நதியில்லா நாகரீகம் - பகுதி 1
நதியில்லா நாகரீகம் - பகுதி 1
சீமைக்கருவேல மரங்கள் சீரோடு, இடை நெளிந்த பெண் போல ஓய்யாரமாய் நிற்கும் , கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு சிறிய பகுதியாய் அதாவது கரடு என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள் , அக்கரட்டின் அடிப்பகுதியின் நீட்சியில் அமைந்துள்ள ஒரு வறண்ட நிலப்பரப்பு. சிறு சிறு ஊற்றுகளைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லாத ,மனிதர்கள் நீடித்து வாழத் தகுதி இல்லாத இடம். இத்தகைய நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னாள் பஞ்சம் பிழைக்க வந்த மக்களின் கதை. இவர்கள் எவ்வாறு அங்கே ஒரு ஊரை உருவாக்கினார்கள், அவர்களின் மாண்பு , நாகரிகம் , பண்பாடு மற்ற அனைத்து வாழ்வியல் சார்ந்த விடயங்களை இச்சொற்சித்திரம் வழியே காண்போம்.
1940களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நம் இந்திய நாடு வரலாறு காணாத இழப்புகளைச் சந்தித்து வந்தது. முக்கியமாக பட்டினியாலும், அதுமட்டுமல்லாது ,இயற்கை அவ்வப்போது போடும் பட்டினியென்ற பஞ்சத்தினாலும் பல லட்ச மக்கள் தெருக்களில் செத்து மடிந்தனர். பச்சிளம் குழந்தைகள் பாலின்றியும் தாய்மார்கள் சோறின்றியும் இறக்கும் அவலம் நிகழ்ந்துகொண்டிருந்த யுத்த நாட்கள் அவை. மேல்தட்டு மக்கள் கொஞ்சம் தப்பிக்கொண்டாலும் அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியில் குடும்பம் நடத்தும் அடிமை வர்கத்தின் மக்களின் அலறல் அடங்கா ஓசை போல இன்னமும் ஒலிக்கும் அளவுக்கு இருந்த நிலை. அதில் எந்த ஊரும் விட்டுவைக்கப்படவில்லை.
சேர்வராயன் மலைக்குன்றுகளுக்கு அடியில் கந்தன் என்பவன் தன் மனைவி மற்றும் எட்டு பிள்ளைகளோடு வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் மட்டுமல்லாமல் தன் நெருங்கிய சொந்தங்களோடு ஒரு சிற்றூர் அமைப்பில் வாழ்ந்து வந்தான். பஞ்சமும் பட்டினியும் நோய்த்தொற்று போல பரவி தன் குடும்பத்தை திண்பதற்குள் எப்படியாவது காப்பாற்றிடவேண்டும் என்று எண்ணினான். வாழ்நாளின் விளிம்பை இளமையில் பார்ப்பவர்களின் போராடும் குணம் ஒரு போர் வீரனுக்கே இருக்காது. செவி வழிச்செய்தியாக கேட்டதை வைத்து தன்னுடைய ஊருக்கு கிழக்கே நல்ல நீரோட்டம் உள்ள பூமி இருக்கிறது , அங்கு சென்று நன்கு உழைத்தால் , விளைநிலங்களை உருவாக்கி , வேளாண்மை செய்து நிலையான வாழ்க்கை வாழலாம் என்று தன் மனைவி மக்களை கூட்டிக்கொண்டு, கிழக்கே சூரியன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் தெரியாத, ஆளில்லா ,அடர்த்தியான, அத்துவான, ஆபத்தான காடுகளைக் கடந்து செல்லும் ஒரு பிழைப்பு பயணத்தைத் தொடங்கினான் கந்தன்...