மறக்க முடியாத குண்டோதரன்
மறக்க முடியாத குண்டோதரன்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
டிசம்பர் 8, 2019
எழுத்து என்றதும் ‘பளிச்’ என்று முதலில் என் நினைவுக்கு வருவது ‘சாவி’ அவர்களின் ‘வாஷிங்டனில் திருமணம்’ தான்! அப்போது எனக்கு வயது பதினைந்து இருக்கும். இரண்டு நாள் காய்ச்சல் முடிந்து ஓரிரு நாள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம். யாரோ ஓய்வில் படிக்க என்று இந்த புத்தகத்தைக் கொடுத்தனர், மிக மிக சுவாரஸ்யமான நகைச்சுவை நாவல். தமிழ் புத்தகங்களில் என்னை முதலில் பாதித்த எழுத்து இதுதான். ஆனால் எழுதத் தூண்டியது என்று சொல்ல முடியாது.
அடுத்து என் பெரிய அண்ணன். அவர் தனது முப்பத்தைந்து வயது வரை நாடங்களிலேயே மூழ்கி வாழ்ந்தவர். பல நாடகங்களை எழுதி மேடை ஏற்றியிருக்கிறார். அந்த சமயங்களில் நான் சிறுவனாக இருந்ததால் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டேன் போலும். எனினும் என்னுள் எழுத்துச் சலனம் ஏற்படுத்திய காரணிகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம்.
அடுத்து சுஜாதாவை சொல்லலாம். பத்திரிகைகளில் வந்த அவரது கதைகள் படிப்பேன். அவரது ‘ஶ்ரீரங்கத்து தேவதைகள்’ பற்றி அனேகமாக எல்லா எழுத்தாளர்களும் அறிந்திருப்பார்கள்! அவருடைய எழுத்தும் என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு.
ஆனால், எவ்வளவோ எழுத்துக்களைப் படித்திருந்தாலும், என்னை எழுதத்தூண்டிய முதல் பொக்கிஷம் மகாகனம் பொருந்திய ‘கல்கி’ அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’ தான். ஒரு நாவலைப் படித்து மயங்குவது என்பது இயல்பு. ஆனால் அந்த நாவலை எழுவதற்கான சூழலை விவரிக்கும் போதே நம் சிந்தையை அள்ளிக் கொள்ளும் அந்த விந்தையை என்ன சொல்ல! கல்கி அவர்கள், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி) மற்றும் இரண்டு நண்பர்களோடு மாமல்லபுரம் கடற்கரை மணலில் அமர்ந்து, வெண்ணிலவின் வெளிச்சத்தில் அளவளாவிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் எப்படி இந்தக் கதையின் கரு அவர் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டது என்பதை விவரிக்கத் தொடங்கும்போதே நம் உள்ளம் அவரது எழுத்துக்களிடம் பறி போய் விடுகிறது. ஒரு மனிதர் இப்படி எழுத முடியுமா? என்ன நேர்த்தியான கதை. என்ன நேர்த்தியான சம்பவங்கள். என்ன நேர்த்தியான பாத்திரப் படைப்புகள். அந்த ‘குண்டோதரனை’ மறக்க முடியுமா? ‘நாகநந்தி’ போல் ஒரு பாத்திரத்தை அதன் பிறகு பார்த்திருப்போமா? கமலி! பரஞ்சோதி…!
ஆம். ‘எழுத வேண்டும்’ என்று என் முதல் எழுத்திற்கான தூண்டுகோலை என்னுள் விதைத்தது ‘கல்கி’ அவர்கள்தான்!
‘