புதிய பாதை
புதிய பாதை
புதிய பாதை
சென்னை வடபழனி முருகன் கோவில், அன்று சஷ்டி விரதம் முடியும் நாள் என்பதால் ஏகத்துக்கும் கூட்டம்.
ஒரு பக்கம் கூட்டம் கூட்டமாக அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்தை வெகுவாக கவர்ந்தான் ஒரு சிறுவன்.
"சார் தள்ளுங்க தள்ளுங்க வரிசைல வாங்க, வரிசையில் வந்தா உடனே சாப்பாடு கிடைக்கும் நீங்களும் சீக்கிரம் போலாம்"
"டேய் தம்பி என்னடா வயசு ஆகுது உனக்கு இந்த வேலையை பாக்குற படிக்க போகலையா...." கூட்டத்தில் ஒருவர் கேட்க.
"பத்து வயசு ஆகுது, வேலை செய்யுறதுக்கு வயசு முக்கியம் இல்லையே, பள்ளிக்கூடம் போயிட்டிருதேன் இப்போ இல்லை சார்...." சொல்லிவிட்டு அவன் வேலையில் மூழ்கியிருந்தான்.
மதியம் இரண்டு மணி ஆனது, அவனும் அந்த கூட்டத்தோடு உணவு அருந்திவிட்டு, மிச்சமிருக்கும் உணவை டப்பாவில் போட்டுகொண்டு, கோவில் பின்புறம் இருக்கும் பக்கம் சென்று அங்கு உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களிடம் கொடுத்துவிட்டு வந்தான்.
அவன் செய்ததை கவனித்தபடியே இருந்த அந்த அன்னதான ஆட்களில் ஒருவன் அவனிடம் வந்து இருபது ரூபாயை கொடுத்தார்.
"சார் வேற வேலை இருந்தா சொல்லுங்க சார்"
தம்பி சின்ன பசங்களை சட்டப்படி வேலைக்கு வைக்க கூடாது ஏதோ பாவமா இருக்கேன்னு கூட்டத்தை அடக்க சொன்னேன், நீ ரொம்ப நல்லாவே செய்தே, வேற வேலை எதுவும் இப்போ இல்லை. உன் வீடு எங்கே?"
"வீடெல்லாம் கிடையாது சார், கிடைக்கிற இடத்தில் தூங்கிடுவேன்"
"என்னப்பா இப்படி சொல்ற உனக்குன்னு யாருமே இல்லையா"
"இருந்தாரு என் அப்பா, அவரும் ஆறு மாசம் முன்னாடி செத்துட்டாரு, அவரு கோவில் கோயிலா போய் பிச்சையெடுத்து தான் என்னை படிக்க வெச்சாரு, ஆனால் எப்போவும் நான் பிச்சையெடுக்க கூடாதுன்னு சொல்லிட்டே இருப்பாரு அதான் அவர் போனதுக்கு அப்புறமும் பிச்சை எடுக்க தோணலை ஏதாவது வேலை செய்து பசியை போக்கிடுவேன்"
"அப்போ உன் அம்மா எங்கே?"
"தெரியாது சார், என்னை காஞ்சிபுரத்தில் ஒரு கோவில் வாசலில் இருக்கிற குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்து தான் வளத்தாரு என் அப்பா , அவருக்கு கல்யாணமே ஆகலை"
"அட பாவமே, ஆறு மாசமா இப்படி தான் வேலை பார்த்திட்டு இருக்கியா?"
"ஆமாம் சார், சென்னையிலிருக்கிற எல்லா கோவிலும் எனக்கு தெரியும் எங்கே எப்பெப்போ விசேஷம்னு பலர் கிட்டே கேட்டு தெரிஞ்சிப்பேன், அங்கே அந்த நேரம் போயிடுவேன் ஏதாவது வேலை பாக்குற மாதிரி பார்த்தால் ஏதாவது கிடைக்கும் அப்படியே தான் போகுது"
"அப்படி என்ன வேலை கிடைக்கும்"
"கூட்டம் அதிகமா இருந்தா செருப்பு கடை நிறைய போடுவாங்க, கிடைக்கிற இடத்தில் நானும் செருப்பை பார்த்துப்பேன் ஒரு நாளைக்கு குறைஞ்சது நூறு பேரு வருவாங்க, ஆளுக்கு அஞ்சு ரூபா கொடுத்தாலும் ஐநூறு ருபாய் தேறும்"
"இப்படியே தினமும் கிடைக்குமா?"
"கிடைக்காது தான் கொஞ்சம் காசை எங்கேயாவது சேமிக்கற மாதிரி ஒளிச்சு வெச்சிருவேன், எனக்கு மட்டும் தான் எங்கே இருக்குன்னு தெரியும், சில காசை சாப்பாடை வாங்கி மத்தவங்களுக்கு கொடுத்திருவேன்"
"அட என்னப்பா சர்வ சாதாரணமா சொல்ற, அவனவன் ஊரை விட்டு வந்து சென்னையிலே பிச்சையெடுக்காத குறையா இருக்கான், நீ சாதாரணமா சம்பாதிச்சு தானமெல்லாம் செய்யுறியே, இந்த வயசிலேயே இப்படி சொல்ற, உன் பெயர் என்ன"
"என் பெயர் விஜயகாந்த்"
"அட நம்ம புரட்சி கலைஞர் பெயரா"
"ஆமாம் சார் அவரோட தீவிர ரசிகர் என் அப்பா, அவரை மாதிரி ஆகணும்னு இங்கே வந்தார், சினிமா அவரை பிச்சையெடுக்க தான் வெச்சுது, என் கிட்டே அவரை பத்தி தான் சொல்லிட்டே இருப்பாரு, அவரை மாதிரி ஆகணும்னு தான் எனக்கும் ஆசை"
"பலே பலே சின்ன வயசில் பெரிய லட்சியத்தோடு இருக்கியே, இதை கேட்கவே சந்தோஷமா இருக்கு, வேற என்ன வேலை தெரியும் உனக்கு"
"செருப்பு கடை வேலை இல்லைனா, ஏதாவது பூ கடையில் வேலை கேட்பேன், பூ கட்ட தெரியும், சின்னவயசிலிருந்து இதான் வேலை, என் அப்பா என்னை உட்கார வெச்சிட்டு பிச்சையெடுப்பார் நான் பூ கடையில் எப்படி பூ கட்டுறாங்கன்னு பார்த்துட்டே இருப்பேன் அப்படியே கத்துக்கிட்டேன்"
"அப்போ உனக்கும் சினிமாவில் நடிக்க ஆசை இருக்கா"
"இருக்கு, அதுக்கு எங்கே எப்படி போகணும்னு தெரியாது ஆனால் நாம ஒன்னு நினைச்சு அதை அடைய முயற்சி செய்தாலே போதும் அதுவே நம்மளை தேடி வரும் அப்படினு எனக்கு நம்பிக்கை இருக்கு"
"அடேங்கப்பா, அதெப்படி வரும், முயற்சி செய்தால் தானே வரும்?"
"நான் முயற்சி செய்திட்டு தானே இருக்கேன், வேலை நேரம் போக ஏதாவது நடிச்சிகிட்டே இருப்பேன், எல்லா கடையிலேயும் ரேடியோ இருக்கு அதில் பாட்டு கேட்பேன், சில கடையில் டீவியும் இருக்கு அதை பார்ப்பேன், அப்புறம் விஜயகாந்த் சார் படம் வந்தால் போஸ்டர் பார்த்து போய் பார்த்துடுவேன், உங்களை மாதிரி என்னை நலம் விசாரிக்கிறவங்க கிட்டே என் கதையை சொல்லுவேன் அவங்கள்ல யாராவது ஒருதராவது உதவி செய்வாங்க அந்த நம்பிக்கை தான்"
"உன்னை அந்த நடிகர் பார்த்தா தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவாரு, அவரை மாதிரியே இருக்க, பாவம் அந்த நல்ல மனுஷன் இப்போ இல்லை"
"தெரியும் சார், அவரோட நினைவு போதும் சார், அதை வைத்தே பெரிய ஆள் ஆகிடுவேன்"
"அடி சக்க, நல்லா பேசறியே நீ, சரி நான் ஒரு வேலை தரேன் செய்வியா?"
"சொல்லுங்க சார்"
அடுத்த வாரம் கோயம்பேடு பக்கம் ஒரு சிவன் கோவில் இருக்கு அங்கே அன்னதானம் போடப்போறேன், அங்கே வர முடியுமா?"
"வரேன் சார்"
"இந்தா இதான் அந்த கோவில் விலாசம், அடுத்த வெள்ளிக்கிழமை அங்கே தான் இருப்பேன் சரியா"
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அங்கே செல்ல, அங்கேயும் கூட்டத்தை சமாளிக்கும் வேலை கிடைத்தது, ஒரு பெரிய செல்வந்தர் தான் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
குட்டி விஜயகாந்த் செய்த வேலையை பார்த்ததும் அங்கிருக்கும் கூட்டத்திற்கும் ஆச்சிரியம், இந்த வயசில் எப்படியும் நேர்மையாக சம்பாதிக்க முடியும்னு அவன் செய்ததை பார்த்ததும் வெகுவாக ஆச்சிர்யப்பட்டனர்.
அன்று இரவு ஒன்பது மணியாகிவிட்டது சாப்பிட்டு முடித்து, நேராக அந்த வேலையாட்களிடம் வந்தான் விஜயகாந்த்.
"அண்ணே, இன்னிக்கு வேலை நல்லா செய்தேனா, உங்களுக்கு திருப்தியா?"
"இருப்பா உன்னை முதலாளி பார்க்கணும்னு சொன்னாரு"
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் மிடுக்காக வந்து அமர்ந்திருந்தார் அந்த பெரிய மனிதர், அவரிடம் சென்று அவனை பற்றி விலாவரியாக கூறினர், அவரும் அவனை பார்த்து கொண்டே இருந்தார், அவனை தன்னோடே கூட்டி செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்தது அவனை அழைத்தார்...
"நீ ரொம்ப நல்லா வேலை செய்யுறே, நான் உன்னை படிக்க வைக்கிறேன் படிக்கிறியா??"
"அதெல்லாம் வேணாம் சார்"
"ஏன் வேண்டாம்? சின்ன வயசில் நல்லா புத்திசாலியா இருக்கே, நீ படிச்சா இன்னும் நல்லா சம்பாதிக்கலாமே, படிப்பு என்னிக்குமே அவசியம், நான் உன்னை படிக்க வைக்கிறேன், நீ என் வீட்டிலேயே இருக்கலாம், நாங்களும் உன்னை மாதிரி ஒரு வைரத்தை தொலைச்சிட்டு குழந்தையில்லாம தவிக்கிறோம், நானும் என் மனைவி மட்டும் தான் வீட்டில் இருப்போம், எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, என் கூட வரியா"
"இல்லை சார், நான் விஜயகாந்த் சார் மாதிரி பெரிய நடிகன் ஆகணும்னு ஆசை, அது தான் என் அப்பா ஆசையும்"
"உன் ஆசையை நிறைவேத்த வேண்டியது என் பொறுப்பு, நானும் ஒரு சினிமா தயாரிப்பாளன் தான், நான் எடுக்கிற படத்தில் சின்ன சின்ன வேடம் இருந்தா உன்னை நடிக்க வைக்கிறேன், மிச்சம் நேரம் நீ நல்லா படி. சரியா"
"அப்படியா, அப்போ சரி நான் வரேன், ரொம்ப நன்றி சார்"
"நன்றியெல்லாம் வேண்டாம், அப்புறம் இந்த சார் னு கூப்பிட வேணாம், நீ என்னை அப்பான்னே கூப்பிடலாம், உன்னை என் மனைவி பார்த்தால் ரொம்பவே சந்தோஷப்படுவா"
அவரோடு வீட்டிற்கு செல்ல, அவனை பார்த்ததும் கண்ணீர் மல்க கட்டி கொண்டாள் அந்த பெண்மணி. வெகு நாட்களுக்கு பிறகு அவன் நன்கு உறங்கி போயிருந்தான்.
அவர் மெல்ல அவர் மனைவியிடம் பேச்சு கொடுத்தார்....
"என் மேலே எதுவும் கோவம் இல்லையே, திடிர்னு ஒரு பையனை கூட்டிட்டு வந்து இனிமேல் இங்கே தான் இருப்பான்னு சொன்னதும்...."
"அதெல்லாம் இல்லை, ஏனோ தெரியலை பல ஆசிரமத்துக்கு போய் தத்து எடுக்க நினைச்சாலும் ஏதோ ஒன்னு என்னை தடுத்தது இவனை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு, நீங்க சரியா தான் செய்தீங்க. நான் தான் பாவி, வைரம் மாதிரி ஒரு குழந்தையை பெத்து குப்பை தொட்டியில் போட்டேன் என் அப்பாக்கு பயந்து, அவன் எங்கே இருக்கனோ, என்ன செய்யுறானோ இப்போ உயிரோடு இருக்கானோ இல்லையோ...."பேசும்போதே அவள் குரல் உடைந்து போனது.
"பழைய கதையை விடு, அது நாம சின்ன வயசில் செய்த தப்பு, அப்போ அப்படியாகும்னு நினைக்கலை, எனக்காக நீ தான் ரொம்ப கஷ்டப்பட்டே, ஒரு வருஷமா வீட்டுக்கு மறைச்சு ஹாஸ்டல்ல இருந்து, உங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு அவங்க என்னை வெட்டி போட்டு நான் மருத்துவமனையில் கிடந்தேன், எங்கே உன்னையும் ஏதாவது செய்திடுவாங்களோன்னு பயந்தேன், குழந்தை போனது வருத்தம் தான், ஆனால் நீ மீண்டும் என் வாழ்க்கையில் வந்ததே போதும். இனி நமக்கு எல்லாமே நல்லது நடக்கும் கவலையில்லாமல் படு"
"ஐயோ மீண்டும் அந்த நாளை ஞாபக படுத்த வேணாம், ஏதோ நாம செய்த புண்ணியம் உங்களுக்கு சினிமாவில் தயாரிப்பு நிர்வாகம் வேலை கிடைச்சு, நல்லா வேலை செய்தீங்க, அந்த விஜயகாந்த் சார் கொடுத்த வைப்பில் தான் தயாரிப்பாளர் ஆனீங்க, கையில் காசோடு வந்ததால என்வீட்டிலேயும் அப்புறம் ஏதும் சொல்லல, இவனை பார்த்ததும் நம்ம பையனே நேர்ல வந்தது போல தான் உணர்ந்தேன், இனி அவனுக்கு எல்லாமே நாம செய்வோம்"
விஜயகாந்த் அவன் இலட்சியத்தை அடைய புதிய பாதைக்கு வந்து சேர்ந்தான். அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும் அந்த செல்வந்தரின் உண்மையான மகனே அவன் தான் என்று.
