காதல் எக்ஸ்பிரஸ்
காதல் எக்ஸ்பிரஸ்
காதல் எக்ஸ்பிரஸ்
பிரசாந்த் அதிகாலையில் தன் காரில் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி அவனது மாமா ராஜூவை ரயில் நிலையத்தில் இறக்கிவிட சென்று கொண்டிருந்தான்.
"என்னடா நீ, இன்னும் கல்யாணம் செய்துக்காமல் இருக்கே, உன் கூட சுத்திட்டு இருந்த நண்பன் சேகருக்கும் கல்யாணம் முடிவாகிருச்சு போல, உனக்கும் வயசு 30 ஆக போகுது இன்னும் கல்யாணம் செய்துக்க மாட்டேங்குற உன் அம்மா பாவம் இல்லையா அவளுக்கும் வயசாகுதில்ல, காலாகாலத்திலே கல்யாணம் பண்ண வேண்டாமா..."
"அட ஏன் மாமா, நீங்க வேற பொண்ணு கிடைச்சா பண்ண மாட்டோமா...இந்த அரேஞ்சு மேரேஜ் ரொம்ப கொடுமை. வருஷா வருஷம் பல மேட்ரிமோனிக்கு காசு கட்டுறது மட்டும் தான் நடக்குது ஒன்னும் சரியாய் அமையலை, இப்போவும் இரண்டு பேர் பேசி ஜாதகம் வாங்கினதா சொன்னாங்க அம்மா....அப்புறம் ஒன்னும் நடக்கலை.... ஏன்??, அம்மா உங்க கிட்டே புலம்பினாங்களா இதை பத்தி?"
"ஆமாம் அவளுக்கு இருக்கிறது ஒரே பிள்ளை அந்த கவலை அவளுக்கு, யாரையாவது லவ் பண்ண வேண்டியது தானே டா"
"அதெல்லாம் இப்போ சொல்லுங்க, படிக்கிற காலத்துலே ஏகப்பட்ட பொண்ணு மேலே காதல் வந்துச்சு, காதல் கல்யாணமே செய்ய கூடாதுன்னு ஒரேடியா சட்டம் பேசிட்டு இப்போ வயசானதுக்கு அப்புறம் காதலிக்க வேண்டியது தானேனு கேட்க வேண்டியது. ஏதோ அம்மா சொல்ராங்களேன்னு மரியாதை கொடுத்து காதல் பக்கம் போகாமல் இருந்தா இப்போ ஏன்டா போகலைன்னு கேக்குறாங்க?"
"எங்களுக்கு என்ன தெரியும் இப்படி பொண்ணு கிடைக்க படாத பாடு படவேண்டியிருக்கும்னு, அப்படி எத்தனை பொண்ணு மேலே காதல் வந்துச்சு? சொல்லேன் கேட்போம்"
"அது இருக்கு நாலு பொண்ணுங்க, பன்னெண்டாவது படிக்கும்போது என் கிளாஸ் பொண்ணு நிவேதா, காலேஜ் முதல் வருஷம் கீர்த்தனான்னு ஒரு பொண்ணு, அப்புறம் வீட்டு பக்கம் சின்ன வயசு தோழி கல்பனா, அப்புறம் கடைசி வருஷம் காலேஜ் அப்போ முதல் வருஷம் படிச்ச காவ்யா"
"அடப்பாவி இவ்ளோ கதை இப்போ சொல்றியே அப்போவே சொல்லியிருந்தா இந்நேரம் கல்யாணம் ஆகியிருக்கும்ல"
"ஹ்ஹம்ம்ம் அம்மா தான் பெரிய குண்டை தூக்கி போட்டாங்களே அப்போ, காதலிச்சா என்னை உயிரோடவே பார்க்க முடியாது, உன் அப்பாக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது அவர் மனசு கோணமா நடந்துக்கோ அப்படி இப்படின்னு, இப்போ வந்து உன் ஆபீஸ்ல ஒரு பொண்ணும் இல்லையா, சக கோத்ரம் இல்லாம மட்டும் பார்த்துக்கோ எந்த ஜாதினாலும் பரவாயில்லைனு இப்போ சொல்ராங்க....நான் என்ன பாக்குற பொண்ணை எல்லாம் போய் உன் கோத்ரம் சொல்லுன்னு கேட்டுட்டா காதலிக்க முடியும், எல்லாமே காலம் கடந்து போச்சு ஒரு தலையா காதலிச்ச எந்த பொண்ணுக்கிட்டேயும் காதலை சொல்லவேயில்லை அநியாயத்துக்கு நல்ல பிள்ளையாவே இருந்து தொலைச்சிட்டேன் இப்போ அனுபவிக்கிறேன்"
"அந்த பொண்ணு யாரையாவது அப்புறம் பார்த்தியா?"
"இல்லையே"
"இப்படி நல்ல வாய்ப்பையெல்லாம் விட்டுட்டியே, நீ சரியான நைண்ட்டி கிட் தான் டா"
"விடுங்க, கல்யாணம் நடக்கும் ஒரு நல்ல பொண்ணா என் கண்ணில் படுவா அப்போ சொல்றேன் நீங்களே பேசி முடிச்சிருங்க"
"சீக்கிரம் சொல்லுடா, சீக்கிரம் கல்யாணம் பண்ணனும், உன் நண்பன் எல்லோருக்கும் கல்யாணம் ஆகிருச்சு நீ மட்டும் தான் பாக்கி, உன் நண்பன் சேகருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லு, காலேஜ் படிக்கும்போது பார்த்தது அவனை"
"கண்டிப்பா சொல்றேன், அவனுக்கு அமைஞ்சது நடக்குது, உங்களை விட்டுட்டு நேரா தஞ்சாவூர் தான் போறேன் அவன் கல்யாணத்துக்கு, நான் உங்களையும் திருச்சியில் ரயில் ஏத்திவிடறேன்னு சொன்னேன் நீங்க தான் கேட்கவே மாட்ரீங்க. இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அடுத்த நிறுத்தம் திருச்சி தானே"
"அதெல்லாம் வேணாம், காரில் ரொம்ப நேரம் உட்கார முடியாது, எனக்கு மூட்டு வலி, அது போக அடிக்கடி பாத்ரூம் போகணும் இல்லைனா கஷ்டம், ரயில் ஏறி உட்கார்ந்தா தூங்கிடலாம் நேராக மதுரை இறங்கினா போதும். பாத்ரூம் பிரச்சனையும் இல்லை, நீ எனக்காக நிறுத்தி நிறுத்தி போகணும் நீ உன் வழியில் போ, மதுரைக்கு போனவுடனே சொல்றேன் அங்கே மாமி எனக்காக காரில் காத்திட்டு இருப்பா வெளியே"
"சரி உங்க இஷ்டம். எழும்பூர் வந்தாச்சு, நான் இங்கே இறக்கிட்டு கார் நிறுத்தத்தில் காரை நிறுத்திட்டு வரேன், ரயில் ஏறி உட்கார்ந்த அப்புறம் கிளம்பறேன், மூட்டு வலியில் படிக்கட்டு ஏற வேணாம், முதல் நடைமேடைல தான் நிக்கும் நினைக்கிறேன், கொஞ்சம் பொறுங்க நான் வரேன் பையை தூக்கிட்டு போக"
கார் எழும்பூர் நிலையத்தில் நிற்க, ராஜு இறங்கி கொண்டார், அவன் கார் பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது, அதில் அவசர அவசரமாக ஒரு பெண்ணும், ஒரு ஏழு வயது உள்ள சிறுவனும் இறங்கினார்கள்.
பிரசாந்த் காரை பார்க்கிங் பக்கம் எடுக்க நகர்த்த அது அவள் பெட்டி மேல் லேசாக தட்டி விட்டது.
"ஹே அறிவில்லை முன்னாடி நடந்து போறது கண்ணுக்கு தெரியலையா...." என்று குரல் வந்தது.
"சாரி சாரி தெரியாம இடிச்சிட்டேன்" என்று சொன்னபடியே பிரசாந்த் அவசரமாக இறங்க அங்கே நின்றிருந்தது அவன் கல்லூரியில் பார்த்த ஜூனியர் காவ்யா.
"சித்தி பெட்டிக்கு ஒன்னும் ஆகலை....வாங்க போகலாம்" என்றான் அந்த சிறுவன்.
"சாரி தெரியாம...." (இது காவ்யா தானே என்று அவன் மனம் அவளிடம் பேச துடித்தது)
"ரயிலுக்கு நேரமாச்சு இல்லைனா நடக்கிறதே வேற...." என்று கோவமாக அவள் கிளம்பினாள்.
கோவத்திலும் அவள் முகத்தில் செய்த சேஷ்டைகளை பார்த்ததும் ப்ரஷாந்துக்கு சிரிப்பாகவே இருந்தது. அவளுக்கு அவனை ஞாபகம் இருந்த மாதிரி தெரியவில்லை, அவன் மனதிற்குள் இருந்த பட்டாம்பூச்சி மெல்ல பறக்க தொடங்கியது.
காரை நிறுத்திவிட்டு ராஜு மாமாவை அழைத்து கொண்டு ரயிலில் ஏறி பத்தாம் நம்பர் இருக்கை எண்ணை பார்த்து அமர செய்தான்.
"மாமா நான் சொன்னேன்ல கல்லூரி ஜூனியர் காவ்யா அந்த பொண்ணு தான், என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிவேயில்லை, அவளும் இதே ட்ரெயின் தான் போல..."
அதே கோச்சில் அவளும் ஏறினாள், அவர்கள் இருக்கையோ எட்டு, ஒன்பது எண்கள்.
அவளது கனமான பெட்டியை அவள் தூக்க முடியாமல் தூக்கி மேலே வைக்க முயற்சி செய்ய அதை பிரஷாந்த் தலையிலேயே இடித்தாள்.
"ஹலோ பாத்துங்க பின்னாடி ஆள் இருக்கிறது தெரியலையா...."
"உங்களுக்கு முன்னாடி தெரியாத மாதிரி எனக்கு பின்னாடி தெரியலை போதுமா...."என்ற நக்கலாக சொன்னாள்.
அவள் பதிலை கேட்டதும் அவளை ஏற இறங்க பார்த்தான்...."கல்லூரியில் பார்த்த அதே வாயாடி காவ்யா தான்" என்று மனசுக்குள் நினைத்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
"மாமா கிளம்பறேன் இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு ரயில் கிளம்ப, ஊருக்கு போனதும் தகவல் சொல்லுங்க...முடிஞ்சா பேச்சு கொடுத்து பாருங்க என்று கண்களால் சைகை காட்டிவிட்டு சென்றான்"
"சரி டா நீயும் பார்த்து போ, நல்ல செய்தியா சொல்லு சீக்கிரம், ஒரு தண்ணி பாட்டில் மட்டும் வாங்க முடியுமா?"
"இதோ வாங்கறேன்"
பிரசாந்த் கீழே இறங்கினான், ரயில் உள்ளே அவள் அலைபேசியில் பேசி கொண்டிருந்தாள்.
"ஹலோ அக்கா ஸ்டேஷன் வந்தாச்சு ரயில் ஏறியாச்சு, இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்பிடும், அப்பா திருச்சி ஸ்டேஷன்க்கு வந்திருவாரு கூட்டிட்டு போக"
"பார்த்து போ காவ்யா, இதான் முதல் முறை நான் இல்லாம அனிருத் தனியா வரான், கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டான், எது கேட்டாலும் ரயில் உள்ளே மட்டும் வாங்கி கொடு, அடம் பிடிச்சாலும் வெளியே ஏதும் வாங்கி தராதே புரியுதா, இந்த லீவ்க்கு ஸ்ரீரங்கம் அனுப்பறேன்னு சொல்லிட்டேன் ஒரு வாரம் இரு டா பாப்பாக்கு தடுப்பூசி போட்டுட்டு நானே கூட்டிட்டு போறேன்னு சொன்னா கேட்கலை"
"அதெல்லாம் நான் பார்த்துகிறேன், நான் தான் மாசம் ரெண்டு முறை வீட்டுக்கு போறேனே, சும்மா பட்டு குட்டியை திட்டாதே, இதுவரைக்கும் சமத்தா தான் வரான் என் கூட, எனக்கு அவனை பத்திரமா கூட்டிட்டு போக தெரியாதா என்ன??"
"உனக்கு அவனை பத்தி தெரியலை நான் தானே முழு நேரம் பாக்குறேன், நீ இங்கே கூட துணைக்கு இருன்னு சொன்னாலும் வேண்டாம்னு ஹாஸ்டல் போயிட்டே எப்போவாவது தான் இங்கே வர, இவனையும், ரெண்டவாவது வாண்டு ப்ரதிக்ஷயாவையும் பாத்துகிறதுக்குள்ள போதும்னு ஆகிடும், சரி ஊருக்கு போயிட்டு கூப்பிடு, நான் அவருக்கு சமையல் ரெடி பண்ணனும்"
எல்லாம் முடித்து அப்பாடான்னு அமர்ந்தாள் காவ்யா.
"சித்தி அந்த கடைலேந்து கிண்டர் ஜாய் வேணும் வாங்கி தாங்க...." ரயில் வெளியே இருக்கும் கடையை பார்த்து கேட்டான்.
"அதெல்லாம் இல்லை, இன்னும் கொஞ்சம் நேரத்தில் ரயில் கிளம்பிடும் இங்கேயே வரும் அப்போ வாங்கலாம் பொறுமையா இரு...."
"அதெல்லாம் இல்லை எனக்கு இப்போவே வேணும்...."
"டேய் சமத்து பையன் தானே சித்தி சொல்றதை கேளு அப்புறமா இங்கேயே வரும் வாங்கலாம்....சொன்னா கேக்கணும் பட்டு குட்டி"
"எனக்கு இப்போவே வேணும்....."என்று கத்த ஆரம்பித்தான் அனிருத். ட்ரெயின் கிளம்பறதுக்குள்ள வாங்கிடலாம் வா...
"ஐயோ எல்லோரும் பாக்குறாங்க டா அழுகையை நிறுத்து நான் இங்கே வரும்போது வாங்கி தரேன்"
"இப்போவே வேணும் எனக்கு......" அனிருத் இன்னும் சத்தமாக கை கால்களை ஆட்டியபடி அலறினான்.
கை கடிகாரத்தை பார்த்தாள் இன்னும் ரயில் கிளம்ப ஏழு நிமிடம் காட்டியது.
"சரி இங்கேயே இருக்கணும் வெளிய வர கூடாது நான் உடனே வாங்கிட்டு உடனே வந்துருவேன் புரியுதா....எங்கேயும் போக கூடாது ஜன்னல் வழியா என்னை பார்த்துட்டே இருக்கணும் புரியுதா"
பக்கத்தில் இருந்த அந்த பெரியவரிடம் (ராஜு)....
"சார் இங்கே வெளிய கடையிலேந்து ஒன்னு வாங்கிட்டு வந்துடறேன் இவனை இங்கேயே பார்த்துக்கறீங்களா......இரண்டே நிமிஷத்தில் வந்துருவேன்".
"சரி போயிட்டு வாம்மா" என்றார் ராஜு.
அவள் வெளியே இறங்கும் நேரம் பிரஷாந்த் சரியாக தண்ணி பாட்டில் உடன் உள்ளே வந்தான். இருவரும் யார் முதலில் உள்ளே வர அல்லது வெளியே போக என்று யோசித்தபடி இருக்க, பிரஷாந்த் அவளுக்கு வழி விட்டு மாமாவிடம் பாட்டில் கொடுத்துவிட்டு இறங்கினான்.
கடையில் கிண்டர் ஜாய் சாக்லேட் வாங்க...அவன் சில்லறை இல்லை என்று சொல்ல....
"இருக்கிறதை கொடுங்கண்ணா ட்ரெயின் கிளம்பிடும்" அவள் அவசர படுத்தினாள்.
அது அதிகாலை நேரம் வேறு, அவன் அப்போது தான் கடையை திறந்திருந்தான், முதல் போனியே சில்லறை இல்லாமல் வர அவன் புலம்பியபடியே சில்லறையை தேடி எடுத்து கொடுக்க. அதை கையில் வாங்கியபடி அவள் வேகமாக திரும்பி ரயில் பக்கம் ஓட, பிரசாந்த் எதிரே வர இருவரும் மோதி கொண்டனர்.....சில்லறைகள் சிதறி ஓடின.
குனிந்து சில்லறையை எடுக்க முயல ரயில் கிளம்பும் விசில் அடித்துவிட்டனர், அப்படியே விட்டுவிட்டு காவ்யா கிளம்பி கதவருகே செல்வதற்குள் ரயில் கிளம்பி விட்டது, அந்த தானியங்கி கதவும் மூடி கொண்டது.
"ஐயோ குழந்தை.....அனிருத்....அனிருத் என்று அலறியபடி அவள் ஓட, ஸ்டேஷனில் இருப்பவர்களும், ரயில் உள்ளே இருப்பவர்களும் பதட்டம் அடைந்தனர்.
ரயில் உள்ளே இருப்பவர்கள் ரயிலை நிறுத்த முயற்சிக்க ஒன்றும் முடியவில்லை....
ஒரு பக்கம் அந்த சிறுவன் அனிருத்தும் சித்தி வராமல் ரயில் கிளம்பியதை பார்த்து பயத்தில் அழ தொடங்கினான்.
ரயில் வேகமெடுத்துவிட்டது....
ராஜு ரயில் உள்ளே அனிருத்தை பத்திரமாக பிடித்துக்கொண்டார்...
"பயபடாதே நான் இருக்கேன்....."
ஓடி ஓடி களைத்து மூச்சிரைக்க அப்படியே அமர்ந்துவிட்டாள் காவ்யாவிற்கு கண்ணில் தாரை தாரையாக நீர் கொட்டியது, பின்னால் அவளோடவே ஓடி வந்த பிரஷாந்த் அவளை அழைத்து கொண்டு வேகமாக ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.
"சார் சார்...இவங்க குழந்தையை ரயிலில் விட்டுட்டாங்க, இவங்க ஏர்றதுக்குள்ளே ட்ரெயின் கிளம்பிருச்சு.....தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.....உடனே நிறுத்த முடியுமா பாருங்க...."
அவளுக்கு வார்த்தை வரவில்லை, கை கால்கள் நடுங்க தொண்டங்கிற்று....
ரயில்வே போலீஸ்...அவர்களை அதட்டியது.
"இதே வேலையா போச்சு, குழந்தையோட வரவங்க ஜாக்கிரதையா இருக்க வேணாமா, அது ஒரு தானியங்கி கதவு ஒரு தடவை மூடிட்டா திறக்க முடியாது....நான் உடனே டிடிஆர்க்கு தகவல் சொல்றேன். உள்ளே இருக்கிற மக்கள் யாராவது ரயிலை நிறுத்தினால் எங்கே நின்னாலும் தகவல் வரும் நீங்க போய் அழைச்சிக்கலாம் ஆனால் அபராதம் கட்டவேண்டியிருக்கும். ஜாக்கிரதையாக இருக்க வேணாமா உங்க ஒருதரால எத்தனை பேருக்கு நேரம் வீண்" என்று கடிந்து கொண்டார்.
ரயிலில் உள்ள டிடிஆர் அவள் அலைபேசிக்கு வந்தார்,....
"சார் நான் அந்த பையனை பார்த்துட்டேன், பக்கத்தில் ஆட்களும் இருக்காங்க, இங்கே ரயிலை நிறுத்த முயற்சி செய்தாங்க ஆனால் ஏதோ பழுதாகியிருக்கு. பையனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அவன்கிட்டே பேசலாம் அவங்களை பேச சொல்லுங்க...."
அவர் அலைபேசியை நீட்ட அனிருத் வாங்கி...."சித்தி ....சித்தி..."என்று அழுதான்.
"அனிருத் கண்ணா அழாதே நான் எப்படியும் வந்துருவேன், பயப்படாம இரு...." அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.
பிரசாந்த் அவளிடம் பேசினான், "கவலைப்படாதீங்க பக்கத்தில் இருக்கிறது என்னுடைய மாமா தான், குழந்தை பத்திரமா இருக்கான், இப்போது தான் அவர் கிட்டே பேசினேன்"
ரயில்வே போலீஸ் அவளிடம் கேள்வியாக கேட்டனர். நீங்க எங்கே இறங்கணும் திருச்சியா?? மதுரையா??"
"திருச்சி சார்" அழுதபடியே சொன்னாள் காவ்யா.
"அங்கே யாராவது சொந்தக்காரங்க இருந்தா வர சொல்லுங்க, பத்து மணிக்கு திருச்சி இறக்கத்தில் திருச்சி ரயில்வே போலீஸிடம் பாதுகாப்பா ஒப்படைப்போம், வேற ஒன்னும் பண்ண முடியாது, உடனே ஒரு கம்பளைண்ட் எழுதி கொடுங்க. ட்ரெயின் அடுத்து திருச்சியில் தான் நிக்கும், அடுத்த ட்ரெயின் ஒன்பது மணிக்கு குருவாயூர் இருக்கு அதுல போனால் மதியம் இரண்டு மணிக்கு திருச்சி போயிடலாம் இல்லைனா கார் இல்லை பஸ் ஏறினால் கொஞ்சம் முன்னாடி போக முடியும் அது உங்க வசதி" என்றார்.
"நீங்க பதட்டப்படாதீங்க, தகவல் சொல்லுங்க நான் புகார் எழுதி கொடுக்கிறேன்" என்றான் பிரசாந்த்.
"குழந்தை பெயர் என்ன?"
"அனிருத்"
"வயசு?"
"ஏழு"
"நீ காவ்யா தானே...உன் முகவரி?"
"ஆமாம் காவ்யா...முகவரி.....துரைப்பாக்கம்....."
"திருச்சி முகவரி....அங்கே யார் வருவா அவங்க நம்பர், முகவரி சொல்லுங்க...."
"அங்கே என் அப்பா ரங்கராஜன் வருவாரு, அவர் நம்பர்....முகவரி...."
அனைத்தையும் எழுதி அவன் அலைபேசி எண், முகவரியும் கொடுத்தான் பிரஷாந்த்.
போலீஸ் ஸ்டேஷன் விட்டு வெளியே வந்ததும்.....அழுதபடியே அவனிடம் கத்தினாள் காவ்யா.
"எல்லாம் உங்களால் வந்தது, நீங்க பார்த்து வந்திருந்தால் நான் சரியாய் ட்ரெயின் ஏறியிருப்பேன், ஆரம்பத்திலிருந்து உங்களால் இன்னிக்கு நேரமே சரியில்லை"
"ஹலோ நான் வேணும்னே இடிச்ச மாதிரி பேசறீங்க இது தற்செயலா நடந்தது தான்....உங்களுக்கு இப்போ நேரமில்லை உங்க வீட்டுக்கு முதலில் தகவல் சொல்லுங்க"
"நான் இப்போ இதை சொன்னால் என்னை கொன்னே போட்டிருவா என் அக்கா"
"சரி இப்போ யோசிக்க நேரமில்லை நான் ஒரு ஐடியா சொல்றேன்....நான் தஞ்சாவூர் தான் போறேன் என் காரில், நீங்க என் கூட வந்தால் பத்து மணிக்குள்ளே திருச்சியில் விட வேண்டியது என் பொறுப்பு, கவலை படாதீங்க இப்போவே கிளம்பினால் வேகமா போனால் பத்து மணிக்குள்ளே போயிடலாம்...என்ன சொல்ற...?"
"மறுபடியும் உங்க கூடவா?? ஏற்கனவே கெட்ட நேரம் இதுல உங்க கூட வேறயா...."
"யோசிக்க நேரம் இல்லை....என்னை உனக்கு தெரியலையா நான் உன் காலேஜ் சீனியர் பிரஷாந்த்...நானும் தஞ்சாவூர் சாஸ்த்ராவில் தான் படிச்சேன்"
"இப்போ ரொம்ப முக்கியமா இந்த அறிமுகம்? நான் டாக்ஸி புக் பண்ணிக்கிறேன்"
"டாக்ஸி உடனே கிடைக்காது நான் தஞ்சாவூர் தான் போறேன் என் நண்பன் கல்யாணத்துக்கு, உன்னை திருச்சியில் இறக்க வேண்டியது என் பொறுப்பு, காலை நேரத்துல அவ்ளோ டிராபிக் இருக்காது....சொன்னா புரிச்சிகிக்கோ"
"சரி கிளம்புங்க உடனே...."
இருவரும் ஒரே ஓட்டமாய் நேராக காருக்கு சென்றனர்....காவ்யாவின் பதட்டம் மட்டும் குறையவேயில்லை, அக்கா மகன் பத்திரமாக இருக்க வேண்டும், வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகும், அதுவுமில்லாமல் அதிகம் பழக்கமில்லாத முன்னாள் சீனியர் என்று மட்டுமே தெரிஞ்ச ஒரு நபரோடு தனியாக திருச்சி வரை காரில்.......போகிற வழியில் யாராவது தெரிந்தவர்கள் பார்த்தால் கூட செத்தேன் ....என்று நினைத்தபடி தலையை முக்காடு போட்டு கண்கள் மட்டுமே தெரியும்படி மூடி கொண்டாள்.
கார் வேகமாய் கிளம்பியது....ட்ரெயின் கிளம்பியது காலை ஆறு மணிக்கு, திருச்சிக்கு செல்லும் நேரம் ஒன்பது ஐம்பத்திஐந்துக்கு. இப்போது நேரம் ஆறு மணி முப்பது நிமிடம் ஆகிவிட்டது. அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாததால் காரை வேகமாய் கிளம்பினான் பிரஷாந்த்.
"உங்க அப்பாக்கு தகவல் சொல்லு உடனே...இது என் மாமா அலைபேசி நம்பர் உங்க அப்பா கிட்டே பேசி குழந்தையிடம் பேச சொல்லு"
"அவரை தான் கூப்பிடறேன்....."என்றாள்.
மறுமுனையில் அவர் எடுக்க, நடந்த அனைத்தையும் அழுதபடி சொல்லி முடித்தாள்.
"என்ன காவ்யா இப்படி பண்ணியிருக்கே, மாப்பிளைக்கு தெரிஞ்சா கண்டிப்பா சத்தம் போடுவார்.....இப்போதைக்கு பாக்யாக்கு (அக்கா) எதுவும் சொல்லாதே, அவள் கூப்பிட்டாலும் எடுக்காதே இல்லை ஏதாவது சொல்லி சமாளி. நான் சீக்கிரமே ஸ்டேஷன் போயிட்டு திருச்சி போலீஸிடம் சொல்லி பார்த்துகிறேன்" என்றார் ரங்கராஜன் அவள் அப்பா.
" இப்போ யார் கூட காரில் வர திருச்சிக்கு...."
"தெரிஞ்சவர் தான் அப்பா என் காலேஜ் சீனியர்"
"பத்திரமா வா, ஒன்னும் வேகம் வேணாம், நான் அனிருத்தை பார்த்ததும் சொல்றேன் ஒன்னும் அவசரம் இல்ல, புரியுதா"
காரை படுவேகமாக ஓட்ட ஆரம்பித்தான் பிரசாந்த். அவன் அலை பேசி அடித்துகொண்டேயிருந்தது.....
"அந்த போன் எடுத்து தான் பேசுங்களேன்...."என்று எரிச்சலாக சொன்னாள் காவ்யா.
"கார் ஓட்டும்போது எதுவும் பேச வேணாம், அதுவுமில்லாம நாம சீக்கிரம் போகணும், கிளம்பினதே லேட். காரில் ஐந்து மணி நேரமாவது ஆகும் திருச்சி போக, ரயில் போற வேகத்துக்கு போக முடியாது. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் போக முயற்சி செய்யுறேன்"
"அதான் காரில் ப்ளூடூத் ஸ்பீக்கர் இருக்கில்ல அதுல பேசலாம்ல...."
"அட ஆமாம்ல...." என்று ப்ளூடூத்க்கு உயிர் கொடுத்தான், அழைத்திருந்தது அவன் மாமா ராஜு தான்.
"டேய் கண்ணா, குழந்தை பத்திரமா இருக்கான், சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கேன். நீ கவலைப்படாதே. சும்மாவே யாருன்னு தெரியாதவனுக்கே உதவி செய்வே, இவள் உன்னோட முன்னாள் ஒரு தலை காதலி வேற....திருச்சி ஸ்டேஷன்க்கு அவளையும் கூட்டிட்டு வருவே போல....."என்று சொல்லி அவர் சிரிக்க.
அனைத்தையும் கேட்டபடி அவனையே முறைத்து பார்த்தாள் காவ்யா.
"ஐயோ மாமா இப்போ வைங்க நானே கூப்பிடறேன்"
"டேய் அவசரப்படாதே ரயில் வேகத்துக்கெல்லாம் வர முடியாது, பேசி புரிய வைக்கலாம், நான் திருச்சியில் பையனோட இறங்கிக்கிறேன், அங்கே இருக்கிற அவங்க தாத்தாவிடம் ஒப்படைச்சிட்டு உன்கிட்டே சொல்றேன், அடுத்த ரயிலில் மதுரைக்கு போயிக்கலாம், நீ நிதானமாவே வா, வேகமாய் வந்து வம்பில் மாட்டிக்காதே, புரியுதா"
"சரி மாமா"
சிறிது நேரம் மௌனம் மட்டுமே......கார் நெடுஞ்சாலையை பிடித்து வேகமாக பறந்து கொண்டிருந்தது.
அவனே மீண்டும் பேச தொடங்கினான்....
"சாரி அவர் ஏதோ தெரியாம பேசிட்டார், அதெல்லாம் ஏதும் இல்லை, உன்னை என் காலேஜ் க்ரஷ் அப்டினு தான் சொன்னேன் அவருக்கு அப்டின்னா என்னனு தெரியாது...."என்று வழிந்தான்.
"நான் ஏற்கனவே செம கடுப்பில் இருக்கேன், நீங்க என்னை இன்னும் கோவப்படுத்தறீங்க. நானே என் அக்காவும், அத்திம்பேரும் என்ன சொல்லுவாங்கனு பயந்திட்டு இருக்கேன் இதுல நீங்க வேற வெறுப்பேத்திக்கிட்டு....." என்று எரிந்து விழுந்தாள்.
"ஏன்? ரொம்ப கெடுபிடியான ஆளா உங்க அத்திம்பேர், இவ்ளோ பயப்படுற"
"உங்க குழந்தையை இப்படி விட்டுட்டு போனால் சும்மா இருப்பீங்களா?"
"அப்படியில்லை, எனக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலையே அதனால என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரியலை"
"இப்போ நாட்டுக்கு ரொம்ப அவசியமா....உங்களுக்கு கல்யாணம் ஆகலைனு எனக்கு தெரிஞ்சாகணுமாக்கும்"
"அடடா எது பேசினாலும் இப்படி எரிஞ்சு விழறாளே" என்று மனசுக்குள்ளேயே குமுறி கொண்டான்.
"எப்படியும் பத்து மணிக்கு அப்புறம் தெரியதானே போகுது பக்குவமா பேசி புரிய வைக்கலாம், கவலைப்படாதே"
"அதெல்லாம் என் அப்பா பேசிப்பார்"
"அப்புறம் எதுக்கு கவலை...."
"ரொம்ப அவசியம் தெரிச்சிக்கணுமா....."
"சும்மாதானே போயிட்டிருக்கோம் சொல்லலாமே...."
"எனக்கும் என் அத்திம்பேருக்கும் ஆகவே ஆகாது, அவர் சொல்றதை நான் கேட்டதேயில்லை, இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்பவே குதிப்பார் அதான்....இப்போ எனக்கு மாப்பிள்ளை பாக்குற வேலையும் அவர் தான் பாக்குறார் அவர் சொல்ற பையனை கல்யாணம் செய்துக்கணும்னு வம்பு வேற இருக்கு"
ப்ரஷாந்துக்கு பக்கென்று இருந்தது, "ஆஹா ஒரு வழியா பேசி பார்த்துடலாம்னு பார்த்தா நடக்காது போல இருக்கே" மனசுக்குள்ளேயே புலம்பி கொண்டான்.
"இதுக்கும் கல்யாணத்துக்கும் என்னம்மா சம்பந்தம்??"
"இருக்கு, அவரு அவர் ஆபீஸ்ல இருக்கிற ஒரு தேவாங்கை என் தலையில் கட்டி வைக்க பாக்குறாரு, எனக்கு வேலை கிடைச்சதும் என் அக்கா வீட்டிலேயே இருக்க சொன்னாரு எப்படியாவது பேசி சம்மதிக்க வெச்சிடலாம்னு, நான் உஷாரா ஆபீஸ் தூரமா இருக்குன்னு துரைப்பாக்கம் லேடீஸ் ஹாஸ்டல் போயிட்டேன், அத்திம்பேர் இல்லாத நேரமா பார்த்து அக்காவையும் பசங்களையும் பார்த்திட்டு வந்துருவேன், இப்போ அவர் சாமி ஆடுவரே, அவர் என்ன சொன்னாலும் எங்க அப்பா வேற கேட்டு தொலைப்பாரே அதான் டென்ஷன்"
"அந்த தேவாங்கு யாருன்னு தெரியுமா? அவர்கிட்டேயே போய் பேசிடலாமே எனக்கு உங்களை பிடிக்கலைன்னு"
"அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவாரா என் அத்திம்பேர் பக்கா கார்பொரேட் புத்தி, எல்லாம் ப்ராப்பர்சேனல் மூலம் தான் நடக்கும், எங்க அப்பா, அம்மாக்கு முதலில் போயிருக்கும், அப்புறம் அந்த பையன் அப்பா, அம்மாக்கு எல்லாம் பேசி ஒரு முடிவுக்காக காத்திட்டு இருகாங்க இப்போ, நான் இந்த நேரத்துலயா இப்படி சொதப்பி வெக்கணும், எல்லாம் உங்களால...."
"சுத்தம், கிட்டத்தட்ட எல்லாம் முடிவாகிருச்சு, ஆடு எப்போ தலை ஆட்டும்னு வெய்டிங்ன்னு சொல்லு ....."
"அதே தான்"
சரி இவளும் நமக்கில்லைன்னு முடிவு பண்ணிப்போம் என்று மனசை கல்லாக்கிக்கொண்டு."பையன் போட்டோ பார்த்தியா, பிடிச்சிருக்கா..."
"அதெல்லாம் யார் பார்த்தா, ஒரு கவரில் கொடுத்தாங்க நான் பிரிக்கவேயில்லை"
மீண்டும் பிரசாந்த் அலை பேசி அடித்தது....இந்த முறை அழைத்தது அவன் வேறு நண்பன் ரகு. மீண்டும் ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் எடுக்க....
"டேய் மாப்ள சேகர் கல்யாணத்துக்கு கிளம்பிட்டியா??, திருச்சி வழியா வர முடியுமா அப்படியே நானும், என் பொண்டாட்டியும் உன் கூட காரில் வரலாம்னு பாக்குறேன்"
"கிளம்பிட்டேன் டா, திருச்சி வழியா தான் வரேன், திருச்சி ரயில்வே ஸ்டேஷன் போகணும் ஒரு வேலை இருக்கு, நான் மலைக்கோட்டை கிட்டே வரும்போது சொல்லவா நீ தயாரா இரு"
"சூப்பர் மாப்ள, அப்புறம் ஒரு விஷயம் டா சொன்ன நீ ரொம்ப சந்தோஷ படுவ"
"அப்படியென்ன??"
"எங்க கல்யாண போட்டோ ஆல்பம் வந்திருச்சு, அதை என் பொண்ண்டாட்டியோட சித்தி பொண்ணு நேத்து வீட்டுக்கு வந்தபோது பார்த்துட்டு உன்னை சரியாய் அடையாளம் காட்டினா"
"என்னையா???"
"அட ஆமாம் அவளும் சாஸ்த்ரா காலேஜில் தான் படிச்சா, நீ ஒரு தலையா காதலிச்சியே ஒரு பொண்ணு காவ்யா அவளோட தோழி தான் இவள் வனஜா"
பிரஷாந்த் மீண்டும் திரு திருவென முழித்தான்...."என்ன இது இன்னிக்கு வம்படியா எல்லோரும் மாட்டி விடறாங்க...."என்று நினைத்தபடி....அவளோ தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"நாம காரில் போகும்போது இதை பத்தி பேசிட்டு போலாமே, நான் அப்புறம் கூப்பிடறேனே...."
"அட இரு மாப்ள, அந்த புள்ளையும் உன்னை ஒரு தலையாய் காதலிச்சாளாம், வீட்டுக்கு பயந்து உன்னை மாதிரியே சொல்லாம இருந்திருக்கா....காதலுக்கு வந்த சோதனையை பார்த்தியா....சொல்லாமலே காதலிச்சு என்ன பயன்....அவள் அப்பன் இங்கே திருச்சி பெல் (BHEL) கம்பெனியில் தான் வேலை பாக்குறாரு, நானும் அங்கே தானே வேலைக்கு சேர்ந்திருக்கேன் பார்த்து பேசி முடிச்சுவிடவா சொல்லு"
மனசுக்குள் புது தெம்பு பிறந்தது ப்ரஷாந்துக்கு, அப்படியே ஒர கண்ணில் அவளை பார்க்க, அவள் முகத்தை மூடிக்கொண்டு வெட்கி தலை குனிந்தாள்.
"சூப்பர் மாப்ள, இதை பத்தி நாம காரில் போகும்போது பேசலாம்...."
அவளையே பார்க்க....அவள் சிரித்தபடி வழிந்தாள்.
"ஹ்ஹ்ம், அப்போ இவ்ளோ நடந்திருக்கு, நீ சொல்லவே இல்லை"
"பின்னே காதலை நானா வந்து சொல்லணும், நீங்க தானே சொல்லணும்...நீங்க சொல்லலை நான் கேட்கலை அப்படியே காலம் ஓடிருச்சு, மறுபடியும் உங்களை சந்திப்பேன்னு நினைக்கவேயில்லை, இன்னிக்கு பார்த்ததும் கொஞ்சம் அதிகப்ரசங்கி தனமா தான் வெளியே வந்து உங்களை பார்க்க தான் வந்து இப்படி மாட்டிகிட்டேன்"
அவள் பேசி முடிக்க அவள் அப்பாவிடமிருந்து அழைப்பு ....
"ரயில் வந்தாச்சு, ப்ரஜனை பாதுகாப்பா சேர்த்துட்டாங்க, அவன் கூட ஒருத்தர் இறங்கினார் அவர் மதுரைக்கு போகணுமாம் அடுத்த ரயில் இரண்டு மணிக்கு தான், பெரிய உதவி செய்திருக்கார் அவரை நம்ம வீட்டு கூட்டிட்டு போறேன், நீ நேரா அந்த பையனோடு வீட்டுக்கு வா, அவருக்கும் நன்றி சொல்லிட்டு ரயில் ஏத்திவிடுவோம். உன் அக்கா கிட்டே நான் பேசிக்கிறேன், இப்போ தான் கூப்பிட்டா அனிருத்தை மட்டும் பேச சொல்லியிருக்கேன். எங்கேயிருக்கே இப்போ....??"
"திருச்சிக்கு இன்னும் 20 கிலோமீட்டர் இருக்குப்பா வந்துடறேன்...."
அழைப்பை துண்டித்ததும்....
"அப்பாடா அனிருத் வந்து சேர்ந்தாச்சு, உங்க மாமாக்கு தான் நன்றி சொல்லணும், நீங்க நேராக என் வீட்டுக்கு போங்க அவரும் அங்கே தான் போயிட்டிருக்கார், இரண்டு மணிக்கு தான் அவருக்கு அடுத்த ரயில்னு அப்பா சொன்னார்"
"நல்லது, உன் வீடு எங்கே? ஸ்ரீரங்கம் தானே....?"
"அதெல்லாம் தெரியுமா....?"
"தெரியும் உன்னை பத்தி எல்லாமே தெரிஞ்சிகிட்டேன் அப்போ, காதலை சொல்ல தான் நேரம் வரலை, இப்போவாது சொல்லவா....."
"மூஞ்சியும் முகரையும் பாரு, அஞ்சு வருஷம் கழிச்சு வந்து காதலை சொல்றேன்னு சொல்ற, இந்த அஞ்சு வருஷத்தில் எத்தனை பசங்களை தாண்டி வந்தேன் தெரியுமா?? இப்போ என் அத்திம்பேர் சொல்ற மாப்பிள்ளை வேற ரெடியா இருக்கான், இப்போ சொல்லவான்னு கேக்குற..."
"புரியுது உன் நடைமுறை சிக்கல் என்னனு...சினிமா மாதிரி காதலை சொன்னதும் ஓடி வந்து கட்டிபிடிச்சிட முடியாதுன்னு தெரியும்....இது வாழ்க்கை யதார்த்தமானது. அந்த நேரத்தில் காதலிக்க கூடாதுன்னு வீட்டில் ஒரே தொல்லை, இப்போ வயசு கடந்த அப்புறம் பொண்ணு கிடைக்காம எல்லா ஆசையும் பூட்டி வெச்சு, இப்போ காதலிக்க வேண்டியதுதானேனு பெரியவங்க கேக்கும்போது வரும் பாரு ஒரு கோவம்....இதெல்லாம் பசங்களுக்கு தான் புரியும் உனக்கு புரியாது."
"அதெல்லாம் எங்களுக்கு புரியும், எனக்கு 25 வயசு ஆக போகுது, 21 வயசிலேர்ந்து நாலு வருஷமா இந்த கல்யாணத்தை தள்ளி தள்ளி போட நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும், எந்த ஆம்பளைக்கும் இது புரியாது"
"இப்ப முடிவா என்னதான் சொல்ற"
"அதான் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே அதுக்கப்புறம் விதி படி நடக்கட்டும்"
பிரஷாந்த் எரிச்சல் ஆனான், அவளிடம் பேசாமல் காரை வேகமாக ஓட்டினான், திருச்சி சாலைக்குள் நுழைந்தவுடன் போக்குவரத்து நெரிசல் வேறு அதிகமாகியிருந்தது, ஒரு வழியாக எல்லாத்தையும் தாண்டி ஸ்ரீரங்கம் காவ்யா வீட்டின் முன் கார் நின்றது.
"உள்ளே வாங்க" என்று அழைத்தாள்.
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் மாமா அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவன் உள்ளே வந்ததும்....
"இவன் தான் என் அக்கா பையன் பிரஷாந்த்"
"உங்க உதவிக்கு பெரிய நன்றி, யாரும் இப்படி செய்ய மாட்டாங்க, உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்" என்றார் காவ்யா அப்பா.
"டேய் பிரஷாந்த், அம்மா கல்யாண விஷயமா யார் கிட்டயோ பேசியதாக சொன்னியே அது வேற யாரும் இல்லை இவங்க தான், இவர் பொண்ணை தான் உனக்கு பேசியிருக்கார், இவர் மூத்த மாப்பிள்ளையும் உன் கம்பெனி தானாமே, யாரோ பிரசன்னானு வைஸ் ப்ரெசிடெண்ட்னு சொன்னாங்க"
"அட பிரசன்னா சார் குடும்பமா, அவரை நல்லா தெரியும் அவர் வேற ஒரு ப்ராஜெக்ட் விபி, நான் வேற ப்ராஜெக்ட் மேனேஜர், ரொம்ப சந்தோஷம், உலகம் ரொம்ப சின்னது எல்லோரும் இப்போ தெரிஞ்சவங்களாகிட்டோம்" என்று பிரஷாந்த் உற்சாகமாக பேசினான்.
மனசுக்குள் ஏக சந்தோஷம்....
"காவ்யா பையனை பிடிச்சிருக்கா சொல்லு பேசி முடிச்சிரலாம், உன் அத்திம்பேர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று அவள் அப்பா கூற.
வெட்கத்துடன் சம்மதம் தெரிவித்தாள்.....சிறுது நேரம் பேசிவிட்டு அவன் அலைபேசி என்னையும் கொடுத்துவிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் மாமாவை இறக்கிவிட்டு நண்பனை கூட்டி கொண்டு தஞ்சாவூர் கிளம்ப தயாரானான்.
பிரசாந்த் அலைபேசியில் குறுஞ்செய்தி மணி அடித்தது....எடுத்து பார்த்தால் அவள் தான் அவளே தான் என்ன அனுப்பியிருக்கான்னா....
"ஐ லவ் யு தேவாங்கு"....ப்ரஷாந்துக்கு வெட்கம் தாங்கலை
ஒரு பக்கம் அவள் அக்கா அவள் அலைபேசியில் அர்ச்சனை செய்து கொண்டிருக்க, இத்தனையும் நடக்க காரணமாய் இருந்த அந்த அனிருத் அவளையே பார்த்து சிரித்து கொண்டிருந்தான். ஒரு வருஷமாய் காதலை நேரில் பார்த்தும் சொல்லாம, எல்லாம் கடந்த பின்பு ஒரு கிண்டர் ஜாய் சாக்லேட் தன்னோட காதலை எக்ஸ்பிரஸ் வேகத்தில் சேர்த்ததை நினைத்து அவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது.

