STORYMIRROR

அர்விந்த் நாராயணன்

Crime Thriller

4  

அர்விந்த் நாராயணன்

Crime Thriller

மர்ம தீவு மோதூ

மர்ம தீவு மோதூ

10 mins
0

மர்ம தீவு மோதூ

சென்னையில் ஒரு மிக பிரபலமான சுற்றுலா கம்பெனியில் அதன் மேலாளர் கதிரை பார்க்க காத்திருந்தார் ACP துரை சிங்கம். மேலாளர் கதிர் வந்ததும்.....

கதிர் உள்ளிருந்து வந்தார், "குட் மார்னிங் சார், சொல்லுங்க என்ன உதவி வேணும்?"

"ஒரு கேஸ் விஷயமா பார்க்க வந்தேன், போன வாரம் மாலே தீவு சுற்றுலா போன தொழில் அதிபர் ராஜசேகர் நேற்று  இறந்திருக்கார். அவர் இறப்பு மேலே  சந்தேகம் இருக்கிறதா அவங்க குடும்பம் வழக்கு கொடுத்திருக்காங்க. 10 நாள் சுற்றுலா மாலே தீவுக்கு உங்க கம்பெனி மூலமா தான் போயிருக்கார் இரண்டு நாள் முன்னாடி தான் வந்திருக்கார். சுற்றுலா 10 நாளும் அவர் உடல் நலம் எப்படி இருந்துச்சு ஏதாவது உடல் நிலை கோளாறு இருந்துச்சா தெரியணும், உங்க கம்பெனி ஆட்கள் ஒருத்தர் கூட போயிருந்ததாக தகவல், அவரை விசாரிக்கணும்".

"சரி கண்டிப்பா விசாரிக்கலாம் சார், நான் வர சொல்றேன்" கதிர் ஏற்பாடு செய்தார்.

சர்வேஷ்க்கு அழைப்பு விடுக்கிறார்....

"குட் மார்னிங் சார்"

"இவர் ACP துரை சிங்கம், ஒரு வழக்கு விஷயமா விசாரிக்க வந்திருக்கார், உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க".

கதிர் துரை சிங்கம் சொன்னதை சர்வேஷிடம் கூறினார்.

"மாலே ஊரிலிருந்து கிளம்பர அன்னிக்கு  மட்டும் சோர்வா இருந்தார், என்னனு விசாரிச்சப்போ ஊர் சுற்றிய கலைப்புன்னு சொன்னார்".

"எங்க எல்லாம் சுற்றுலா போனீங்க ஏதாவது சாப்பாடு சரி இல்லாம போயிருக்க வாய்ப்பு இருக்கா" துறை சிங்கம் கேள்வியை தொடர்ந்தார்.

"இந்த குழு முழுக்க செல்வந்தர்கள் (High Class) வந்தது ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல் தான் ஏற்பாடு பன்னியிருந்தோம், சாப்பாடு குறை இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாமே உயர் தர ஹோட்டல், வெளியே போவதற்கும் உயர் தர கப்பல், படகு தான் ஏற்பாடு பன்னியிருந்தோம், பத்து நாள் சுற்றுலா அதில் எட்டு நாள் எங்களோட தான் இருப்பாங்க, கடைசி இரண்டு நாள் மட்டும் அவர்கள் சுதந்திரமா எங்க வேணாலும் போகலாம் அவர்கள் கேட்கும் வசதிகள் மட்டும் நாங்க ஏற்பாடு பண்ணி தருவோம்".

"ராஜசேகர் அந்த இரண்டு நாள் எங்க போனார் தெரியுமா?".

"மோதூ தீவுக்கு போக படகு வேணும் கேட்டார் அதை ஏற்பாடு பண்ணி கொடுத்தோம்".

"நீங்க எந்த தீவுல தங்க ஏற்பாடு பண்ணீங்க?"

"நாங்க பதள்ளா தீவுல தங்கி இருந்தோம். மாலேல நூறுக்கும் மேல தீவு இருக்கு எல்லாமே படகு வழி தான் போக முடியும், ஒவ்வொரு தீவும் ஒரு தனி தன்மையோட இருக்கும்" சர்வேஷ் விளக்கினான்.

"நீங்க சொன்ன மோதூ தீவுல என்ன விசேஷம்?"

"அங்க சாமியார் ஒருத்தர் இருக்கார் மிலன் சஜித், ரொம்ப பிரபலம்.  அவரை பார்க்க உலகம் பூரா கூட்டம் வரும், அவரை  பார்க்க தான் ராஜசேகர் போனார்.  மூணு மாசத்துக்கு ஒரு முறை நாங்க குழு அமைத்து மாலே தீவு போவோம் அதுல நிறைய சுற்றுலா பயணி அந்த மோதூ தீவுக்கு போயிருக்காங்க".

"நீங்க எப்பவும் பதள்ளா தீவுல தான் தங்குவீங்களா?"

"இரண்டு விதமான சுற்றுலா ஏற்பாடு பண்ணுவோம் ஒன்னு மேல் தட்டு மக்களுக்கு மட்டும் அதுக்கு பதள்ளா தீவு 5 நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல் தான் ஏற்பாடு பண்ணுவோம், இரண்டு நடுத்தர வர்க்கத்துக்கான சுற்றுலா இதுக்கு மாபிஷி தீவுல ஏற்பாடு பண்ணுவோம். இந்த வருஷம் மட்டும் மூன்று முறை போயிருக்கோம். தமிழ்நாடு மட்டும் இல்லை தென் இந்தியா மக்கள் எல்லோரும் எங்க சுற்றுலாவில் வந்திருக்காங்க".

"கடந்த மூணு முறை போன பிரயாணிகள் பட்டியலும் முகவரி முதற்கொண்டு எனக்கு வேணும்".

"கொஞ்சம் காத்திருங்க நான் தரேன்"

பிரயாணிகள் பட்டியலுடன் துரை சிங்கம் துப்பறிய தொடங்கினர்.

மூன்று பட்டியலில் தலா 20 பேர் சுற்றுலா சென்றிருந்தனர், 60 பேரை விசாரிக்க வேண்டும் அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும் இருக்க கூடும், அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் ரிப்போர்ட் வேண்டும் என்று கட்டளையிட்டார்.

போலீஸ் படை இன்ஸ்பெக்டர் ஆதித்யன் தலைமையில் வேலை ஆரம்பித்தது ஒரு வாரம் அனைத்து  முகவரியும் விசாரித்து ரிப்போர்ட் சமர்ப்பித்தது. மூன்றுபேரை தவிர யாரும் அதன் பிறகு மாலே தீவுக்கு செல்லவில்லை அல்லது சம்பந்தப்படவில்லை.

ஆதித்யன் விசாரித்ததை விளக்கினார்.

"சென்னையை சேர்ந்த ராஜசேகர் இறந்துள்ளார் - இறப்புக்கான காரணம் food poison"

கொச்சியை சேர்ந்த ருக்மணி மீண்டும் மாலே தீவுக்கு சென்று மிலன் சஜித் கூட்டத்தில் சேர்ந்துள்ளார்.

கோயம்புதூரை சேர்ந்த  தொழிலதிபர் மாணிக்க வேல் இறந்துள்ளார் - இறப்புக்கான காரணம் food poison

"சென்னையிலிருக்கும் மொத்த ட்ராவல் ஏஜெண்சி பட்டியல் எடுத்து யார் யார் மாலே தீவுக்கு சுற்றுலா போனார்களோ அவர்கள் மொத்த பட்டியலும் எடுத்து அதில் பயணித்த அனைவரையும் விசாரிக்கணும்" துறை சிங்கம் கட்டளையிட.....

போலீஸ் படை விரைந்து செயல் பட்டது, மூன்று வாரம் அணைத்து விசாரணையும் முடித்து ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டது.

"இந்த ரிப்போர்ட் இல் எட்டு புதிய தகவல் கிடைச்சிருக்கு. அதில் ஐந்து பேர் சுற்றுலா முடித்து திரும்பி வந்த ஒரு வாரத்தில் இறந்திருக்காங்க சிலர் குடும்பத்தில் இரண்டுபேர் - எல்லா மரணத்திற்கு காரணம் food poison" ஆதித்ய குண்டை தூக்கி போட்டார். 

இரண்டு பேரு சென்னை சேர்ந்தவங்க, இரண்டு பேரு திருச்சி & ஒன்று மதுரை.

"எல்லாருக்கும் என்ன வயசு இருக்கும்?" துறை சிங்கம் கேட்க.... 

"40 முதல் 50 தான். மீதி மூன்றில் இரண்டு பொண்ணு ஒரு பையன் திரும்ப மாலே தீவுக்கு போயிருக்காங்க மிலன் சஜித் ஆசிரமத்தில் சேர்ந்திருக்காங்க".  

துரை சிங்கம் சற்று குழம்பி போனார்....

"எதற்காக food  poison காரணமாக இருக்கணும், இவர்கள் யாருக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கா" 

"அப்படி ஏதும் இல்லை" ஆதித்யன் ஆமோதித்தான்.  

"மறுபடியும் மாலே தீவுக்கு அந்த மூன்று பெண்களும் ஒரு ஆணும் எதற்காக போனாங்க? ஏதாவது தெரிஞ்சுதா?" துறை சிங்கம் யோசிக்க 

"அந்த மூன்று பொண்ணுக்கும் கல்யாண ஆசை இல்லை, அந்த பையன் தற்கொலை செய்யும் எண்ணம் நிறையவே இருந்திருக்கு. அவன் மனநிலை மாற்ற சுற்றுலா போயிட்டு  அப்படியே மிலன் சஜித் சாமியாரை தரிசனம் செய்து விட்டு வந்திருக்காங்க. அவன் திரும்ப அங்கேயே போயிருக்கான்" ஆதித்யன் சொல்லி முடிக்க.

"எங்கேயோ தப்பு நடக்குது, நம்ம கண்ணுல படமாட்டேங்குது. இது எல்லாமே குழுவா மாலே தீவுக்கு போனவங்க, இந்த இறந்தவங்க திரும்ப வந்த விமானதுல வேற யாரு பிரயாணம் பண்ணாங்க இதை கண்டு பிடிச்சா பிடிச்சிரலாம்".

துரை சிங்கம் முழு மூச்சாக இந்த வழக்கில் இறங்கினார், பிரயாணிகள் பட்டியல் எடுத்து 200  பிரயாணிகளை விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில்....துரை சிங்கம் தொடர்ந்தார்....

"மூன்று பேரு தவிர மற்ற எல்லாரும் இந்தியால தான் இருக்காங்க. காமேஷ், சுனில் & குப்தா இவங்க மூன்று  பேரும் திரும்ப மாலே தீவுக்கு போயிருக்காங்க அவங்க இருக்கிறது மிலன் சஜித் இருக்கிற மோதூ தீவுல. இவங்க திரும்ப போன தேதியும் , அந்த இறந்தவங்க தேதியும் பொருந்துது. அந்த ஐந்து பேர் இறப்புக்கும் மிலன் சஜித்க்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்கு. இவங்க ஐந்து பேரும் வேற வேற தேதில மிலன் சஜித்தை பார்த்திருக்காங்க இவங்களை மட்டும் எதுக்கு கொல்லனும்?? ஏதாவது ஒரு விஷயம் இவங்களுக்கு பொதுவா இருக்கனும் அதை கண்டு பிடிக்கணும்".

ஆதித்யன் தன் கையை உயர்த்தினான்,"யாருக்குமே இங்க சம்பந்தம் இல்லை சார், நான் விசாரிக்கும்போது ராஜசேகர் குடும்பம் தவிர மற்ற யாருக்குமே இது கொலைன்னு கூட தெரியல. சாப்பாடு கோளாறால் இறந்துட்டார்னு தான் சொன்னாங்க. ராஜசேகர் மனைவி தான் அவர் சாமியார் பார்க்க வரமாட்டேன்னு சொன்னாரு நான் தான் வம்படியா கூட்டிட்டு போனேன் சொன்னாங்க".

"ஏன் வர மாட்டேன் சொன்னாராம்?"

"அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால சாமியாரெல்லாம் பார்க்க வரலைன்னு சொல்லிருக்கார்".

"அப்போ நாம யோசிக்கற பொதுவான ஒரு குணம் இந்த ஐந்து பேருக்கும் ஏன் இதுவா இருக்க கூடாது?. மற்ற நாலு பேரு வீட்டுக்கும் உடனே தொடர்பு கொண்டு விசாரிங்க"

ஆதித்யன் விசாரிக்கிறார்......அனைவரின் குடும்பத்தையும் தொலைபேசியில் பேசிய பிறகு.....

"சார் நீங்க சொல்றது சரி, விசாரிச்சதுல மற்ற நாலு பேரும் நாத்திகவாதி, அவங்க மனைவியோ, மகளோ சொன்னதுக்காக தான் சாமியார் மிலன் சஜித் பார்க்க போயிருக்காங்க" ஆதித்யன் ஆச்சிர்யத்துடன் கூறினான்.

"சூப்பர், இப்போ மிலன் சஜித் அந்த சாமியார் பத்தின முழு விவரம் கலெக்ட் பண்ணனும்"

"சார் அவர் வெப்சைட் வெச்சிருக்கார், லட்சக்கணக்குல அவருக்கு பக்தர்கள் இருக்காங்க, எப்படி பிடிக்க முடியும்".

துரை சிங்கம், மிலன் சஜித் முழு விவரங்களை சேகரிக்க தொடங்கினார்......

"ஆதி, சாமியார் கேஸ் ரொம்ப சூடா இருக்கு. மிலன் பொறந்தது பரோடால இருபது வயசு வரைக்கும் சாப்பாட்டுக்கே கஷ்டம் அதுக்கு அப்புறம் சாமியார் வேஷம் போட ஆரம்பிச்சு பல பொண்ணுங்க வாழ்க்கை சீரழிச்சிருக்கான். பரோடா போலீஸ் தேடும்போது கல்கத்தா போயிட்டான், அங்க தான் ஆசிரமம் ஆரம்பிச்சிருக்கான் அங்கேயும் பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்கான். தன்னை தானே கடவுள்னு சொல்லிட்டு இருந்திருக்கான்.பெங்களூரு, விசாகப்பட்டினம், நேப்பாள்ன்னு சுத்தி மாலே தீவுல ஒரு தீவு விலைக்கு வாங்கி ஒரு சாம்பிராச்சியமே உருவாக்கி இருக்கான். அவன் தான் கடவுள்னு சொல்றதால கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க மேல ஒரு வெறுப்பு அவனுக்கு இருந்திருக்கு, இதை பத்தி பெங்களூர்ல ஒரு வழக்கு ஒருத்தர் போட்டிருக்கார். அதனால இந்த கொலைகளை மிலன் சஜித் செய்திருக்க வாய்ப்பு அதிகம்".  

"எப்படி சார் இந்த சாமியாருங்க தப்பிச்சிட்டே இருக்காங்க".

"எல்லாம் மக்கள் கொடுக்கிற இடம் தான். மக்களை வசியம் பண்றதுக்கு ஏதோ செய்யறான், மக்கள் போய் விழறாங்க".

"இவனை எப்படி பிடிக்க முடியும், யாராவது அவனுக்கு எதிரா சாட்சி சொல்லவங்களா?"

"இருக்கிற கேஸ் வைத்து  விசாரிக்க பாப்போம். உடனே மாலே தீவுக்கு போக ஏற்பாடு பண்னுங்க ஆதி" துரை சிங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.

துரை சிங்கம் & ஆதித்யன் மாலே தீவுக்கு பறக்கிறார்கள்...

இயறக்கை ரம்மியமான ஒரு ஹோட்டல்லில் தங்கி மாலே போலீஸ் உதவியை கேட்டனர். அவர்கள் உதவியோடு மோதூ தீவு வாசல் வரை தான் செல்ல முடிந்தது, போலீஸ் வாசனை மோப்பம் பிடித்து உள்ளே நுழைய முடியாத படி எல்லா ஏற்பாடுகளும் மிலன் சஜித் ஆட்கள் செய்திருந்தனர்.எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை, மாலே போலீஸ் மிலன் ஷாஜித்க்கு  ஆதரவாகவே பேசியது.இதுக்கு வேற வழியா  தான் போகணும் என்று கிளம்பி மீண்டும் இந்தியா வந்தனர்.

"ஆதி, எனக்கு நம்ம ஆள் இரண்டு பேரு வேணும், நல்லா நீச்சல் தெரிஞ்சிருக்கணும், எல்லா விதமான படகு ஓட்ட தெரிஞ்சிருக்கணும், ஓட தெரிஞ்சிருக்கணும், தற்காப்பு கலை  தெரிஞ்சிருக்கணும், வேற்று மொழி பேச தெரிஞ்சிருக்கணும், உடம்புல எந்த நோயும் இருக்க கூடாது.ஏற்பாடு பண்ணுங்க".

"நீங்க சொல்ற மாதிரி ஆள் கருப்பு கமாண்டோஸ் பிரிவில் நாலு பேரு இருக்காங்க, நான் நாளைக்கு அனுப்பறேன் சார்".

இரண்டு வாலிபர்கள் ஆதித்யன் அழைத்து வந்தான்.

"சார் இவங்க செங்குட்டுவன், குற்றாலீஸ்வரன் எதுக்கும் துணிஞ்சவங்க".

"குட், உங்க இரண்டு பேருக்கும் ஒரு பெரிய வேலை கொடுக்க போறேன். இரண்டு பேரும் மாலே தீவுக்கு போகணும் அங்க மோதூ தீவுக்கு போகணும். ஒருத்தர் வாழ்க்கைல  விரக்தின்னு அந்த சாமியார் மிலன் சஜித் சீடரா சேரனும், இன்னொருத்தர் பத்திரிக்கையாளரா  போகணும் அந்த ஆசிரமம் எப்படி நடத்தறாங்கன்னு பேட்டி எடுக்க.அவங்க ரொம்ப ஆபத்தான ஆளுங்க ஜாக்கிரதையா இருக்கனும். ஏதாவது சாப்பிட கொடுப்பாங்க அதுல வசிய மருந்து கலக்க வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு 30 மாத்திரை தரேன் இது ஒரு நோய் தடுப்பு மாத்திரை தினமும் உபயோகிக்கணும், இது அரசாங்க மருத்துவரால் கொடுக்க பட்டது தான், முழு உடம்பையும் ஒரு பரிசோதனையும் பண்ணிக்கணும் இங்கே, அவங்க கொடுக்கிற மருந்தால உங்களுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது.கண்ணாடி கேமரா, பேனா கேமரா, செயின் கேமரா எல்லாம் தரேன் அங்கே  நடக்கிறதை அப்படியே படம் பிடிச்சு எங்களுக்கு அனுப்பனும், வேலை முடிஞ்சிட்டாலோ இல்லை அவங்க கிட்ட மாட்டிகிட்டாலோ எப்படியாவது தப்பிச்சிரணும் பக்கத்துல நிறைய தீவு இருக்கு எங்கேயாவது பாதுகாப்பான இடத்துக்கு போயிட்டு எனக்கு தகவல் சொல்லுங்க".

"சரி சார், நாங்க எப்போ கிளம்பனும்" இருவரும் தயாராகினர்.

"நாளைக்கே. மாலே தீவு போக பாஸ்போர்ட் மட்டும் போதும் விசா அங்கேயே கிடைக்கும். All the best!"

அடுத்த நாள் செங்குட்டுவன் & குற்றாலீஸ்வரன் மாலே தீவு வந்திறங்கினர்.

செங்குட்டுவன் அடிமையா சேரவும் குற்றாலீஸ்வரன் பத்திரிகையாளராகவும் மோதூ தீவு சென்றனர்.  முதல் வரிசையில் செங்குட்டுவன் செல்ல சாமியார் மிலன் சஜித் காட்சியளித்தார்,

"மகனே உனக்கு என்ன பிரச்சனை சொல்?" காந்த குரலில் மிலன் பேசினார்.

"வாழ்க்கை வாழவே பிடிக்கலை, சாகலாம் இருந்தேன் எங்க அம்மா உங்களை பார்க்க சொன்னாங்க அதான் வந்தேன்".

"கவலை படாதே உன்னை நான் வாழ வைக்கிறேன்,  இந்தா இந்த புனித நீரை அறுந்து".

ஒரு கமண்டலத்தில் இருந்து தண்ணீர் ஊற்றினான், சிறுது முழுங்கி விட்டு கீழே சிந்துவது போல் கீழே விட்டான் செங்குட்டுவன், அவனை கொண்டு செல்ல இரண்டு ஆட்கள் வந்தனர். அவனை இடது பக்கம் ஓர் அறைக்கு அழைத்து சென்றனர்.அவன் கண்ணாடி அனைத்தையும் படம் பிடித்து கொண்டிருந்தன.

குற்றாலீஸ்வரன் பத்திரிகையிலிருந்து வருவதாக கூறி ஆசிரமத்தை சுற்றி பார்க்க வேண்டும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சொல்ல, கேள்விகள் கேட்கலாம் பதில் கிடைக்கும், ஆசிரமம் சுற்றி பார்க்கலாம் ஆனால் வீடியோ பதிவு செய்ய தடை என்றார்கள். வீடியோ வைத்துவிட்டு  கிளம்ப அவனை ஆசிரமம் சுற்றி காட்ட ஒரு பணி பெண் அழைத்து சென்றாள்.  

ஒரு அரண்மனை போல் இருந்தது அந்த இடம், அங்கேயே தங்கி விட வேண்டும் போல் இருந்தது குற்றாலீஸ்வரன்க்கு, நாலு பக்கமும் கடல், குளிர்ந்த காற்று, எங்கும் மரம், செடி கொடிகள்.அந்த கால அந்தப்புரம் போல் ஒரு சிறிய அரண்மனை உள்ளே பெண்களுக்கு மட்டும். மொத்தமாக அவன் பார்த்தவரை 3000 மக்கள் இருக்க கூடும் அந்த தீவில்.

முதல் நாள் வருபவர்கள் அங்கு தங்க அனுமதி இல்லை, இருட்டாவதற்குள் எல்லோரையும் அனுப்பி கொண்டிருந்தனர். குற்றாலீஸ்வரன் பின்னால் இருக்கும் அரண்மனை வரை சென்று வர நேரமானது, செங்குட்டுவன் வலிப்பு வந்தது போல் நடித்து சரியாகாதவாறு நேரம் கடத்தினான்.

இப்போது இருவரையும் வெளியே கூட்டி செல்ல ஒரு ஆள் வந்தான், அவனை பார்த்ததும்   அடையாளம் தெரிந்துவிட்டது அவன் தான் குப்தா, துரை சிங்கம் அந்த மூணு பேரு பாஸ்போர்ட் போட்டோ கொடுத்திருந்தார்.

சுற்றி பார்த்தனர் 500  அடி தாண்டினால் பெரிய படகு எல்லோரையும் அழைத்து செல்ல காத்திருக்கிறது, இடது பக்கம் 800 அடி சென்றால் சிறு படகுகள் மூன்று இருப்பதை கவனித்து இருந்தனர்.

செங்குட்டுவன் வேண்டும் என்றே குற்றாலீஸ்வரனை மோத அவன் கீழே விழுந்தான், இவனை அடிக்க ஓடி வர இவன் அவனை திருப்பி அடிக்க முயல குற்றாலீஸ்வரன் ஓட ஆரம்பித்தான், அவனை துரத்தி கொண்டு ஓடுவது போல் ஓடினான் செங்குட்டுவன். இதை சற்றும் எதிர் பார்க்காத குப்தா அவர்களை துரத்த.அவர்களுக்கு ஈடு கொடுத்து குப்தாவால் ஓட முடியவில்லை, தனி படகு பக்கம் வந்திருந்தனர், பின்னால் குப்தா வந்து கொண்டிருந்தான் அதற்கு பின்னால் நான்கு பேர் துரத்தி கொண்டு வந்தனர், குப்தா அருகில் வந்தவுடன் இரண்டே அடி, ஓடி வந்த மூச்சிரைச்சலில் கீழே மயங்கி விழுந்தான் அவனை அப்படியே தூக்கி படகில் போட்டு படகை எடுத்து காற்று சென்ற திசைக்கு திருப்பி ஒட்டினர்.

கண்ணுக்கு எட்டியவரை கும்மிருட்டு ஆகி இருந்தது, தூரத்தில் ஏதோ வெளிச்சம் தெரிந்தது அருகில் சென்று பார்த்தால் அது ஒரு தீவு இன்னமாதூ என்றிருந்தது. அந்த தீவை சுற்றியே படகை ஒட்டினர்.தீவு நெருக்கத்தில் மட்டுமே செல் போன் டவர் கிடைத்தது, துரை சிங்கமை தொடர்பு கொள்ள முயற்சித்தனர், முதல் அழைப்பிலேயே அலைபேசியை எடுத்தார்.

"சார் முதல் நாளே குப்தாவை பிடிச்சாச்சு, இப்போ எங்க பிடில. இன்னமாதூன்னு ஒரு தீவு இருக்கு அது பக்கம் இருக்கோம், இங்க தீவுக்குள்ள இறங்கினா மாலே போலீஸ் இருக்குமா தெரியல என்ன பண்ண?." கிற்றளீஸ்வரன் கேட்க.....

"சூப்பர், நீங்க இருக்கிற தீவு தாண்டி வந்தா இன்னொரு தீவு ரஸமதூன்னு இருக்கும். அங்க வாங்க. நாங்க இங்கே தான் இருக்கோம்"

"நீங்க மாலே வந்தாச்சா?"

"நீங்க போன அடுத்த விமானதுல வந்திட்டோம், உங்க திறமை மேலே இருந்த நம்பிக்கை தான்".

படகு ரஸமதூ தீவுக்கு போனது, குப்தா துரை சிங்கத்திடம் சிக்கி இருந்தான்.

அவனை தெளிய வைத்து விசாரணை நடத்தினர். அவனுக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தது, செங்குட்டுவன் மொழி பெயர்த்தான்.

"இதுக்கு மேலே தப்பிக்க முடியாது குப்தா. நீ தான் இரண்டு பேரு கொலை பண்ணனு  தெரியும் ஏன் எதுக்கு சொல்லிடு" துரை சிங்கம் அவர் ஸ்டைலில் விசாரணையை தொடங்கினார்.

"என்னை சாகடிச்சாலும் என்கிடேந்து உண்மை வராது" குப்தா ஆடம் பிடித்தான்.

"உன்னை யாரு சாவடிக்க போறா, அதுக்கும் மேல செய்வோம்".

கையில் இருந்த ஆனி எடுத்து அவன் கையில் ஓங்கி அடிக்க அவன் வலியால் துடித்தான், ரத்தம் பீறிட்டது.

தொடர் சித்ரவதைக்கு பிறகு வாய் திறந்தான் குப்தா....

"மிலன்ஜி அவர் தான் கடவுள்னு இந்த உலகத்தை நம்ப வெச்சிட்டாரு, வர பக்தர்கள் எல்லாம் அவரை கடவுளாவே பார்ப்பாங்க, அதுலயும் சிலர் இங்கே வரும்போது எனக்கு கடவுள் பக்தியே இல்லைனு சொல்றது உண்டு, அவங்க எல்லாரையும் தனியா கவனம் செலுத்த ஒரு கூட்டம் இருக்கும்"

"எப்படி கண்டு பிடிப்பீங்க?"

"பேசுறதுலேயே கண்டு பிடிச்சிடுவாரு மிலன் ஜி, அவர் பக்கத்துல 4 கமண்டலம் இருக்கும் அதுல ஒவ்வொன்னுலயும் சிகப்பு, பச்சை, மஞ்சள் & கருப்பு தாயத்து கட்டி இருக்கும். சிகப்பு கமண்டலம் தண்ணியை தன்னை நம்பி வர பெண்ணுக்கு கொடுப்பாரு, ஆதரவற்ற ஆம்பளைக்கு மஞ்சள் நிற கமண்டலம் தண்ணீர், வயசானவங்களுக்கு பச்சை கமண்டலம் தண்ணீர். கடவுள்   இல்லைனு சொல்றவங்களுக்கு கருப்பு நிற கமண்டலம். எல்லாத்துலயும் வசிய மருந்து கலந்திருப்போம் அளவளவா".

"எப்படி கொலை செஞ்சீங்க?"

"கருப்பு கமண்டலம் தண்ணீர்ல மெதுவாய் சாக கூடிய விஷம் இருக்கும் அது வேலை செய்ய இரண்டு நாள் ஆகும், அது யாருக்கு கொடுக்கறாங்களோ அவங்களை பின் தொடர்ந்து போகணும் எந்த ஊரு எந்த நாடா இருந்தாலும், அவங்க ஊருக்கு போய் சேர்ந்த அப்புறம் அவங்களை கண்காணிச்சிட்டே இருப்போம். பால், காய்கறி, வெளிலேந்து வர சாப்பாடு  இதுல ஏதாவது ஒன்னு வெளியே தான் வாங்குவாங்க அந்த மாதிரி வீட்டுக்கே பொருளை கொடுப்பது போல அவங்க வீட்டுக்கு போயிடுவோம், கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு கொடுத்து நட்பாக்க பார்ப்போம், அவங்களோடு சேர்ந்து டீ, காபி சாப்பிடும் வரைக்கும் வந்த பிறகு, அவங்க குடிக்கிற காபி அல்லது டீயில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலப்போம், ஒரு நாள் அவங்க நிச்சியமாக இறந்திருவாங்கன்னு தெரிஞ்சதுக்கு பிறகு நாங்க திரும்பி வருவதற்கான பயணத்திற்கு தயார் ஆவோம். இறந்துட்டாங்கன்னு செய்தி கிடைச்சதும் கிளம்பிடுவோம்".

"இந்த மாதிரி எத்தனை பேரு கொன்னுருக்கீங்க?"

"தெரியலை கணக்கு வைக்கிறது இல்லை. மிலன் ஜி யாரை சொல்றரோ அவரை மட்டும் தான் கொல்லுவோம்"

"ஆசிரமத்து உள்ளே எத்தனை கொலை பண்ணிருக்கீங்க".

"யார் மிலன்ஜியை எதிர்த்தாலும் அவங்களை கொன்னுட சொல்லுவார்".

"எத்தனை பொண்ணுங்க இறந்திருக்காங்க?"

"பொண்ணுங்களுக்கு வசிய மருந்து ஜாஸ்தியா தருவோம் அவங்க இங்கேயே அடிமையா இருக்க தான் விரும்புவாங்க. தினம் தினம் மிலன்ஜி யாரை இரவுக்கு அழைப்பாங்கன்னு  காத்திருப்பாங்க. கடவுளோட குழந்தை பெத்துக்கணும்னு துடிப்பாங்க".

"Shit! என்ன கன்றாவிடா நடக்குது, இவனை கடவுளா வேற நினைக்கறாங்க இந்த முட்டாள் மக்கள்" துரை சிங்கம் நொந்து கொண்டார்.

அவன் சொன்ன வாக்கு மூலத்தை அரசாங்கத்துக்கு அனுப்பி மிலன் சஜித்தை கைது பண்ண எல்லாவற்றையும் தயார் செய்தார் துரை சிங்கம்.

அடுத்த நாள் காலை, அரசு கைது வாரண்டுடன் மாலே போலீஸ் உடன் பல படகுகள் மோதூ தீவிற்கு சென்றது.

தீவின் முகவை முதல், மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்திருந்தனர்.

போலீஸ் படை உள்ளே சென்று தேடியது, தீவு முழுவதும் பிணங்கள் மட்டுமே.தான் போலீஸிடம் சிக்கி கொண்டது தெரிந்து கடவுள் அழைக்கிறார் என்று பக்த கோடிகளை அழைத்து புனித நீர் குடிக்க சொல்லி அந்த நீரில் விஷம் கலந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டான் மிலன் சஜித்! அவர்களும் கடவுள் கொடுக்கிறார் என்றே குடித்தனர்!!இறுதியாக 3500 மக்களை கொன்று தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள தாயாரை இருந்த நேரத்தில்.....துரை சிங்கம் அவனை மடக்கி பிடித்தான்!!

வெறும் பிணங்களாக காட்சியளித்தது அந்த தீவு, இவ்வளவு கொடூரமான ஒரு மிருக மனிதனை கையும் களவுமாக பிடித்து கொடுத்ததற்கு மிக பெரிய பாராட்டு கிடைத்தது துரை சிங்கம் மற்றும் அவர் குழுவிற்கு.  

தொடர் பிணங்களால், அதை அப்புறப்படுத்தியும், அந்த தீவை தடை செய்ய பட்ட தீவாக அறிவித்தது மாலே அரசு.

துரை சிங்கம் மக்களிடம் இது போல் போலி சாமியார்களை நம்பால் இருக்க விழிப்புணர்வு வீடியோ பதிவு இன்றை அரசாங்கத்தின் மூலம் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இனியாவது மக்கள் போலி சாமியாரை நம்பாமல் இருப்பார்கள் என்றபடி....! மீண்டும் சிங்கத்தின் வேட்டை தொடரும்!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Crime