STORYMIRROR

arvind narayanan

Drama

4.7  

arvind narayanan

Drama

துயில்

துயில்

5 mins
14

துயில்

காலை 11 மணி விக்ரம் நன்றாக தூங்கி கொண்டிருந்தான், அவனுக்கு இரவு தான் வேலை, காலை முழுவதும் தூக்கம், இரவு பணி செய்வதாலேயே அவனுக்கு உடல் பருமன், மன அழுத்தம் அதனால் சிறு சிறு நோய் உபாதைகள் அவ்வபோது வந்து வந்து போகும்.

காலையில் வீட்டில் இருந்தாலும் பெற்றோர்களை பார்க்க முடியாத நிலைமை. திருமணம் தள்ளி கொண்டே போகிறது என்ற மன அழுத்தம் தான் பெரியது, அதிலும் இரவு நேர பணி செய்வதாலேயே பெண் கிடைக்காமல் இருப்பது கூடுதல் மனஅழுத்தம். காலை நேரத்தில் வேலைக்கு சேர பல இடங்களில் விண்ணப்பித்து பார்த்தும் பயனில்லை.வீட்டில் மூன்று பேர் தான் ஆனாலும் ஒவ்வொருவரும் தனி தனியாக இருப்பார்கள்.

ஒரு பிரபல மருத்துவமனையில், டாக்டர் சம்பத் அவர்களை கண்டு ஆலோசிக்க காத்திருந்தனர் விக்னேஸ்வரனும், ராதாவும் (விக்ரமின் பெற்றோர்கள்). விக்னேஸ்வர் உட்கார்ந்து கொண்டே தூங்கி கொண்டிருந்தார்.

அவர்களுக்கான நேரம் வந்தது, உள்ளே சென்றனர்.

"உட்காருங்க, சொல்லுங்க யாருக்கு check பண்ணனும்" என்று டாக்டர் சம்பத் கேட்க.

"இரண்டுபேருக்குமே check பண்ணனும்" ராதா ஆரம்பித்தாள்.

"என்ன விஷயம் சொல்லுங்க?"

"இவர் என் வீட்டுக்காரர் விக்னேஸ்வரன்,சமீப காலமா எங்க போனாலும் உடனே உடனே தூக்கம் வருது தூங்கிடறார், இதனால வேலைல மற்ற இடம் எங்கேயும் போக முடியலை. அது எதனால இப்படி ஆகுது பார்க்கணும்".

ராதா சொல்லிமுடிப்பதற்குள் கண்ணை மூடி ஒரு குட்டி தூக்கம் போட்டிருந்தார் விக்னேஸ்வரன்.

சம்பத் (அவரை எழுப்பி)  "சார் நீங்க இங்க வந்து உட்காருங்க. எவ்ளோ நாளா இந்த மாதிரி தூக்கம் வருவது?"

"நாலு மாசமா அதிகமா இருக்கு. என் வீடு ஆவடில இருக்கு, என் பேக்டரி மறை மலை நகர், 43 கிலோமீட்டர் தள்ளி. தினமும் காலங்காத்தால ரயில்ல தான் போவேன். ரயில் ஏறின உடனே தூங்கிடுவேன், வேலை பார்த்துட்டு மதியம் ஒரு மணி நேரம் தூங்கிடுவேன், திரும்ப ரயில்ல வரும்போது தூங்கிடுவேன், இப்படியே போயிட்டு இருந்த எனக்கு இப்போதெல்லாம் கொஞ்சம் அசதியான போதும் உடனே தூங்கிடுவேன்".

"எவ்ளோ நாளா இந்த மாதிரி ரயில் பிரயாணம் பண்றீங்க, உங்க வேலை எந்த மாதிரி?"

"25 வருஷமா இப்படி தான் போயிட்டு வரேன், மெஷினரி பேக்டரி, பொருள் வந்துட்டே இருக்கும் அதை நிரவல் (Installation) பண்றது என் வேலை. கண்ணும், மூளையும் தெளிவா இருக்கணும் கொஞ்சம் தப்பினாலும் பொருள் உடையவோ, அல்லது ஆட்களுக்கு சேதம் ஆகவோ வாய்ப்பு இருக்கு. அங்கே ஜாக்கிரதையா இருந்து இருந்து வெளிய வந்தா உடனே தூக்கம் வந்திரும். சமீப காலம் பாக்டரிலயும் தூக்கம் வர, என்னோட இந்த நோயால பொருள் சேதம் ஆகி வேலையை விட்டு அனுப்பிட்டாங்க".

"வேலையை விட்டு ஒரு வாரம் ஆச்சு, வீட்ல இருக்கும் போது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்கறார், ஆனாலும் தூக்கம் வந்துட்டே இருக்கு டாக்டர்" என்று ராதா தொடர்ந்தாள்.

"ஒரு சில பரிசோதனை பண்ணனும், எழுதி தரேன் பண்ணிட்டு வாங்க. உங்களுக்கும் பார்க்கணும் சொன்னேங்களே?"

"ஆமாம், இவருக்கு இந்த மாதிரி பிரச்சனை எனக்கு அப்படியே எதிர் மறையா இருக்கு. தூக்கமே வர மாட்டேங்குது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் தூங்கினால் ஜாஸ்தி".

"நீங்க தான் இப்போ ஜாக்கிரதையா இருக்கணும். கண்டிப்பா 8 மணி நேரம் தூங்கணும், குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்கணும் இல்லைனா இருதய கோளாறு வர வாய்ப்பு அதிகம். அதிகமா கவலை படறீங்க நினைக்கறேன்!"

"இவரை பார்க்கவே நேரம் இருக்காது, எங்கே எப்படி தூங்கிட்டு எதிலாவது மாட்டிப்பாரோன்னு ஒரே கவலை, அதுனாலயே தூக்கம் வராது, அடிக்கடி கை கால் நடுக்கம் வரும், எங்களுக்கு ஒரு மகன் இருக்கான் அவனுக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கோம் அது அமையலைன்னு கவலை. அவனுக்கு ராத்திரி தான் ஆபீஸ், காலைல பூரா அப்பாவும் பையனும் தூங்கிட்டு இருப்பாங்க. தூக்கத்தினால எங்க வாழ்க்கையே போர்களமா இருக்கு".

"உங்களுக்கான மருந்து எழுதி தரேன், சில பரிசோதனை பண்ணவும் தரேன், ஒரு வாரம் கழித்து வந்து பாருங்க".

டாக்டர் சொன்ன அனைத்து பரிசோதனையும் எடுத்தார்கள்.

டாக்டர் கொடுத்த மாத்திரையினால் சில மணி நேரம் ராதாவால்  தூங்க முடிந்தது.

ஒரு வாரம் கழித்து....

சம்பத் அவர்களின் பரிசோதனை தகவலை பார்த்துவிட்டு,"நீங்க இரண்டு பேரும் நான் சொல்றதை கவனமா கேளுங்க. பயப்படும்படி ஏதும் இல்லை தான், ஆனாலும் ஜாக்கிரதையா இருக்கணும்".

"சார் உங்களுக்கு அடிக்கடி தூக்கம் வர்றதுக்கு  காரணம் கண்களுக்கும், மூளைக்கும் அதிகமா வேலை கொடுத்திருக்கீங்க அது வயசு ஆக ஆக உடல் அசதியும் சேர்ந்துக்குது, தினமும் ரொம்ப தூரம் பிரயாணம் பண்றதும் ஒரு காரணம். இது Narcolepsy அப்படின்னு சொல்லுவாங்க நரம்பியல் கோளாறு, இதை மாத்திரையிலேயே குணப்படுத்திடலாம். ஒரு மாசத்திலேயே மாற்றம் தெரிஞ்சாலும், குறைஞ்சது ஒரு வருஷமாவது மருந்து எடுத்துக்கணும். மாத்திரை எழுதி தரேன்".

"அம்மா உங்களுக்கு அதிக மன அழுத்தம் இருக்கு BP அதிகமா இருக்கு, இதெல்லாம் இருந்தா தூக்கம் சரியாய் வராது, கவலை படறதை நிறுத்துங்க, எல்லாம் ஒரு நாள் சரி ஆகும்னு நம்புங்க. உங்களுக்கு இருக்கும் நோய் பேரு insomania அப்படின்னு சொல்லுவாங்க, ஆரம்ப நிலைல தான் இருக்கு அதனால குணப்படுத்திடலாம். மருந்து எழுதி தரேன்".

வீட்டிற்கு வந்து அவர்கள் இருவரும் டாக்டர் கூறியதை மகனிடம் கூறி புலம்பினர். விக்ரம் யோசிக்க ஆரம்பித்தான் இப்படியே போனால் தூக்க வியாதியால் குடும்பமே பாழாய் போகும், உடனடியாக காலை நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

அவன் கம்பெனியிலேயே காலை நேரத்தில் வேலை செய்ய விண்ணப்பித்திருந்தான் அவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை, ஒரு வழியாக ஒரு மாதத்தில் காலை நேர பணிக்கு மாற்றினார்கள், பல வருடங்களாக இரவு நேரத்தில் வேலை பார்த்ததால் காலை நேரத்தில் மூளை வேலை செய்வேனா என்றது. இதற்காகவே தினமும் உடற்பயிற்சி செய்து மூன்று மாத போராட்டத்திற்கு பிறகு உடம்பும், மூளையும் அவன் சொன்னதை கேட்க ஆரம்பித்தது. இப்போது இரவு நேரத்தில் நன்றாக துயில் கொண்டான்.

மருத்துவ பரிசோதனை பிறகு விக்னேசவரன் மற்றும் ராதா உடல் நிலையிலும் சற்று மாற்றம் தெரிந்தது, ராதா இப்போது ஒரு நாளுக்கு 5 மணி நேரம் தூங்கலானாள், விக்னேஸ்வரன் ஒரு நாளுக்கு 11 மணி நேரம் தூங்கலானார். அம்மாக்கு தூக்கத்தில் ஏற்றமும், அப்பாக்கு தூக்கத்தில் இறக்கமும் இருந்தது சற்று ஆறுதல் ஆனான் விக்ரம். அவர்கள் நிம்மதியாக தூங்கினால் போதும் அதற்காக என்ன செய்தாலும் சரி என்று எண்ணினான்.

மீண்டும் விக்ரமிற்கு பெண் பார்க்க தொடங்கினர், ஒரு வரன் வந்தது, பெண் போட்டோ மட்டும் கொடுத்துவிட்டு நேராக வந்து பாருங்கள் விவரம் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். வந்த வாய்ப்பை விட கூடாது என்று இவர்களும் கிளம்பி போனார்கள்.

பெண் பார்த்துவிட்டு தனியாக பேச வேண்டும் என்று விக்ரம் கேட்டதுக்கு இறங்க, தனியாக பேச அனுமதித்தனர்.

"உங்க பேரு ஜானு மட்டும் தான் சொன்னாங்க வேற தகவல் எதுமே சொல்லலை, நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" விக்ரம் ஆவலுடன் பதிலை எதிர்பார்த்தான்.

"நான் BCA படிச்சிருக்கேன்".

"எங்க வேலை பார்க்கறீங்க?" மீண்டும் விக்ரம் கேட்க.

"உங்களுக்கு கல்யாணம் அப்புறம் வேலைக்கு போகணுமா வேணாமா?"

"கண்டிப்பா போனா நல்லது, ஒருத்தர் சம்பாத்தியம் பத்தாது, வயசான அம்மா அப்பா இருக்காங்க".

"சரி"

"எங்க வேலை பாக்கறீங்க கேட்டேன்".

" நான் சம்பாதிக்கறது 25000 தான் அதுல பாதி எங்க அப்பாக்கு கொடுப்பேன். உங்களுக்கு சம்மதமா?"

விக்ரம் சற்று யோசித்துவிட்டு,"அது ஒன்னும் பிரச்சனை இல்லை".

"எந்த மாதிரி வேலை பார்த்தாலும் உங்களுக்கு சரியா??"

விக்ரம் சற்று குழப்பமாகி"ஏன் இப்படி கேட்கறீங்க?"

"சொல்லுங்க உங்களுக்கு எந்த வேலைனாலும் பரவாயில்லையா?"

விக்ரம் ஏதோ புதிராவே இருக்கே,"கௌரவமான வேலை எதுவானாலும் சரி தான்".

ஜானு சற்று முறைத்துவிட்டு,"வேலை நல்ல வேலை தான்".

"என்ன வேலைன்னு தான் சொல்லுங்களேன் நானும் கேட்டுட்டே இருக்கேன்" கடுப்பானான் விக்ரம்.

"சொன்ன அப்புறம் என்னை வேண்டாம் சொல்ல மாடீங்களே".

"போச்சு டா!! நீங்க முதல்ல என்ன வேலை சொல்லுங்க".

"நான் ஒரு சிங்கப்பூர் மெத்தை கம்பெனில வேலை பார்க்கிறேன்.மெத்தை, தலைகாணி இறக்குமதி பண்ற கம்பெனி".

"இவ்ளோ தானா இதுக்கு ஏன் இவ்ளோ build up!"

"நான் இன்னும் முடிக்கல. ஆபீஸ் போயிட்டு ஒவ்வொரு மெத்தை சிங்கப்பூரிலிருந்து வரும் அதுல படுத்து தூங்கினா சுகமா,ஆறுதலா  இருக்கா நல்லா தூக்கம் வருதா இல்லையா இதை சரி பார்க்கணும். ஆபீஸ் போயிட்டு தூங்கிட்டு வரணும் இதான் வேலை.இப்போ சொல்லுங்க உங்களுக்கு சம்மதமா? இதுக்கு முன்னாடி பெண் பார்க்க வந்திட்டு ஒரு நாலு பேரு இதை சொன்னவுடனே ஓடிட்டாங்க!!"

"அடடா இப்படி ஒரு வேலை இருக்கா!! இவ்ளோ நாள் தெரியாம போச்சே!! எனக்கு double ஓகே".

"உங்களுக்கு ஓகே வா, அப்போ எனக்கும் ஓகே. ஒரு வருஷமா தான் இந்த கம்பெனி இந்தியால இருக்கு, நாலு பொண்ணுங்க வேலை பார்க்கிறோம். தூங்கணும், அந்த மெத்தை வசதியா இருக்கா இல்லையானு ரிப்போர்ட் கொடுக்கணும், கஸ்டமர் வந்தா அவங்களுக்கு அதை பற்றி சொல்லி புரிய வைக்கணும், விற்க உதவி செய்யணும், இப்போ வயசானவங்களை பகுதி நேரமா வேலைக்கு சேர்க்க கூட ஆள் தேடறாங்க".

விக்ரம் இப்போது பெரு மூச்சு விட்டான். அப்பாடா இனி கவலையில்லை நிம்மதியா தூங்கலாம் என்று நினைத்தான் விக்ரம்!!.   


Rate this content
Log in

Similar tamil story from Drama