ஓடி வந்ததால் வலி வேறு, சற்று அமருவோமென்று அமர்ந்துவிட்டார். ரயில் திருவான்மியூர் தாண்டி இந்திரா நகரில் நின்றது, சரி அந்த பெண் இருக்கும் பெட்டிக்கு செல்லலாம் என்று கிளம்ப ரயில் கிளம்பிவிட்டது, இப்போது ஜன்னல் வழி பார்த்தால் அந்த பெண் மட்டும் தான் அங்கே அமர்ந்திருந்தாள், ஒரு நடுத்தர வயது ஆள் ஓடும் ரயிலில் அவள் இருக்கும் பெட்டியில் ஏறினான்.
"ஏன்பா ஓடுற ரயிலில் ஏறாத விழுந்தால் என்ன ஆகிறது" என்று கேட்க, உன் வேலையை பாரு யா என்றபடி அவன் உள்ளே சென்றான். அவமரியாதையாக பேசியதால் அவன் முகம் நன்றாக பதிந்துவிட்டது அவருக்கு.
சரி அடுத்த நிறுத்தத்தில் காசை கொடுக்கலாமென்று அமர்ந்துவிட்டார், சிறிது நேரத்தில் அந்த பெண் ஏதோ சண்டையிடுவது போல தெரிந்தது, அடுத்த நிறுத்தம் கஸ்தூரிபாய் நகர் யாரும் ஏறவில்லை, இவர் இறங்கவும் இல்லை, கோட்டூர்புரம் கூவம் ஆற்றை கடக்கும்போது அந்த நடுத்தர வயதானவன் அந்த பெண்ணை ரயிலிலிருந்து தள்ளி விட்டான்,மாறனுக்கு பயம் அதிகரித்துவிட்டது, உடனே அங்கே இருக்கை அடியிலே சென்று மறைந்துகொண்டார். அவன் அங்கே ஜன்னல் வழியே எட்டி பார்த்துவிட்டு யாருமில்லை என்றவுடன் கோட்டூர்புரம் நிறுத்தம் வந்தவுடன் இறங்கி சென்றுவிட்டான். வேறு யாரும் அங்கே ஏறவுமில்லை. மயிலாப்பூர் நிறுத்தம் வந்ததும் அந்த பெட்டிக்கு சென்று அந்த பெண்ணின் பை எடுத்து கொண்டு கீழே நடந்தார்.கீழே அவர் வருகைக்காக காத்திருந்தான் மாறனின் மகன் மருதமலை.
"வாங்க அப்பா, வண்டில ஏறுங்க".
"டேய் மலை, நேராக மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் போ".
"எதுக்குப்பா?".
"ஒரு பொண்ணை ஒருத்தன் ரயிலிலிருந்து தள்ளி விட்டான் நான் பார்த்தேன், போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு புகார் கொடுத்திட்டு போயிடுவோம்".
"யாருப்பா அந்த பொண்ணு ? உங்களுக்கு எதுக்குப்பா ஊர் வம்பு, மாறவே மாட்டிங்களா ?"
"டேய் சொல்றதை கேளு டா. எங்கயோ ஒரு அப்பன் பொண்ணை காணோம்னு தவிப்பான் இல்லையா, நம்ம வீட்டிலேயும் வயசு பொண்ணு இருக்கு, உன் மனைவியும் சின்ன வயசு பொண்ணு தானே. யோசிக்க மாட்டியா".
"சரி ஆனால் முதலில் வீட்டுக்கு போவோம், அங்கே என்ன நடந்ததுன்னு என் கிட்டே சொல்லுங்க அப்புறமாக போலாம்".
"நான் இவ்ளோ தூரம் சொல்றேன் புரியாதா?" மாறன் கடுப்பில் இருந்தார்.
"உங்களுக்கு தான் புரியலை, போலீஸ் ஸ்டேஷன் போனால் ஆயிரம் கேள்வி கேப்பாங்க எப்போவேனாலும் வர சொல்லுவாங்க எல்லோரும் வேலை வெட்டி விட்டுட்டு போக முடியுமா?"
"நான் போறேன், உனக்கு பயம்னா வர வேண்டாம்" மாறன் தீர்மானமாக இருந்தார் .
"சொல்றதை கேட்கவே மாட்டேங்களா. முதலில் வீட்டுக்கு வாங்க".
அவர்கள் வீடு ஆழ்வார்பேட்டையில், வீட்டிற்கு வந்ததும் வீட்டிலிருப்பவர்களிடம் சொல்ல எல்லோரும் கேட்டு உறைந்து போயினர். இப்போ ஏதும் பேச வேணாம் காலையில் பார்க்கலாம் என்று மகன் தூங்க செல்கிறான்.
மகன் சென்றதும் அவர் மனைவி பங்கஜம் அவரிடம் வந்தாள்....
"நீங்க சொல்றதை கேட்டதிலிருந்து ரொம்ப பயமா இருக்கு. நீங்க ஒன்னு மட்டும் செய்யுங்க, இந்த பை மட்டும் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்திருங்க வேற ஏதும் சொல்ல வேணாம், அவங்க கண்டுபிடிச்சிக்கட்டும். எப்படி கிடைச்சதுன்னு கேட்டால் நான் வந்த ரயிலில் தனியாக கீழே இருந்ததுன்னு சொல்லுங்க" பங்கஜம் புருஷனுக்கு வக்காலத்து வாங்கி பேசினாள்.
"இது என்ன பாதி நேர்மைவாதியோ...." என்று புலம்பிக்கொண்டே சரியென்று தலையசைத்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆழவார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்றார் மயிலாப்பூர் செல்லாமல், அவர் வீட்டு அருகில் தான், மாறன் ஒரு பெரிய நிறுவனத்தில் தணிக்கையாளர், அவர்கள் கம்பெனி எங்கெல்லாம் சென்று தணிக்கை வேலை செய்ய சொல்வார்களோ அங்கெல்லாம் செல்வது இவர் வழக்கம், கடந்த ஒரு வாரமாக ஊரடங்காக இருந்தாலும் தணிக்கை வேலை நேரில் சென்று தான் பார்க்க வேண்டுமென்று மயிலாப்பூர் முதல் தரமணி வரை ரயிலில் செல்கிறார். இன்றோடு அந்த கம்பெனி வேலை முடிந்தது நாளை முதல் நந்தம்பாக்கம் செல்ல வேண்டும். கடைசி நாளில் வரும்போது தான் இப்படி ஒரு சம்பவம்.
மாறன் ஆழவார்பேட்டை ஸ்டேஷன் அடைந்து அனைத்து தகவலும் கொடுத்து ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார்.
அடுத்த நாள் காலை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஆள் வந்திருந்தனர் அவரை அழைத்து செல்ல....மாறனும் சென்றார். மருதமலையும் அங்கே இருந்தான் அப்போது....
"எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டாரா. நேர்மை, நியாயம்னு இருந்தால் நம்ம வாழ்க்கையை வாழவிடவேமாட்டாங்க, இது வரைக்கும் கணக்கு வழக்கில் மட்டும் தான் மூணாவது மனுஷனெல்லாம் இவர்கிட்ட சண்டைக்கு வந்தான், இப்போ கொலை வழக்கு வேறயா?".
ஸ்டேஷன் சென்ற மாறன் அந்த பெண்ணின் பெற்றோர் அங்கிருப்பதை பார்த்து அவரிடம் தகவல் சொல்லிவிட்டு மீதம் 85 ரூபாயை கையில் கொடுத்துவிட்டு பஸ் பிடித்து நந்தம்பாக்கம் சென்றார்.
மறைமுகமாக மாறனை பற்றி அவர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணை செய்தது, விசாரித்த அனைவரும் சொன்னது சரியான ரூல்ஸ் மாறன் சார், அவரால் பலருக்கு பிரச்சனை தான் எப்போ பார்த்தாலும் நேர்மை, நியாயம்னு பேசிட்டு இருப்பார், எங்க முதலாளி சில விஷயத்தில் வளைஞ்சு கொடுத்தாலும் இவர் விட மாட்டார் என்றே பதில் வந்தது.
இரவு எட்டு மணி நந்தம்பாக்கத்தில் வேலையை முடித்துவிட்டு மாறன் கிளம்பி வெளியே வந்து பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க, ஒரு ஷேர் ஆட்டோ வந்தது, வாங்க சார் என்று அவரை அப்படியே தூக்கி உள்ளே போட்டது, மாறனுக்கு பயம் தொற்றிக்கொண்டது, ஆட்டோ ஒரு சிறிய இருட்டு பாதைக்குள் சென்றது, ஆட்டோவில் இருந்த நான்கு ஆட்கள் அவரை அடித்து, " ஒழுங்கு மரியாதையாக கொடுத்த கேஸ் வாபஸ் வாங்கு" என்று மிரட்டி விட்டு சென்றது.
அவரால் எழுந்து நடக்க முடியவில்லை மகனை அழைத்தாலும் கண்டபடி திட்டுவான் என்று தெரியும் அவரே நேராக ஒரு மருத்துவமனை சென்று அனுமதியாகி விட்டு வீட்டிற்கு தகவல் சொன்னார். மகனும், மனைவியும் ஓடி வந்தனர். அவர்கள் வந்ததும் நடந்ததை சொன்னார் மாறன்.
"போச்சு, போச்சு இது ஒன்னு தான் நடக்கலைன்னு நினைச்சேன் இதையும் செஞ்சாச்சு. இப்போவும் வாபஸ் வாங்கமாட்டேனு தானே இருப்பீங்க. இன்னிக்கு உங்களை அடிச்ச மாதிரி நாளைக்கு நம்ம வீட்டு ஆள் எல்லோரையும் அடிக்கப்போறாங்க பார்த்திட்டு இப்படியே நீதி, நேர்மைனு இருங்க. சந்தோஷமா. வீட்ல இரண்டு வயசு பொண்ணுங்க இருக்காங்க, ஒரு வயசான அம்மா இருக்காங்க, நாலு வயசில் என் சின்ன பொண்ணு இருக்கா, உங்களால எங்களுக்கு ஏதாவது பாதுகாப்பு இருக்கா சொல்லுங்க.காலத்துக்கு ஏத்த மாதிரி மாறவே முடியாதா".
"நீ சொல்றது எல்லாம் சரிதான், இறந்து போனதும் ஒரு வயசு பொண்ணு டா, அவளுக்கும் என்னை மாதிரி ஒரு அப்பன் இருக்கான் டா அவன் நிலைமை நமக்கு வந்தால் இப்படி தான் பேசுவியா".
"இதே நிலைமை நமக்கு வந்தால் அது வேற, அவன் யாரு என்னனு தேடி கண்டுபிடிச்சு வெட்டி போட கூட தயங்க மாட்டேன். ஆனால் யாரோ ஒரு பொண்ணுக்கு நாம என் கஷ்ட படனும்? ஊருக்குள்ள பலர் இப்படி தான் என்னை மாதிரி இருக்காங்க, இருக்கிற வாழ்க்கையே ஆபீஸ், பிள்ளைங்க ஸ்கூல், வயசானவங்க மருத்துவ செலவுன்னு இதை தாண்டி போகிறதே போராட்டமா இருக்கு இதில் மூணாவது மனுஷனுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து நான் கண்ணீர் சிந்தனுமா" மருதமலை எதார்த்தத்தை பேசினான்.
"டேய் என்னடா இப்படி பேசற, உனக்கு சின்ன வயசிலிருந்து நேர்மையை சொல்லி கொடுத்தவன் நான் தானே டா, இப்படி பொறுப்பே இல்லாமல் இருந்தால் எப்படி. இது நம்ம சமூகம் இல்லையா, எல்லா இந்தியரும் என் அண்ணன் தங்கச்சின்னு சுதந்திர தினம் அன்னிக்கு whatsapp இல் ஸ்டேட்டஸ் போட்டால் மட்டும் போதுமா, உண்மையாக நினைக்க மாட்டிங்களா. இந்த பிரச்சனையில் நான் செத்தாலும் பரவாயில்லை நான் நேர்மையாக தான் இருப்பேன், கேஸ் வாபஸ் வாங்க மாட்டேன். நீ கிளம்பி வீட்டுக்கு போ, பொண்டாட்டி பிள்ளையோடு சந்தோஷமாயிரு".
மருதமலையும் அவன் அம்மாவும் மிகுந்த வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்ப அன்று இரவு தனியாக அந்த மருத்துவமனையில் தங்கலானார் மாறன்.
அவருக்கென்று ஒரு whatsapp குரூப் உண்டு அவர் வயதை சேர்ந்தவர்கள், எல்லோருமே பெரிய பெரிய இடத்தில பெரிய பொறுப்பில் வேலை செய்பவர்கள், அவர்களிடம் பேசி சென்னை கமிஷனரின் அழைப்பு எண்ணை வாங்குகிறார் மாறன்.
அவருக்கு அழைப்பை விடுக்க அந்த பக்கம் சிறிது நேரத்தில் பேச வந்தார் கமிஷனர் அருணாச்சலம்.
"ஹலோ யாரு இந்த நேரத்தில் என்ன விஷயமாக பேசணும்??"
"சார் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாக கேட்கணும், இந்த நேரத்தில் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். நான் ஒரு பெரிய தணிக்கை கம்பெனியில் மூத்த ஊழியர், பல கம்பெனி சென்று தணிக்கை அறிக்கை பார்க்க வேண்டியது தான் என் வேலை, நேற்று இரவு வேலை முடிச்சிட்டு தரமணியிலிருந்து மயிலாப்பூர் போக ரயில் ஏறியபோது ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தது, அதை பார்த்ததும் அதை பற்றி ஆழவார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ப்ரகாஷிடம் புகார் கொடுத்தேன், இன்னிக்கு காலையில் ஸ்டேஷன் போயிட்டு தான் வந்தேன், ராத்திரிக்குள் என்னை அடித்து போட்டு இந்த கேஸ் வாபஸ் வாங்க சொல்லி ரௌடிகள் சொல்லிட்டு போறாங்க. புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டு பிடிச்சிருந்தால் மக்களுக்கும் உங்கள் காவல் துறை மேல் நம்பிக்கை இருந்திருக்கும், புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி யாருன்னு தெரிஞ்சும் அவன் மூலம் புகார் கொடுத்தவனை வாபஸ் வாங்க சொல்றது தான் நம்ம சட்டமா?? இப்படி இருந்தால் மக்களுக்கு பயம் மட்டும் தான் வரும் அதனால தான் யாரும் யாருக்கு பிரச்சனை வந்தாலும் நமக்கென்னன்னு அவன் வேலையை பார்த்திட்டு போயிடறான். இந்த பயம் போகணும்னா நீங்க நேர்மையாக வேலை பார்க்கணும், நீங்க போலீஸ் கமிஷனர் உங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கும் அதை செய்வீங்கன்னு நம்பறேன். இல்லை நீங்களும் காசு வாங்கிட்டு என்னை கொல்ல அவர்கள் மூலம் ஆள் அனுப்பினால் செத்தாலும் விட மாட்டேன். இந்த கேஸ் பற்றி கலெக்டர்,நீதிபதி, MLA , MP ன்னு எல்லாரோட இ-மைலுக்கும் அனுப்புவேன். உங்களை தான் மலை போல நம்பியிருக்கேன்" மாறன் பேச்சு தீயாக இருந்தது.
"என்கிட்ட சொல்லியாச்சு இல்லையா, சட்டம் தன் கடமையை செய்யும்" என்று முடித்துக்கொண்டார் அருணாச்சலம்.
அடுத்த நாள் காலையில் பரபரப்பாக செய்திகளில் ஓடி கொண்டிருந்தது, தரமணியில் வேலை பார்த்து வந்த IT ஊழியர் பிருந்தா என்ற பெண் ரயிலில் இருந்து தள்ளிவிட பட்டு கொன்றதாக தெரிய வந்துள்ளது, இது தொடர்பாக அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மேலாளர் ஒருவரை கைது செய்தது போலீஸ்.
செய்தி முடிக்க அங்கே போலீஸ் அவரை அழைத்து போக வந்தது.நேராக ஆழவார்பேட்டை சென்றவர் அந்த குற்றவாளியை அடையாளம் காட்டினார். கமிஷனர் அங்கே வந்து நின்றார். மாறன் வீட்டிற்கு தகவல் சொல்ல மருதமலையும் வந்து சேர்ந்தான்.
"கைது செஞ்சாச்சு. அந்த பெண் அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்தார்ன்னு இவர் மேல் குற்றம் சுமத்த இவரை பணி நீக்கம் செய்திருக்காங்க அதற்கு பழி தீர்த்திருக்கார்.ஒரு அரசியல் சமூகர் செல்வாக்கு வைத்து உங்களையும் மிரட்டியிருக்கார். அவங்களையும் கைது பண்ணியாச்சு, இதை கவனிக்காத இன்ஸ்பெக்பரும் சஸ்பெண்ட் பண்ணியாச்சு, இனி நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டியது மட்டும் தான் உங்க வேலை, அது வரைக்கும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது எங்க பொறுப்பு. மக்கள் எல்லோரும் உங்களை மாதிரி நேர்மையாக, தைரியமாக இருந்தால் எங்கள் வேலை சுலபம் தானே. பல கொலைகளுக்கு நேரில் பார்த்த சாட்சி இருந்தும் யாரும் சொல்ல முன்வராததால் எல்லா வழக்கும் வருஷ கணக்கில் இழுத்துட்டு போகுது, குற்றவாளி எல்லோரும் நிம்மதியாக தான் வாழ்ந்திட்டு போறாங்க. உங்க நேர்மையை நான் பாரட்டறேன்!! உங்களை போன்றவர்கள் தான் நாட்டுக்கு தேவை!" கமிஷனர் மாறனை பாராட்டினார்.
அந்த நேரத்தில் அங்கே இருந்த மருதமலை நடந்ததை பார்த்து நெகிழ்ந்து போனான். தன் அப்பாவை பார்த்து பெருமிதம் கொண்டான்.நேர்மை குணம் இப்போது அவனுக்கும் வந்தது!!
