என் இனிய பொன் நிலாவே
என் இனிய பொன் நிலாவே
என் இனிய பொன் நிலாவே
மதியழகன் சென்னை பெசன்ட் நகர் பக்கம் போகும் ரோட்டில் வானில் உள்ள பௌர்ணமி நிலவை பார்த்தபடி அவன் காதில் அலைபேசி மூலம் "என் இனிய பொன் நிலாவே....." பாடலை கேட்டபடி வந்து கொண்டிருந்தான். பாட்டில் மயங்கி சிக்னல் பார்க்காமல் தாண்டி போக, அங்கே சாலையை கடக்கும் ஒரு பெண் மீது மோதி இடது பக்கம் நின்றுகொண்டிருந்த வண்டியில் மோதி நின்றான்.
அவன் செய்தது தான் தவறு என்று தெரிந்தது, திரும்பி பார்த்து அவளிடம் மன்னிச்சிருங்க நிலாவை பார்த்துட்டே வண்டி ஓட்டினேன் கவனிக்கலை என்றான். அவள் அவனை முறைத்துவிட்டு கடந்து சென்றாள். நான் தான் மன்னிப்பு கேட்டேனே அப்புறம் ஏன் முறைக்கிறாள் என்று நினைத்து கொண்டே வண்டியை பார்த்தால் முன் சக்கரம் பக்கம் பழுதாகி இருந்தது வண்டி நகரும்போது ஏதோ பெரிதாக சத்தம் வந்தது, அந்த நேரத்தில் போக்குவரத்து காவல் துறை யாரும் இல்லாததால் தப்பித்து கொண்டான்.
மதியழகன் மவுண்ட் ரோட்டில் ஒரு பரிசு பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளான், அவன் வீடு பெசன்ட் நகர் கடலுக்கு எதிரில் (கடல் பார்த்த வீடு). அடுத்த நாள், வண்டியை பழுது பார்க்க கடையில் விட்டுவிட்டு அவன் நண்பன் ரிஷியுடன் கிளம்பினான், ரிஷியும் அவன் வீட்டு அருகில் இருப்பவன் அவன் மகன் பள்ளிக்கு சென்று விட்டு அப்படியே கடையில் விடுவதாக கூறினான், ரிஷியின் அலுவலகம் ராயப்பேட்டையில். அவன் மூன்று நாட்கள் வேலை விஷயமாக வெளியூர் செல்வதால் அவன் மனைவி மற்றும் அம்மாவிற்கு உடம்பு முடியாததால் மகனை பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லியபடி பள்ளிக்கூடம் சென்றனர்.
கோட்டூர்புரத்தில் அந்த பள்ளிக்கு சென்றவுடன் ரிஷியின் மகன் சுஜித் ஆசிரியை பார்த்து சொல்லிவிட்டு போகலாம் என்று காத்திருந்தனர். சுஜித்தின் ஆசிரியை நிலா அங்கே வந்தாள், அவளை தான் நேற்று சாலையில் இடித்து விட்டு சென்றிருந்தான் மதி.
"இது என் நண்பன் மதி, மூன்று நாள் என் பையனை இவர் வந்து கூட்டிட்டு போவாரு நான் வெளியூர் போறேன், மனைவிக்கும் உடம்பு முடியலை".
"சரி நான் இவரோட அனுப்பறேன், ஒரு ஒப்புதல் கடிதம் மட்டும் எழுதி கொடுங்க இவர் பெயர் போட்டு என்றாள்"
ரிஷியும் எழுதி கொடுத்தான்.....
இது நடக்கும் போது நிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான் மதி......நிலாவை பார்த்துட்டே வண்டி ஓட்டினேன் சொன்னது ஞாபகம் வந்தது, ஓஹோ அவள் பெயரும் நிலா என்பதால் தான் முறைத்தலோ என்று நினைத்து சிரித்து கொண்டான். ஏனோ இன்று அவளை பார்த்தது அவனுக்குள் ஏதோ மாற்றங்கள் செய்ய தொடங்கியது.
அடுத்த இரண்டு நாட்கள் அவளை பார்த்தவாறே சென்றான் எதுவும் பேசவில்லை, மூன்றாவது நாள் தன்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவன் அலுவலக visiting card கொடுத்து gift shop வெச்சிருக்கேன் கண்டிப்பா கடைக்கு வரணும் என்று அழைப்பு விடுத்தான். எனக்கு gift வாங்கவும், கொடுக்கவும் யாரும் இல்லை எனக்கு தேவைப்படாது என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.
மதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நான்காவது நாள் மீண்டும் பள்ளி முன்பு வந்து நின்றான். நிலா பள்ளி முடித்து வெளியே வருகையில் அவளுக்காக காத்திருந்தான், நிலா வந்தாள்.
"உங்க நண்பன் வந்து அவர் பையனை கூட்டிண்டு போயிட்டாரே இன்னும் என்ன??
"நான் உங்களை பார்க்க தான் வந்தேன்"
"என்னையா? எதுக்கு?"
"உங்க கூட கொஞ்சம் பேசணும்".
"என்ன பேசணும்??"
"இங்க வேணாம் நாம பக்கத்துல coffee shop போலாமா?"
"Coffee shop?? அங்க ஒரு காபி Rs.250 இருக்குமே"
"அதுக்கென்ன நான் வாங்கி தரேன் வாங்க".
"அந்த Rs.500 என்கிட்டே கொடுக்க முடியுமா??"
"ஏன்?"
"கொடுங்க சொல்றேன்".
காசை கொடுக்க அவனை அங்கே நிற்கவைத்துவிட்டு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்று 500 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி அங்கே வெளியே இருந்த வயதானோர், முடியாதோருக்கு கொடுத்துவிட்டு வந்தாள்.
"எனக்காக வெட்டி செலவு பண்ண வேண்டாம், இப்படி ஏதாவது சமூக சேவை பண்ணுங்க புண்ணியமாவது கிடைக்கும், நீங்க என்ன சொல்ல வந்தாலும் அதை கேட்க நான் தயாரா இல்லை. இந்த காசை கேட்டவுடனே கொடுத்ததற்கு நன்றி"
சொல்லிவிட்டு நிலா கிளம்பி போய் விட்டாள். அங்கே அவள் உணவை கொடுத்த ஒருவர் இவனிடம் வந்து சாப்பாட்டுக்கு ரொம்ப நன்றி தம்பி என்று வாழ்த்திவிட்டு போனார். "நான் கொடுத்தேன்னு யார் சொன்னா என்று கேட்க, அந்த பொண்ணு தான் சொல்லிச்சு" என்று கூறினார்.
அந்த நொடி அதுவரை சும்மா பேசலாம் இருந்த அவன் இனி இவள் தான் நம் வாழ்க்கையே என்று முடிவு எடுத்துவிட்டான்.
லேசான காற்று அடிக்க மழை தூர வண்டியை ஒட்டி கொண்டே அலைபேசியை தட்டினால் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை....." சூழ்நிலைக்கேற்ப பாடல் ஒலிக்க அந்த கணம் ஆனந்தமே!
அடுத்த நாள் மீண்டும் பள்ளி வாசல் முன்பு நின்றான் இந்த முறை அவள் வருவதற்கு முன்பே அன்னதானம் கொடுத்தாயிற்று, அவள் வெளியே வந்தவுடன் அவளை பார்த்து நன்றி சொல்லிவிட்டு போனார்கள்.
"உங்களுக்கு என்ன வேணும் இப்போ".
"நான் உங்களை பார்க்க வரலை, நீங்க தான சமூக சேவை செய்ய சொன்னீங்க அதான் இங்கிருந்தே ஆரம்பிக்கலாம்னு".
"அப்படியா ரொம்ப சந்தோஷம் இப்போ கிளம்புங்க".
"இப்போ நான் கொஞ்சம் பேசியே ஆகணும்".
"எதையும் நான் கேட்க விரும்பலை, எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன்".
என்னடா இது எதுக்குமே மசிய மாற்றாளே இவகிட்ட எப்படி பேசி புரிய வைக்கிறது என்று யோசித்தான்.....அது நவம்பர் மாத ஆரம்ப நேரம்....
அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசி குழந்தைகள் தினத்திற்காக குழந்தைக்கு தேவையான பரிசு பொருட்கள் மற்றும் கலர் பென்சில்,நோட்புக் இதையெல்லாம் குறைந்த விலையில் விற்பனை செய்ய ஒப்புதல் வாங்கி, ஐந்து நாட்கள் அந்த பள்ளியிலேயே கடை போட்டான்.
அது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது அனைத்து குழந்தைகளோடும் அவன் பழகிய விதம் நிலாவிற்கு ரொம்பவே பிடித்தது மதியழகன் குணத்திலும் அழகானவனாவே தெரிந்தான் அவளுக்கு.
இன்று ஐந்தாம் நாள் அவளை பார்த்து வேலை விஷயமாக பேச முடிந்தாலும், அவள் கண் பார்வையில் இருந்ததே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மாலை அவனது பொருள்களையெல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தான். நன்கு மழை பெய்து கொண்டிருந்தது, மழை நிற்கட்டும் என்று காத்திருந்தான், வானம் இருட்ட தொடங்கியது மேலே நிலா அங்கே என்ன நடக்க போகிறது என்று எட்டி பார்த்தது. நிலா வந்தாள்....
"அவ்ளோதான் கிளம்பறேன் கடைசிவரைக்கும் என்னை பேச ஒரு வாய்ப்பு கூட கொடுக்கலை நீங்க".
நிலா மௌனமாக இருந்தாள்
"நீங்க கேட்கலைன்னாலும் பரவாயில்லை நான் சொல்லிடறேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, நான் உங்களை காதலிக்கிறேன், உங்களை நான் ரொம்ப நல்லா பார்த்துக்குவேன். உங்களுக்கு எப்போ பதில் சொல்லணும் தோணுதோ அப்போ சொல்லுங்க".
நிலா சிறுது நேர மௌனத்திற்கு பிறகு, இதையே ஒரு இரண்டு மாசம் முன்னாடி சொல்லிருக்கலாமே. நீங்களும் இரண்டு மாசம் முன்னாடி வந்திருக்கலாமே.
"என்ன சொல்றீங்க?".
"என் துரதிஷ்ட விதியை சொல்றேன்".
"ஏன் என்னாச்சு".
"இரண்டு மாசம் முன்ன எனக்கும் 60 வயசுல ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகிருச்சு".
மழையோடு இடி இடிக்க அது அவன் நெஞ்சில் இடித்தது போல் இருந்தது மதிக்கு.
"இதனால தான் நான் விலகி போனேன்".
"இப்படி வயசான ஆளை யாரு கல்யாணம் பண்ண சொன்னா?"
"எங்க அப்பா தான், அவரோட நண்பர் தான் அவருக்கு ஏற்கனவே இரண்டு கல்யாணம் ஆகி இருக்கு, இரண்டு மனைவியும் இறந்துட்டாங்க, இரண்டாவது மனைவிக்கு எட்டு வயசில் ஒரு மகளும் இருக்கா. குடிச்சு குடிச்சே வாழ்க்கையை பாழாக்கின மனுஷன், எங்க குடும்பத்து கடனை அடைச்சு தரேன் சொல்லி என்னை கல்யாணம் பண்ண வெச்சிட்டாரு. நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் முடியலை, அந்த மனுஷன் குடிச்சிட்டு வந்து அந்த எட்டு வயசு பொண்ணை போட்டு அடிக்கறதை நான் பார்த்தேன் அந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்ற தான் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். சம்பளம் வாங்கியதும் அவருக்கு முழுசா கொடுத்திறனும் இல்லைனா அடி விழும், எனக்கு இந்த மாதிரி சமூக சேவை பண்றது பிடிக்கும் ஆனால் பண்ண முடியாது அதான் மத்தவங்களுக்கு அதை சொல்லி தருவேன்" நிலா தன் கஷ்டங்களை சொன்னதும் உறைந்து பொய் நின்றான் மதி .
"உங்க நிலைமை எந்த பொண்ணுக்கும் வர கூடாது, ரொம்ப கஷ்டமா இருக்கு. என் கண் முன்னாடி மட்டும் அந்த ஆள் வந்தா கண்டிப்பா அடிச்சிருவேன்".
"அவரை அடிச்சு என்ன பயன் அதுலயே ஊறி போயிட்டார், கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்தில் எங்க அப்பாவும் இறந்துட்டார். தப்பிக்க வேற வழி இல்லை இன்றைக்கு தான் எனக்கு இந்த பள்ளி கூடத்தில் கடைசி நாள். நாளைக்கு நாங்க வேற ஊர் போக போறோம்".
"என்ன சொல்றீங்க?".
"ஆமாம், எங்கன்னு கேட்காதீங்க நான் சொல்ல மாட்டேன் அங்கேயும் வந்து நிப்பீங்க. என் தலை விதி இதான்னு இருக்கு. நீங்க என் வாழ்க்கைக்குள் வராதீங்க. என்ன கஷ்டமோ நானே அனுபவிக்கறேன். உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம். உங்களை இரண்டு மாசம் முன்னாடி பாத்திருந்தா நிச்சயமா உங்க கூட வந்திருப்பேன்".
அழுகையை அடக்க முடியாமல் சொல்லிவிட்டு நிலா சென்று விட்டாள்.
கனத்த இதயத்துடன் மதி அங்கேயே நின்றிருந்தான், அலைபேசியை காதில் மாட்டி தட்ட " நிலாவே வா....செல்லாதே வா....எந்நாளும் உன் பொன்வானம் நான்....எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே......" பாடல் ஒலித்தது.
நாட்கள் வாரங்கள் ஆனது, வாரங்கள் மாதங்களானது, மதியால் நிலாவை மறக்க முடியவில்லை. தினமும் அவன் வீட்டில் நிலா சம்பந்தமான பாடல்களை ஓட விட்டு அவன் வீட்டு மொட்டைமாடியில் அமர்ந்து கடல் காற்றுடன் நிலாவை ரசித்தபடியே ஓட்டினான்.
எந்த பெண்ணும் இப்படி ஒரு வாழ்க்கைக்கு யோசிப்பாள் ஆனால் ஒரு சிறு பிள்ளைக்காக தனது வாழ்க்கையை வலிகளாய் மாற்றிய துணிச்சல் பார்த்து அவள் மேல் இன்னும் காதல் அதிகமாகி தான் போயின மதிக்கு.
அவள் பள்ளி தலைமை ஆசிரியை ஒரு நாள் மதியை அழைத்து கோடை விடுமுறைக்கு முன் ஒரு முறை அதேபோல் கடை குறைந்த விலையில் போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அதற்கு இணங்க அந்த பள்ளியில் மீண்டும் கடை போட்டான். அப்போது நிலாவை பற்றி விசாரிக்க....ஒரு மணி நேரம் முன்பு தான் நிலா ஒரு சின்ன பெண்ணோடு வந்து அவள் சம்பள பாக்கியை வாங்கிட்டு சென்றார் என்று கூறினர்.
எப்படியாவது அவளை பார்த்து விட வேண்டும் என்று மதி ஓடினான், பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன் பார்த்துவிட்டு, கோயம்பேடு பஸ் நிலையம் சென்றான் அங்கே தூரத்தில் அவளை பார்த்துவிட்டான்.
மதியை அங்கு அவள் எதிர் பார்க்கவில்லை அவனிடம் பேசாமல் போனாள், அவன் விடாமல் பின்னால் வந்து அவள் முன் நின்றான். அவள் பொட்டு இல்லாமல், பூவில்லாமல் கலை இழந்து நின்றாள். அவளிடம் கேட்காமல் அந்த சின்ன பெண்ணிடம் சென்று அப்பா எங்கம்மா? என்றான்.அப்பா செத்துட்டாரு, சாகர வரை அம்மாவை அடிச்சிட்டே இருந்தாரு என்று சொல்ல அவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.
"இப்போ நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும், என் கூட வா"
"வேண்டாம் என்னை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு வேண்டாம், நீ ரொம்ப நல்லவன்.போயிடு".
"அப்படியெல்லாம் விட்டு போக முடியாது".
அந்த சின்ன பெண்ணிடம் சென்று,"என்னை உனக்கு பிடிச்சிருக்கா நான் யாரையும் அடிக்க மாட்டேன் உனக்கு வேண்டியதை நான் செய்றேன் நீ என் கூட வரியா எங்க வீட்டுக்கு".
அந்த பெண் நிலா முகத்தை பார்த்தபடி தலையசைத்தாள்.....
"எனக்கு நீங்க இரண்டு பேரும் வேணும், இனிமே இவ நம்ம பொண்ணு நான் பள்ளி கூடத்தில் சேர்க்கிறேன் படிக்க வைக்கிறேன். சுற்றி இருப்பவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிக்காத, நீ வா, இது நமக்கான வாழ்க்கை".
"இல்லை வேண்டாம், என்னால ஒருத்தன் வாழ்க்கையை கெடுக்க முடியாது, நீ நல்லவன், உனக்குன்னு நல்ல பொண்ணு கிடைப்பா, நீ போ" என்று துரத்தினாள்.
"உன்னை விட நல்ல பொண்ணு கிடைக்கவே மாட்டா நிலா, இந்த சின்ன வயசில் நீ ஒரு சின்ன பெண்ணுக்காக இவ்ளோ கஷ்டமான வாழ்க்கையை எடுக்கிற நீ நல்லவனா நானும் நல்லவன் தான், நான் என் உன்னை பார்க்கணும் அன்னிக்கு, மறுபடியும் எதுக்கு பார்க்கணும் பள்ளிக்கூடத்தில்?, இதெல்லாம் ஏற்கனவே எழுதி வெச்சது, காலம் தாண்டினாலும் நீ என்னவள், உன்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். நீ சொன்னியே என் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்னு, நீ இல்லனா தான் அது கெட்டு போகும், நீங்க இரண்டு பேரும் என்னோடு வந்தா அது தான் உண்மையிலேயே அந்த நிலாவை போல பிரகாசமா இருக்கும்"
மதியின் தியாக செயல் பார்த்து அவன் காலடியில் விழுந்து அழுதாள் நிலா.
மதி நிலாவோடு, குட்டி நிலாவோடும் சேர்ந்து குடும்பம் நடத்த ஆரம்பித்தான் அவர்கள் வாழ்க்கை பௌர்ணமியாய் ஜொலித்தது.
