மிருகம் பாதி கடவுள் மீதி
மிருகம் பாதி கடவுள் மீதி
மிருகம் பாதி கடவுள் மீதி
முத்துசாமியும் அவர் மகள் அர்ச்சனாவும் கடலூர் பஸ் நிலையம் வந்திறங்கினார்கள், அங்கிருந்து, “மஞ்சக்குப்பம் போகணும்” என்று ஆட்டோவில் ஏறினர்.
ஆட்டோ நேராக மஞ்சக்குப்பம் சென்று நின்றது.
"இங்க யாரை பார்க்கணும் சார்" என்றான் ஆட்டோ டிரைவர்.
இந்த தெருவுக்கு தான் புதுசா குடி வரோம் ஏன்?? என்றார் முத்துசாமி.
“இந்த தெருவுக்கா?? பாத்து சார் வயசு பொண்ணு கூட வந்திருக்கு மோசமான தெரு இங்க ஒருத்தன் இருக்கான் காசின்னு பேரு ரொம்ப அகராதி பிடிச்சவன், அடிச்சிட்டு தான் பேசுவான் சரியான காட்டு மிராண்டி பய மிருக ஜாதி! பார்த்து பத்திரமா இருங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவர்கள் ஒரு அடி நடந்து அவர்கள் வீட்டை அடைய வேண்டும், பக்கத்தில் ஒரு பெட்டி கடை வெளியே காய்கறியெல்லாம் கொட்டி கிடந்தது, சில சில்லறை காசுகள் சிதறி கிடந்தது, ஒரு சொம்பு வளைந்து கீழே கிடந்தது. பார்த்தவுடனே ஏதோ தகராறு நடந்திருக்கக்கூடும் என்று தெரிந்தது. யாராவது ஆட்கள் தென் படுகிறார்களா என்று பார்த்தால் யாரும் இல்லை.அந்த பெட்டி கடை பக்கத்தில் ஒரு பாதி இடிஞ்ச ஒட்டு வீடு, அதன் ஒரு பக்க திண்ணையில் வாட்டசாட்டமாக ஒருவன் படுத்திருந்தான் கண்ணில் கைக்குட்டை கட்டியபடி.
இவர்கள் செல்ல வேண்டிய வீடு அந்த இடிந்த ஒட்டு வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி.முத்துசாமியிடம் சாவி இருந்தது நேராக உள்ளே சென்று பூட்டை திறக்க. மாடியிலிருந்து ஒரு குரல், “யாரு ??” என்று.மாடியிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி வந்தான், அவர் மகளை பார்த்ததும் சற்று புருவத்தை உயர்த்தியபடி.
“நீங்க தான் முத்துசாமியா. நான் கீர்த்தி வர்மன், மாடியில் இருக்கேன், வீட்டு முதலாளி சொல்லியிருந்தார் நீங்க வருவீங்கன்னு. இந்த நேரத்தில் வருவீங்கன்னு எதிர்பாக்கலை”.
“அந்த ரேஷன் ஆபீஸ் வேலை பாக்கிற பையன் நீ தானா. சந்தோஷம்.நான் வேலூரிலிருந்து வரேன். இங்கே தாலுகா ஆபீஸ்ல வேலை சேரனும். இது என் பொண்ணு பானுப்ரியா PHD முடிச்சிருக்கா சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம்ல வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கா”.
“ஹலோ” என்றான், “வீட்டு சாமான் பொருள் ஏதும் வரலையா?”
“அது நாளைக்கு லாரியில் வருது” என்று பதிலளித்தாள் அவள்.
கீர்த்தி வர்மன் நெஞ்சுக்குள் ஒரே சந்தோஷம் அவளை பார்த்ததும் இனி எப்படியாவது அவளோடு பேசி பழகிட வேண்டுமென்று முடிவாய் இருந்தான்.
அடுத்த நாள் காலை, பானு அந்த பெட்டி கடைக்கு வந்தாள், பால் வாங்க, கீர்த்திவர்மனும் அங்கே தான் நின்று கொண்டிருந்தான் சோப்பு வாங்க. அந்த கடையை சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தாள் பானு.
“என்ன பாக்கறீங்க?” என்றான் கீர்த்தி வர்மன்.
“நேத்து கடையே அலங்கோலமா இருந்துச்சு ஆள் கூட இல்லை, இப்போ எல்லாம் அடுக்கி இருக்கேனு பார்த்தேன்” என்று கடையை சுற்றி பார்த்தபடியே பேசினாள் பானு.
“அது அந்த காசியோட வேலை. அவனால இங்கே இருக்கிற எல்லோருக்குமே பிரச்சனை தான். முரட்டு பய. மிரட்டியே எல்லாத்தையும் வாங்கிடுவான், கொடுக்கலைன்னா அடி தான். நேத்து இங்கே சோடா கேட்டான் கொடுக்கலை அதான் எல்லாத்தையும் உடைச்சிட்டான். இது இங்கே அடிக்கடி நடக்கும்” என்று காசியை பற்றி கூறினான் கீர்த்தி வர்மன்.
அவன் பேசி முடிக்க காசி தூக்க கலக்கத்துடன் அந்த கடைக்கு வந்தான். அவனை பார்த்ததும் பயந்தபடி கீர்த்திவர்மன் கிளம்பிவிட்டான்.
“ஒரு பீடி, ஒரு ரொட்டி பாக்கெட் கொடு” என்று அதிகாரமாய் கேட்டான் காசி.
கடைக்காரன் எடுத்து கொடுத்தான். வாங்கி கொண்டு அவன் கிளம்ப, இதை அருகில் பார்த்துக்கொண்டிருந்த பானு.
“காசு கொடுங்க”.
வெடுக்கென்று திரும்பியவன் பானுவை ஏற இறங்க பார்த்தான்.
“யோவ் யாருய்யா இது காசு கேக்குது என் கிட்ட. ஆள் வெச்சா அடிச்சிடறேன்னு பொண்ணை வெச்சி பேச விடறியா” என்று மிரட்டினான்.
கடைக்காரன் ஒன்றும் விளங்காமல் பானுவை அமைதியாக இருக்குமாறு சைகையில் காட்டினான்.
“அவரே கஷ்ட படறாரே, காசு கூட கொடுக்காமல் வாங்கினா அவருக்கு தானே கஷ்டம். அதான் கேட்டேன். சரி இன்னிக்கு நான் காசு கொடுக்கறேன் என் காசில் சாப்பிடுங்க. அடுத்த முறை காசு கொடுத்துட்டு பொருள் வாங்கிட்டு போங்க” என்று அவனுக்கும் சேர்த்து காசை நீட்டினாள் பானு.
“பாரு டா ஜீன்ஸ் போட்ட அவ்வையாரு. என்ன பிச்சை போடறியா” நக்கலடித்தான் காசி.
“இல்லை தானமா கொடுக்கறேன், இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு”.
பானு பால் பாக்கெட் வாங்கிவிட்டு கிளம்பிவிட்டாள், அவளையே வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் காசி.
இதையெல்லாம் அவன் வீட்டு மாடியிலிருந்து பார்த்து கொண்டிருந்தான் கீர்த்தி வர்மன்.அவள் வீட்டிற்கு வந்ததும்....
“அவன்கிட்ட என்னங்க பேசறீங்க. சரியான முரடன், இந்த ஊரு அரசியவாதியின் அடியாள், அவனோட பேசினால் உங்களுக்கு தான் ஆபத்து” என்று பதட்டமாக கூறினான் கீர்த்தி வர்மன்.
“நான் யார் கூட பேசணும் பேச கூடாதுன்னு எனக்கு தெரியும் , நீங்க உங்க வேலையை பாருங்க”.
வெடுக்கென்று உள்ளே சென்றாள் பானு.அவள் பேசுவதை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தார் முத்துசாமி.
உள்ளே வந்ததும்....
“என்னம்மா மாடி வீட்டு பையன் கூட சண்டை”.
“நான் யார் கூட பேசணும், யார் கூட பேச கூடாதுன்னு சொல்றதுக்கு இவன் யாரு?”.
“அது சரி, உன்னை சைகாலஜி படிக்க வெச்சது என் தப்பு, ஊர்ல இருபவனையெல்லாம் திருத்தரேன்னு கிளம்பிட்ட”.
“அப்பா என் ப்ராஜெக்ட் வேலை முடிச்சிட்டு இப்படி ஒரு கரடு முரடான ஆளை தான் சந்திக்கணும்னு நினைச்சேன், அவங்க வாழ்க்கையில் நடந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு அவங்களை நல்ல நிலைமைக்கு மாத்த முடியும்னு நான் நம்பறேன். அதுக்கு தான் நான் சைகாலஜி படிச்சேன்”.
“நீ சொன்னால் கேட்கமாட்ட, இருந்தாலும் ஜாக்கிரதையாக இரு. அவனை பற்றி ஏற்கனவே வீட்டு முதலாளி சொல்லிட்டாரு. அது அவன் சொந்த வீடு தான் பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கான், ஒரு விபத்தில் அவங்க அப்பா, அம்மா இறந்துட்டாங்க அப்புறம் யாரும் இவனை சேர்த்துக்கலை. சாப்பாட்டுக்கு கூட யாரும் உதவி பண்ணலை.பசி தான் இவனை ரவுடி ஆக்கிச்சுன்னு சொல்லலாம், அவனோட சேர்ந்தவங்கயெல்லாம் அவனை மாதிரி பொருக்கி பசங்க. அதான் அவன் இப்படி ஆனான் மத்தவங்களை விட இவன் பலமா இருந்ததுனால இவனை ஒரு அரசியல்வாதி வேலைக்கு சேர்த்துக்கிட்டான். அடிதடி, கட்ட பஞ்சாயத்து இதான் இவன் தொழில்னு ஆச்சு. அதுக்கு காசை கொஞ்சமாக காட்டி விடுவான் அந்த அரசியல்வாதி. காசு இருக்கும் வரை இந்த தெரு மக்களை தொல்லை செய்ய மாட்டான் ஆனால் வாய் தகராறு நிறைய நடக்குமாம். காசு இல்லாத அப்போ பசிச்சா ஏதும் கிடைக்கலைனா மிருகமா மாறிடுவான். நேத்து தான் நாம பார்த்தோமே அந்த கடை லட்சணத்தை”.
“நீங்க சொல்றதை பார்த்தால் அவன் மேலே ஏதும் எனக்கு தப்பு தெரியலையே” இந்த சமூகத்து மேலே தான் தப்பிருக்கு.
“ போச்சு டா இதுக்கு தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். எல்லோரும் ஒருத்தனை பற்றி நினைக்கிற விஷயம், நீ மட்டும் வேற கோணத்தில் பாக்குற. எனக்கு ரொம்ப பயமா இருக்கு இப்போ. உன்னை இன்னொருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கும் வரை இதெல்லாம் நமக்கு வேண்டாமே. இந்த வீட்டு முதலாளியோடு ஸ்னேஹிதன் பையன் தான் மாடியில் குடியிருக்கும் கீர்த்தி வர்மன். ரொம்ப தங்கமான பையனாம் அரசாங்க உத்யோகம் வேற, உங்க பொண்ணுக்கு சரின்னா சொல்லுங்க பேசி பாக்கறேன்னும் சொல்லியிருக்காரு. நீ தான் சொல்லணும்”.
“ஐயோ அப்பா எப்போ பார்த்தாலும் கல்யாணம் பேச்சு தானா?”.
“இளங்கலை பட்டம் முடிச்ச உடனே பண்ணிருக்கணும், உங்க அம்மா தான் பிடிவாதமா முதுகலை பட்டம் முடிக்கட்டும்னு சொன்னா. சொல்லிட்டு அவள் போய் சேர்ந்துட்டாள், இங்கே நான் தானே வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு அலையறேன். அவள் போன பிறகு ஒரு வருஷம் ஏதும் கல்யாணம் வேண்டாம்னு தான் PHD படிக்க சரி சொன்னேன். வயசு ஏறிட்டே போகுது இதுக்கு மேல பொறுக்க முடியாது, வேலை கிடைச்சதும் கல்யாணம் தான். கீர்த்திவர்மன் வீட்டில் பேச போறேன்”.
“நீங்க யார் கூட வேணாலும் பேசுங்க நான் சரி சொன்னால் தான் கல்யாணம்”.
பானு தீர்மானமாய் சொல்லிவிட்டு அறைக்கு செல்ல, அவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது, லாரி பழுதாகிருச்சு நாளைக்கு காலை தான் வர முடியும் சாமான்களோடு என்று. முத்துசாமியோ சற்று சோர்வாக இருந்தார்.
“என்னாச்சு லாரி தாமதமாக வரும் அவ்ளோ தானே”.
“நாளைக்கு கலெக்டர் ஆபீஸ் வரார் நான் கண்டிப்பாக ஆபீஸ் போகணும், முதல் முறை சந்திப்பு வேற”.
“ அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், இறக்கி வெச்சிட்டு காசு கொடுத்தா போகுது, நீங்க வருவதற்குள் நான் அடுக்கியே முடிச்சிருவேன்” என்றாள் பானு.
“ஒரு ஆண் துணை வேணுமே நீ மட்டும் எப்படி தனியா.....நான் கீர்த்தி வர்மனிடம் பேசவா”.
“அடடா அதெல்லாம் நான் பார்த்துகிறேன் நீங்க கவலைப்படாமல் இருங்க" என்று அவள் வேளையில் மும்முரமானாள்.
அடுத்த நாள் முத்துசாமி அலுவலகம் சென்ற பிறகு ஒரு மணி நேரம் கழித்து லாரி வந்தது. லாரியில் இரண்டே ஆட்கள் தான் வந்தனர். சின்ன சாமான்கள் மொத்தமும் அவர்களே இறக்கி வைத்து விட்டனர். ஒரு கட்டில், ஒரு பீரோ.ஒரு குளிர் சாதன பெட்டி இதை தூக்க முடியவில்லை. உதவிக்கு ஆள் இருப்பாங்களா என்று கேட்டனர்.
பானு நேராக பெட்டி கடை பக்கம் போனாள், அங்கே கையில் கோலி வைத்து தனியாக விளையாடி கொண்டிருந்தான் காசி.
“ஏங்க....”
அவன் திரும்பி கூட பார்க்கவில்லை.....
“காசி சார்....”
“காசி சார் அட அட என்னை முதலில் சார் போட்டு கூப்பிட்டதே நீ தான் அவ்வையாரே!!”
“என்னையும் அவ்வையாருன்னு கூப்பிட்டது நீ தான் முதலில். ஒரு உதவி வேணும்.”
“ என்ன உதவி சாமான் இறக்கின பசங்க பிரச்சனை பண்றாங்களா தட்டணுமா, தூக்கணுமா காசு கிடைக்குமா?”
“தூக்கணும் தான் அவங்களை இல்லை கட்டில், பீரோவை”.
அவளை ஏறஇறங்க பார்த்துவிட்டு.....
“நான் யார் தெரியுமா? எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா என்னை சாமான் தூக்க சொல்ற நீ”.
“நீ ரௌடினு ஊருக்கு தெரியும், எனக்கு தெரியாதே சாமானை தூக்க முடியல, நீ ஆளை தூக்க போறியா. இதை செய் நீ ரௌடினு நம்பறேன்” என்று நக்கலடித்தாள் பானு.
“அடிப்பாவி, சரி ஒரு வேலை சாப்பாடு வாங்கி கொடுத்திருக்க அதுக்காக வரேன்”.
ஒரே ஆளாக குளிசாதன பெட்டி, பீரோவை தூக்கி உள்ளே வைத்தான்.லாரி கிளம்பியது.
அந்த தெரு மக்கள் எல்லோரும் ஏதோ புதிதாக நடப்பதை பார்த்து புலம்பி கொண்டு சென்றிருந்தார்கள்.
பானு 200 ருபாய் நீட்டினாள். அதை பெருமையோடு பெற்று கொண்டான்.
“சாப்பாடு சமைச்சு தரேன். சாப்பிட்டு போ” என்றாள் பானு.
“இங்கே உள்ளே சாப்பிட்டால் என் கெளரவம் என்ன ஆகிறது, என் இடத்துக்கு அனுப்புங்க. இருந்தாலும் சந்தோஷமாக இருக்கு 200 ருபாய் சொந்தமாக உழைச்சு வாங்கினது. ஆள் அடிச்சு காசு வாங்கினபோது கூட இவ்ளோ சந்தோஷம் வரலை, இது புதுசா இருக்கு. வேற ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க எப்போவாது செய்றேன்”.
பானு அவனை பார்த்து ஆச்சிர்யமானாள். ஊரே பயந்த ஒருவன் நம்மளோடு நல்லா தானே பேசறான்.பார்க்க தான் பலாப்பழம் மாதிரி வெளியே கரடு முரடாக இருக்கான் உள்ளே இனிப்பானவன் தான் என்று முடிவு செய்தாள்.
அவள் சமையல் வேலையை முடித்துவிட்டு அவனுக்கும் எடுத்து கொண்டு கொடுத்துவிட்டு வந்தாள்.
மாலை ஆனது முத்துசாமி வீட்டிற்கு வந்தார், வீடு மொத்தமும் அடுக்கி வைத்து பெருக்கி சுத்தமாக இருந்தது.
“அட பரவாயில்லையே சொன்னதை செஞ்சிட்ட. உங்க அம்மாவை விட நீ திறமைசாலி தான்”.
காசி வீட்டு வாசல் வந்து நின்றான் கதவை தட்டியபடி. முத்துசாமி அதிர்ச்சியாக பார்த்தார்.....
“இந்தாங்க தட்டு, கழுவிட்டேன், இது மாதிரி ஒரு சுவையான சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப வருஷம் ஆச்சு எங்க அம்மா ஞாபகம் வர வெச்சிடீங்க நன்றி” என்று கை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு சென்றான் காசி புன்னகையுடன்.
“என்னமா நடக்குது இந்த காட்டுமிராண்டியை வைத்தா வேலை வாங்குன?”.
“பீரோ, கட்டில், தூக்க ஆள் இல்லை இவன் தான் பீரோ ஒரு ஆளாக தூக்கினான், அதான் கூலி கொடுத்தேன் சாப்பாடு கொடுத்தேன் அவ்ளோ தான் உடனே நீங்க எந்த கற்பனையும் பண்ண வேணாம். அவன் கெட்டவன் மாதிரி எனக்கு தெரியல, பாத்தீங்க இல்லையா எப்படி பேசினான்னு”.
முத்துசாமி தலையில் கை வைத்து அமர்ந்தார், கடவுளே இது எங்க போய் முடிய போகுதோ என்று!!
ஒரு வாரத்தில் பானுவிற்கு சிதம்பரம் பல்கலை கழகத்தில் சைக்கோலஜி பேராசிரியர் வேலை கிடைத்தது. அவள் வீட்டிலிருந்து 46 கிலோ மீட்டர், தினமும் பஸ் ஏறி சென்று வருவாள், அவள் போகும்போதும், வரும்போதும் அவளை பார்த்தபடியே இருப்பான் காசி.
ஒரு நாள் மிக கோவமாக வீட்டிற்கு வந்தாள் பானு....
“என்னம்மா என்னாச்சு?” என்றார் முத்துசாமி
“இந்த பஸ்சில் போயிட்டு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு, ரொம்ப கூட்டம், நேரமும் ஆகுது , கூட்டத்தில் மேலயே விழறாங்க இன்னிக்கு ஒருத்தனை அடிச்சிட்டேன். ரொம்ப அசிங்கமா பேசினான் இடிச்சிட்டு”.
“அட நீ ஏன் மா இதெல்லாம் பண்ற, நமக்கு எதுக்கு ஊர் வம்பு?. சரி நாளைக்கு வேணும்னா காசியை கூட கூட்டிட்டு போ எவனும் கிட்ட வரமாட்டான், உன்கிட்ட தான் அவன் நல்லா பேசறானே”.
“ஒருத்தன் ரௌடியா இருந்தால் அப்படியே தான் இருக்கணுமா. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் எனக்கு யாரும் அடியாள் தேவையில்லை”என்று பொரிந்து தள்ளினாள்.
“சரி நம்ம அத்தை தான் பிள்ளையை பார்க்க சிங்கப்பூர் போறாளே அவள் கார் சும்மா தானே இருக்கு அதை அனுப்ப சொல்றேன், நீயே ஓட்டிட்டு போ உனக்கு தான் கார் ஓட்ட தெரியுமே நேரத்துக்கு வீட்டிற்கு வரலாம் இல்லையா”.
“இப்போ சொன்னீங்களே இது நல்ல விஷயம். ஏற்பாடு பண்ணுங்க”.
இரண்டு நாளில் கார் வந்தது அதில் பயணம் செல்ல தொடங்கினாள், மூன்றாவது நாள் கிளம்பும் வேளையில் சமைக்கும்போது பருப்பு தண்ணி சூடாக காலில் கொட்டியது, வலி ஒன்றும் பெருசாக இல்லை, சற்று தாங்கி தாங்கி நடக்கவேண்டும் என்பது போல இருந்தது. இன்று பரீட்சை வேறு சீக்கிரம் போகணும் என்ன பண்ணலாம்னு யோசிக்கையில்.....நேராக காசியிடம் சென்றாள்.
“காசி ஒரு உதவி”.
“சொல்லுங்க அவ்வையாரே”.
“என் பேரு பானு, அப்படியே சொல்லலாம்”.
“எனக்கு நீங்க அவ்வையாறு தான், என்ன வேணும் சொல்லுங்க”.
“கார் ஓட்ட தெரியுமா, சிதம்பரம் வரை போகணும் திரும்ப மாலை 6 மணிக்கு வரணும்”.
“வாங்க போவோம்”.
காசி கிளம்புவதை பார்த்து அங்கிருக்கும் தெரு மக்கள் “இவனை போயி கூட்டிட்டு போறியேமா ஏதாவது நடக்ககூடாதது நடந்தால் யார் பொறுப்பு” என்றனர்.
"இவரை ரவுடி ஆக்கினதே இந்த தெரு மக்கள் நீங்க தான், அவர் பசின்னு வரும்போது சாப்பாடு போட்டிருந்தால் இவர் இப்படி ஆகியிருக்க மாட்டாரே, நீங்களே ஒருத்தனை கெடுத்துட்டு என்னை பாதுகாப்பாக போக சொல்றீங்களே, போங்க வேலையை பார்த்திட்டு” என்று அதட்டினாள்.
இதை சற்றும் எதிர்பாக்காத காசி, பானுவை பார்த்தபடியே நின்றான் அவன் கண்கள் கலங்கி விட்டது. கொஞ்ச நேரம் எதுவுமே புரியவில்லை அவனுக்கு, பேசாமல் வந்தான்.
“என்ன யோசனை?” என்றாள் பானு.
“எப்படி இப்படி ஒரு பதிலை சொன்னீங்க அவங்களுக்கு”.
“ உண்மையை தானே சொன்னேன்”.
“உண்மை தான். உண்மை தான் அன்னிக்கு இவங்க யாராவது உதவி செய்திருந்தால் நான் இப்படி ஆகியிருக்க மாட்டேன். சொந்தம் இல்லாதவன் எதிர்பார்ப்பது எல்லாமே கொஞ்சம் அன்பு, அக்கறை மட்டும் தானே அது கிடைத்தாலே என்னவேனாலும் செய்யலாம்” என்று கண்கலங்கியபடி பேசினான் காசி.
“அடேங்கப்பா உங்களுக்கு இப்படி பேச கூட வருமா”.
“நான் பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன், என் பத்தாவது மார்க் என்ன தெரியுமா? 88%”
“அடேங்கப்பா அப்படியா. இப்படி நல்லா படிச்சவனா இப்படி ஆனது”.
“ஆமாம், தமிழ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழில் 92 மார்க் பத்தாவதில். தமிழ் நல்லாவே படிக்க தெரியும்”.
“அப்புறம் என்ன இப்போ கூட படிக்கலாமே”.
“இப்போவா, இப்போ எப்படி”.
“வழி இருக்கு, குறிப்பிட்ட வயசு தாண்டிட்டா நேராக இளநிலை பட்டம் வகுப்பு படிக்கலாம்,நான் உதவி செய்யுறேன், காசு பற்றி கவலை பட வேண்டாம். இனிமேல் எனக்கு நீங்க தான் டிரைவர், மாசம் 2500 சம்பளம். BA தமிழ் விண்ணப்பம் நான் வாங்கி தரேன் படிங்க”.
கார் ஒவ்வோர் கியர் தாண்டி செல்ல தொடங்கியது அவர்களின் உறவு போல.
அன்று முதல் அவளிடம் இருந்த பல புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்வாள்.
கையில் கட்டையுடன் பார்த்த காசியை புத்தகத்துடன் பார்க்கவே அந்த தெரு மக்கள் ஆச்சிர்யப்பட்டனர், பானு சொன்னபடி BA தமிழ் படிக்க விண்ணப்பம் தந்தாள். காசி படிக்க தொடங்கினான், அவன் வீட்டை சீர் செய்ய தொடங்கினான். அந்த இடிஞ்ச ஒட்டு வீடு அழகான வீடாய் மாறியது.
ஒரு வருடம் ஓடி விட்டது, காசி மற்றும் பானுவின் தமிழ் பேச்சுகளும் தினமும் அதிகமாகி கொண்டே போனது. முத்துசாமி இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று கீர்த்தி வர்மன் வீட்டில் பேசி சம்மதம் வாங்கினார், பானுவும் சம்மதித்தாள். அவர்கள் வீட்டு மாடியில் நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு செய்தனர்.
அவர்கள் நிச்சயதார்த்தம் நன்றாக நடந்தது. காசி பாலகுமாரனின் உடையார் புத்தகத்தை பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அவனை பார்த்ததும் கீர்த்தி வர்மன் முகம் சுளிக்க ஆர்மபித்தான். அவன் புத்தகத்தை தர அதை வாங்கி கீழே எறிந்தான்.
“ஒரு டிரைவர் என் முன்னாடி வந்து பரிசு கொடுக்கிறது எனக்கு பிடிக்கலை. நீ இனிமேல் பானுவை பார்ப்பதே எனக்கு பிடிக்கலை, வெளிய போ” என்று கத்தினான் கீர்த்தி வர்மன்.
இதை கேட்டதும் பானு அதிர்ச்சியானாள், வந்த சொந்தங்கள் சிலரும் கீத்திவர்மன் பெற்றோரும் காசி ஒரு ரவுடி மிருகம் அவனெல்லாம் நமக்கு தேவையே இல்லை என்று அதட்டினர்.
“நிறுத்துங்க!! யார் ரவுடி காசியா இல்லை நீங்களா?? கீர்த்திவர்மன் அப்பாவை பார்த்து, காசி அப்பாவும் நீங்களும் நண்பர்களா தானே இருந்தீங்க அவர் செத்துப்போன பிறகு உங்க கிட்ட தானே முதலில் உதவி கேட்டார் அப்போ நீங்க செய்திருந்தால் அவர் ரவுடி ஆகியிருக்கமாட்டார். உங்க மகனை கல்யாணம் செய்ய பேசி இருக்காங்கன்னு அவர்கிட்ட சொன்னபோதும் அவர் ரொம்ப நல்லவர்ன்னு நீங்க கொடுத்து வெச்சானவங்கன்னு சொன்னாரு, நீங்க செய்யாத உதவியும் மறந்து. நீங்க எல்லோரும் சேர்ந்து தப்பு செய்திட்டு இவரை குறை சொல்றீங்களா. இவ்வளவு நாள் காசியை பார்த்தாலே பயந்து பத்தடி போன ஆளுங்க இப்போ படிச்சிட்டு இருக்கானு தெரிஞ்சதும் ஏறி மிதிக்க பாக்கறீங்க. இவர் எனக்கு டிரைவர் ஆக தான் வேலை செய்யுவார், அது பிடிக்கலைன்னா கிளம்புங்க எனக்கு கல்யாணமே வேண்டாம்”.
பானு கறாராக பேச மொத்த கூட்டமும் கலைந்தது, முத்துசாமி இடிந்து போனார், சில மாதங்கள் கடந்தது முத்துசாமி உடல் நலிவுற்று காலமானார், அவருக்கு கடைசி மரியாதை செய்ய கூட யாருமே வரவில்லை. காசி மட்டுமே நின்று அனைத்தையும் செய்து கொல்லியும் வைத்தான்.
சக மனிதனை மனிதனாக பார்க்காமல் ஒரு சிறு உதவி கூட செய்யாத இவர்கள் மனிதர்களாவும் காசியை மிருகமாகவும் பார்ப்பதை அவள் வெறுத்தாள். இனி இந்த ஊரே வேண்டாமென்று சிதம்பரத்தில் ஒரு வீடு எடுத்து தங்கலானாள்.
காசி பானுவின் பாதுகாவலனாகவே வாழ்க்கையை ஓட்ட தொடங்கினான், வருடங்கள் ஓடியது இப்போது காசி முதுகலை பட்டம் பெற்று, தமிழ் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்,பலருக்கு தன் சொந்த செலவில் படிக்க வைக்கிறான். அதே சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் பேராசிரியராய் வேலையில் சேர்ந்து விட்டான்.
காசியை நன்கு புரிந்த பானு அவனையே திருமணம் செய்து கொண்டாள் இப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ஒரு மனிதனை மிருகம் ஆக்குவதும் கடவுள் ஆக்குவதும் அவர்களின் நல்வளர்ப்பு மட்டுமே! இந்த சமுதாயம் அதை சரியாக செய்தால் போதும்!!
