எல்லையில்லா காதலடி
எல்லையில்லா காதலடி
எல்லையில்லா காதலடி
திருச்சி அண்ணா நகரில் ஹரிணியின் குடும்பம் வசிக்கிறது. ஹரிணி ஒரு துரு துரு சுட்டி பெண், இப்போது கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தாச்சு, ஊரில் உள்ள பல இளவட்டங்கள் அவள் பின்னால் சுற்றியும் யாரிடமும் சிக்காதவள்.
ஹரிணி வீட்டை தேடி ஒருத்தனிடம் விசாரித்தான் ஒருவன்.
"நீங்க யாரு, எதுக்கு ஹரிணி வீட்டுக்கு போகணும்" அவள் பின்னல் சுற்றிய ஒருவன், மிரட்டும் தொனியில் கேட்டான்.
"நான் யாராக இருந்தா உனக்கென்ன, இடம் தெரியும்னா சொல்லு"
"நீ யாருன்னு சொல்லு அப்புறம் சொல்றோம், பார்த்தா வெளியூர்காரன் மாதிரி இருக்க அதான் கேட்குறேன், நாங்களே ரொம்ப வருஷமா அவள் வீடு பக்கம் போயி முயற்சி செய்யுறோம் சிக்காமல் இருக்கா, நீ யாரு புதுசா"
"யோவ், நான் வேலை பார்க்க வந்திருக்கேன், அவங்க வீட்டில் பெயிண்ட் அடிக்க கேட்டிருந்தாங்க, வீடு தேடுறேன் தெரியலை அதான் கேட்குறேன்"
"ஓஹோ அப்படியா, நேரா போங்க வலது பக்கம் திரும்பினா நாலாவது வீடு, போனோமா வேலையை பார்த்தோமான்னு மட்டும் இருக்கணும் புரியுதா" என்று அனுப்பினான்.
"வேலை தான் செய்ய போறேன், பின்னே குடும்பம்பா நடத்த போறேன்" எண்டு நக்கலடிக்க.....
"அப்படி ஏதும் ஆக கூடாதுன்னு தான் சொல்றேன் கிளம்பு"
நேராக அவள் வீட்டின் முன்பு நின்றான், கொஞ்சம் பழைய வீடு தான் ஆனால் பெரிய வீடு, ஹரிணி இல்லம் என்று எழுதியிருந்தது.
"சார் வீட்ல யாராவது இருக்கீங்களா"
"யாரது?" ஒரு வயதானவர் வெளியே வந்தார்.
"ஹரி சார் வர சொன்னாரு"
"என் புள்ளையா வெளியே போயிருக்கான், நீங்க அந்த பெயிண்ட் கம்பெனியா"
"ஆமாம் சார்"
"உங்க பெயர் என்ன?"
"நகுல் சார், நிப்பான் பெயிண்ட் கம்பெனியிலிருந்து வரேன்"
"நான் அவன் அப்பா ஆதி நாராயணன், உள்ளே வாங்க, சொல்லிட்டு தான் போயிருந்தான், வீட்டை பாருங்க"
கீழே, மேலே என்று வீட்டை சுற்றி காட்டினார். கீழே இரண்டு அறை, முதல் மாடியில் இரண்டு அறை, இரண்டாவது மாடியில் ஒரு அறை மீதி பாதி மொட்டை மாடி.
"வீடு ரொம்ப நல்லா இருக்கு சார், எத்தனை வருஷம் ஆகுது கட்டி" நகுல் விசாரிக்க தொடங்கினான்.
"23 வருஷம் ஆகுது, என் மகள் பிறக்கும்போது வாங்கினது, இப்போ அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம், கல்யாணத்திற்குள்ள வீடு பெயிண்ட் அடிக்கலாம்னு தான் வர சொன்னோம். எவ்ளோ நாள் ஆகும், எத்தனை பேரு வேலைக்கு வருவீங்க"
"ஒரு வாரம் ஆகும் சார், ஆறு பேரு வருவாங்க வேலைக்கு. நான் ஆளு சொல்லிட்டு போறேன்".
"நீங்க கூட இருக்க மாட்டிங்களா? புது ஆளுங்களை எப்படி நம்புறது".
"சார் நானே உங்களுக்கு புதுசு தானே. சரி நான் கூட இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்லை".
"உங்க வீடு எங்க?"
"மதுரை தான் சொந்த ஊரு, இங்கே நிப்பான் பெயிண்ட் டீலர் நான் எடுத்திருக்கேன் மதுரைக்கும், திருச்சிக்கும். அடுத்த மாசம் தான் இங்கே கடை திறக்க போறேன், அதுக்குள்ள சார் வந்து வேலை கொடுத்துட்டாரு".
"சந்தோஷம், நீங்க வேணும்னா மாடியில் இருக்கும் அறையில் தங்கிக்கோங்க, ஒரு வாரம் தானே. எங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லை. வேலையை சுத்தமாக செய்து கொடுங்க போதும்"
"அதுக்கென்ன சார் பண்ணிடலாம், நான் இன்னிக்கு மதுரைக்கு போயிடுவேன், நாளைக்கு வரேன் வேலையை ஆரம்பிச்சிடலாம்".
இவர்கள் பேசி முடிப்பதற்குள் வெளியே சென்றிருந்த அவர் மகன் ஹரி வந்தார்.
"ஹரி எல்லாமே சொல்லிட்டேன் இந்த தம்பிகிட்ட, இங்கேயே தங்கவும் சொல்லிட்டேன். ஹரிணி கிட்ட சொல்லிடு அவள் தான் என்னவோ மாத்தணும்னு சொன்னாள்" ஆதி நாராயணன் எல்லாவற்றையும் மகனுக்கு சொல்லி முடித்தார்.
"வாங்க நகுல், இருங்க என் தங்கச்சியை கூப்பிடறேன்.
ஹரி, ஹரிணியை அழைக்க அவள் காதில் ஹெட் செட் மாட்டியபடி பாட்டுப்பாடி, ஆடியபடி வந்து நின்றாள். ஹரிணியை பார்த்ததும் நகுல் வாயை பிளந்து நின்றான்.
"நகுல், இது என் தங்கச்சி ஹரிணி. உட்புறவடிவமைப்பு (interior designing) படிச்சிருக்கா, இவள் சொல்றதை செய்யுங்க போதும், வீடு இவளுக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும் புரியுதா" ஹரி கண்டிஷன்.
"சரி சார், மேடம் உங்களுக்கு என்னென்ன வேணும்னு சொல்லிடுங்க அதுக்கு ஏற்ற மாதிரி நான் ஆளையும் கூட்டிட்டு வந்துடறேன்"
ஹரிணி ஒரு மணி நேரம் அவள் வீட்டை எப்படியெல்லாம் அழகு படுத்தவேண்டுமோ அதை சொல்லி முடித்தாள், பெயிண்ட் அடிப்பது பாதி வேலை தான் அதன் பிறகும் அழகு செய்ய பல விஷயங்கள் ஹரிணியின் யோசனைகள் இருந்ததை பார்த்து ஆச்சிர்ய பட்டான் நகுல்.
அடுத்த நாள், ஆட்களுடன் வேலைகள் ஆரம்பமானது, முதலில் ஹாலில் உள்ள சாமான்களையெல்லாம் அப்புறப்படுத்தி பட்டி பார்த்து பூசு வேலைகளை தொடங்கினர். நாலு பக்க சுவர்களில், இரண்டு பக்கம் ஒரு வண்ணமும், மற்ற இரண்டு பக்கம் ஒரு வண்ணமும் அதில் பல அழகிய வடிவமைப்புகளுடன் பார்த்தவுடனே கண்ணை பறிக்கும் வகையில் வரைந்து கொடுத்து, வண்ணமடித்து அசத்தினர்.
முதல் நாள் வேலை முடிந்து மேல் அறையில் நகுல் தங்க அவனுக்கு சாப்பாடு உபசரிப்பெல்லாம் நன்றாகவே நடந்தது.அவனும் வீட்டில் இருபவர்களிடமும் நன்றாக பேசி ஒன்றிப்போனான்.
குறிப்பாக அவர்கள் வீட்டின் மூன்று வயது குட்டி பையன் தேவ், ஹரியின் மகனோடு மிகவும் நெருக்கமாகிவிட்டான், யாரோடும் அதிகம் பேசாத, யாரிடமும் அதிகம் போகாத அந்த குழந்தை இவனோடு பேசி விளையாடுவதை பார்த்து ஆச்சிர்ய பட்டனர் அந்த குடும்பத்தினர்.
தினம் காலை வேலையாட்கள் வருவதற்குள் தேவ்வுடன் ஒரு ஆட்டம் போட்டு விடுவான், இரண்டாவது நாள், கீழே ஹரிணியின் பெற்றோர் அறை, மற்றும் பூஜை அறை பெயிண்ட் வேலை ஆரம்பமானது. அவர்கள் அறைக்கு மெலிதான கலரில் வண்ணம் பூசினார். நகுல் வரைவதிலும் வல்லவன், அவர்கள் பூஜை அறையில் வயலூர் முருகனை அப்படியே தத்ரூபமாக வரைந்து அசத்தினான். அவர்கள் பூஜை அறையே பிரகாசமாக ஆனது.
அன்று இரவு சாப்பிடும்போதும் ஆதி அவனோடு பேச்சு கொடுத்தார்.
"ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கியே? நல்ல அனுபவம் இருக்கு போல".
"ஆமாம் சார், என் வீடு முழுக்க நான் வரைஞ்ச ஓவியம் தான் இருக்கும், அது தான் பொழுதுபோக்கே, நிறைய வரைஞ்சு பல போட்டிக்கு அனுப்புவேன். என்னோட வரைபடம் மட்டுமே வைத்து கண்காட்சியே வெச்சிருக்கேன் மதுரைல. இந்த பெயிண்ட் டீலர் வேலை வருமானத்திற்கு மட்டுமே".
ஆதி ஆச்சிர்யமானார்"எவ்ளோ கிடைக்கும் இதுல உங்களுக்கு?".
"ஒவ்வொரு கம்பெனி ஒவ்வொரு மாதிரி கமிஷன் கொடுப்பாங்க, எனக்கு 8% தோராயமாக சொல்லனும்னா, உங்க வீட்டுக்கு மொத்தம் 3 லட்சம் ஆகுதுன்னா எனக்கு 25000 கிடைக்கும் இது என் ஒரு வார சம்பளம். மாசத்துக்கு இதே அளவு மூணு வியாபாரம் பிடிச்சாலே போதும் எனக்கு, என் வரையும் வேலையை நான் பார்த்திக்கிட்டு இருப்பேன். வருமானமும் ஆச்சு, கலை பணியும் தொடர்ந்த மாதிரி ஆச்சு".
"அடேங்கப்பா, ரொம்ப அருமை, ரொம்ப நல்லவனா இருக்கே நீ. உங்க அப்பா, அம்மா என்ன பன்றாங்க".
"அப்பா மட்டும் தான் இருக்காரு, அவர் தான் மதுரை கடையை பார்த்துகிட்டு இருக்காரு இப்போ".
"கல்யாணம் ஆகிருச்சா?"
"இன்னும் இல்லை சார், இப்போ தான் பார்த்துட்டு இருக்காங்க".
"சரிப்பா, நல்லது".
அடுத்த இரண்டு நாட்களில் சமையலறையும், முதல் மாடி அறைகளும் பெயிண்ட் அடிக்க தொடங்கினர். ஹரியின் அறையில் ஒரு பக்கம் சுவர் முழுக்க தேவ் முகத்தை அழகா வரைந்தான், மற்ற பக்க சுவர்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான விஷயங்களை வரைந்து கண்கவரும் வண்ணத்தையும் வரைந்து அசத்தினான்.
ஹரிணியின் அறையில் ஒரு பக்க அறையில் நந்தவனத்தில் ஓர் மரத்தில் ஹரிணி ஊஞ்சல் ஆடுவது போல வரைந்து கொடுத்து அசத்தினான்.அவன் கை வண்ணங்கள் ஹரிணி குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்திருந்தது, ஹரிணிக்கு ரொம்பவே பிடித்துப்போனது.
அடுத்த மூன்று நாட்களில், மாடி அறையும், வெளி பூசு வேலையும் ஆரம்பிக்க தொடங்கினர். கீழ் தளம் ஒரு வண்ணமும், முதல் தளம் ஒரு வண்ணமும், இரண்டாம் தளம் ஒரு வண்ணமுமென்று அடித்து முடித்தனர்.
சொன்னதைவிட ஒரு நாள் முன்பே வேலையை முடித்து கொடுத்தான்.
"காசு இன்னிக்கே வாங்கிக்கோங்க".
" நாளைக்கு வாங்கிக்கிறேன், வேற ஏதாவது வேலைகள் செய்யணுமான்னு பார்த்திட்டு சொல்லுங்க. இப்போ மதுரைக்கு கிளம்பறேன், நாளைக்கு திருச்சி பக்கம் வரேன் வயலூர் போறேன் அப்பாவோடு. அப்போ வந்து வாங்கிக்கிறேன்" என்று கிளம்பினான்.
"சரி அப்போ கண்டிப்பாக உங்க அப்பாவையும் கூட்டிட்டு வாங்க, வயலூர் என்ன விஷயமா?" என்று ஆர்வமாக கேட்டார் ஆதி நாராயணன்.
"எங்க குலதெய்வமே அதான், பொண்ணு பாக்கறாங்கன்னு சொன்னேன்ல அதுக்கு தான் வேண்டுதலாம்".
"வாழ்த்துக்கள், நாளைக்கு அப்பாவோடு வாங்க".
அடுத்த நாள் வயலூர் சென்று விட்டு அவர்கள் வீட்டிற்கு வந்தான், தன் அப்பா தனாவை அறிமுகப்படுத்திவைத்தான்.
"ரொம்ப அருமையான பிள்ளை வளர்த்திருக்கீங்க, எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு வாரத்தில் எங்க வீட்டு பிள்ளை மாதிரி ஆயிட்டார்" என்று பெருமை பேசினார் ஆதி.
"அவன் இப்படிதான் சார், அவன் பேச்சிலேயே எல்லோருக்கும் பிடிச்சிடும், அப்புறம் அவன் வரைவதை பார்த்தால் எல்லோரும் நெருக்கமாகிடுவாங்க" .
"பையனுக்கு பொண்ணு பாக்குறதா சொன்னாரு. எங்க வீட்டு பொண்ணுக்கும் மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம், உங்க மகனை எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு, என் குடும்பத்தோடும் பேசிட்டேன், என் மகளும் சம்மதம் சொல்லிட்டா. நீங்க சரி சொன்னால் நாம சம்பந்தி ஆகிடலாம்" என்று ஒரே போடாக போட்டார்.
தனா நகுலை பார்த்தார் அவன் அசடு வழிந்தான்.
"பையனுக்கும் பிடிச்சிருக்கு போல, அப்போ எங்களுக்கு சம்மதம்".
இரு குடும்பமும் பேசி அடுத்த மாதமே கல்யாணம் வைக்க முடிவு செய்தனர். கிடுகிடுவென கல்யாண வேலைகள் நடக்க தொடங்கின. நாட்களும் நகர தொடங்கின. கலயாணத்திற்கு இரண்டு நாள் முன்பு ஹரி தங்கையோடு பேசினான்.
"உனக்கு என்ன அன்பளிப்பாக கொடுக்கணும் அண்ணன்கிட்டேர்ந்து சொல்லு, உனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கேன்".
"அதான் கல்யாண செலவு எல்லாமே நீ தானே பண்ற அப்புறம் என்ன.உங்க எல்லார் அன்பு மட்டும் போதும்".
"பல பசங்க உன் பின்னாடி சுத்தினதை பார்த்திருக்கேன், என்னைக்காவது ஒரு நாள் யாரையாவது கூட்டிட்டு வந்து நிப்பேன்னு நினைச்சேன், நாங்க சொல்ற பையனை கல்யாணம் செய்ய சம்மதிச்சது ரொம்ப சந்தோஷம்".
ஹரிணி நக்கலாக சிரித்தாள்.
"யாரு சொன்னா இது நீங்க பார்த்த மாப்பிள்ளைன்னு இது நான் பார்த்த ஆளு".
"அடிப்பாவி, என்னடி சொல்ற?".
"காலேஜ் கடைசி வருஷம் ப்ராஜெக்ட் வேலையாக மதுரைக்கு மூணு மாசம் போனேன்ல அங்கே தான் முதல் முறை இவரை பார்தேன்.
பார்த்த அன்னிக்கே காதலிக்கறேன்னு சொல்லிட்டாரு. காதல்னா காதல் கண்ணாபின்னானு காதல்".
interior designing ல wall painting ல வித விதமாக வரையும் கலைக்கு எங்களுக்கு கிளாஸ் எடுக்க வந்ததே இவர் தான்.ஒரு நாள் ஒரு பெரிய படம் வரைஞ்சு கொடுத்தாரு....ஏழு ஜென்மத்திலும் அவருக்கு நான் தான் காதலி மாதிரியும் ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒவ்வொரு வேலை மாதிரியும் இனியும் தொடரும் என் காதலுக்கு எல்லையே இல்லைங்கற மாதிரி ஒரு படம் வரைஞ்சு அன்பளிப்பாக கொடுத்தாரு, அதை பார்த்ததும் தான் நானும் காதலிக்க ஆரம்பிச்சேன்.ஆளும் ரொம்பவே கண்ணியமாக தான் நடந்துகொண்டார், அவர் பேச்சு, நடை, உடை, பாவனை, முக்கியமாக அவர் ஓவியம் எல்லாமே எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. தினம் தினம் பேசினபிறகு பழகின பிறகு கல்யாணம் செய்தால் இவர்தான்னு தீர்மானமே பண்ணிட்டேன்.
அவர் வீட்டில் சம்மதம் சுலபம்னு தெரிஞ்சுது, எனக்கு என் குடும்பம் சரி சொன்னால் மட்டுமே நடக்கும்னு தீர்மானமா நான் சொல்ல, அப்போ தான் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாம்னு நீங்களே ஐடியா கொடுத்தீங்க, நான் அவரை யார் மூலயமோ உன்னை தொடர்பு கொள்ள வெச்சேன். வீட்டுக்கு வந்தால் மனுஷன் கில்லி மாதிரி எல்லோரையும் விழ வெச்சிடுவாருன்னு தெரியும், அதான் ஏதும் சொல்லாமல் நீங்களாவே சரி சொல்ற மாதிரி வெச்சோம். எப்புடி எங்க பிளான்??
"அட கேடி, இவ்ளோவும் உன் வேலையா, பூனை மாதிரி இருந்துகிட்டு எவ்ளோ பெரிய சேட்டை செய்திருக்க. அப்பாகிட்ட சொல்றேன் இரு".
"சொல்லிக்கோ, இன்னும் இரண்டு நாளில் அவர் என் புருஷன் போடா".
"அது சரி, பாரட்டறேன், குடுமபம் சம்மதம் வேணும்னு நினைச்சியே , நாங்க பாத்திருந்தாலும் இப்படி ஒரு நல்ல பையனை பார்த்திருக்க மாட்டோம் தான். வாழ்த்துக்கள்!!" ஹரி நெகிழ்ந்தான்.
அப்புறமென்ன ஹரிணி, நகுல் கல்யாணம் கோலாகலமாக நடந்தது!!
