சுண்டுவிரலின் வருத்தம்
சுண்டுவிரலின் வருத்தம்
சுண்டுவிரலின் வருத்தம்
ஒருநாள் கையிலுள்ள ஐந்து விரல்களும் பேசிக்
கொண்டிருந்தன. அப்போது ஒவ்வொரு விரலும் தன்னைப் பற்றி
பெருமை பேசிக் கொண்டது.
பெருவிரல், "உங்கள் எல்லா விரல்களைவிட நான்தான்
பருமனானவன். மற்ற விரல்கள் என் துணையோடுதான் எந்த
வேலையையும் செய்ய இயலும்!” என்று சொன்னது.
அதைக்கேட்ட ஆட்காட்டி விரல், “யாரையேனும் சுட்டிக்காட்ட
வேண்டும் என்றால் அதற்கு நான்தான் பயன்படுவேன்!" என்று
தனது பெருமையைச் சொன்னது.
நடுவிரலோ, நாம் ஐந்துபேரில் நான்தான் எல்லோரையும்விட
உயரமானவன்" என்று பெருமையாகச் சொன்னது.
மோதிரவிரலோ, மனிதர்கள் எனக்குத்தான் தங்கம் மற்றும்
வைரத்தாலான மோதிரங்களை அணிவித்து அழகு
பார்க்கிறார்கள்!' என்று சொன்னது.
இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுண்டுவிரலோ
எதுவும் பேசாமல் இருந்தது.
மற்ற நான்கு விரல்களும், “சுண்டுவிரலே! உனக்குப் பெருமை
எதுவும் இல்லையென்று பேசாமல் இருக்கிறாய் போலும்!" என்று
கேலி பேசின. அதனைக் கேட்ட கண்டுவிரல் மிகவும் வருந்தியது.
சுண்டுவிரல் கடவுளை நோக்கி, “கடவுளே! மற்ற நான்கு
விரல்களும் என்னைக் கேலி பேசுகின்றன. எனக்கு எந்தப்
பெருமையையும் கொடுக்காமல் விட்டு விட்டீர்களே!” என்று
வருத்தத்துடன் கேட்டது.
உடனே, “சுண்டுவிரலே! நீ ஏன் வருத்தப்படுகிறாய்?
மனிதர்கள் என்னை வணங்கும் போது நீதான் என்னருகில்
இருக்கிறாய். அந்தப் பெருமை உனக்கு மட்டும்தான் உண்டு!”
என்று அசரீரி ஒன்று ஒலித்தது.
அதனைக்கேட்ட சுண்டுவிரல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
மற்ற விரல்கள் அனைத்தும் வெட்கம் அடைந்தன.
அறிவுரை: ஒவ்வொருவருக்கும் தனிப் பெருமையும்,திறமையும் உண்டு.