STORYMIRROR

அர்விந்த் நாராயணன்

Drama Others

4  

அர்விந்த் நாராயணன்

Drama Others

மணமகளே வா

மணமகளே வா

5 mins
0

மணமகளே வா

வைபவ் சிங்கப்பூரில் வேலை பார்ப்பவன், அவனுக்கு எப்போதும் வீட்டிலிருந்தபடியே தான் வேலை. அவனுக்கு அவன் குடும்பத்தில் பெண் பார்த்திருந்தனர் அந்த பெண்ணும் சிங்கப்பூரில் வேலை செய்கிறாள் தற்காலிகமாக, நாளை மறுநாள் zoom call போட்டு ஆன்லைன் பெண் பார்க்கும் படலம் நடக்க போகிறது. அதற்கு முன்பு அவர்கள் நேரில் பார்த்து பேசிவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

அவளிடம் இன்றே பேசிவிடலாம் என்று அவள் நம்பருக்கு அழைத்தான்.

"ஹாய் சங்கவி, நான் வைபவ்"

"ஹாய் சொல்லுங்க. நானே உங்களிடம் பேசணும்னு இருந்தேன்".

"நானும் அதுக்கு தான் கூப்பிட்டேன், பெரியவங்க பேசுறதுக்கு முன்னாடி நாம் பேசிடலாமே".

"சரி சொல்லுங்க"

"நேரில் பார்க்கலாமா.முஸ்தபா மால் பக்கத்தில் பார்க் ஹோட்டல் ரெஸ்டாரண்ட் இருக்கு, அங்கே வர முடியுமா. மாலை 4 மணிக்கு"

"சரி வரேன்"

மாலை சரியான நேரத்திற்கு கிளம்பி அங்கே அவளுக்காக காத்திருந்தான் அவளும் சரியான நேரத்திற்கு வந்தாள்.

"ஹாய்...!"

"ஹாய் வாங்க, உட்காருங்க. என்ன சாப்பிடலாம்".

"ஐஸ் கிரீம்".

பெரிய ஐஸ் கிரீம் ஆர்டர் செய்ய வந்தது, பொறுமையாக சாப்பிட தொடங்கினர்.

"உங்களை பற்றி சொல்லுங்க".

"சரி, நான் இன்ஜினியரிங் தான் படிச்சேன், இப்போ ஆறு மாசம் இங்கே சிங்கப்பூரில் வேலை. அதுக்கு அப்புறம் திரும்ப இந்தியா போகணும். வெளிநாட்டில் செட்டில் ஆக எனக்கு பிடிக்காது. சில மாசம் வேலை அல்லது கொஞ்சம் நாள் சுற்றுலா இதுக்கு மட்டும் தான் வெளி நாடு.மத்தபடி நான் இந்தியாவில் இருக்க தான் விரும்புவேன்".

"அட சூப்பர் நான் சொல்லணும் நினைச்சது இதே தான்.நான் இன்னும் ஆறு மாசத்தில் சென்னை வந்துருவேன் அப்புறம் அங்கேயே தான் வேலை" வைபவ் சந்தோஷமானான்.

"அப்படியா சூப்பர், பார்த்தீங்களா நாம ஒரே அலைவரிசையில் இருக்கோம். எனக்கு எங்க அப்பா தான் ரொம்ப பிடிக்கும்.அப்பா ராஜசேகர் ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றவர், அம்மா ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் வேலை பாக்குறாங்க. நான் ஒரே பொண்ணு ரொம்ப செல்லம், அதே சமயம் தேவையான விஷயத்தில் கண்டிப்பாக தான் இருப்பார் அப்பா. நாங்க மூணு பேரு மட்டும் தான், நிறைய ஊரில் வளர்திருக்கேன் அப்பா ராணுவம் என்பதால். பல சமயம் அப்பா ஊருக்கு போக, நானும் அம்மாவும் தான் தனியாக இருப்போம் என் வீடு பக்கத்தில் என் தோழி சஞ்சனா வீட்டில் தான் எப்பவும் இருப்பேன். அவங்க ஒரு பெரிய கூட்டு குடும்பம் எப்பவும் கூட்டம் இருக்கும். ஜாலியா இருக்கும் எனக்கு அப்படி இல்லையேன்னு ஏக்கமா இருக்கும். உங்க குடும்பம் கூட்டு குடும்பம்னு சொன்னாங்க அதுக்காகவே சரி சொல்லிட்டேன்".

"அடடா சந்தோஷம், இப்போ நிறைய பொண்ணுக்கு கூட்டு குடும்பம் பிடிக்கறதே இல்லை. நீ என்ன சொல்ல போறியோன்னு தான் யோசிச்சிட்டே வந்தேன்".

"சின்ன பிரச்சனைகள் இருக்க தான் செய்யும், அதையெல்லாம் தாண்டி ஒரு பாதுகாப்பு, அரவணைப்பு இது என் குடும்பம்னு சொல்றதில் ரொம்பவே சந்தோஷம் கூட்டு குடும்பத்தில் தான்னு நான் நம்பறேன்".

"சரியா சொன்ன"

"நிறைய பாட்டு கேட்பேன், ரஹ்மான் பாட்டு ரொம்பவே உயிர், நல்லா வரைவேன், சாப்பாடு நல்லா சமைக்கவும் தெரியும் சாப்பிடவும் தெரியும். வீட்டுக்குள்ளேயே இருப்பது தான் பிடடிக்கும் ரொம்ப வெளியே சுத்த மாட்டேன். கொஞ்சம் பாட்டு, கொஞ்சம் புத்தகம், என் வேலை இதான் நான். என் கதை அவ்ளோ தான், இப்போ நீங்க சொல்லுங்க"

"என் கதை நீளமானது தான். எங்க குடும்பம் பெரிய கூட்டு குடும்பம். என் தாத்தா கோபால கிருஷ்ணன் ஒய்வு பெற்ற கணக்கு வாத்தியார். பாட்டி ஜானகி. இவங்க இரண்டு பேருக்கும் பெண் குழந்தைங்க தான் இஷ்டம் அதுக்கு பல வேண்டுதல் கூட செய்தாங்க, ஆனால் பிறந்தது எல்லாம் ஆண் குழந்தைங்க தான். அதனால எல்லாருக்கும் ஒரு பெண் பெயர் இருக்கிற மாதிரி பெயர் வெச்சு தான் கூப்பிடுவாங்க"

"அட இது வித்யாசமா இருக்கே...மேலே சொல்லுங்க" ஆர்வமானாள் சங்கவி

"அவங்களுக்கு ஆறு பையன், முதலில் என் பெரியப்பா ராதா கிருஷ்ணன் ராதான்னு கூப்பிடுவாங்க, இரண்டாவது பெரியப்பா லட்சுமி நாராயணன் லக்ஷ்மின்னு கூப்பிடுவாங்க, மூணாவது பெரியப்பா மீனாட்சி சுந்தரம் மீனாட்சின்னு கூப்பிடுவாங்க, நாலாவது என் அப்பா உமா மகேஸ்வரன் உமான்னு கூப்பிடுவாங்க,அடுத்து இரண்டு சித்தப்பா இரட்டை பசங்க சீதா ராமன், ஜானகி ராமன்".

"அடடா பெயரிலே வித்தியாசம் காட்டறீங்களே. மேலே சொல்லுங்க"

"எல்லோருக்கும் கல்யாணம் ஆகி இரண்டு பசங்க இருக்கு. இதுல மூணு பெரியப்பா இரண்டு பசங்களுக்கும் கல்யாணம் ஆகி இரண்டு பசங்க உண்டு. அதனால ஒரு சின்ன நிச்சயதார்த்தம்னு சொன்னாலே குறைந்த பட்சம் 100 ஆட்கள் வந்திருவாங்க"

"இவ்ளோ பேரும் ஒரே வீட்டிலையா இருக்கீங்க?"

"ஆமாம். அதுக்கும் ஒரு கதை இருக்கு"

"அது என்ன சொல்லுங்க?".

"இந்த ஆறு பேருக்கும் கல்யாணம் ஆன சமயத்தில் குழந்தை, குட்டியோட எல்லோரும் ஒன்றாக தான் இருந்தாங்க. கூட்டமாக சந்தோஷமாக இருந்தாலும் அப்போ அப்போ சின்ன மனஸ்தாபங்கள் இருக்க தான் செஞ்சுது. அண்ணன், தம்பிக்குள்ள என்னிக்கும் சண்டை வந்ததில்லை எப்பவும் விட்டு கொடுத்து போயிருவாங்க, வந்த மருமகள் எல்லோரும் நல்லவங்களா இருந்தாலும் சில கஷ்டங்கள் அவங்களுக்கு இருந்துச்சு, அவங்க வளர்த்த விதம் அப்படியென்பதால்".

"அப்படி என்ன பிரச்சனைகள்".

"சின்ன சின்ன பிரச்னை தான், யாருக்கு முதலில் குழந்தை பிறக்கும், அவங்களுக்கு என்ன செய்தாங்க, நமக்கு ஏன் செய்யலை. நாம மட்டும் மட்டமா இப்படி. மூணாவது பெரியப்பா மீனாட்சி சுந்தரம் அவர் தான் பாவம் பெரியம்மாவோடு சண்டை போட்டு மாளாது. ஆனாலும் தனி குடித்தனம் கூடவே கூடாதுன்னு உறுதியாக நின்னாரு".

"ஓஹோ".

அதுக்கு தான் இப்போவே சொல்லிடறேன், கூட்டு குடும்பம் மிக மிக சந்தோஷமான ஒன்னு, சின்ன சின்ன மன கசப்பு வரத்தான் செய்யும் அதை தடுக்க முடியாது,அனுசரிச்சு போகணும். இதுக்கு உனக்கு சம்மதமான்னு யோசிச்சு பதில் சொல்லு போதும்".

"புரியுது, உங்க வீடு அடுத்த தலைமுறை ஆட்கள் கல்யாணம் ஆனவங்க எப்படி".

"அவங்க எல்லோருமே நல்ல ஜாலியாக பழக கூடியவங்க தான். நாங்க எல்லோரும் ஒன்னு சேர்ந்தாலே செம கூத்தாக இருக்கும். மூணு பெரியப்பாவிற்கு ஆளுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன், மூணு அக்காவும் கல்யாணம் ஆகி வேற ஊரில் இருக்காங்க.நான் முதல் பையன் எனக்கு ஒரு தம்பி இருக்கான் மருத்துவம் படிச்சிட்டு இருக்கான், அடுத்த இரண்டு சித்தப்பா இரட்டை பசங்கனு சொன்னேன்ல அவங்க இரண்டுபேருக்கும் இரண்டு இரண்டு பெண் இரட்டை பசங்க இப்போ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கறாங்க".

"சூப்பர், வீடே திருவிழா மாதிரி இருக்கும் போலயே".

" ஆமாம் என் தாத்தா தான் விடாப்பிடியாக கூட்டு குடும்பமாக தான் இருக்கணும்னு பல விஷயம் செய்தாரு, இதுவரைக்கும் யாரும் இப்படி செய்து நான் கேள்வி படலை".

"அப்படி என்ன செய்தார்?"

"நாங்க ராஜா அண்ணாமலைபுரத்தில் தாத்தா கட்டின சொந்த வீட்டில் தான் இருந்தோம் அது அந்த காலத்து வீடு 2500 சதுர அடி இருக்கும் இந்த தெருவில் ஆரம்பித்து அடுத்த தெருவில் முடியும். பல பிரச்சனைகள் வரும்போதும், எந்த மகனும் தனி குடித்தனம் போக கூடாதுன்னு பிடிவாதமாக இருந்தார். சில நேரத்தில் தனியாக இருப்பது மேல், அப்போ அப்போ வந்து பார்த்திட்டு போகலாம்னு நிறைய பேர் அறிவுரை சொன்னாங்க, என் தாத்தா ஏத்துக்கவேயில்லை.ஒரு கட்டத்தில் எல்லோரும் பிரிஞ்சு இருப்போம்ன்னே முடிவே செய்துட்டாங்க...."

"ஐயோ,அப்புறம் என்னாச்சு?"

"காலம் மாறியதில் பல வளர்ச்சி வந்தாச்சு இல்லையா அப்படி ஒரு சூப்பர் ஐடியா தோணிச்சு தாத்தாக்கு, எல்லோரையும் ஒரே வீட்டில் இருக்க வைக்க யோசிச்சு, ராஜா அண்ணாமலைபுரம் சொந்த வீட்டை இடிச்சு அதே இடத்தில் ஆறு அபார்ட்மெண்ட் கட்ட முடிவு செய்தார். எல்லோரும் காசு போட்டாங்க அதை கட்டி முடிக்கும் வரை ஒரு வருஷம் எல்லோருமே தனி குடித்தனம் இருந்தாங்க அப்போ அவங்க எல்லோருக்குமே புரிந்தது கூட்டு குடும்பம் எவ்வளவு நல்லதுன்னு"

"கீழே கார் பார்க்கிங் முதல் மாடியில் மூணு வீடு, இரண்டாவது மாடியில் மூணு வீடு ஒவ்வொரு வீடும் 1100 சதுர அடி மூன்று அறையோடு, மூணு பெரியப்பாவும் முதல் மாடியில், நாங்களும் சித்தப்பாவும் இரண்டாவது மாடியில். வெளியிருந்து வர சொந்தங்கள் அவங்க அவங்க வீட்டுக்கு போகலாம். எங்களுக்கு மட்டும் கீழிருந்து மேலயும் அடுத்த வீட்டுக்கும் போகிற மாதிரி வழியும் உண்டு ஒரே வீடு போல. தேவையான அப்போ அந்த கதவை திறந்துபோம். நாங்க சின்ன வயசில் எல்லார் வீடுக்குள்ளேயும் ஓடி எங்க இருக்கோம்னு தேடவைப்போம் ஜாலியாக இருக்கும். தாத்தா,பாட்டிக்கும் கஷ்டம் இல்லை யார் வீட்டில் வேண்டுமானாலும் இருப்பாங்க.  சுருக்கமாக சொல்லனும்னா இது ஒரு அபார்ட்மெண்ட் போல இருக்கும் தனி வீடு 18 BHK வீடு.

"அட இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே".

"இப்போ தனி வீடு மாதிரியும் இருந்துக்கலாம், கூட்டு குடும்பமாகவும் இருந்துக்கலாம். எல்லோரும் ஒரே இடத்தில், சந்தோஷத்திற்கு குறைவே இல்லை"

"சூப்பர் எனக்கு ரொம்பா பிடிச்சிருக்கு. உங்க வீட்டை உடனே பார்க்கணும்னு தோணுது"

"அதுக்கென்ன பார்த்துடலாம். இவ்ளோ தான் என்னை பற்றி. என் குடும்பம் பிடிச்சிருந்தா சொல்லு, என்னோட விருப்பு வெறுப்பு என்னனு சொல்றேன் அப்புறமாக நீ உன் முடிவை சொல்லலாம். எனக்கு ஒரே நிபந்தனை தான், கூட்டு குடும்பத்தை விட்டு பிரிய மாட்டேன். நீ வந்தாலும் உன்னையும் அரவணைப்பாங்க அதுக்கு நான் உத்திரவாதம்".

"சரி நான் யோசிச்சு சொல்றேன், இரண்டு நாளில் வீடியோவில் பெண் பார்க்கும்போது சொல்றேன்".

அவள் கிளப்பி சென்றுவிட்டாள், இரண்டு நாளாக என்ன பதில் வரும் என்று குழப்பத்தில் இருந்தான் வைபவ். அந்த நாளும், நேரமும் வந்தது.

புதிய யுகத்தில், புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில், புதிய மாற்றங்களை கற்றுக்கொள்ள தான் வேண்டியிருக்கு. எத்தனையோ பார்த்தாச்சு இதையும் பார்ப்போம் என்று பேசியபடி இருக்கையில் அமர்ந்தார் அவன் தாத்தா கோபால கிருஷ்ணன்.

இவர்கள் சென்னையிலும், பெண் வீட்டார் பெங்களூரிலும், வைபவ் மற்றும் சங்கவி சிங்கப்பூரில் அவர்கள் இடத்திலும் ஆன்லைன் வந்தனர்.

"நமஸ்காரம் நான் தான் பையனோட தாத்தா கோபால கிருஷ்ணன், இது என் சம்சாரம் ஜானகி. என் மகன் எல்லாத்தையும் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். நாங்க எதிர்பார்க்கிறது, கூட்டு குடும்பமாக இருக்கோம் அப்படியே அனுசரிச்சு போகணும், உங்க மகளுக்கு தேவையான எல்லாத்தையும் செய்து கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு. என் பேரன் வைபவ் ரொம்ப நல்ல பையன்,எங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு நீங்க நல்ல நாள் பார்த்து சொல்லலாம். எங்களுக்கு கூட்டம் ஜாஸ்தி. நெருங்கின கூட்டமே 100 தாண்டிடும். பெரிய கூட்டு குடும்பம் அப்படியே வளர்ந்தாச்சு. ஒருத்தர் இல்லாமல் கல்யாணம் செய்யுறது சரியாக இருக்காது" ஒரே மூச்சில் பேசி முடித்தார் கோபால கிருஷ்ணன்.

"நமஸ்காரம் மாமா, நான் ராஜசேகர் சங்கவியோட அப்பா, எங்களுக்கும் உங்க குடும்பத்தை ரொம்பவே பிடிச்சிருக்கு, உங்க பிள்ளை எல்லாத்தையும் சொன்னார். என் பொண்ணும் சம்மதம்னு சொல்லிட்டாள்.ஒரு பெரிய குடும்பத்தில் என் பொண்ணு போக போறான்னு நினைச்சாலே சந்தோஷமா இருக்கு, அவளுக்கு இப்படி ஒரு குடும்பத்தில் இருக்கணும்னு ரொம்ப நாள் கனவு. அது இப்போ நிறைவேறிடும். இன்னும் ஒன்னு அல்லது இரண்டு கல்யாணத்தை சிறப்பாக செய்து கொடுப்போம்".

இனி வைபவ் மற்றும் சங்கவியின் திருமணம் கோலாகலமாக நடக்க ஏற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டியது தான்.புதிய மணமகளை வரவேற்க வைபவ் குடும்பம் தயாராகி விட்டது.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama