சிவாஜி மகன் ஜெமினி
சிவாஜி மகன் ஜெமினி
சிவாஜி மகன் ஜெமினி
ஈரோடு பக்கம் கொடுமுடி கிராமம் மேல் நிலை பள்ளியில் எட்டாம் பகுப்பு படிப்பவன் ஜெமினி. அவன் பெயர் "ஜெமினி" என்று சொல்லி அழைத்தவர்களை விட,"நீ சிவாஜி புள்ள தானே" என்று அழைத்தவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு சிவாஜி அங்கே பிரபலம் அவர் அந்த ஊரில் இல்லாவிட்டாலும்.
அன்று விளையாட்டு போட்டிகளுக்கு பெயர் கொடுக்க சொல்லி மாணவர்களிடம் பேசி கொண்டிருந்தார் உடற்கல்வி ஆசிரியர் வேலுமணி.
இந்த முறையும் எதிலும் பெயர் கொடுக்காமல் இருந்தான் ஜெமினி.
"டேய் ஜெமினி உங்க அப்பன் சிவாஜி முதல் ஆளாக எல்லா போட்டிலேயும் கலந்துப்பான், நீ ஏன் தான் இப்படி இருக்கியோ? உன் அப்பனும் என் மாணவன் தான் நான் வேலையை விட்டு போவதற்குள்ள உன்னை ஒரு விளையாட்டாவது ஆட வெச்சிடனும் பாக்குறேன், நீ கேட்டாதானே!! உன் அப்பன் பெயரை காப்பாத்து" வேலுமணி சொன்னதற்கு சட்டென பதில் வந்தது ஜெமினியிடமிருந்து.
"தினமும் நான் காலையில் நடக்கிறேன், ஓடறேன், வயல் வெளியில் வேலை செய்யுறேன் அது போதும் எனக்கு. என்னை பிறந்தது முதல் பார்க்க வராத அப்பன் செய்த சாதனையை நானும் செய்யணும்னு அவசியம் இல்லை"
அவன் கடுமையாக வார்த்தைகளில் பேசியதை கண்டு வருத்தமானார்.அவன் தாத்தா பொன்னுரங்கம் அவர் நண்பர் அவரிடம் சென்று முறையிட்டார்.
அன்று பள்ளி முடித்தவுடன் கோவமாக வீட்டிற்கு சென்று அவன் புத்தகப்பையை தூக்கி எறிந்தான். அவள் அம்மா கல்யாணி அவனிடம் வந்தாள்.
"என்னடா கோவமா இருக்கியா, இன்னிக்கு யாரு என்ன சொன்னா??" கல்யாணி விசாரிக்க....
"என் பி.டி வாத்தியாரு தான். சும்மா உங்க அப்பா விளையாட்டு போட்டிக்கு போவாரு, நீயும் போ நீயும் போ....வெறுப்பா இருக்கு".
அவன் பேசி முடிக்க பொன்னுரங்கம் உள்ளே வந்தார்.
"ஏண்டா விளையாட சொன்னது குத்தமா?"
"என்னை தனியா விளையாட சொன்னால் குத்தமில்லை, என் அப்பா விளையாடினார் நான் ஏன் விளையாடமாட்டேன்னு கேட்கறாங்க பாருங்க அது தான் குத்தம்.அப்பன் செஞ்சதை பிள்ளை செய்யணும்னு அவசியம் இல்லையே. என் அப்பா எனக்கு ஏதும் செஞ்சது இல்லை நான் எதுக்கு அவர் செய்ததை செய்யணும்"
கல்யாணி அவன் பேச்சை கேட்டு கவலையானாள்.
"உனக்கு இப்போ 13 வயசாகிருச்சு, இப்போ ஒரு உண்மையை சொல்றேன் கேளு".
"என்ன உண்மை?".
"இந்த ஊர்க்காரங்க சொல்ற மாதிரி உண்மையிலேயே உன் அப்பன் மிக பெரிய மனுஷன் தான். அவன் வந்தாலே அவ்ளோ மரியாதை கொடுப்பாங்க, அவன் சொல்லுக்கு கட்டுப்படுவாங்க, அவரோட அப்பா அதான் உன் தாத்தா சின்ன வயசிலேயே விட்டுட்டு போயிட்டார் நான் தான் வளர்த்தேன், என் அக்கா பையன் தான் உன் அப்பா. நம்ம ஊரு எல்லையை கூட தாண்டாமல் இருந்த இளவட்ட பசங்களை வெளிய அனுப்பினதே அவன் தான்.நிறைய பேரை படிக்க வெச்சதும் அவன் தான். அவனை பார்த்து அவன் சொல்றதை கேட்டதனால், அவன் எல்லோருக்கும் முன் மாதிரியா இருக்கணும்னு தன்னை இன்னும் நல்லவனா, தைரியமானவனா மாத்திக்கிட்டான். பட்டாளத்தில் சேர்ந்தான். அவனை பார்த்து நிறைய பேரு சேர்ந்தாங்க. இப்படி கிராமத்தையே வளர்த்து விட்டவன் அவன் தான். அதான் ஊரு இன்னும் அவனை பற்றி பேசுது".
"இதெல்லாம் சினிமாவில் வர ஹீரோ மாதிரி படமாதான் பார்த்திருக்கேன். நிஜத்தில் அப்படி யாரும் இருக்க மாட்டாங்க.இருந்து நான் பார்த்ததும் இல்லை. என்அப்பாவை போட்டோல மட்டும் தான் பார்த்திருக்கேன்.சும்மா என்னை சமாளிக்க கதை கட்டி விடறீங்க".
பொன்னுரங்கம் கோவமாக, "ஆமாம் டா கதை கட்டி தான் விட்டேன், இப்போ சொன்னது கதை இல்லை, உன்கிட்ட சின்ன வயசில் சொன்னனே அது. உன் அப்பன் பட்டாளம் போயிருக்கான் திரும்ப வந்திடுவான், உனக்கு நிறைய பொம்மை வாங்கி தருவான்,உனக்காக எல்லாம் செய்வான்னு சொன்னேன் பாரு அது தான் கதை. ஏன்னா அது ஏதும் நடக்கலை அந்த கோவம் தான் நீ இப்படி இருக்கிறதுக்கு காரணம்.இதுக்கு மேலேயும் மறைக்க வேணாம். உண்மையை சொல்லிடறேன் உன் அப்பன் செத்து 13 வருஷம் ஆச்சு".
ஜெமினி அதிர்ச்சியானான்...."என்னது செத்துட்டாரா???"
பொன்னுரங்கம் அவனை மெல்ல அவரருகே அமர்த்திக்கொண்டார்," ஆமாம், நீ பிறந்ததே காஷ்மீரில் இருக்கிற ஸ்ரீ நகர் ஊரில், உங்க அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திட்டு என்னை பார்த்துக்க சொல்லிட்டு அவசர வேலையாக போனவன் தான். அன்னிக்கு பாகிஸ்தான் நாட்டுடன் நடந்த பெறும் போரில் 27 வீரர்கள் செத்துட்டாங்க, 12 வீரர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைச்சாங்க, 6 வீரர்கள் படுகாயம் என்ற செய்தி தான் வந்தது.நான் தான் நேர்ல போய் பார்த்தேன் அந்த 27 வீரர் பட்டியலில் உன் அப்பன் பெயரும் இருந்துச்சு. பிறந்த அன்னிக்கே அப்பனை இழந்திட்ட. உன்னை கூட்டிகிட்டு இங்கே வந்துட்டோம். ஊருக்குள்ளேயும் இன்னும் அவன் இறந்துட்டான்னு சொல்லலை அவன் பாகிஸ்தான் சிறையில் இருக்கான்னு தான் பொய் சொன்னேன். எனக்கும் உங்க அம்மாக்கும் தவிர இந்த ஊரில் யாருக்கும் இது தெரியாது. நீ வளர வளர அப்பா எங்கேன்னு கேட்ட, உன்னை சமாளிக்க ஏதாவது பொய் சொல்லிட்டே இருந்தோம், அது உன் அப்பாவை இவ்ளோ தூரம் வெறுக்கிற மாதிரி போகும்னு எதிர்பார்கலை".
ஜெமினிக்கு அந்த அதிர்ச்சி செய்திக்கு என்ன பேசுவதென்ற புரியவில்லை, அழுகை வருவது போல இருந்தது. ஆனால் அழுகை வரவும் இல்லை.
"உங்க அப்பன் உயிரோடு இருந்திருந்தால் உன்னை கண்டிப்பாக தாங்கு தாங்குன்னு தங்கியிருப்பான், அவர் அப்பா சின்ன வயசிலேயே போனதினால் தன்னோட குழந்தையை பிரியவே கூடாதுன்னு தான் இருந்தான், அதுக்காக தான் காஷ்மீர் ஆபத்துனாலும் நான் பார்த்துக்கறேன், உங்க அம்மாவை அங்கே கூட்டிட்டு போனான். ஆனால் விதி வேற மாதிரி இருக்கே".
இதையெல்லாம் கேட்டபடி, அவன் தாய் கல்யாணியும் அழுதபடியே அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
"விவரம் தெரிஞ்ச நாள்ல நீ நிறைய தடவை அப்பாவை கேட்டு அடம் பிடிச்ச, அழுத, உன்னை சமாளிக்க எனக்கு என்ன சொல்றது தெரியலை அதான் இப்படி பொய் சொன்னோம். உனக்கு விவரம் தெரியும்போது சொல்லலாம்னு விட்டுட்டோம்.மன்னிச்சிரு.அது அவரை பற்றி நீ தப்பாக எடுத்துப்பேன்னு தெரியாது. அவர் ரொம்ப நல்லவர்பா".
அடுத்த இரண்டு நாள் வீட்டில் யாரோடவும் பேசவில்லை ஜெமினி. மீண்டும் பள்ளிக்கு சென்றவன் அப்பா இல்லைனு தெரிந்தவுடன் அவர் செய்த ஏதாவது ஒன்றையாவது செய்வோமே என்று நினைத்து நேராக உடற்கல்வி ஆசிரியரிடம் சென்று ஓட்ட பந்தய போட்டிக்கு பெயர் கொடுத்தான்.
அடுத்தது அதற்கான பயிற்சியிலும் இறங்கினான், கல்யாணிக்கும், பொன்னுரங்கத்திற்கும் இந்த மாற்றம் அதிசயமாகவே இருந்தது, ஏதோ நல்லது நடந்தால் சரி என்று விட்டு விட்டனர்.
சில மாதங்கள் சென்றது, பல போட்டிகளில் அவன் வெற்றி பெற்றுவிட்டான், அவன் கிராமத்தில் "சிவாஜி மகன் ஆச்சே சும்மாவா" என்ற பேச்சும் அவன் காதில் விழ தொடங்கியது.அடுத்து மாவட்ட அளவிலான போட்டிக்கு அவனை கோயம்பத்தூர் அழைத்து சென்றனர், அங்கும் அவன் வெற்றி முத்திரையை பதித்தான்.
கோயம்பத்தூர் சென்றுவிட்டு திரும்ப கிராமத்திற்குள் வந்தவனுக்கு ஒரே ஆச்சிரியம், அவன் வீடு வந்து சேர்வதற்குள் ஊர் மக்கள் விஷயத்தை கூறி விட்டனர். "சிவாஜி ஊருக்கு வந்துட்டாரு".
மனசுக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தம், சோகம் இரண்டும். இவ்வளவு நாள் வரலைன்னு இருந்தோம், செத்துட்டாருன்னு சொன்னாங்க, இனி வர போவதில்லைனு இருந்தேன் இப்போ வந்துட்டாருனு சொல்லறாங்க என்று குழப்பத்துடன் வீட்டிற்கு செல்ல.
அங்கே பெரிய மீசையுடன் கண்கலங்கியபடி அமைதியா அமர்ந்திருந்தார் சிவாஜி, போட்டோவில் பார்த்த அதே முகம். அவரை பார்த்ததும் ஓடி சென்று கட்டி கொள்ள தோன்றவில்லை ஜெமினிக்கு. அம்மாவும், தாத்தாவும் இவனை பார்க்க சிவாஜி மெல்ல எழுந்து வந்தார்.
கீழிருந்து மேலே அவனை ஒரு முறை பார்த்தார் அவனை கட்டி அணைத்தார்.
"ஜெமினி என்னை மன்னிச்சிருடா, இன்னிக்கு தான் எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சுது. அன்னிக்கு நடந்த தாக்குதலில் உங்க அப்பா பெயர் தவறுதலாக இறந்துட்டார்னு போட்டிருக்காங்க, இத்தனை வருஷம் பாகிஸ்தான் சிறையில் இருந்திருக்கான். அப்போவே நமக்கும் தகவல் அனுப்பியிருக்காங்க ஆனால் அது வரவேயில்லை.ஆனாலும் அரசாங்கம் மூலம் ரொம்ப வருஷம் போராடி வெளிய அனுப்பியிருக்காங்க இப்போ திரும்ப வந்துட்டான், உன் அப்பன் சாகல".
ஒரு இனம் புரியாத சோகமும், ஆனந்தமும் அவனை ஆட்கொண்டது.
"நிஜமாவே நீ தான் என் அப்பாவா?, இவ்ளோ வருஷம் ஜெயில்ல இருந்தியா?"
"ஆமாம் டா கண்ணா, உன்னை இத்தனை வருஷம் தனியாக தவிக்க விட்டதுக்கு என்னை மன்னிச்சிரு, ஏதோ கெட்ட நேரம் இப்படியெல்லாம் ஆகிருச்சு, இனி நான் இருக்கேன் உனக்கு" சிவாஜி அவனை கட்டி அணைத்து கொண்டார்.
மெல்ல நாட்கள் நகர்ந்தன, சிவாஜி, கல்யாணியிடம் மகன் ஜெமினியை பற்றி நன்கு தெரிந்துகொண்டார். மகனிடம் நிறைய பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இருந்தாலும் ஒரு தயக்கம், விதியின் விளையாட்டால் மகனை 13 வருடம் பிறகு தான் பார்க்க முடிந்தது என்பதே கவலையாக இருந்தது அவருக்கு.
என்ன தான் சிவாஜி நேரில் வந்தாலும், அவர் இருக்கும் இடத்தில் ஜெமினி இருக்கவே மாட்டான், ஏதோ அவரை நேரில் பார்த்து பேச பயம் இருக்கும். ஊருக்குள் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு வந்தார் சிவாஜி, எந்த பிரச்சனை என்றாலும் சிவாஜி வீட்டை தேடி தான் ஆட்கள் வந்தனர். அவர் எப்படி பிரச்சனைகளை சமாளிக்கிறார், என்னவெல்லாம் பேசுகிறார், எப்படி மக்களை அன்பாக அரவணைக்கிறார் என்று நன்கு கவனிக்க ஆரம்பித்தான். அவனை அறியாமல் அந்த பண்புகள் எல்லாம் இப்போது அவனுக்குள்ளும் வர தொடங்கின.இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்து பழகிய மாதிரி இருந்த கதாபாத்திரம் உண்மையாக அவன் முன்னால் நடமாடியது.
அவர்களின் விவசாயத்தை பார்த்துக்கொண்டு சிவாஜி வாழ்க்கையை தொடங்கினார், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பிலும் போட்டியிட்டு வென்றார் சிவாஜி. சிவாஜிக்கும் ஜெமினிக்கும் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் சிவாஜி செய்யும் முறையை அப்படியே ஜெமினியும் செய்ய ஆரம்பித்தான், ஊருக்குள் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆரம்பித்துவிட்டான். ஊர் மக்கள் தான் வந்து சொல்லுவார்கள் உங்க மகன் உங்களை மாதிரியே இருக்கான் என்று. தனியாக தற்பெருமை கொள்வார் சிவாஜி.
வருடங்கள் ஓடியது, ஜெமினி பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பு கணிதம் படித்தான், சிவாஜி எதிலுமே தலையிடவில்லை எந்த படிப்பு வேண்டுமானாலும் படிக்கட்டும் என்று விட்டு விட்டார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நேராக அப்பாவை பார்க்க வந்தான். அவர்களுக்குள் ஒரு பந்தம் நன்றா அமையப்பெற்றது இத்தனை வருடத்தில்.
"சொல்லுப்பா என்ன விஷயம்".
"காலேஜ் முடிச்சிட்டேன்".
"சந்தோஷம், அடுத்து என்ன பண்ண போறீங்க?"
"நீங்களே சொல்லுங்க"
"உன் வாழ்க்கை, உன் கையில் நீ தான் முடிவு செய்யணும், நான் இல்லை. என்னால பண உதவி செய்ய முடியும், ஆறுதலா நாலு வார்த்தை பேச முடியும், உனக்கு என்ன இஷ்டமோ அதை பண்ணு, நான் ஏதும் கட்டாயப்படுத்தமாட்டேன்"
"அப்போ சரி, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க"
சாஷ்டாங்கமாக காலில் விழுந்தான், சிவாஜிக்கும், கல்யாணிக்கும் ரொம்பவே சந்தோஷம். ஒரு கவர் எடுத்து நீட்டினான்.
"என்னதுப்பா??"
"பிரிச்சு பாருங்க".
சிவாஜி அதை பிரித்து பார்த்ததும் கண் கலங்கினார் தன் மகனை நினைத்து.
"இவ்ளோ நாள் உங்களுக்கு தெரியாம ராணுவத்தில் சேர எல்லா ஏற்படும் செய்திட்டேன், இப்போ ராணுவத்தில் வேலை, குஜராத் போகணும் ஒரு வாரத்தில், அங்கே தான் எனக்கு ட்ரைனிங்".
"நம்ம ஊருக்குள்ள சிவாஜி புள்ளன்னு நிரூபிச்சிட்டேன், ராணுவத்திலும் செய்யணும்ல....!!" என்று ஜெமினி சொன்னது கண் கலங்கிவிட்டார் சிவாஜி.
பெருமிதமாக ஜெமினியை கட்டி அனைத்து கொண்டார் சிவாஜி!! இனி ஜெமினியும் ராணுவத்தில் ஜெயிப்பான்!
