முதுமை யில் கிடைக்கும் பரிசு
முதுமை யில் கிடைக்கும் பரிசு
ஞாயிற்றுகிழமை காலை நேரம்..... எங்கும் அமைதி நிலவ... .. அலாரத்திற்கு அடிபணிந்து கடிகார முட்களைப் பார்த்து.. சுகத்துக்கங்களை மறந்து தினம் தினம் ஓடி... ஓடி.... களைத்துப் போன மாந்தர்கள் இன்று மட்டும் சற்று ஓய்வு கொடுத்தே படுக்கையில் கிடந்தனர். காலை 6 மணிக்கெல்லாம் களைக்கட்டும் சாலைகள் கூட ஓய்வு கண்டன.இரவெல்லாம் ஓய்வு கண்ட கதிரவன் தன் ஒளிமுகம் காட்டத் தொடங்கினான்..... பட்சிகள் தங்கள் இணையோடு அங்கும் இங்கும் பறந்தும்..... ஒருவர் சிறகை ஒருவர் தம் அலகால் கோதியும்... காதல் கீதம் பாடிக் கொண்டிருந்தன! காலை நேரத் தென்றல் மலர்களின் சுகந்தத்தை புவியெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது! பால்காரர்களும் ... கீரைக்காரப் பெண்களும் வீதி தோறும்.... வாசல் தோறும் கூவியபடி கடந்து சென்றனர். ஓரிரு பெண்கள் தங்கள் வாசலில் நீீர் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தனர்.
அனுவும் தன் வாசலில் கோலமிட நீர்த் தெளித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம்....
மெல்லிய உடல்... ஒட்டிப் போன வயிறு.... கருமை நிற தேகத்தில் தொப்பி மட்டுமே வெள்ளை நிறம்! பாவம் வறுமைத் தீயில் வாட்டிய உடல் போலும்! துணைக்கு ஓர் ஊன்றுகோல் மட்டுமே அவருக்கு பலத்தைக் கொடுத்துக் கொண்டே வந்தது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தள்ளாடி.... தள்ளாடி .... நடந்து வந்தார். சட்டென எதிர்பாராதவிதமாக நிலை குலைந்து கீழே விழுந்தார். துணையாக வந்த ஊன்றுகோலும் ஒரு புறம் ஒதுங்கிக் கொள்ள.... வாயிலும் மூக்கிலும் நீராய் ஒழுக.... கைக்கால்கள் சொடக்கி சொடக்கி இழுக்க.... என்ன செய்வதென்று புரியாமல் சாவி கொண்டு வாருங்கள்...... வாருங்கள் .... என கூச்சலிட்டாள். பக்கத்து வீட்டு பெண்மணி ஓடிவந்தார் கையில் சாவியோடு! சாவியைக் கையில் கொடுத்ததும் மெல்ல மெல்ல வேகம் குறைந்தது. சற்று நேரத்தில் நினைவு திரும்ப .... விசாரித்ததில் சிறு வயதில் இருந்தே காக்கா வலிப்பு தனக்கு இருப்பதாகவும்..... தவம் இருந்து வரம் வாங்கி பெற்ற மகன் தன்னை கவனித்துக் கொள்ள முடியாது.... போய் பிச்சையெடுத்து பிழைத்துக் கொள். இல்லையென்றால் ஆற்றிலோ குளத்திலோ விழு...விழுந்துசெத்துப் போ! நீ இனி வாழ்ந்து என்ன பயன்? என்று கூறி வீட்டை விட்டு அனுப்பி விட்டதாகவும்.... மனைவியின் மரணத்திற்கு பிறகு தான் அனாதையாகி விட்டதாகவும்..... கூறி விட்டு அழுதார்.
கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் மாத்திரை மருந்து வாங்கவே இங்கு வந்ததாகவும்..... வைத்திருந்த மீதி பணத்தில் பசிக்கு உணவு வாங்கி சாப்பிட்டு விட்டதாகவும்..... இரவு கோயில் வாசலில் உறங்கி விட்டதாகவும் ஊருக்கு திரும்பி செல்ல பணம் வேண்டி..... யாசகம் பெறவே இவ்வழியாக வந்ததாகவும் கூறினார்.
அவரின் நிலை கேட்டு பரிதாபம் அடைந்த சிலர்.... அவரவர் மனதில் பட்ட சிறு தொகைகளை அவரிடம் நீட்டினர். பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு டம்ளர் டீ கொண்டு வந்து பருகத் தந்தார். அதை ஆவலோடு நடுங்கிய இரு கரங்களாலும் வாங்கி பருகினார். எங்கோ.... ஓர் இடத்தில் இன்னும் மனித மனதில் ஈரம் இருப்பதால் தான் புவியிலும் கொஞ்சம் ஈரம் தங்கியிருக்கிறதோ.. ?
பாவம்.... முதுமையின் இயலாமை ஒரு பக்கம்.... பசிப்பிணி மறுபக்கம் .... கைவிடப்பட்டு அனாதையாகி நிர்கதியாக நிற்கும் நிலை! எத்தனை இரணம் மனதில் ஐயகோ .. இளமையில் வறுமை கொடிதா? இல்லை இல்லை.... முதுமை யில் நிர்கதி அதனினும் கொடிது. தன் நலன் கருதாது காலமெல்லாம் தோளிலும்... மார்பிலும் குழந்தைகளை மட்டுமல்ல அவர்களது எதிர்காலத்தையும் சேர்த்து சுமந்த பெற்றோருக்கு.... அனேக பிள்ளைகள் முதுமை யில் தரும் பரிசு இது தான்! வளர்ப்பு பிராணிகளுக்கு தரும் இடம் கூட வளர்த்தவர்களுக்கு கிடைப்பதில்லை! அவற்றிற்கு இடும் உணவு கூட இவர்களுக்கு வழங்குவதில்லை! எத்தனை பரிதாபம்! எத்தனை சாபம்! எத்தனை பாவம்... ! எண்ண.... எண்ண மனம் கனக்கிறது! கண்கள் பனிக்கின்றன! அனுவின் விழிகளிலும் வெள்ளம் வழிந்தோடியது.
வாழும் போது உணர்வுகளை மிதித்து இறந்த பின் உணவுகளைப் படைப்பதனால் பயன் என்ன? சிந்தனை வினவியது.
வளரும் சமூகத்திற்கு பணம் என்பது நம் தேவைக்கும் பாசத்தை பெரும் பொருட்டாக பேணி வளர்க்க... மதிக்க....மனதில் பதிப்போம்!
உணர்வுகளை மதிப்போம்! உணவுகளைப் படைப்போம்!
தகப்பனையும் தாயையும் காப்போம்!