சுஜிதாவின் பரிதவிப்பு
சுஜிதாவின் பரிதவிப்பு
சுஜிதாவின் பரிதவிப்பு
சுஜிதா துபாயில் வேலை பார்ப்பவள் அங்கு வந்து மூன்று மாதம் ஆக போகிறது, வரும்போது அவள் மூன்று வயது குழந்தை அகிராவையும் அவள் தங்கை சுகிதாவையும் துபாய்க்கு அழைத்து வந்திருந்தாள்.
அன்று மே 29,2023 சுஜிதா அவள் கணவன் ரஞ்சித்தை அலைபேசியில் அழைக்க அவன் எடுக்கவில்லை. அடுத்து சில மணி நேரம் விட்டு அழைத்தபோது அவன் அலைபேசி சுவிட்ச் ஆப் என்றே வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அதே மெசேஜ். சுஜிதா சற்று பதட்டமானாள்.
"மாமா போன் ஆப் ஆகியிருக்கு எங்கே போனாரு தெரியலை" சுஜிதா கவலையுடன் சுகிதாவுடன் பேசி கொண்டிருந்தாள்.
" கவலைப்படாதே அக்கா! அவரே கூப்பிடுவாரு, சார்ஜ் இல்லாமல் இருக்கும். நிறைய வேலை இருக்குல்ல. நாம வந்துட்டோம் அவர் மட்டும் தனியா வேலை பார்க்க எவ்ளோ வேலை கொடுத்திட்டு வந்திருக்க. அதுக்காக எங்கேயாவது அலைஞ்சிட்டு இருப்பாரு".
"அதெல்லாம் சரி தான் எல்லா வேலையும் முடிஞ்சதும் சொல்றேன்னு சொன்னாரு. சாயுங்காலம் 5 மணிக்கு பேசினேன், அப்புறம் கூப்பிடவே இல்லை".
"கூப்பிடுவாரு அக்கா விடுங்க, படுங்க".
சுஜிதாக்கு ஏனோ தூக்கம் வரவில்லை அவள் மனம் ரஞ்சித்தை நினைத்து பரிதவித்தது.
அடுத்த நாள் விடிந்தது இப்போதும் எழுந்தவுடன் ரஞ்சித்தை அழைக்க மொபைல் சுவிட்ச் ஆப் என்றே வந்தது, சுஜிதா பதட்டம் அதிகமானது சென்னையில் அவளுக்கு தெரிந்தவர் அவள் பக்கத்து வீட்டு ராஜு மாமாவும், சுமதி மாமியும் மட்டுமே.அவர்களை அழைத்தாள்.
"ஹலோ யார் பேசறது?".
"மாமா நான் சுஜிதா துபாயிலேர்ந்து பேசறேன்".
"சொல்லுமா எப்படி இருக்க, நல்லபடியாக செட்டில் ஆகிட்ட போல, ரஞ்சித் வந்த பிறகு உனக்கு பெரிய பாரம் குறையும், தனியா கை குழந்தையும், வயசு பொண்ணும் வெச்சிண்டு கஷ்டம் தான் உனக்கு".
"நான் நல்லா இருக்கேன், ஒரு உதவி, என் ஆத்துகார் போன் சுவிட்ச் ஆப் அப்பிடினே வருது, நேத்து சாயுங்காலம் முதல் இப்படி தான் இருக்கு, என்னாச்சு தெரியலை, கொஞ்சம் போன் அவர்கிட்ட கொடுக்கமுடியுமா?".
"அவ்ளோ தானே இரு, தோ கொடுக்கிறேன்".
பக்கத்து வீடு சென்று பார்த்தார்...
"வீடு பூட்டியிருக்கேம்மா. வண்டியும் இல்லை. எங்கேயாவது வெளிய போயிருப்பான்னு நினைக்கிறேன்".
"வண்டி போன வாரம் வித்தாச்சு. எங்கே போறேன்னு ஏதாவது சொன்னாரா?".
"இல்லையேமா, நான் நேத்து ஈவினிங் ஷோ சினிமா போயிட்டேன், ராத்திரி வந்து படுத்தாச்சு, அவனை பார்க்கவேயில்லை. இன்னிக்கி உங்க வீடு ரெஜிஸ்டரேஷன் சொன்னான் அதுக்கு போயிருப்பானோ".
"அது 11 மணிக்கு தான், இப்போ 8 மணி தானே ஆகுது எங்கே போனாரு தெரியலை. அங்கே விசாரிச்சு பார்த்திட்டு கூப்பிட முடியுமா?".
"சரி நான் கூப்பிடறேன். நீ கவலைப்படாதே".
நேரம் மதியம் வரை ஆகிவிட்டது எந்த தகவலும் இல்லை. ராஜு சுஜிதாவை அழைத்தார்.
"இப்போ வரைக்கும் வரலை, எங்கே போனான் தெரியலை. நாளைக்கு ராத்திரி துபாய் போகணும்னு சொன்னான். எந்த ரெஜிஸ்டரேஷன் ஆபீஸ் சொல்லு நான் அங்கே விசாரிக்கிறேன்" .
"விருகம்பாக்கம் ரெஜிஸ்டரேஷன் ஆபீஸ்".
சிறிது நேரத்தில் அங்கே நேரில் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்து அழைத்தார்.
"இங்கே ரெஜிஸ்டரேஷன் பண்ண வரலையாமே, வேற எங்கே போயிருப்பான். உங்க வீடு வாங்க வந்த பையர் யாரு அவங்க போன் நம்பர் இருக்குமா.கொடு அங்கேயும் விசாரிக்கிறேன்".
சுஜிதா நம்பர் அனுப்ப அவரை அழைக்க எதிர்முனையில் தகவல் சொன்னார்கள்.
"சுஜிதா நான் அந்த நம்பர் கூப்பிட்டேன் அவர் எடுக்கலை அவர் சொந்தக்காரன் தான் எடுத்தான், அவரோட அப்பா தவறிட்டாராம் அதனால நாகர்கோயில் போயிருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால ரெஜிஸ்டரேஷன் கான்செல் பண்ணிட்டதா சொன்னார்".
ஐயோ கான்செல் ஆகிருச்சா இவர் நாளைக்கு துபாய் வரணும், இப்போ எங்கே போனாருன்னே தெரியலையே".
"நீ பதட்டப்படாத, இன்னும் ஒரு மணி நேரம் பார்ப்போம் ஏதும் தகவல் இல்லைனா போலீஸ் கம்பளைண்ட் கொடுப்போம்".
"போலீஸ் எதுக்கு மாமா?"
"நேத்து சாயுங்காலம் முதல் காணோம் சொல்ற, இப்போவரை எங்கேன்னு தெரியலை வேற என்ன பண்றது"
"நான் டிக்கெட் போட்டு கிளம்பி வந்துடவா".
"பதட்டப்படாத, நீ எல்லோரையும் கூட்டிகிட்டு வரணும், இப்போ தானே அங்கே போன. போலீஸ்க்கு சொல்லிட்டு இன்னிக்கி ராத்திரி வரை பாக்குறேன் அப்புறம் நீ வரணுமா வேணாமா சொல்றேன்".
அடுத்த ஒரு மணி நேரத்தில் ராஜு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரஞ்சித் காணாமல் போனதை பற்றிய தகவல் கொடுத்தார்.
விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. அவர்கள் வீட்டிற்கு வந்து போலீஸ் பூட்டை உடைத்தனர்.உள்ளே ஊருக்கு செல்ல பெட்டி படுக்கை அடுக்கிவைத்தபடி இருந்தது.
அடுத்த நாள் விடிந்தும் ரஞ்சித் வரவில்லை, சுஜிதா இனி தாமதிக்க கூடாது என்று துபாயிலிருந்து அன்று மதிய விமானத்தில் புறப்பட்டாள் இந்தியாவிற்கு.
அவள் வீட்டிற்கு வந்து சேர ராஜுவும் அவர்களை உள்ளே அழைத்து போலீஸ் வந்துவிட்டு போனதை கூறினார். இப்போ வருவாங்க விசாரிக்க என்றார்.
சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப் வந்தது, கதவை திறந்த சுஜிதாவிற்கு சற்று அதிர்ச்சி. சுஜிதாவை பார்த்ததும் ரமேஷ் சற்று அதிர்ச்சியானான், சில வருடங்களுக்கு முன்பு ரமேஷுக்கும் சுஜிதாவிற்கும் கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்க, திருமண நாளுக்கு இரண்டு நாள் முன்பு காதலித்த ரஞ்சித்துடன் ஓடி வந்து விட்டாள் அதற்கு பிறகு அவளை இன்று தான் பார்க்கிறான்.
சுஜிதாவும் அவனை பார்த்த அதிர்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல் அழுதபடி உள்ளே வந்தாள்.
ரமேஷ் அவர்கள் வீட்டை மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்தான்.
"சுஜிதா, உங்களை சுஜிதான்னு பெயர் சொல்லி கூப்பிடலாம்ல"
"கூப்பிடலாம்"
"சுஜிதா, நீ சொல்ற தகவல் வைத்து தான் நாங்க அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கணும். இங்கே எவ்ளோ நாளா இருக்கே?. எப்போலேந்து ரஞ்சித் காணோம், கடைசியா என்ன பேசினார். எல்லா தகவலும் சொல்லு".
"நாங்க கல்யாணம் செய்த நாள் முதல் இங்கே தான் குடித்தனம் இருக்கோம், எங்க வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துச்சு, எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா அகிரா. வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தோம், செலவு கட்டுப்படியாகாதுன்னு நானும் வேலைக்கு போனேன். எனக்கு துபாய்க்கு வேலை மாற்றம் ஆச்சு. இங்கே இருக்க வேணாம் மொத்தமா குடும்பத்தோட அங்கே போகலாம்னு முடிவு பண்ணோம், அந்த வீட்டை விற்க ஏற்பாடு செஞ்சிருந்தோம், இன்னிக்கு ரெஜிஸ்டரேஷன் பண்ணனும், லோன் மூலமாக தான் வீடு வாங்கினோம், கொஞ்சம் பணம் மட்டுமே நாங்க போட்டது அதை மட்டும் வாங்கிட்டு பாங்கில் போட்டுட்டு நாளை ராத்திரி துபாய் வருவதாக சொன்னார் ரஞ்சித்".
"உங்க எல்லோருக்கும் விசா கிடைச்சாச்சா".
"எனக்கு 5 வருஷத்துக்கு வேலை செய்ய விசா கொடுத்துட்டாங்க, என் பொண்ணுக்கும் கொடுத்துட்டாங்க. ரஞ்சித்துக்கு இப்போ தான் ஒரு பேங்க் வேலை கிடைச்சிருக்கு விசா வந்தாச்சு".
"இது உன் தங்கை தானே. இவள் இங்கே என்ன பண்ணுறா".
"என் அப்பாவும், அம்மாவும் இறந்துட்டாங்க இவள் என்னோடு தான் இருக்கா, + 2 முடிச்சிட்டாள் கல்லூரி துபாயில் சேர்க்க அவளுக்கு இப்போதைக்கு மூணு மாச சுற்றுலா விசா எடுத்திருக்கேன்".
"கடைசியாக அவரோட பேசும்போது ரஞ்சித் என்ன சொன்னார்".
"எல்லா வேலையும் முடிச்சிட்டேன், ராத்திரி மளிகை சாமான் மட்டும் வாங்கி எடுத்து வைக்கனும் அதுக்கு பிறகு கூப்பிடறேன்னு சொன்னாரு அவ்ளோ தான்".
ரமேஷ் சைபர் செல் படைக்கு ரஞ்சித் நம்பர் கொடுத்து தேட சொன்னான்.
சிறிது நேரத்தில் தகவல் வந்தது, இரண்டு நாளைக்கு முன்பு கடைசியாக வந்த நம்பர் என்று ஒன்றை தந்தனர், அதற்கு முந்திய கால் துபாய் நம்பர்.கடைசியாக ஏழு மணிக்கு போரூரில் ஆப் ஆகியிருக்கு.
"இது உன் நம்பர் தானே, இது யார் நம்பர் தெரியுமா?" ரமேஷ் விசாரித்தான்.
"இது என் துபாய் நம்பர், இது எங்க வீடு வாங்கறேன்னு சொன்னவர் அவர் பெயர் ஜோசப்".
ரமேஷ் ஜோசப் நம்பருக்கு அழைத்தான்.
"ஹலோ ஜோசப்"
"சொல்லுங்க யார் பேசறது?"
"நான் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பேசறேன், ரஞ்சித் உங்களுக்கு தெரியும் இல்லையா, இன்னிக்கு வீடு ரெஜிஸ்டரேஷன் செய்றதா சொன்னீங்க".
ஜோசப் சற்று தடுமாறியபடி, "சார் எங்க அப்பா தவறிட்டாரு சார், நான் நகர்க்கோயில் வந்திருக்கேன். வேற நாள் ரெஜிஸ்டரேஷன் பண்ணிக்கலாம்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்".
"என்னிக்கு சொன்னீங்க?".
"இரண்டு நாள் முன்னாடி மாலை ஐந்தரை மணி இருக்கும் சார்".
"அவர் என்ன சொன்னாரு?".
"சரி வேற நாள் பார்ப்போம்னு மட்டும் சொன்னாரு".
"அவர் மிஸ்ஸிங் அவரை பற்றிய தகவல் ஏதாவது தெரிஞ்சா இந்த நம்பர் கூப்பிடுங்க"
"என்னாச்சு சார் அவருக்கு".
"தெரியலை தேடிட்டு இருக்கோம்".
ரமேஷ் ஜோசப் நம்பர் சைபர் செல் மூலம் வேவு பார்த்தான், கடைசியா பேசிய அழைப்பு நாகர்கோயில் என்று சரியாக காட்டியது. நகர்க்கோயில் போலீஸ் மூலம் அவர் வீட்டில் ஏதாவது இறப்பு செய்தி இருக்கிறதா என்று பார்க்க சொன்னார்.
"உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"
"அப்படி ஏதும் இல்லை. அவர் ரொம்ப நல்லவர், எங்கேயும் அனாவசியமா சுத்தமாட்டார். நண்பர்கள் கூட்டம் கூட கம்மி தான். எங்கே போனாலும் எப்போ வருவேன்னு சொல்லிடுவார். இதான் முதல் முறை இப்படி ஆகியிருக்கு"
ரமேஷ் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்.
"இந்த தெருவில் கேமரா எங்கேயும் இல்லையா?".
"இல்லை, இது சின்ன தெரு தானே.அதான் இல்லை".
"இங்கிருந்து முக்கிய சாலைல கேமரா இருக்கா பாருங்க".
போலீஸ் படை அதை விசாரிக்க கிளம்பியது.
"கவலைப்படாதே எப்படியும் கண்டுபிடிச்சிடலாம், ஏதாவது ஒரு கேமராவில் சிக்கியிருக்கும். நீ 5 மணிக்கு கூப்பிட்டபோது வீட்டில் தான் இருந்தாரா. அடுத்து எப்போ கூப்பிட்ட?"
"ஆமாம். இரண்டு மணி நேரம் கழிச்சு".
"5 மணிக்கு வீட்டில் இருந்தவர் மொபைல் 7 மணிக்கு போரூரில் ஆப் ஆகியிருக்கு. சார்ஜ் இல்லாமல் போனாலும் இந்நேரம் வந்திருக்கணும். ஐந்தரை மணிக்கு ஜோசப் பேசியிருக்கார் அதுக்கு அப்புறம் எங்கே போனார், என்ன ஆனார் தெரியலை. அவர் ஆபீஸ் நம்பர் கொடு, அவங்க ஆபீஸ் நண்பர்கள் நம்பர் கொடு".
சுஜிதா அவளுக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நம்பர் கொடுத்தாள். ரமேஷ் அந்த காப்பீடு ஆபீஸ் சென்று விசாரித்தான். அங்கே கோவிந்தசாமி ரஞ்சித்தின் ஒரே நண்பன்.
"சார் நாம தனியா பேசுவோமா இங்கே வேணாம்" கோவிந்தசாமி சந்தேகமாகவே பேசினான்.
ரமேஷ் கோவிந்தசாமியை பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.
"சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது தெரியுமா ரஞ்சித் பற்றி".
"சார் இங்கே எங்க ஆபீஸ் உள்ளே நிறைய பாலிடிக்ஸ் உண்டு சார். அனுபவப்படி ரஞ்சித் தான் அடுத்த சீனியர் மேனேஜர் ஆகணும், அவனுக்கும் விஸ்வேஸ்வரனுக்கும் எப்போதும் ஒரு போட்டி இருக்கும். எல்லா தடவையும் ரஞ்சித் தான் சிறப்பாக வேலை செய்யுறார்னு எங்க முதலாளி சொல்லுவாரு. பதவிக்காக என்ன வேணாலும் பண்ணக்கூடியவர் சார் அந்த விஸ்வேஸ்வரன். ரஞ்சித்துக்கு கண்டிப்பாக தெரியும் அவருக்கு தான் ப்ரோமோஷன் தருவாங்கன்னு அவரே போனால் போகட்டும்னு விட்டு கொடுத்து வேலையை விட்டு போறேன்னு சொல்லிட்டாரு.ஆனாலும் அது அந்த விஸ்வேஸ்வரனுக்கு பொறுக்கலை அவன் என்ன எனக்கு பிச்சை போடறானான்னு கத்திட்டு இருந்தாரு அன்னிக்கு".
"ரஞ்சித் எங்கே வேலைக்கு சேர போறார் தெரியுமா".
"தெரியலை அதை மட்டும் அவன் சொல்லவே இல்லை ரகசியமாகவே வெச்சிருந்தான்".
"அந்த விஸ்வேஸ்வரன் இப்போ இருக்காரா?"
"இரண்டு நாள் ஆச்சு ஆபீஸ் வரலை".
"அவர் வீடு எங்கே தெரியுமா".
"போரூர் சார், நான் முகவரி தரேன்".
சிறிது நேரத்தில் கான்ஸ்டபிள் ரமேஷை அழைத்தார்....
"சார் அந்த மெயின் ரோடு கேமரா பார்த்துட்டோம், சுஜிதா மேடம்கிட்ட காட்டினோம், சரியாக மாலை 5.45 மணிக்கு வெளிய நடந்து வந்து அங்கே பஸ் ஸ்டாப் நின்னிருக்கார், போரூர் பஸ் ஏறியிருக்கார்".
ரமேஷ் திட்டவட்டமாக முடிவெடுத்தான், ஆபீஸ் பழைய பகையில் ஏதோ ரஞ்சித்துக்கும், விஸ்வேஸ்வரனுக்கும் நடந்திருக்கு விஸ்வேஸ்வரனை விசாரித்தால் எல்லாமே தெரிந்துவிடும் என்று முடிவு செய்தான். போரூர் பஸ், விஸ்வேஸ்வரன் அந்த நாள் முதல் லீவு எல்லாமே ஏதோ சரியாக ஒன்று சேர்ந்தது.
ஜீப் எடுத்து கிளம்பிய நேரத்தில் அவசர தகவல் ஒன்று வந்தது, ரமேஷ் ஜீப் போரூர் ஏரிக்கு பறந்தது.
அங்கே ஒரே கூட்டம், போலீஸ் விரட்டியபடி இருந்தனர்.
"என்னாச்சு யா".
" சார் ஒரு சடலம் கிடைச்சிருக்கு, ரஞ்சித் தான் போட்டோ பாத்து உறுதி படுத்திட்டோம்" .
ரமேஷ் சற்று நொந்து போனான், கனத்த இதயத்துடன் சுஜிதாவிற்கு தகவல் சொன்னான். மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது அவனது உடல்.
மருத்துவமனையில் வந்து கதறி அழுதாள் சுஜிதா.
ரமேஷ் அவளை காண வந்ததுபோதும் அவன் சட்டையை பிடித்து கிழித்து அவனை அடித்தாள்.
"பழைய பகை மனசில் வைத்து நீ தான் ரஞ்சித்தை கொன்னுட்ட. நான் கிடைக்கலைன்னு தான் இதையெல்லாம் செய்திருக்க உன்னை நான் சும்மா விட மாட்டேன்" சுஜிதா கோவத்தில் பொரிந்தாள்.
ரமேஷ் அவளை அடக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை அவளுக்கு ஊசி போட்டு மயக்க நிலைக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் சிறிது நேரத்தில் வந்தது.
அதில் குடி போதையில் இருந்ததாகவும், தலையில் ஏதோ இரும்பால் அடித்து கொன்றதாகவும் கொடுத்திருந்தார்கள்.
சுகிதாவிடம் விசாரிக்க ரஞ்சித் குடி பழக்கம் இல்லாதவன் என்று தெரிந்தது.
ரமேஷ் உடனடியாக விஸ்வேஸ்வரனை கைது செய்ய போரூர் முகவரிக்கு புறப்பட்டான், அங்கே வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரிக்க அவர்கள் அவர் இன்னிக்கு ராத்திரி சிங்கப்பூர் போறதாக சொன்னார் என்றனர்.
அப்போது மணி இரவு எட்டு, இரவு 1115 மணிக்கு ஒரு விமானம் உண்டு. இந்நேரம் அதில் தப்பிக்க வாய்ப்பிருக்கு என்று ஏர்போர்ட் போலீஸ் உதவியுடன் அவனை மடக்கி பிடித்தனர் போலீஸ்.
விஸ்வேஸ்வரன் ரமேஷின் தனி காவல் கட்டுப்பாட்டில் வந்தான்.
"உண்மையை சொல்லு இல்லைனா அடிச்சே கொன்னுடுவேன். எதுக்காக ரஞ்சித்தை கொலை செய்த?".
"ரஞ்சித் இறந்துட்டாரா? என்ன சார் சொல்றீங்க?"
"ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத".
"சார் நான் அப்படி பட்ட ஆள் இல்லை, கொலை செய்யுற அளவுக்கு மோசமானவன் இல்லை. நீங்க தப்பா என்னை பிடிச்சிட்டு வந்திருக்கீங்க, நான் என் தம்பியை பார்க்க சிங்கப்பூர் கிளம்பினேன், ஒரு மாசம் முன்னாடியே லீவு கொடுத்திருக்கேன் அங்கே விசாரிங்க".
"உனக்கும் ரஞ்சித்துக்கும் போட்டின்னு நாங்க கேள்விப்பட்டோம்".
"அது ஒரு ஆரோக்யமான தொழில் போட்டி மட்டுமே. அவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும் ரொம்ப நல்லா வேலை செய்ய கூடியவன். அவன் அடுத்து துபாய் போறேன்னு என்கிட்டே சொல்லியிருந்தான் என் கம்பெனியில் வேற யாருக்கும் தெரியாது"
ரமேஷ் விஸ்வேஸ்வரன் சொன்னபடி விசாரிக்க அவன் சொன்னது உண்மை என்று தெரிய வந்தது. அப்போ வேற யாரு இதை செய்திருப்பா. மீண்டும் குழப்பமானான் ரமேஷ்.
சுஜிதாவிடமே மீண்டும் விசாரிக்கணும் என்று அங்கே சென்றான்.
அவள் வீடே வெறிச்சோடியிருந்தது...
ரமேஷ் சுஜிதாவிடம் பொறுமையாக பேசி புரிய வைக்க முயற்சிதான்.
"சுஜிதா இங்கே பாரு, ரஞ்சித் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் உன் மேலே சின்ன வயசிலிருந்து ஆசைப்பட்டது உண்மை தான் ஆனால் நீ ரஞ்சித்தை காதலித்தது எனக்கு தெரியாது, நீ ஓடி போயி கல்யாணம் செய்த பிறகு நான் உன்னை பற்றி நினைக்கவேயில்லை, என்னை நம்பு".
"பொய் சொல்றீங்க. கும்பகோணத்தில் தெரிஞ்சவங்களிடம் விசாரிச்சேன், நீங்க இன்னும் என் நினைவா கல்யாணம் செய்துக்காம இருக்கீங்கன்னு சொன்னாங்க".
"கடவுளே, எனக்கு வேற பொண்ணை கல்யாணம் செய்துக்க பிடிக்கலை. அதனால சொன்னேன், இன்னொருத்தன் மனைவியை நான் கல்யாணம் செய்ய நினைக்கிற அளவு கேவலமானவன் நான் இல்லை. உனக்கு வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. அவர் ஆபீஸ் ஆள் விஸ்வேஸ்வரன்னு ஒருத்தனை கைது பண்ணோம் அவனும் ரஞ்சித் பற்றி தப்பாவே சொல்லலை. எல்லோருமே நல்லவன்னு சொல்ற ஒருத்தனை யார் கொலை செய்திருப்பா தெரியலை".
அவர்கள் பேசி கொண்டிருக்க ஒரு கார் வந்து நின்றது, உள்ளிருந்து ஒரு தம்பதி இறங்கி வந்தனர்.
"ரஞ்சித் வீடு ...."
"இதான்....நீங்க".
"நான் ஜோசப் உங்க வீட்டை வாங்க வந்தவன் நான் தான்".
"உள்ளே வாங்க".
"மன்னிக்கணும் பேப்பரில் அவர் போட்டோ பார்த்தேன் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.மனசு உருத்திக்கிட்டே இருந்துச்சு அதான் ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்".
சுஜிதா மற்றும் ரமேஷ் திடுக்கிட்டு பார்த்தனர்.
"அன்னிக்கு போலீஸ் கால் பண்ணதும் நான் பயந்துட்டேன் அதான் உண்மையை சொல்லலை எனக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு. அன்னிக்கு சாயுங்காலம் ஐந்தரை மணிக்கு நான் தான் பேசினேன் ஆனால் பேசினது வேற. உங்க அபார்ட்மெண்ட் மாடியில் இருக்கிற காத்தவராயன்னு ஒருத்தர் என்னை கூப்பிட்டு இந்த வீட்டை வாங்காதீங்க, இதில் நிறைய வில்லங்கம் இருக்கு அப்படி இப்படின்னு சொன்னாரு, நீங்க கொடுத்தபடி டாக்குமெண்ட் எல்லாம் சரியாக தான் இருந்துச்சு ஆனாலும் அவர் சொன்னதை பார்த்தால் ஏதோ தப்புன்னு தோணிச்சு அதனால விசாரிச்சிட்டு வேற ஒரு நாள் ரெஜிஸ்டரேஷன் வெவச்சுக்கலாம்னு சொல்லிட்டேன், அதுக்கு அப்புறம் தான் எங்க அப்பா இறந்துட்டார்னு எனக்கு செய்தி வந்துச்சு அப்போ மறுபடியும் அவரை கூப்பிட்டேன் அவர் மொபைல் சுவிட்ச் ஆப் வந்துச்சு" .
"இதை அன்னிக்கே சொல்லியிருக்கலாமே. அப்போ அன்னிக்கு ரஞ்சித் உங்க புது வீட்டுக்கு தான் போயிருக்கணும், அந்த பஸ் விருகம்பாக்கத்திலிருந்து போரூர் போற பஸ், நடுவில் வளசரவாக்கம் நிறுத்தம் உண்டு".
ரமேஷ் உடனடியாக ரஞ்சித்தின் புதிய வீட்டிற்கு சென்று ரஞ்சித் வீட்டின் மாடி வீட்டிலிருக்கும் காத்தவராயன் வீட்டு காலிங் பெல் அழுத்தினான்.
"காத்தவராயன் இருக்காரா??"
"நான் தான் காத்தவராயன், நீங்க யாரு?"
"கீழ் வீட்டு ரஞ்சித் தெரியுமா, அவருக்கும் உங்களுக்கும் என்ன தகராறு".
"தகராறு ஏதும் இல்லையே, நீங்க யாரு அதை கேட்க?" காத்தவராயன் கொஞ்சம் திமிராக தான் பேசினான்.
"நான் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விருகம்பாக்கம்".
காத்தவராயன் குரல் தடுமாறியது வேர்க்க துவங்கியது.
"ஏதும் பிரச்னை இல்லை சார்".
"அப்புறம் எதுக்காக புதுசா வீடு வாங்க வந்தவர்களை வேண்டாம்னு சொன்னீங்க".
"அது அது வந்து இங்கே மொத்தம் நாலு வீடு தான் அவர் அதிக விலைக்கு வித்தது எனக்கு பொறாமையா இருந்துச்சு அதனால அப்படி சொன்னேன். நானும் என் வீட்டை விக்க நினைச்சேன் ரொம்ப கம்மியா தான் கேட்டாங்க அவ்ளோ தான். ஏதோ பொறாமைல அப்படி செஞ்சிட்டேன். மன்னிச்சிடுங்க சார்"
இவன் எதையோ மறைகிறான் என்று மட்டும் நன்றாக தெரிந்தது ரமேஷுக்கு. அவன் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து ஏறி மிதித்தான், காத்தவராயன் அலறினான் அவன் மனைவியும் ஓடி வந்து அலறினாள்.
"என்ன சார் இவ்ளோ மோசமா அடிக்கறீங்க. நான் தான் உண்மையை சொல்லிட்டேனே".
"நீ பொய் சொல்றேன்னு நல்லா தெரியுது, உண்மையை சொல்லு டா".
மீண்டும் அவனை அடித்தான்.
"சொல்லிடறேன் சார் அடிக்காதீங்க, வலிக்குது. என் மகன் விஸ்வநாத்தும், ரஞ்சித் மச்சினி சுகிதாவும் ஒரே பள்ளியில் தான் படிச்சாங்க. என் மகன் அவளை ஒரு தலையாய் காதலிச்சான், அதை அவள் கிட்ட சொன்னபோது அவள் எல்லார் முன்னாடியும் அவனை செருப்பால அடிச்சிட்டா. அதை கேட்டதும் எனக்கு ரொம்பவே கோவம் வந்துச்சு அவளை ஏதாவது பண்ணனும்னு நினைச்சோம், ஆனால் அவள் துபாய் போயிட்டதாக தகவல் சொன்னாங்க. அப்போ தான் இந்த வீட்டை விற்க முயற்சி செய்யுறதா சொன்னாங்க. என் மகனை அடிச்சிட்டு இவனுக்கு மட்டும் காசு லாபம் கூட பாக்க விட கூடாதுன்னு அப்படி சொன்னேன்".
"ரஞ்சித் அன்னிக்கு இங்கே வந்தானா என்ன நடந்துச்சு?" ரமேஷ் விடவேயில்லை .
"வந்தான் எதுக்கு இப்படியெல்லாம் பொய் பேசறீங்கன்னு சத்தம் போட்டான், நானும் கோவத்தில் அவனை திட்டினேன். அன்னிக்கு அவன் வந்த நேரம் நானும் என் மகன் மட்டும் தான் இருந்தோம் மது அருந்திட்டு இருந்தோம். அப்போ தான் அவன் மச்சினி பற்றி சொன்னேன் அவன் ரொம்ப கோவமாகி என் மகனை என் கண் முன்னாலேயே அடிச்சிட்டான். நான் அவனை அடிக்க போன நேரம் என் மகன் என் வீட்டில் இருந்த சுத்தியால் அவன் மண்டையில் அடிச்சான், அப்போவே சுருண்டு விழுந்துட்டான். தொட்டு பார்த்தேன் மூச்சு இல்லை.கொல்லணும்னு செய்யலை கை தவறி கோவத்தில் தெரியாமல் பண்ணது, என்ன பண்றது தெரியலை இடத்தை சுத்தம் செய்து ராத்திரி 12 மணிக்கு போரூர் ஏரியில் கொண்டு போட்டுட்டோம். அவன் மூச்சு நின்னதும் அவன் போன் ஞாபகம் வந்து ஆப் பண்ணோம் அதையும் அந்த ஏரியில் போட்டுட்டோம்" காத்தவராயன் நடுங்கி கொண்டே உண்மையை கொட்டினான்.
"இப்போ உன் மகன் எங்க?".
"அதான் உண்மையை சொல்லிட்டேனே என்னை கைது பண்ணுங்க, சின்ன பையன் பொண்ணு மேல ஆசைப்பட்டு தெரியாம பண்ணிட்டான் அவனை விட்ருங்க".
ரமேஷ் அவனை மீண்டும் ஏறி மிதித்தான், காத்தவராயனை கைது செய்து ஜெயிலில் அடைத்தது போலீஸ், அவர் மனையிவிடம் பெண் போலீஸ் வைத்து மிரட்டி விசாரித்ததில் அவன் மகன் விஸ்வநாத் ஆந்திராவில் ஓர் இடத்தில் இருப்பதை அறிந்துகொண்டு ஆந்திர போலீஸ் உதவியுடன் கைது செய்தது போலீஸ்.
இந்த விஷயங்கள் அனைத்தும் கேள்விப்பட்ட சுஜிதாவும், சுகிதாவும் உறைந்து போயினர். சுகித்து தன்னால் மாமா இரத்ததை நினைத்தும், அக்காவின் வழக்கை இப்படி பறி போனதை நினைத்தும் வாழ்க்கையே வெறுத்து போனது.
விஸ்வநாத்தும், காத்தவராயனும் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றனர்.
நாட்கள் செல்ல, சுஜிதா மீண்டும் துபாய்க்கு செல்ல புறப்பட்டாள். ரமேஷ் அவளை காண ஏர்போர்ட் சென்றான்.
"கண்டிப்பாக துபாய் போகணுமா".
"ஆமாம்".
"தனியா எப்படி சமாளிப்ப. உனக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன். நீ இங்கேயே இரு, நான் உன்னையும், சுகிதாவையும் பார்த்துப்பேன். அகிராவை என் மகளாய் பார்த்துப்பேன்".
"ரஞ்சித்தை என்னால மறக்க முடியாது, அவர் இருந்த மனசில் இன்னொருத்தருக்கு நிச்சயம் இடமில்லை. அவர் எப்படி அவர் மகளை வளர்க்கணும்னு ஆசைப்பட்டாரோ அப்படி நான் அவளை வளர்ப்பேன்".
"இதான் உன் முடிவா, நீ எப்போ மனசு மாறினாலும் உனக்காக நான் காத்திட்டிருப்பேன்".
ரமேஷுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தவிப்புடன் துபாய்க்கு கிளம்பினாள் சுஜிதா.
