சீதை!
சீதை!
சிவந்த மேனி.... அடர்ந்த கருங்கூந்தல்.... கருங்குவளை கண்கள்....வட்ட முகம்.... குள்ளமான உருவம் !
வசதியான வீட்டில் பிறந்தாலும்... மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியது இல்லை. படிப்பின் வாசனை தெரியவில்லை.கையில் ஏட்டைத் தொட்டதில்லை. காடு கரம்பை பார்த்ததில்லை. செல்லப்பிள்ளை! மூக்குக்கு ஆயிரம் கண்ணுக்கு பத்தாயிரம் கைகளுக்கு 20 ஆயிரம் என விலைகொடுத்து கட்டிக்கண்டு செல்ல வேண்டும் என் மகளை! எனச் சொல்லி சொல்லி தன் மகளின் அழகையெண்ணி பெருமை கொள்வார்! ஐந்தாவது பெண்ணாய் பிறந்ததால் அதிர்ஷ்டக்காரி! என மகாராணியை போல வளர்ந்தார்! செங்கமலம்.... பெயருக்குத் தகுந்தாற்போல் செங்கமலம் தான்! அன்று மலர்ந்த தாமரை மலரை போல் எப்பொழுதும் சிரித்த முகமாய்.... ராஜா வீட்டு கன்றுக்குட்டியாய்.... துள்ளி விளையாடி.... எள்ளி நகையாடி... மகிழ்ச்சியில் சுற்றி வருவாள்! எல்லோருக்கும் செல்லப் பிள்ளை! பருவம் அடைந்த உடன்.... மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியது. தன்னைப் போல தன் மகளைப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல ஒரு மருமகன் வரவேண்டும்... என்று பார்த்து பார்த்து வரன் தேடினார் காசிலிங்கம் . வரனும் அமைந்தது. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொடுத்து நகை நட்டு எல்லாம் போட்டுவிட்டு திருமணம் முடித்தார் காசிலிங்கம்.
விதி புது மாப்பிள்ளையை அழைத்துக்கொள்ள.... நெருப்பில் இட்ட புழுவாய் துடித்தாள் செங்கமலம் ! கமலம் துயரத்தில் கருங்கமலமாய் வாடினாள்...
நாட்கள் கடந்தன. கடந்த நாட்களில் நினைவாய்... கட்டிய கணவனின் உருவமாய் பிள்ளை வயிற்றில் வளரத்தொடங்கியது வேண்டாம்... வேண்டாம் அம்மா கருவை கலைத்து விடு. உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் வீட்டிற்கு வந்து விடு. நீ கஷ்டங்களை சுமந்து கண்ணீரில் மிதப்பதை நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன் வந்து விடு என்னோடு ...என்று கறாராக சொல்லிவிட்டார் காசிலிங்கம். உங்கள் பிள்ளை கஷ்டத்தை உங்களால் தாங்க முடியாது... சரி ! என் பிள்ளை செய்த பாவம் என்ன? நான் ஏன் அதை கொல்ல வேண்டும்? விதி செய்த தவறுக்கு யார் என்ன செய்ய முடியும்? ஒரு உயிருக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. என் கணவரின் நினைவாக நான் என் பிள்ளையை வளர்த்தே தீருவேன் என் பிள்ளைக்கு தாயாய் வாழ்ந்து காட்டுவேன்! என் கணவர் இல்லை என்றாலும் அவர் நினைவாகவே வாழ்ந்து முடிப்பேன். எனக்கு இதுதான் வாழ்க்கை. ஒருநாள் வாழ்ந்தாலும் என் கணவருக்கு மனைவியாய் வாழ்ந்திருக்கிறேன் இதுதான் என் முடிவு என்னை வற்புறுத்தாதீர்கள் கணவனின் இல்லம் தான் எனது வீடு,.... கோயில்! வேண்டுமென்றால் தகப்பனாய் வந்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள்! கல்யாணப் பேச்சு எடுத்துக்கொண்டு என் பக்கம் வராதீர்கள் என்று தீர்க்கமாய் சொன்னபோது கமலத்தில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியைப் போல தெரிந்தாள் செங்கமலம் . பெண்ணின் கற்பு கண்டு வாயடைத்துப் போனார் காசிலிங்கம். காலம் மாறிப் போனாலும் கம்ப்யூட்டர் யுகமே ஆனாலும்.... இன்னும் ஒரு சில செங்கமலங்கள் இந்த பூமியில் வாழ்வதைக் கண்டு பெருமிதம் கொண்டார் காசிலிங்கம் .வாழ்க பெண்ணியம் !வாழ்க பெண்ணின் கற்பு நெறிகள்! வாழ்த்தி நின்றார் கண்ணில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.... ! பெருமிதம் கொண்டார் இந்தப் பெண்ணை பெற நான் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்! என மனதிற்குள் எண்ணி பூரிப்பு அடைந்தார்... புளங்காகிதம் கொண்டார் காசிலிங்கம். படித்த பெண்களுக்கு இடையே படிக்காத சீதையாய் தெரிந்தார் செங்கமலம்.
இப்போது செங்கமலத்தின் மேனி அழகை விட அவள் கற்பு நெறி அழகாகத் தெரிகிறது! அதற்கு ஏது விலை? என் மகள் விலைமதிப்பில்லாதவள் என அகம் மகிழ்ந்தார் காசிலிங்கம்.