அச்சம் என்பது மடமையடா!
அச்சம் என்பது மடமையடா!
அச்சம் என்பது மடமையடா!
"அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வானிடுந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே...."
தண்ணில நிக்க வெச்சு சொல்லி கொடுத்தீங்களேபா இப்போ என்னாச்சு....வெள்ளித்திரையில் நடிகர் அரவிந்தஸ்வாமி வசனம் பேசி கொண்டிருப்பதை ரசித்து படம் பார்த்து கொண்டிருந்துதான் சூர்யா.
அது 1991 தீபாவளி ரிலீஸ் "தளபதி" படம். தீபாவளி முடிந்து இரண்டு நாள் ஆன சமயம், சூர்யா இந்த படத்தை நான்காவது முறையாக அவன் ஊர் பாண்டிச்சேரியின் பாலாஜி திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தான்.அவ்வளவு பிடித்தமான படம் அதில் வரும் ரஜினி கதாபாத்திரம் அவனுக்கு அப்படியே பொருந்தும் பெயர் முதற்கொண்டு. யாருக்கும் பயபடாதவன்.
படம் முடிந்து வெளியே வந்த சமயம் போலீஸ் அவனை அங்கேயே மடக்கி பிடித்தது.
"என்ன தம்பி, கவுன்சிலர் மேலயே கை வெச்சியாமே".
"ஆமாம் அவர் தப்பு செய்தார், அடிச்சேன் என்னா இப்போ".
"அதுக்கு எங்க கிட்ட சொல்லிருக்கணும், நீ சட்டத்தை கையில் எடுத்தா தப்பில்லையா?"
"எனக்கு தப்பாக தெரியலை".
"டேய் பொறுமையாக கேட்டால் என்ன திமிராவே பதில் வருது. போலிஸ்ன்னு கொஞ்சம் கூட பயம் இல்லை"
"எதுக்கு பயப்படணும், நான் ஏதும் தப்பு பண்ணலையே".
"இவனை இப்படி கேட்டால் சரி வராது, ஸ்டேஷன்க்கு இழுத்திட்டு வாங்க".
நேரு வீதி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அடித்து நொறுக்கினர், சூர்யா நடக்க கூட முடியாமல் நொண்டி நொண்டி வெளியே வந்தான் அவன் நண்பர்கள் கேசவ் மற்றும் மது மருத்துவமனை சென்று கட்டுடன் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவனுக்கென்று இருப்பது அவன் அம்மா நீலாவதி மட்டுமே.
"ஐயோ சூர்யா, என்ன இப்படி வந்திருக்க. யாரு உன்னை இப்படி அடிச்சது" நீலாவதி பதட்டமானாள்.
"போலீஸ் தான், இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.சரியாகிடும் விடு" சூர்யாவின் பேச்சில் திமிர் குறையவேயில்லை.
நீலாவதி அழுதபடி,"ஊர் வம்புக்கு போகாதேன்னு சொன்னால் கேட்க மாட்டியா இதெல்லாம் நமக்கு தேவையா. எவன் எக்கேடு கெட்டால் உனக்கென்ன".
சூர்யா கோவமாக, "அம்மா என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க. நம்ம பக்கத்து தெரு சரோஜா வாய் பேச முடியாத பொண்ணு அவள் கிட்ட தப்பாக நடக்க பார்த்தான் அந்த கவுன்சிலர். அதான் அடிச்சேன்"
"போனவாரம் இப்படி தானே ஒருத்தனை அடிச்சிட்டு வந்த".
"ஆமாம் ஒரு போலீஸ்காரன் லஞ்சம் வாங்கினான் அதுவும் பரம ஏழை ஒருத்தன்கிட்ட, தப்புனு தோணிச்சு அடிச்சேன்".
"ஊருக்குள்ள எவன் தப்பு பண்ணாலும் அடிப்பியா ஊரை தனி ஆளா நீ சீர் திருத்த போறியாக்கும்".
"ஏன் தனி மனுஷனால் முடியாதுன்னு நினைக்கிறியா. முடியும். தனி மனுஷன் ஒழுங்கா இருந்தாலே நாடே சீராகிடும்" .
"நீ சொல்றது எல்லாம் சரி தான், எதுக்குப்பா நமக்கு பொல்லாப்பு".
"எல்லா சரி ஆகிடும். போங்க".
அந்த தெருவில் அவனுக்கு பக்கபலமாக துணை நிற்பவர் ஒய்வு பெற்ற மேஜர் ஸ்ரீகாந்த் மற்றும் அவர் மகள் வந்தனா. ஸ்ரீகாந்த் தான் சூர்யா எப்ப்போது காவலில் இருந்தாலும் வெளியே அழைத்து வருவார். இன்று அவர் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து போலீஸ் வேலையை காட்டிவிட்டனர்.
வந்தனா ரொம்ப விவேகமான பெண், சூர்யா மீது ஒரு தலை காதல் வேறு.
சூர்யாவை பார்க்க ஓடி வந்தாள்.
"அடி ரொம்ப பலமோ" வந்தனா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
"கொஞ்சம் அதிகம் தான்".
"இந்த அடிதடியை விட்டால் தான் என்னவாம். தேவையா இதெல்லாம். ஊரை ஒத்த ஆளா திருத்திட போறீங்களாக்கும். அதுக்கு தேவையான இடத்தில் வேலை செய்யணும், வேலை வெட்டி இல்லாமல் இதை செய்தால் இதான் நடக்கும்".
"உன்கிட்ட யாரும் அறிவுரை கேட்கலை, நீ கிளம்பு".
"நல்லது சொன்னால் பிடிக்காதே, இதே மாதிரி தான் நீங்க சொல்ற நல்லது மத்தவங்களுக்கு பிடிக்கமாட்டேங்குது.அதான் இப்படி".
"தெய்வமே, கிளம்புங்க. நான் என்னை பார்த்துக்கறேன்.
இரண்டு வாரம் ஆனது, காயங்கள் அனைத்தும் சரியானது, சூர்யா அவன் நண்பர்களை அழைத்து கொண்டு கவுன்சிலர் செல்லும் இடமெல்லாம் நோட்டம் விட்டான், எங்காவது ஒரு இடத்தில் தனியாக இருக்கும் போது யாருக்கும் தெரியாத வண்ணம் அடிக்க வேண்டும் எனபது அவன் திட்டம்.
பீச் ரோடு பக்கம் ஒரு இருட்டு சாலை செல்லும், அங்கே அவன் தனியாக செல்லும்போது சாக்கு பையை பின்னாடியிருந்து வந்து அவன் மேல் கவிழ்த்து தர்ம அடி அடித்தனர்.
விஷயம் காவல் அதிகாரி வரை சென்றுவிட்டது, போலீஸ் சூர்யாவை தேடி வர அவன் வீட்டில் படுத்திருப்பது போல் நாடகமாடினான், அவன் தெருவில் விசாரிக்க அவன் அங்கு தான் இருப்பதாக கூறி காப்பாற்றினர்.
இப்படியே சென்று கொண்டிருக்க எப்போதும் அவனோடு வம்பு செய்வதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் எப்போதும் அடிதடி, கட்ட பஞ்சாயத்து என்று சுற்றி கொண்டிருந்தான் சூர்யா.
அந்த நேரத்தில் தான் பாண்டிச்சேரியின் புதிய கமிஷனராக ரத்னவேல் பொறுப்பேற்றார். இன்ஸ்பெக்டர் பாண்டியனிடம் அங்கு வரும் வழக்குகளை பற்றி விசாரணை செய்தார் அதில் பல வழக்குக்கள் சூர்யா மீது சுமத்தப்பட்டதும் தெரிய வந்தது.
"யார் இவன் ஏன் கைது செய்யலை ஒரு தடவையும்" கமிஷனர் விசாரிக்க.
"இவனோடு எப்பவுமே தொல்லை தான் சார், யாருக்கும் பயப்படமாட்டான் எல்லார் கூடவும் பிரச்சனை செய்வான். யாராவது வந்து இனிமேல் இப்படி நடக்குதுன்னு சொல்லி கூட்டிட்டு போவாங்க".
"அவனை நான் நேரில் சந்திக்கணும், வர சொல்லுங்க. அதுக்கு முன்னாடி என்ன வழக்கு இவன் மேல போடப்பட்டு வாபஸ் வாங்கினதுன்னு எல்லாமே எனக்கு தெரியணும்" கமிஷனர் கட்டளையிட்டார்.
அனைத்து வழக்கு பற்றியும் கமிஷனர் ரத்னவேல் பார்வையிட்டார். சூர்யா கமிஷனரை சந்திக்க சென்றான்.
"அய்யா வணக்கம்".
"வாங்க மிஸ்டர் சூர்யா, பாண்டிச்சேரியின் புதிய தாதான்னு உங்களை பற்றி பலவிதமாக பேசறாங்களே, பெரிய ரௌடியோ".
"சார் அதேல்லாம் நம்பாதீங்க, எல்லாமே பொய்.நான் ஒரு சாதாரண குடிமகன் படிப்பு முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கேன். எனக்கு யாராவது தப்பு செய்தால் பிடிக்காது, தப்புன்னு தோணிச்சுனா அடிச்சிருவேன். அது இவங்களுக்கு பிடிக்காது என் மேல வழக்கு போட்டிருவாங்க. என்னை சுற்றி நல்லவங்க இருந்ததாலே நான் வெளிய வந்துருவேன். நீங்க விசாரிச்சு பாருங்க தப்பு செய்றவனை தான் நான் அடிச்சிருக்கேன்".
"இது எங்க வேலை, நீ செய்தால் அது தப்பு தானே".
"உங்க ஆளுங்க செய்யலையே, ஆளுக்கு ஏத்த மாதிரி வேலை பாக்குறாங்க, அதான் பிரச்சனையே".
"அப்போ எந்த போலீஸ் என்ன அநியாயம் பண்றங்கன்னு உனக்கு தெரியும் அப்படி தானே சொல்றே...."
"ஏதோ கொஞ்சம் தெரியும், அவங்கெல்லாம் சரியாக இருந்தால் நான் ஏன் இப்படி இருக்க போறேன்...." சூர்யா முடித்தான்.
"சரி நான் ஒரு தீர்வு செய்யறேன் அதை நீ செய்ய முடியுமா.
ஒரு பேப்பர் எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார்.
"சொல்லுங்க சார்"
"எந்த ஏரியா நீ? என்ன படிச்சிருக்க?.
"முத்தியால்பேட்டை சார், BA வரலாறு படிச்சிருக்கேன்"
"இது போலீஸ் சேர்க்கைக்கான விண்ணப்பம், இதில் ஒரு கையெழுத்து போடு. உன்னை நான் போலீஸ் ஆக்குறேன், நீ இதுவரை செய்ததை வேலையாகவே செய்யலாம் என்ன சொல்ற".
"இது சாத்தியம்னா நான் தயார் சார்".
"அதுக்கு ஒரு நிபந்தனை இருக்கு. ஆறு மாசம் உன் மேல எந்த வழக்கும் வர கூடாது. ஊரை விட்டு எங்கேயும் போக கூடாது, வாரம் ஒரு முறை ஸ்டேஷன் வந்து கையெழுத்து போடணும். இதை ஆறு மாசம் கடை பிடிச்சா. உன் வழக்கு எல்லாமே தள்ளுபடி செய்து உன்னை போலீஸ் ஆக்க வேண்டியது என் பொறுப்பு. உன்னை மாதிரி ஆள் தான் எங்களுக்கு தேவை"
"ரொம்ப நன்றி சார், வேலை போட்டு கொடுக்கறேன் சொல்லிருக்கீங்க இதை விட என்ன வேணும். நன்றி சார்.நான் வரேன்".
சூர்யா கிளம்பிய பிறகு, இன்ஸ்பெக்டர் பாண்டியனை அழைத்து அனைத்தையும் சொன்னார் ரத்னவேல்.
"சார் அவனை போய் போலீஸ் வேலைக்கு சொல்லிருக்கீங்களே" பாண்டியன் தலையில் அடித்து கொண்டார்.
ரத்னவேல் கோவம் தலைக்கேறியது, "ஒரே ஒருத்தன் அவனை சமாளிக்க முடியலை, உங்க எல்லோருக்கும் வெட்கமா இல்லை. நீங்க உங்க வேலையை சரியாக செய்யாததுனால தான் இப்படி புதுசு புதுசா முளைக்கறாங்க. உங்களுக்கு ஒரே வழி தான், ஆறு மாசம் அவன் மேல எந்த வழக்கும் இல்லாமல் இருக்கணும்னு சொல்லியிருக்கேன். அப்படி அவன் அதை செய்துட்டா அவன் போலீஸ் ஆவது உறுதி உங்களுக்கு மேல் அதிகாரியா கூட வரலாம். இது வரைக்கும் அவன் பகையாளி யாருன்னு பாருங்க அவங்களை முடக்கி விடுங்க அவங்களே அடிச்சிக்கிட்டு அவன் மேல வழக்கு வரட்டும் அப்புறமாக அவனை உள்ளேயே வைத்து முடிச்சிரலாம். அப்படி ஆறு மாசம் அவன் மேலே வழக்கு ஏதும் வரலைன்னா அவனை நான் கண்டிப்பாக போலீஸ் ஆக்குவேன், இவனை மாதிரி ஆள் நமக்கு தேவை தான். ஞாபகம் இருக்கட்டும் ஆறு மாசம் தான் உங்களுக்கு அவகாசம்".
"இது போதும் சார், சும்மாவே கோவம் வரும் அவனுக்கு, இன்னிக்கே முடிச்சிரலாம்".
இதனையெல்லாம் மறைவில் இருந்து கவனித்தார் கான்ஸ்டபிள் வாசு. அவர் சூர்யா இருக்கும் தெருவில் வசிப்பவர் தான். வாசு இதை எப்படியோ மேஜர் ஸ்ரீகாந்த்திடம் சொல்லி விடுகிறார்.
அடுத்த நாள் மேஜர் ஸ்ரீகாந்த் சூர்யாவை வீட்டில் சந்திக்க வரும் வேளையில் யாரோ ஒருவன் முகமூடி அணிந்தபடி சூர்யா வீட்டு வாசலில் வண்டியில் வந்து நின்று ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு ஓடினான்.
பதறியபடி வெளியே வந்த சூர்யா அவனை பார்த்ததும் அவன் வண்டியை வேகமாக எடுத்தான்.
"சூர்யா, பொறுமையா இரு" ஸ்ரீகாந்த் தடுத்தார்.
"சார் அவனையெல்லாம் சும்மாவே விட கூடாது, ராஸ்கல் என் வீட்டு கண்ணாடியை உடைச்சிருக்கான் எங்க அம்மா மேல பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். என்னை விடுங்க, அவனை அடிச்சா தான் ஆத்திரம் அடங்கும்"
ஸ்ரீகாந்த்...."சூர்யா!! என்று கத்தினார், என் மேல மரியாதை வெச்சது உண்மைனா நான் சொல்றதை கேளு. பொறுமையாக இரு. முதலில் இந்த கண்ணாடி தூள்களை எடுத்து தூக்கி போடு, என் கூட வா கொஞ்சம் பேசணும்".
அவர் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அவர் சொன்னதை செய்தான் சூர்யா. சொன்னதை செய்துவிட்டு அவரோடு அவர் வீட்டிற்கு சென்றான்.
"உட்காரு, நேத்து கமிஷனரை பார்த்தியா?"
"ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?".
"தெரியும் எப்படியோ, போலீஸ் உன்னை வேவு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. உன்கிட்ட ஆறு மாசம் அடிதடிக்கு போகாமல் இருந்தால் போலீஸ் வேலை கிடைக்கும்னு சொன்னார்களா?".
"ஆமாம்".
"அதுக்கு தான் இந்த விஷ பரீட்சை. ஆறு மாசத்துக்குள்ள உன் மேல ஏதாவது வழக்கை போட்டு உன்னை உள்ளேயே வைத்து முடிக்கணும்னு யோசிச்சிருக்காங்க"
"ராஸ்கல் அந்த கமிஷனரும் நல்லவன் இல்லையா, அவருக்கும் ஒரு வழி பண்றேன் பாருங்க".
"சூர்யா கொஞ்சம் பொறுமையா இரு, தனி ஆளா எத்தனை பேரை அடிக்க முடியும், நான் அந்த கமிஷனரை பற்றி விசாரிச்சிட்டேன், அவர் நல்லவர் தான். சொன்ன சொல்லை காப்பற்றுவார், நீ பொறுமையாக இருந்தால். நீ ஊரில் தப்பு செய்யுறவனை அடிச்சு சீரமைக்கணும்னு பாக்குற. உனக்கு அது சரின்னு தான் படுது ஆனால் அதுவே சட்டத்துக்கு தப்பாக படுது, இதையே நீ காக்கி உடை போட்டு செய்தால் யாருமே தப்பு சொல்ல மாட்டார்களே. அதை ஏன் நீ யோசிக்கவேயில்லை. இது உனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம், இதில் மட்டும் நீ ஜெயிச்சிட்டா நீ தான் ராஜா. அதுக்கு உன் எண்ணங்களை முதலில் சீர் அமைக்கணும்.இப்போ வேகத்தை விட விவேகம் தான் முக்கியம். உனக்கு தேவை மனக்கட்டுப்பாடு தான்".
"ஆறு மாசம் கோவப்படாமல் இருக்கிறது ரொம்ப கஷ்டம் சார். என் வாழ்க்கை எப்படி போகணுமா அப்படியே போகட்டும் விடுங்க, செத்தாலும் தப்பானவனை அடிச்சிட்டு, திருத்திட்டு தான் சாவேன்".
"இதான் உன்கிட்ட பிரச்சனையே, எந்த ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு இருக்கும். எந்த வயசில் இப்படி அடிதடி செய்ய ஆரம்பிச்ச யோசிச்சு பாரு? 17 இல்லை 18? இப்போ 23 வயசு ஆகுது இப்படியே எவ்ளோ நாள் இருப்ப, அடுத்த கட்டம் நோக்கி நகர வேணாமா, உன்னை தேடி ஒரு வாய்ப்பு வந்திருக்கு அதை சரியாக பயன் படுத்தினால் உன் வாழ்க்கையும் நல்லா இருக்குமே. நான் உனக்கு உதவி செய்யறேன். மனக்கட்டுப்பாட்டுக்கு தேவை யோகாவும், தியானமும் அது நம்ம ஊர் அரபிந்தோ ஆசிரமத்தில் கற்று தர ஆள் இருக்காங்க, நான் ஏற்பாடு செய்யறேன், அடுத்த ஆறு மாசம் இது மட்டும் தான் உன் வேலை அதுக்கு பிறகு உனக்கே வாழ்க்கைனா என்னனு புரியும், இந்த கோவம் கொஞ்சம் தணியும், சொல்றதை கேளு".
"யோகா?? த்யானம்?? இதெல்லாம் நமக்கு சரி வராத வேலை சார்".
"ஆரம்பத்தில் எல்லாமே கஷ்டம் தான் பழக, பழக நல்லதாக மாறும். அடிதடி மட்டும் சுலபாமாவா ஆரம்பிச்ச அதே மாதிரி தான் இதுவும். நாளை முதல் நீ இதை தான் செய்யணும் இது என் ஆர்டர். உன்னை சுற்றி எத்தனை தப்பு நடந்தாலும் அதை கண்டுக்காதே, அதை கவனிச்சு வை ஆறு மாசம் அப்புறம் போலீசாக எல்லாத்தயும் சீர் படுத்து.உன்னால இது முடியும்".
அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியவில்லை சூர்யாவால், இதையெல்லாம் அருகில் இருந்து கவனித்த வந்தனாவிற்கும் ரொம்பவே சந்தோஷம், "அப்பாடா அப்பாவே இவருக்கு ஒரு நல்ல வழியில் மாற்றி விட்டாரென்று".
அடுத்த நாள் அதிகாலையிலேயே அரபிந்தோ ஆசிரமம் கூட்டிக்கொண்டு போனார் ஸ்ரீகாந்த். யோகா பயிற்சியும், த்யான பயிற்சி வகுப்பிலும் சேர்த்துவிட்டார்.
அந்த இடமே மிக மிக அமைதியாக இருந்தது சுற்றி மக்கள் அமர்ந்தபடி மூச்சு பயிற்சி செய்து கொண்டிருந்தனர், சுற்றி பூ செடிகள் மட்டுமே. சாலை வண்டி சத்தம் கூட கேட்காதவாறு பெரிய பெரிய சுவர்கள். மற்றவர்களை பார்த்தபடியே வகுப்பை ஆரம்பித்தான் சூர்யா. மனதில் எண்ணங்களோ அலை பாய தொடங்கின, கண்களை திறந்தால் முறைத்தனர். கண்களை மூடினால் யாரை எப்படியெல்லாம் அடித்தோம் என்பது படங்களாக ஓடியது. மனது ஒரு நிலை பாட்டிற்கு வரவேயில்லை. சூர்யா மிகவும் சிரமப்பட்டான்.
இதற்கிடையில் அவனை தேடி சில ரவுடி கும்பலும் அவன் தெருவை நோட்டமிட்டபடி இருந்தனர், அவன் அடிக்கடி செல்லும் கடைகள் பக்கமும் சென்று பார்க்க தொடங்கினர். இரவு ஏழு மணிக்கு தான் வெளியே விட்டனர் ஆசிரமத்திலிருந்து.
வீட்டிற்கு சென்றதும் சாப்பிட்டு படுக்கவே சரியாக இருந்தது சூர்யாவிற்கு. இப்படியே நாட்கள் நகர தொடங்கின கட்டுப்பாட்டுக்குள் வராத மனது கொஞ்சம் கொஞ்சமாக சீரானது, ஒரே நிலை கோட்டில் த்யானம் செய்ய பழக்கம் வர தொடங்கியது. எது சரி, எது தப்பு என்று புரிய தொடங்கியது. உடலுக்குள் வேலை செய்யும் உறுப்புகளை அறிய வைத்தது. சூர்யா தனுக்குள்ளே ஏதோ சக்தி உண்டானது போல உணர்ந்தான்.
வாரம் ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன் சென்று கை எழுத்தும் போட்டான், அங்கிருந்து இரண்டு தெரு தள்ளி தான் அரபிந்தோ ஆஸ்ரமும். சூர்யாவை வேவு பார்த்த ரௌடிகள் அவன் ஆசிரமம் சென்றதையும் அறிந்தனர் ஆனால் அதன் உள்ளே செல்ல முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
தினம் தினம் அவனுக்காக அவர்கள் வெளியே காத்திருக்க அவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு முறை வெவேறு நேரத்தில் வெளியே வந்தான் அல்லது வேறு வாசல் வழியாகவும் வெளியே சென்றான். அவனோடு மோத முடியாமல் திணற தொடங்கினர். அவனுக்கு சம்பந்தமான ஆட்கள் மேல் வீண் வம்பு செய்தனர், எதையுமே கண்டுகொள்ளாமல் செல்வது போல செல்ல தொடங்கினான்.
மூன்று மாதம் முடிந்துவிட்டது ஒரு வழக்கு கூட அவன் மேல் போட முடியவவில்லை. அங்கே ஆட்கள் வருகிறார்கள் என்று மிச்சம் மூன்று மாதம் பாண்டிச்சேரியின் ஆரோவில் என்ற த்யான மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீகாந்த், அதுவும் பாண்டிச்சேரி உள்ளே தான், வாரம் ஒரு முறை கையெழுத்து போட ஸ்டேஷன் வருவதோடு சரி. அங்கே யோகா பயிற்சியும் முறையாக கற்றுக்கொள்ள சூர்யாவின் உடலிலும், மனத்திலும் நல்ல மாற்றம்.
கமிஷனர் சொன்ன ஆறு மாத கேடு முடிந்தது, சூர்யா மேல் ஒரு வழக்கும் இல்லை. கமிஷனர் ரத்னவேல் சொன்ன சொல்லை காப்பற்றியதற்காக அவனுக்கு போலீஸ் வேலை ஏற்பாடு செய்தார், சில மாதங்களில் பயிற்சி அனைத்தும் முடித்து இன்ஸ்பெக்டர் சூர்யாவாக வந்தான்.
இதுவரை வாலாட்டிய அனைத்து ரௌடிகளின் பெயரும், அரசியல்வாதிகளின் பெயரும் இப்போது அவன் வசம். தன் மனதை சீர் படுத்தியவன் இப்போது ஊரையும் சீர் படுத்த கிளம்பிவிட்டான் சூர்யா.
