STORYMIRROR

arvind narayanan

Drama

4.5  

arvind narayanan

Drama

பரிசல் பயணம்

பரிசல் பயணம்

7 mins
19

பரிசல் பயணம்


இரவு பதினோரு மணி இரவு சாப்பாட்டை வெகு தாமதமாக முடித்துக்கொண்டு அந்த வேன் உற்சாகமாக கிளம்பியது எட்டு பேர் கொண்ட குழுவுடன் கோயம்பத்தூரிலிருந்து.

ஒரே ஆட்டம், பாட்டம் என்று ஒரே ரகளை. அனைவருமே 25 முதல் 30 வயது உள்ளவர்களே. அவர்களில் நிர்மல் தான் அந்த கூட்டத்தின் தலைவன். அவன் ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி கம்பெனி வைத்திருக்கிறான் அவன் தான் முதலாளி.

கம்பெனி வேலை விஷயமாக அவர்கள் ஓசூர் வரை செல்ல வேண்டும் அவனுக்கு கீழ் வேலை செய்பவர்கள் அனைவரும் அவன் நண்பர்களே, எல்லோரும் சேர்ந்து கிளம்பியிருக்கின்றனர். அதில் புதிதாக சேர்ந்தது அகல்யா. நிர்மலையும்,அகல்யாவையும் கேலி செய்தபடி வந்தனர் அவர்கள் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் ஆனது, இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம். அதற்கு முன்பே அவளை கம்பெனியில் சேர்த்து கொண்டான்.

எல்லோரும் சிறிது நேரம் பேசிக்கொண்டே செல்ல, பின்பு அசதியாகி உறங்கிவிட்டனர். நிர்மலும், அகல்யாவும் சிறிது நேரம் அவரவர் மேல் சாய்ந்து கொண்டு பேசியபடியே உறங்கினர். அகல்யா உறங்கிய பிறகு நிர்மலும் அவனது நண்பனும் சிறிது நேரம் மாறி மாறி முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுனரோடு பேச்சு கொடுத்தபடி வந்து கொண்டிருந்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை அதிகாலை 5.30 மணி இருக்கும், வேன்  ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது,

அகல்யாவின் தோழி ராதிகா அவளை எழுப்ப, மிகுந்த சோம்பலுடன் எழுந்தாள் அகல்யா.

“இங்கே கழிப்பறை போகவும், டீ, காபி சாப்பிட நிறுத்தியிருக்காங்க வா என்றாள் தோழி ராதிகா.

அகல்யா வண்டியை விட்டு கீழே இறங்கினாள், அந்த இடம் நல்ல பனி மூட்டமாக இருந்தது, ஏதோ மலை அடிவாரம் கீழயே நின்றது போல இருந்தது. அங்கே அருகில் உள்ள கட்டண கழிப்பிடம் சென்று வந்தவள். அவள் வெளியே வர சுட சுட காபி தயாராக வைத்திருந்தான் நிர்மல்.

அந்த பனி காற்றுக்கு சூடான காபி, டீ இதமாக இருந்தது மற்றும் வடை வேறு கிடைக்க எல்லோரும் சாப்பிட்டனர். மற்ற நண்பர்கள் எங்கோ சென்று வந்தபடி இருந்தனர்.

என்னாச்சு எங்க போயிட்டு வராங்க??” என்று கேள்வி கேட்டபடியே வந்தாள் அகல்யா.

“அதோ அங்கே பேசிட்டு இருக்காங்க. இது என்ன இடம் தெரியுமா?” என்று குதூகலமாய் கேட்டான் நிர்மல்.

“என்ன இடம்?” என்று தெரியாதவரே அவள் கேட்க.

“இது ஒக்கனேக்கல், இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தாண்டினால் பெரிய நீர் வீழ்ச்சி இருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டோம் இங்கிருந்து பரிசல் சவாரி செய்யலாம்னு இருக்கோம். அங்கே பரிசல் ஆளு கூட பேசிட்டு இருக்காங்க. இரண்டு பரிசல் சொல்லியாச்சு. ரொம்ப ஜாலியாக இருக்கும் வா போகலாம்” என்று அகல்யா கையை பிடித்துக்கொண்டு அழைத்து செல்ல தயாரானான் நிர்மல்.

அகல்யா முகமே மாறியது....

“இது ஒக்கனேக்கல் ஊரா???!!. ஐயோ நான் வர மாட்டேன் என்னை விடுங்க. நீயும் போகாதே, எனக்கு இந்த ஆறு, நீர் வீழ்ச்சி இதெல்லாம் ரொம்ப பயம். என்னால வரவே முடியாது” என்று அவன் இழுத்த இழுப்புக்குவாராமல் அங்கே நின்றாள் அகல்யா.

அவள் நண்பர்களும் அவளை எப்படியாவது வர வைக்க என்னென்னவோ பேசி பார்த்தார்கள், அகல்யா மிக கோவமாக, எரிச்சலாக எல்லோரிடமும் பதிலளித்தாள். இதை பார்த்த நிர்மலுக்கு ஒன்றுமே புரியவில்லை, “என்ன ஆச்சு எதுக்கு இவ்ளோ பிடிவாதமாக இருக்காள்” என்று யோசித்தபடியே.....

“அதெல்லாம் கிடையாது, நீ இப்போ என் கூட வந்தே ஆகணும். உன்னை அப்படியே தூக்கிட்டு போயாவது நான் பரிசலில் உட்காரவைப்பேன்” என்று சொன்னபடியே அவளை குண்டு கட்டாக தூக்கி செல்ல... அவன் நண்பர்கள் எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.

பரிசலில் உட்கார வைத்தது தான் தாமதம் அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பித்தது.

அதை பார்த்த அந்த பரிசல் ஒட்டி ஒரு இளைஞன், அவன் பெயர் ஈஸ்வரன் அவளை பார்த்தபடியே...

“அக்கா கவலைப்படாதீங்க, பயப்படாமல் இருங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது நான் கூட்டிட்டு போயிட்டு வரேன்”.

அவன் சொல்வதையும் பொருட்படுத்தாமல் அவள் மடக்கென்று பரிசலிலிருந்து இறங்கி கரையை அடைந்து வந்து அமர்ந்திட்டாள். இதை பார்த்த நிர்மல் மிகவும் கோவமாவான்.

“சரி நீங்க போங்க நான் பேசி அடுத்த பரிசலில் வர வைக்கிறேன்” என்று நண்பர்களை மட்டும் அனுப்பினான்.

நிர்மல் கரைக்கு வந்ததும் அவளிடம் பேச நினைத்தால் அவள் முகத்தை திருப்பி கொண்டாள், அவளை தொட நினைத்தால் தட்டி விட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று.

அவள் அலைபேசி வேனில் அழைப்பு மணி அடிக்க, அதை டிரைவர் எடுத்து கொண்டு வந்தான், அகல்யா அப்பா ஆதி கேசவன் தான் அழைத்தது. நிர்மல் எடுத்து பேசினான்.

“ஹலோ சொல்லுங்க மாமா?”

“என்ன மாப்பிள்ளை ஓசூர் நல்லபடியா போயாச்சா?”

“இல்லை இப்போ டீ சாப்பிட ஒக்கனேக்கல் நீர் வீழ்ச்சி பக்கம் வண்டி நிறுத்தியிருக்கோம்.ராத்திரி சாப்பிட்டு கிளம்ப நேரம் ஆகிருச்சு, இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் ஓசூர் போக

“என்னது ஒக்கனேக்கலா?” என்று அவரும் அதிர்ச்சி கல்வி எழுப்பினார்.

ஏன்?” அதுக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி.

“ஒன்னும் இல்லை, அங்கே பரிசல் ஏதும் போக வேணாம். ஊருக்கு போயிட்டு சொல்லுங்க” என்று சுருக்கமாக பேசினார்.

நிர்மல் குழப்பமாக, “ஏன் பரிசல் உங்களுக்கும் பயமா??”

“எனக்கும் பயமா?? அப்போ அகல்யாவை பரிசலில் போக கேடீங்களா?” என்றார் அவர்.

“ஆமாம் கேட்டேன், அதுக்கு தான் முகத்தை திருப்பிக்கிட்டு, அழுதுகிட்டு இருக்கா, என்னாச்சுனே புரியலை. நீங்களாவது சொல்லுங்க என்னதான் பிரச்சனை. இப்படியா இதுக்கெல்லாமா  பயந்து சாவுறது?”

(சிறிது நேரம் மௌனம்)

“காரணம் இருக்கு மாப்பிள்ளை. உங்களுக்கு நாங்க என் மகனை பற்றி  சொன்னோம் இல்லையா!! அவனுக்கு எட்டு வயசு இருக்கும்போது இறந்துட்டான்னு”.

“ஆமாம் சொன்னது ஞாபகம் இருக்கு”.

“அவன் இறந்தது அங்கே தான். அப்போ நாங்க இருந்தது திண்டுக்கல், சுற்றுலா போகலாம்னு போனோம். அகல்யாக்கு 11 வயசு, என் மகன் அசோக் 8 வயசு. அது நல்ல ஆழமான நீர் வீழ்ச்சி. நாங்க பரிசல் சவாரி போனோம், கொஞ்சம் தூரத்துக்கு எல்லோரும் சந்தோஷமாக தான் போனோம்….”அவர் குரல் தழு தழுக்க ஆரம்பித்தது.

“திடீர்னு ஆற்றில் தண்ணி வேகம் கூடிருச்சு, பரிசல் ரொம்ப சுத்த ஆரம்பிச்சிருச்சு, நாங்க நீர் வீழ்ச்சிக்கு கொஞ்சம் பக்கத்தில் தான் இருந்தோம். பரிசல் ஒட்டி சமாளிக்க முடியாமல் திருப்ப அது நீர் வீழ்ச்சி கீழே போனதும் பரிசல் மொத்தமாக கவிழ்ந்து எல்லோருமே தண்ணிக்கு அடியில் போக ஆரம்பிச்சோம்”.

“பக்கத்தில் நிறைய ஆட்கள் பரிசலில் வர உடனே குதிச்சு காப்பதினாங்க அந்த நாள் மறக்கவே முடியாது குடும்பத்தோடு எல்லோருமே போய் சேர்ந்திருப்போம், ஆனால் என் மகன் மட்டும் கிடைக்கவேயில்லை. நாலு நாளாக அங்கேயே இருந்து தேடி பார்த்தோம் எங்கேயுமே இல்லை. சடலம் கூட கிடைக்கலை, அந்த பரிசல் ஒட்டியின் சடலமும் கிடைக்கலை” துன்று வருத்தமாக கூறினார் ஆதி கேசவன்.

“விதி  எங்கள் வாழ்க்கையில் மோசமாக விளையாடிருச்சு, புத்திர சோகம் எவ்வளவு பெரிய சோகம்னு உங்களுக்கு சொன்னால் புரியாது” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

“அந்த நாளுக்கு பிறகு அகல்யா மிகவும் மனரீதியாக பாதிப்பு அடைந்தாள், அவளை மறுபடியும் சகஜ நிலைமைக்கு கொண்டு வர எங்களுக்கு 5 வருஷம் ஆச்சு. பல மனநல மருத்துவரை பார்த்து சரி செய்தோம்.

இதை நான் முன்னாடியே உங்களுக்கு சொல்லியிருக்கணும், என் தப்பு தான். அவளுக்கு அதுக்கு பிறகு எந்த குறையும் இல்லை. தயவு செய்து அதையெல்லாம் ஞாபக படுத்தாதீங்க. ஊருக்கு போயிட்டு சொல்லுங்க” என்று முடித்துக்கொண்டார்.

அகல்யா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று இப்போது அவனுக்கு புரிந்தது, அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் அப்பா சொன்னதை சொன்னதும் அவள் அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

“அகல்யா போதும் அழறதை நிறுத்து. இது எல்லோருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும் அதுல உனக்கு இப்படி அவ்ளோ தான். எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன், எனக்கு சின்ன வயசில் ஊசி போட்டுகிறதுன்னா அவ்ளோ பயம், டாக்டர் பார்த்தாலே தெறிச்சு ஓடுவேன். ஒரு முறை ஒரு டாக்டர் எனக்கு சொல்லி கொடுத்தது தான், இதை பார்த்து பயந்து ஓடாதே அப்புறம் காலம் பூரா இந்த பயம் உன்னை துரத்திக்கிட்டே இருக்கும், ஒரு கட்டத்தில் இதை எதிர்த்து நின்னு தாண்டி வந்திடனும், அப்போ தான் தைரியம் வரும்னு சொல்லி பேசிக்கிட்டே எனக்கு ஊசியை போட்டுட்டார். அன்னிக்கு எனக்கு வலிக்கவேயில்லை, ஒரு சம்பவத்தை நினைச்சு இது இப்படி தான் இருக்கும்னு நாமளே ஒரு  தீர்மானம் செய்துகிறது நல்லதே கிடையாது. முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்னு சொல்லுவாங்க, அன்னிக்கு அப்படி ஒரு விஷயம் எனக்கு நடக்கலைன்னா நான் இன்னிக்கு வரை ஊசிக்கு பயந்தவனாக தான் இருந்திருப்பேன். உன் தம்பி இழப்பு பெரிய இழப்பு தான் மறுக்க முடியாது, காலம் அதை சரி செய்திடும் 15 வருஷம் ஆச்சு அவன் மறைந்து, அதுக்காக இயற்கையின் அற்புதமான விஷயங்களை நீ ஏன் ஏற்க மறுக்கணும்?. அப்புறம் இப்போ பாதுகாப்பு கவசம் எல்லாம் வந்திருச்சு.மறுபடியும் சொல்றேன் முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் இப்போ நீ என் கூட பரிசல் பயணம் வர. நான் இருக்கேன் உனக்காக உனக்கு ஏதும் ஆகாது. இந்த பயத்தை நீ போக்கியே ஆகணும்” என்று நிர்மல் கூறியபடி அவளை எழுப்பினான்..    

இவர்கள் பேசி முடிக்க அவர்கள் நண்பர்கள் பரிசல் படகில் வந்திறங்கினர். ரொம்ப அருமையாக இருந்தது என்று கூச்சலிட்டபடி. நிர்மல் சொன்னதற்காக அகல்யா பரிசல் சவாரி செய்ய தலையசைத்தாள்.

மீண்டும் அதே இரண்டு பரிசலில் ஏறினர், இப்போது நிர்மல், அகல்யா, ராதிகா மற்றும் ஒருவர் ஒரு பரிசலில் மற்ற நான்கு நண்பர்கள் இன்னொரு பரிசலில்.பரிசல் பயணம் மிக நன்றாக செல்ல துவங்கியது, அகல்யா நிர்மலை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வந்தாள், மெல்ல நீர் வீழ்ச்சி அருகில் சென்று அந்த குளிர்ந்த நீரில் நனைந்து உற்சாகமானாள்.

சில மணி நேரம் ஆட்டம் போட்ட பின்னர் கிளம்பும்வேளையில் பரிசல் சுற்றி சுற்றி வந்ததில் ராதிகாவுக்கு மயக்கம் வர அவள் அப்படியே சாய நிலை தடுமாறி அவள் மட்டும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டாள். அதை பார்த்த அகல்யா கத்த தொடங்கிவிட்டாள்.

பரிசல் ஒட்டி ஈஸ்வரன், நிர்மலிடம் துடுப்பை கொடுத்துவிட்டு  தண்ணீருக்குள் குதித்தான், எல்லோரும் பதட்டமான நிலையில், இன்னொரு பரிசல் ஒட்டி கிரி இரண்டு பரிசலையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

“கவலைப்படாதீங்க ஈஸ்வரன் நல்ல நீச்சல் தெரிஞ்சவன் எப்படியும் காப்பாத்திருவான், கொஞ்சம் பொறுங்க” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.

அகல்யா நிர்மலை கண்டபடி திட்டி கொண்டிருந்தாள், நிர்மலுக்கோ இன்னும் அதிகமாக கவலை, எதுவும் கெட்டது நடக்ககூடாதென்று.

ஈஸ்வரன் உள் நீச்சல் அடித்து ராதிகாவை தூக்கி கொண்டு கரைக்கு வந்தான், தண்ணீர் அதிகம் விழுங்கியதால் அவள் மயக்கமாக இருந்தாள்.அவளுக்கு முதலுதவி செய்ய ஈஸ்வரனின் அப்பா முத்தையாவும் வந்து சேர்ந்தார். அவர் முதலுதவி செய்ததில் ராதிகா மெல்ல கண் திறந்தாள். இப்போது தான் அனைவருக்கும் உயிர் வந்தது.

“சாதாரண மயக்கம் தான், கவலை பட வேணாம். தண்ணிக்குள்ள போனதும் எல்லோருக்கும் பயம் வந்திடும், மூச்சு பிடிக்க தெரியாது, தண்ணீர் உள்ள போனவுடனே மயக்கம் ஆகிருவாங்க. சில மணி நேரத்திற்குள் காப்பாத்திட முடியும், அதை தாண்டினால் தான் உயிர் பிழைப்பது கஷ்டம். நாங்க நிறைய பார்த்துட்டோம் சார், இங்கே  மேலிருந்து கீழு குதிச்சு நீச்சல் அடிக்கிற பசங்க தான் நிறைய சாவாங்க, இங்கே கீழே எல்லாம் பாறை, மேலிருந்து பார்க்கும்போது தண்ணி மட்டும் தான் தெரியும். பல இடத்தில் பாறை சந்து கூட இருக்கு. சிலரின் உடல் அங்கே போயி சொருகிக்கும், மாச கணக்கில் தேடினாலும் கிடைக்காது. இதை நாங்க அடிக்கடி பார்ப்பதினால் நல்லா தெரியும். இதோ இருக்கானே ஈஸ்வரன் என் பிள்ளை மாதிரி, சின்ன வயசில் இவனும் இந்த மாதிரி தண்ணியில் விழுந்தவன் தான் அடியில் ஒரு பாறைக்கு நடுவில் சிக்கிட்டு இருந்தான், நான் தான் தூக்கிட்டு வந்து வைத்தியம் பார்த்தேன், உயிர் இருக்கு  ஆனால் பழைய நினைவுகள் எல்லாம் மறந்திருச்சுன்னு சொல்லிட்டாங்க டாக்டர். பாவம் யார் பெத்த புள்ளயோ, என் பிள்ளையை  ஈஸ்வரன் தான் பிழைக்க வெச்சான்னு இவனையும் என் மகன் போல வளர்க்க ஆரம்பிச்சேன். இங்கே  யாருக்கு ஆபத்துனாலும்  இவன் காப்பாத்திருவான் அந்த அளவு அனுபவம் இருக்கு” என்று ஈஸ்வரனை பற்றி பெருமை பேசினார் முத்தையா.

இதை கேட்டதும் அகல்யாவிற்கு அவள் தம்பி ஞாபகம் வர அவள் தேம்பி தேம்பி அழ தொடங்கி விட்டாள்.

“என்னாச்சு சார் எதுக்கு அழறாங்க? என்று கேட்க.

“அவங்க தம்பியும் இங்கே தான் இறந்தார், 15 வருஷம் ஆச்சு நீங்க சொன்னதும் அவளுக்கு அவள் தம்பி ஞாபகம் வந்திருச்சு” என்றான் நிர்மல்.

“15 வருஷமா? ஈஸ்வரன் என்கிட்ட வந்தும் 15 வருஷம் தான் இருக்கும். உங்க தம்பி அடையாளம் ஏதாவது தெரியுமா. என் கிட்ட இவனை பார்த்தபோது என்ன ஆடை போட்டிருந்தானோ அதை மட்டும் பத்திரமாக எடுத்து வெச்சிருக்கேன்” என்று அதை எடுத்து வர கிளம்பினார்.

“என் தம்பிக்கு வலது கால் பின் பகுதியில் தையல் போட்டிருப்பாங்க சின்ன வயசில் சைக்கிள் ஓட்டும்போது காலை விட்டு அடிபட்டது. முதுகு பக்கம் நான் கூரான பென்சிலில் பெருசா கீறியது அவனுக்கு பெரிய தழும்பாகவே இருந்தது” என்றாள் அகல்யா.  

ஈஸ்வரன் காலை பார்க்க, சிறு தழும்பு மட்டும் தெரிந்தது, முதுகில் அந்த தழும்பும் இருந்தது, முத்தையா ஓடி சென்று அந்த ஆடையை எடுத்து வர அதை பார்த்ததும் அகல்யா முகத்தில் கண்ணீருடன் கூடிய மகிழ்ச்சி, அவள் தங்களது ஆல்பம் ஒன்றிலிருந்து அந்த நாள் அவர்கள் எடுத்த புகைப்படத்தை அலைபேசியில் எடுத்து வைத்திருந்தாள். இரண்டும் ஒரே ஆடை.

ஈஸ்வரனுக்கு அங்கே என்ன நடக்கிறதென்றே புரியவில்லை, அகல்யா அவனை கட்டி கொண்டு அழுதாள், அப்பா, அம்மாவை அழைத்து விஷயத்தை சொன்னாள், அவர்களுக்கோ பெரும் நெகிழ்ச்சி, வீடியோ கால் செய்து அவனை பார்த்து பேசி, முத்தையாவிடம் பேசினர். இவ்வளவு பெரிய உதவி செய்த முத்தையாவை நன்றியோடு பார்த்தனர். உடனே வண்டி எடுத்து வருவதாய் கூறினர்.

அகல்யா நிர்மலை பார்த்து முள்ளை முள்ளால் எடுப்பது சரி தான் நான் மட்டும் வரலைன்னு சொல்லியிருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே இருக்காது, தன் தம்பி மீண்டும் கிடைக்க காரணமாய் இருந்த நிர்மலை கட்டி கொண்டு ஆனந்தமானாள் அகல்யா. 


Rate this content
Log in

Similar tamil story from Drama