நாடக மேடை
நாடக மேடை
நாடக மேடை
அன்றைய நாள் பெங்களூரில் நடக்கும் தமிழ் நாடகத்திற்கு ஏக கூட்டம். மனோன்மணி நாடக குழுவிற்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. காரணம் அதன் நிறுவனர் மனோரஞ்சன் மற்றும் மணிவண்ணன் இவர்கள் தான். இது அவர்களது புதிய நாடகமான " அமாவாசை இரவு " 5000மாவது நாடகம்.
இந்த நன்னாளில் அவர் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்தார் மேடையில்.
"எல்லோருக்கும் வணக்கம், உங்களில் பலருக்கு என்னை தெரியும், தெரியாதவங்களுக்கு நான் மனோரஞ்சன், ரசிகர்களாகிய உங்களின் பேராதரவில் தான் இந்த வெற்றி சாத்தியமானது.என் தகப்பனார் மனோகரன் ஆரம்பித்தது இந்த நாடக குழு. தகப்பனாரின் நாடக சேவையை பின் தொடர்ந்து வருவதே எனது ஆசையாக இருந்தது".
மீண்டும் தொடர்ந்தார்..."அந்த காலத்தில் சரித்திர நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இன்றோ அதற்கு கூட்டம் சேரவே இல்லை. அப்பா தவறிய பிறகு பல இடத்தில் சரித்திர நாடகம் அரங்கேற்றினேன் சரியாக போகவில்லை, இரண்டு வருடம் பெரும் இடைவெளி ஆனது. அந்த நேரத்தில் எனக்காக என் தளபதியாக வந்தவர் தான் மணிவண்ணன். அப்போது தான் மீண்டும் நாடகத்திற்கு உயிர் கொடுக்க முடிவுசெய்து மனோன்மணி நாடக குழு என்று ஆரம்பித்தோம் 1977இல் அப்போது எங்களுக்கு 15 வயசு தான் "
"40 வருடமாக எங்கள் பயணம் ரொம்ப நன்றாகவே செல்கிறது. உங்கள் பேராதரவிற்கு நன்றி. இனி நாடகம் ஆரம்பமாகும்"
பலத்த கரகோஷங்கங்கள் கேட்டது, நாடகம் ஆரம்பமானது.
அங்கே இருந்த ரசிகர்கள் இருவர் அவர்களை பற்றி பேசி கொண்டிருந்தனர்.
"நண்பரே, மர்ம நாடகத்தில் இவங்களை அடிச்சிக்க முடியாது தெரியுமா?. காலத்திற்கு ஏற்ப குடும்ப நாடகமும், நகைச்சுவை நாடகமும் தான் நிறைய கூட்டம் வந்துச்சு. அந்த முறையை உடைத்து தனக்கென தனி பாணி அமைச்சது மனோரஞ்சன் குழு. மர்ம நாடகங்களை மட்டுமே மேடையேற்றுவார், இதுவரை நூறு நாடகம் மேல் பல முறை மேடை ஏத்தியாச்சு. அவருக்கு பக்க பலமாக அவர் நண்பன் மணிவண்ணன் சேர அவர்களது கலை பயணம் ரொம்ப ஜோராய் போகுது.புதிய யுக்தி பலவற்றையும் பயன்படுத்துவார், நீங்களே பாருங்க அசந்து போயிடுவீங்க".
"நான் இவங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கேன், இது தான் முதல் முறை நாடகம் பார்க்க வந்திருக்கேன், இதுவரைக்கும் மேடை நாடகத்தில் திரில்லர் அவ்வளவா பார்த்ததில்லை".
ஒரு அமாவாசை இரவன்று ஒரு கொலை நடக்கிறது, அதற்கான காரணம், யார் கொலையாளி அதை விசாரணையில் கண்டுபிடிக்கும் யுக்தி என்று மனோரஞ்சன் ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைப்பது போல இயக்கியிருருந்தார்.
நாடகம் முடிந்ததும் பலத்த கரகோஷங்களுடன் கூட்டம் மேடை பின்புறம் சென்று அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியது. மிகுந்த சந்தோஷத்துடன் விடை பெற்ற அவர்கள் அன்றிரவு ரயிலில் சென்னை புறப்பட்டனர்.
மனோரஞ்சனும், மணிவண்ணனும் அடுத்து ஒரு புதிய கதையை நாடகமாக போடலாம் என்று முடிவு செய்தனர்.உறங்க சென்றனர்.
விடியற்காலை 4.30 மணி இருக்கும், லேசாக நெஞ்சை வலிப்பது போல இருந்தது மணிவண்ணனுக்கு.
"மனோ, மனோ...."
தூக்கத்திலிருந்து மனோ எழுந்தார்.
"என்னப்பா?".
"லேசாக நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு".
"நெஞ்சு வலியா?? முதலில் தண்ணியை குடி. ரயில் எங்க இருக்கு பார்க்கிறேன்"
"மணி நாலரை ஆகிருச்சே 5 மணிக்கு சென்னை வந்திருமே". இரு உடனே நம்ம டாக்டரை கூப்பிடறேன், ஸ்டேஷன் வர சொல்லிடலாம்".
அவர் டாக்டரிடம் பேசி முடித்து, பைகளை எடுத்து வைக்க சரியாக சென்னை சென்ட்ரல் வந்துவிட்டது, டாக்டர் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை தயாராக அனுப்பியிருந்தார்.
மணியால் அதில் ஏறக்கூட முடியவில்லை மூச்சு வாங்க ஆரம்பித்தது, வியர்த்து கொட்ட ஆரம்பித்தது, ஆம்புலன்ஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் சப்த நாடியும் அடங்கிவிட்டது.
மருத்துவமனை சென்றவுடன் டாக்டர் அவர் காலமாகிட்டார் என்று சொல்ல, மனோரஞ்சன் இடி விழுந்தது போல் அமர்ந்தார்.
தொலைக்காட்சிகளிலிருந்து அவரிடம் கேட்டதற்கு, மாரடைப்பால் மணிவண்ணன் உயிரிழந்தார், இனி அவன் இல்லாமல் எப்படி நாடகம் போடுவேன் என்னில் ஒரு கண் பறிபோனது போலவே உணர்கிறேன் என்று அழுதபடி பேசினார்.
நாட்கள் நகர தொடங்கியது, இனி காத்திருக்க தேவையில்லை மீண்டும் நாடகத்தை அரங்கேற்றவேண்டும், மணி சொன்னபடி மணி எழுதிய ஒரு கதையை நாடகமாக அரங்கேற்றவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஒப்பனை, நடிகர்களை தேர்வு செய்ய தொடங்கினார்.
எப்போதுமே எந்த நாடகமாக இருந்தாலும் கதை மணி எழுதுவார், மற்றவைகளை மனோ ஒருங்கிணைப்பார், இருவருமே ஒரு வேடம் ஏற்று நடிக்கவும் செய்வர். பலமுறை இருவருமே போலீஸ் வேஷமும் போட்டனர், குற்றவாளி வேஷமும் போட்டனர். மணியின் நடிப்பிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று கூட சொல்லலாம்.
மணிக்கு அடுத்தது அவர் இடத்தை நிரப்ப தேர்ந்த நடிகர்கள் அவர் குழுவில் பெரிதாய் இல்லை, சசி மட்டுமே அவர்கள் குழுவின் மூத்த நடிகனாக உள்ளான். அவனையே மணி கதாபாத்திரத்தை நடிக்க வைப்போம் என்று முடிவு செய்தார்.
மணியின் கதையான " மர்ம வாசல் " என்ற புதிய கதையை நாடகமாக எடுக்க ஒத்திகை பார்த்தனர். இதில் கதைப்படி மனோ தான் நாயகன்,சசி குற்றவாளியாக நடித்தான். காட்சிகள் தத்ரூபமாக இருக்க, கதையின் முடிவில் போலீஸ் கொலை குற்றத்திற்காக சசியை கைது செய்வது போல இருக்கும் காட்சியில் மேடையிலிருந்து கீழே இறங்கி வெளியே வரை செல்வது போல காட்சி அமைத்தார். ஒத்திகையின் போதே அனைவரும் பாராட்டினர்.
சென்னையில் இந்த நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்து டிக்கெட் விற்பனைக்கு தயார் படுத்தினார்.
மணிவண்ணன் இறந்த பிறகு நடக்கும் முதல் நாடகம் என்பதால் அவர் ரசிகர்கள் முதற்கொண்டு கூட்டம் அலை மோதியது.
நாடகம் ஆரம்பிக்கும் முன், மணிவண்ணனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மணிவண்ணனின் பெருமைகள் பற்றி பேசி முடித்து நாடகத்தை ஆரம்பித்தார்.
ஏனோ மணிவண்ணன் அளவிற்கு சசியால் நடிக்க முடியவில்லை, ஏதோ ஓர் இடத்தில் சரியாக செல்லாமல் இருப்பது போலவே இருந்ததால் சோகத்தில் ஆழ்ந்தார் மனோ.நல்ல கதையம்சம் கொண்ட நாடகமாக இருந்தாலும் நடிப்பில் சரியாக இல்லையென்பதால் அன்றைய நாடகம் போதிய வரவேற்பு கிட்டவில்லை.
மனம் நொந்த மனோ சசிக்கு மீண்டும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்து மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றினார் அன்றும் எதிர்பார்த்தது போல் நடிப்பும் சரியை வரவில்லை,போதிய கூட்டமும் வரவில்லை.
அன்றும் சசி நடிப்பில் சுமாராகவே நடிக்க, மனோ கோவத்தின் உச்சத்துக்கே சென்றார்.
"என்ன சசி கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்க வேணாமா. மணி இருந்தால் நான் ஏன் உன்னையெல்லாம் கெஞ்ச போறேன் (சிடு சிடுத்தார்)"
"எனக்கு மனசே சரியில்லை சார், மணிவண்ணனின் மனைவியை பார்த்தேன், அவர் இடத்தை நான் பிடிப்பதற்காக நான் மணிவண்ணனை கொன்றது போல பேசினார்.அதை கேட்டதும் மனசு ரொம்ப கஷ்டமாகி போச்சு. எவ்வளவு முயற்சி செய்தும் மணி அளவிற்கு நடிக்க முடியலை. நீங்க வேற யாரையாவது போட்டு நடிக்க வைங்க"சசி சொல்லிவிட்டு கிளம்ப தயாரானான்.
"இப்போ வந்து சொன்னால் நான் எங்கே போறது, அடுத்த ஞாயிறு மீண்டும் இந்த நாடகம் போட டிக்கெட் விற்பனையும் ஆரம்பிச்சாச்சு. இந்த நேரத்தில் புதிய ஆட்களை நடிக்க வைத்து கெட்ட பெயர் எடுக்க முடியாது, நீ தான் இன்னும் சிறப்பாக செய்யணும்"
"நீங்க என்ன சொன்னாலும் என்னால முடியாது. நான் கிளம்பறேன்" சசி தீர்மானமாக இருந்தான்.
மனோவின் நாடக கனவு கொஞ்சம் கொஞ்சமாய் சரிய தொடங்கியது, அவருக்கு வாரிசு என்று யாரும் இல்லை, மணிவண்ணனுக்கு ஒரு மகள் மட்டுமே. இனி என்ன செய்வது என்ற குழம்பிய நிலையில். செய்தித்தாளில் நாடகம் நடிக்க ஆட்கள் வேண்டும் என்று விளம்பர படுத்த, ஏகத்துக்கு கூட்டம் வந்தது நேர்முக காணலுக்கு.
200 ஆட்கள் வந்த இடத்தில் ஒரே ஒருவனை தேர்வு செய்தார் அவன் தான் பார்த்திபன்.
பார்த்திபனை பார்க்க மணிவண்ணனை பார்ப்பது போலவே இருந்தது, இவனை வைத்து தான் இனி என் நாடகம் என்று முடிவு செய்தார்.
அடுத்த நாடக மேடை அன்று பார்த்திபனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த முறை பார்த்திபன் போலீஸ் வேடமும், மனோ குற்றவாளி வேடமும் ஏற்று நடித்தனர். நாடகம் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
புதிய நடிகரான பார்த்திபனுக்கு ரசிகர்கள் சேர தொடங்கினர், தொடர்ந்து இதே நாடகம் வெவ்வேறு ஊர்களில் அரங்கேறியது, சீக்கிரமே மிக பெரும் ரசிகர்கள் பார்த்திபனுக்கு சேர்ந்தனர்.
பத்தாவது முறை அதே நாடகம் மீண்டும் சென்னையில் அரங்கேற உள்ளது. இந்த முறை மனோ சற்று சிடு சிடுவென தன கோவத்தை காட்டினார் பார்த்திபன் மீது.
"பார்த்திபன், இந்த முறையோடு நீ போலீஸ் வேஷம் போட வேணாம். அடுத்த முறை இதே நாடகத்தில் நான் போலீஸ் வேஷம் நீ குற்றவாளி வேஷம் புரியுதா"
"சரி, எனக்கு எல்லா கதாபாத்திரமும் நடிக்க தான் பிடிக்கும்" (தலை அசைத்தான்)
நாடகம் அரங்கேற தொடங்கியது, மக்கள் நல்ல ஆரவாரத்தோடு பார்த்து கொண்டிருந்தனர், நாடக முடிவில் குற்றவாளியை கைது செய்து மேடை கீழே உள்ள கதவை தாண்டி சென்றனர். மக்கள் எழுந்து நின்று கை தட்டினர்.
கதவை விட்டு வெளியே வந்த மனோ மீண்டும் உள்ளே செல்ல நினைக்க அவரை அப்படியே போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றான் பார்த்திபன்.
"பார்த்திபன் என்ன பண்ற. நாம மேடைக்கு போகணும், நம்மை பார்க்க மக்கள் வருவாங்க" மனோ கோவமானார்.
"நான் என் கடமையை செய்யுறேன்".
"என்னது கடமையா?"
"ஆமாம், நான் நடிகன் பார்த்திபன் இல்லை. இன்ஸ்பெக்டர் பார்த்திபன்".
"என்ன??"
"மணிவண்ணனை கொலை செய்த குற்றத்திற்காக உங்களை கைது செய்யுறேன்".
மனோ முகம் வேர்க்க தொடங்கியது.
அதற்குள் ஏதோ சரியில்லை என்று மக்கள் கூட்டமும்வெளியே வந்துவிட்டது. எதையும் பொருட்படுத்தாமல் பார்த்திபன் போலீஸ் ஜீப்பில் ஏற்றினான் மனோரஞ்சனை.
ஜீப் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. மனோ ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டார்.
"மணிவண்ணனை நான் கொலை செய்தேனா? யார் இப்படி ஒரு தப்பான செய்தியை கொடுத்தது யாரு?, நீ போலீஸ்ன்னு இவ்ளோ நாளா சொல்லவே இல்லை, என்கிட்டயே நாடகமா?".
"மணிவண்ணன் இயற்கையாக சாகலை. செயற்கையாய் அவருக்கு நெஞ்சு வலி வரவைக்க பட்டிருக்கு. அவர் இறப்பில் மர்மம் இருக்குனு அவர் மனைவி கொடுத்த வழக்கின்படி நாங்க விசாரணையில் இறங்கினோம்".
"எங்களோட சந்தேகம் முழுக்க உங்க நாடக குழுவின் சசி மேல தான் இருந்தது. அவர் தான் அடுத்த மூத்த நடிகர் உங்கள் குழுவில். புகழுக்கு ஆசைப்பட்டு அவர் தான் கொலை செய்திருக்கணும்னு அவரை கண்காணிச்சோம். இப்படி ஒரு வதந்தியை நீங்க தான் மணிவண்ணன் மனைவிக்கு சொன்னதாகவும் தெரிய வந்தது, அப்போ தான் என் சந்தேகம் உங்க மேலே திரும்பிச்சு" மனோரஞ்சன் பயந்தே போனான்.
"உங்க இருவரோட பின்னணியை விசாரணை செய்தோம், அதில் பல இடத்தில் உங்களை விட அவருக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் ஜாஸ்தி என்ற, இதனால் உங்களுக்கு அவர் மேல் பொறாமை இருந்தது என்று தெரிய வந்தது. இதை பற்றி ஒரு முறை அவரிடம் கோவத்தை காட்டியதாகவும் அவர் மனைவியிடம் சொல்லியிருக்கார்".
"அவர் இறப்பை பயன்படுத்தி ஒரு ரசிகர் கருத்து கணிப்பு போல இன்டர்நெட்டில் எடுத்தோம் உங்களை கவர்ந்த நடிகர் யாரென்று. அதிலும் மணிவண்ணனுக்கே முதலிடம், இதையெல்லாம் வைத்து பர்ர்க்கும்போது நீங்க ஏன் இந்த கொலையை செய்திருக்க கூடாதுன்னு தோணிச்சு".
"அவரை கொலை செய்வதால் எனக்கு எந்த பயனும் இல்லை. நீங்க தவறாக எடுத்துக்கொண்டு என்னை குற்றம் சாட்டறீங்க" மனோரஞ்சன் கண் கலங்கினான்.
பார்த்திபன் ஒருவரின் புகைப்படத்தை காட்ட மனோ பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.
"இவர் யாரு தெரியுமா?"
"தெரியாது"
"பொய் சொல்றீங்க, இவரை கண்டிப்பாக உங்களுக்கு தெரியும் இவர் பல முறை உங்க நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர் இவரை பற்றி உங்க குழு எல்லோரிடமும் விசாரிச்சாச்சு எல்லோரும் தெரியும்னு சொல்லிட்டாங்க. இப்போவது உண்மையை சொன்னால் நல்லா இருக்கும், இல்லைனா நாங்க விசாரிக்கும் வழியில் விசாரிக்க வேண்டியிருக்கும் வயசானவராச்சேன்னு பார்க்கிறேன்" பார்த்திபன் மிரட்டினான்.
மனோ கைகள் சற்று ஆட்டம் கண்டது, பார்த்திபன் எழுந்து அவரை அறைய கை ஒங்க........
"சொல்லிடறேன், சொல்லிடறேன் என்னை ஒன்னும் செய்ய வேணாம்".
"சொல்லுங்க"
"என்னை விட அவனுக்கு தான் ரசிகர் பட்டாளம் இருந்துச்சு, கதை எழுதுவதிலும் அவன் தான் சிறப்பாக விளங்கினான். கூட்டமும் அவனுக்காகவும் அவன் எழுத்துக்காகவும் தான் வந்தது. அதை மொத்தமாக என் பக்கம் திருப்பனும்னு பார்த்தேன் முடியலை, அவன் மேல் வன்மம் அதிகமானது. எப்படியாவது நானே முதல்வனாய் இருக்கணும்னு மனசில் தோணிச்சு. அப்போ தான் ஒரு யோசனை தோணிச்சு".
மனோரஞ்சன் மெல்ல அனைத்தையும் சொல்ல தொடங்கினார், "இவன் என் கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டு பல முறை வந்தான் அவன் கிட்ட சொல்லி ஒரு காரியம் செய்ய சொன்னேன். பெங்களூரில் எங்களோட 5000 மாவது நாடகம் நடத்த முடிவு செய்தோம், அங்கே நாடகம் முடிந்து கூட்டம் மேடை ஏறிய நேரம் கூட்டத்தோடு கூட்டமாக இவனையும் ஏற சொல்லி ஒரு ஊசியை மணிவண்ணன் மீது குத்த சொன்னேன். அந்த நேரத்தில் அவனுக்கு வலி கூட பெரிதாக தெரியலை. அது செயற்கை இருதய வலி கொடுக்க கூடிய மருந்து. இனி என் தலை ஓங்கும்னு கர்வமானேன்".
மனோரஞ்சனை சொன்ன வாக்குமூலத்தை அப்படியே ரெகார்ட் செய்துகொண்டான் பார்த்திபன். மனோரஞ்சன் தொடர்ந்தார்.....
"அன்றைக்கே பெங்களூரில் ஒரு ரௌடியிடம் காசு கொடுத்து இவனையும் கொல்ல சொன்னேன்"
"அப்படி வாங்க வழிக்கு, நீங்க செய்த ஒரே தப்பு அது தான். இவனும் செத்துட்டான் ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை ஆனால் சாகுறதுக்கு முன்னாடி நீங்க தான் இதை செய்ய சொன்னதுன்னு வீடியோ பதிவு செய்து அவன் போன் ஒரு ஸ்விக்கி வண்டி டப்பாவில் வெச்சிட்டான், அது பல இடம் போய் எங்க கைக்கு உடைந்த நிலையில் கிடைச்சுது ஆனால் துரதிஷ்டவசமா அந்த போன் அதுக்கு பிறகு வேலை செய்யலை.
இருந்த ஆதாரமும் போச்சு ஆனால் குற்றவாளி நீங்கதான்னு முடிவாக தெரிஞ்சுது.
ஒரு கொலையை செய்திட்டு அது இயற்கை மரணம்னு ஊரையே நம்ப வைத்து நாடகம் ஆடிட்டு தப்பிச்சிருலாம்னு நினச்சா முடியுமா?.
மர்ம நாடகம் மேடையில் போடுற நீங்களே இவ்ளோ யோசிக்கும்போது, பல மர்ம வழக்கை நிஜமாகவே பாக்குற நாங்க எவ்ளோ செய்வோம். இதை உங்க வாயிலிருந்து வரவைக்க தான் நாங்களும் நாடகம் போட்டோம், உங்க குழுவில் எல்லோருக்குமே இது தெரியும், நான் பள்ளி, கல்லூரி நேரத்தில் நிறைய நாடகம் நடிச்சிருக்கேன், அது எனக்கு மிகவும் பிடிச்ச ஒன்று, அதை என் வேளையிலும் பயன்படுத்திக்கிட்டேன், அதன்படி தான் நானும் நடிகனாக சேர்ந்தேன்". இதெல்லாம் ஒரு நாடகம் என்று தெரிந்ததும் மனோரஞ்சன் திடுக்கிட்டார்.
"என் நடிப்புக்கு ரசிகர்கள் சேரும்போதே உங்க முகம் மாறியதை நான் கவனிச்சேன். எந்த நாடகம் உங்களை தூக்கிவிட்டுச்சோ அதே நாடகத்தில் தான் நீங்க இனி சரிவை சந்திக்க போறீங்க. புகழ், பேராசைக்கு ஆசைப்பட்டு இப்போ என்னாச்சு பார்த்தீங்களா ??"
மனோ தன் தவறை உணர்ந்து தலை குனிந்தார். அவரை நீதி மன்றத்தில் ஒப்படைத்தும் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தனர்.
மனோன்மணி நாடக குழுக்கு சசி பொறுப்பேற்றான் இனி ஒய்வு நேரத்தில் தானும் நடிப்பதாக சொன்னான் பார்த்திபன். மணிவண்ணனின் கலை சேவை மீண்டும் தொடர்ந்தது நாடக மேடையில்.
