புது முத்தம்
புது முத்தம்
தலைநகர் தில்லியில் மையமாக உள்ள ஒரு நகரம், பெயரளவில் மட்டும் தோட்டம் என்றும் ஆனால் தோற்றத்தில் கட்டிடங்கள் உயர்ந்து நிற்கும் வெள்ளை வண்ண சோலைகள் போன்று அமையப்பெற்றிருக்கும் அமைதியில்லா நகரம் .சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி தன் தாய்நிலத்தை விட்டு வெகுதூரம் பயணித்து , இந்தியாவின் மாட்சியையம் நீட்சியையும் உணர்ந்து மக்கள் சேவையில் தன்னை அர்பணித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக குடிமைப்பணி தேர்வுக்குத் தயார் செய்ய உற்சாகத்தோட வந்து இறங்கினான்.
கலாச்சார அளவில் பெருமளவு இந்தியாவின் தென்பகுதிக்கும் வட பகுதிக்கும் வேறுபாடு இல்லாமல் இருப்பினும் சிறு வேறுபாடுகள் கூட பெரிதாகவும், சில சமயம் ஏற்றுக்கொள்ளாததாகவும் இருக்கும் அளவுக்கு புதிய பூமி போல இருந்தது.தனது இருபத்தைந்து வயது வரை பருப்பு குழம்பு,கத்திரிக்காய் புளிக்குழம்பு , வெண்டைக்காய் புளிக்குழம்பு , புடலங்காய் கூட்டு, புளிச்சக்கீரை, அரைக்கீரை , சிறுகீரை,மணத்தக்காளி கீரை , முருங்கைக்காய் இன்னும் பல சத்தான காய்கறிகளும் கீரைகளும் உண்டு வளர்ந்தவனுக்கு , வாரம் முழுக்க பல வகையில் இருந்தாலும் ஒரேய சுவையைத் தரும் பருப்புகுழம்புகள் தன் தாய் நிலத்தின் உணவின் மேலே பசலை நோயயை ஏற்படுத்தின.
இரு மாதங்கள் கழிந்தும் முழுமூச்சாக எதிர்வரும் தேர்வை நோக்கி தன்னை தயார் செய்து கொள்வதற்கு உணவு ஒரு தடையாக இருந்தது. பெற்றோருக்கு சுமையைத் தள்ளி விடாமல் தான் பணியிலிருந்தபோது சேமித்து வைத்திருந்த பணத்தை, பார்த்து பார்த்து செலவும் செய்ய வேண்டிய நிலைமையும் அவனை முடக்கியது.
சரி, இப்படியே இருந்துவிட்டால் நம் இலக்கை அடையமுடியாது, கடனாளியாக கூட ஆகிவிடலாம் நம்மூர் உணவை எவ்வளவு தொகையானாலும் பரவாயில்லை ருசித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான். நியாயமான விலைக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் உணவு தந்துகொண்டிருக்கிறார் என்று தெரிந்து , அவரிடம் பேசி முதல் உணவை மதிய வேளையில் வாங்கி சாப்பிட உட்கார்ந்தான்.
பிளாஸ்டிக் பைக்குள் அடைத்து வைத்திருந்த துவரம் பருப்பு சாம்பாரின் வாசமும், கொத்தவரங்காய் பொரியலும் தன் தாயின் வாசத்தை வடக்கிற்கு கொண்டு வந்தது. ரப்பர் போட்டு கட்டி வைத்திருந்த சோறு பொட்டலத்தை கழட்டி வட்டலில் கொட்டிய பின் வந்து அந்த மணம் , தஞ்சைக் காவேரியின் மடியில் விளைந்த பொன்னி என்ற பெண்ணை நினைவூட்டி , அதே மடியில் ஒரு நிமிடம் தலை சாய்த்து படுத்தது போல் உணர்ந்தான். ஒரு பிடி சோற்றை அள்ளி கண்களில் நீர் பெருக இதுவரை எந்த பெண்ணுக்கும் இடாத முத்தத்தை அந்த பொன்னிக்கு இட்டு கண்ணீரால் அவளை குளிப்பாட்டி, பின் உண்ணத்தொடங்கினான்..