அகம் புறம்
அகம் புறம்
அகம் புறம்
சுகுமாரன் கேரளாவை சேர்ந்தவன் மிகவும் நல்லவன், பொறுமைசாலி ஆனால் அப்பா சேட்டனோடு சேர்ந்து கண்ணுரில் சேட்டன் புட்டு கடையில் வேலை செய்ய விருப்பம் இல்லை. அவன் நினைவு முழுக்க சினிமா தான் இருந்தது.
அப்பாவிற்கு தெரியாமல் மலையாள சினிமாவில் வாய்ப்பு தேட அவனுக்கு கிடைத்ததெல்லாம் ஒரு காட்சியில் தலை காட்டும் கதாபாத்திரமே.இருந்தும் அதை நடித்தான். அப்பா சினிமா பார்க்கமாட்டார் அதனால் கவலையில்லையென்று. இப்படியே காலம் ஓட பெரிய வாய்ப்பு எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை, நண்பன் ஒருவன் சொன்னதற்காக தமிழ் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தான். இதற்குள் அவன் அப்பாவின் நண்பர் அவன் சினிமாவில் நடிப்பதை அவன் அப்பாவிடம் கூற, அவனை வீட்டை விட்டே வெளியே அனுப்பினார் சேட்டன்.
மகனின் ஆசைக்கு இடம் கொடுக்காத அப்பா மேல் வெறுப்பு தான் வந்தது, இதே சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகன் என்று பெயர் எடுத்த பிறகே மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்து கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டான் சுகுமாரன்.
தமிழ் சினிமா வாய்ப்பும் அவ்வளவு எளிதல்ல என்று வந்த சில மாதங்களிலேயே புரிந்தது. தமிழ் ஆட்களே பல பேர் வாய்ப்புக்கு காத்துக்கொண்டிருக்க நமக்கு எங்கே வாய்ப்பு என்று தனக்குத்தானே புலம்பி கொண்டான், அவன் குடும்பம் சற்று வசதியான குடும்பமே காசுக்கு பற்றாக்குறை இல்லை. இப்போது தனியாக வந்த பிறகு பசி வாட்டியது.வாய்ப்பு கிடைக்கும்வரை எங்காவது வேலை செய்தால் மட்டுமே ஓட்ட முடியும் என்று புரிந்தது. தெரிந்த வேலையோ வெறும் சமையல் வேலை. பல ஹோட்டல் ஏறி இறங்க ஒரு கேரளா ஹோட்டலில் புட்டு செய்யும் வேலையே கிடைத்தது.
"எது வேண்டாம்னு வந்தோமோ அது தான் கையில் வந்து நிக்குது" என்று வெறுத்து கொண்டான், இருந்தாலும் வேறு வழி இல்லை. வேலையில் சேர்ந்தான். அவன் சேர்ந்த நேரம் அந்த ஹோட்டல் வியாபாரம் மிக நன்றாக செல்ல தொடங்கியது. அந்த ஹோட்டலுக்கு நிறைய சினிமா பிரபலங்கள் வருவதுண்டு அவர்களிடம் பேசி வாய்ப்பு கேட்க தொடங்கினான்.
சிறு வயது முதலே அடுத்தவருக்கு உதவுவதை சொல்லி கொடுத்து வளர்த்தார் அவன் அப்பா, அதனால் அவனால் முடிந்த உதவியை அனைவருக்கும் செய்து கொடுக்க அவன் மேல் எல்லோருக்கும் எப்போதும் ஒரு நல்ல எண்ணம் இருந்தது. இப்படியே சென்று கொண்டிருக்க ஒரு தமிழ் சினிமா இயக்குனர் தாஸ் உடன் நட்பு ஏற்பட்ட்டது.
ஒரு நாள் ஹோட்டலுக்கு அவர் வந்திருந்தார்.....
"சுகுமாரா நான் ஒரு படம் பண்ணிட்டிருக்கேன், அதுல வில்லனாக நடிக்க இருந்த நடிகர் இப்போ முடியாதுன்னு சொல்லிட்டார். அந்த கதாபாத்திரத்துக்கு நீ பொருத்தமாக இருப்பேன்னு தோணுது. உனக்கு சம்மதமா வில்லனாக நடிக்க? ஒரு பெரிய நட்சித்திர நாயகன் தான் ஹீரோ அவர் கிட்டே நீ நல்லா நடிச்சு காட்டினால் இந்த வாய்ப்பு உனக்கு" தாஸ் சொன்னதும் சுகுமாரன் குதூகலமானான்.
"எனக்கு ஓகே, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எனக்கு நடிக்கணும், நல்ல பெயர் எடுக்கணும் அது தான் வேணும்".
அவனை கூட்டிக்கொண்டு அந்த நட்சத்திர நாயகனிடம் அறிமுக படுத்தினான் தாஸ். அவரும் சுகுமாரை ஏற இறங்க பார்த்துவிட்டு, அவன் நடிப்பை பார்த்துவிட்டு சரியென்று தலையசைத்தார். அன்று ஆரம்பித்ததது அவனின் பல வருட சினிமா பயணம்.
முதல் படமே கொடூரமான வில்லன் வேடம், சில மாதங்களில் படம் முடிந்து, திரைக்கு வந்தது, படம் சூப்பர் டூப்பர் ஹிட். புது முக வில்லன் நடிகர் சிறப்பாக செய்துள்ளார் என்று அவனுக்கு நல்ல விதமாக விமர்சனம் வந்தது.அப்போதும் ஷூட்டிங் நேரம் போக ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டு தான் இருந்தான். மேலும் இரண்டு படங்கள் ஒப்பந்தமானது வில்லனாக நடிக்க. சுகுமாரன் குஷியானான்.அதுவும் சூப்பர் ஹிட் ஆனது.
இதுவரை அவனை மிகவும் நல்லவனாகவே பார்த்தவர்கள் திரையில் வேறு கதாபாத்திரத்தில் பார்க்கும்போது வித்யாசமாக இருந்தது. அவனை இதுவரை பார்த்திராத பொது மக்கள் அவனை பார்த்ததும் பயந்தனர், சிலர் அவன் முன்னிலையிலேயே திட்டி தீர்த்தனர். இது ஒரு பக்கம் அவன் நடிப்பிற்கு வெற்றியாக தெரிந்தாலும் அவனின் நிஜ குணம் காணாமல் போக தொடங்கியது. அகத்தில் நல்லவனாகவும், புறத்தில் கெட்டவனாகவும் தெரிய ஆரம்பித்தான் சுகுமாரன்.
காலங்கள் ஓட ஆரம்பித்தது, சுகுமாரன் ஒரு தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக மாறி விட்டான், சுகுமாரனை வில்லனாக போட்டால் படம் ஹிட் என்று அவனுக்கு ஒரு பெரிய மார்க்கெட் கிடைத்தது. அவனுக்கு ரசிகர்கள் அதிகமாயினர், அவனை பார்த்தால் பெண்களுக்கு பிடிக்காமல் இருந்தது, குழந்தைகள் பயப்பட தொடங்கினர்.வெளி உலகிற்கு அவன் மொத்த இயல்பும் மாறி போனது. மலையாளத்திலும் இப்போது நடிக்க வாய்ப்பு அவனை தேடி வந்தது. பெயர், புகழ் சம்பாதிச்சாச்சு இனி அப்பாவை பார்க்கனுமென்று அவன் வீட்டிற்கு சென்றான்.
"எங்கே வந்த?" சேட்டன் காட்டமாக கத்தினார்.
"அப்பா எப்படி இருக்கீங்க? உங்களை பார்க்க தான் வந்தேன்".
"உன்னை இப்படி பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை".
"எனக்கு என்னப்பா குறை, நான் நல்லா இருக்கேன் , நல்லா சம்பாதிக்கிறேன், நல்ல பெயர் எடுத்திருக்கேன். இதுக்கு மேல என்ன வேணும்"
"நல்லவன்னு பெயர் வேணும், உன்னை இப்படியா நான் வளர்த்தேன், நம்ம குடும்பத்தை பார்த்தாலே கை எடுத்து கும்பிடுவாங்க அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திட்டு சினிமாவில் கெட்டவனா அநியாயம், அக்கிரமம் பண்றவனா நடிச்சு என் பெயரை கெடுக்கற".
"அப்பா அதெல்லாம் வெறும் நடிப்பு தான், உள்ளத்தில் எந்த மாற்றமும் இல்லை இன்னும் நீங்க சொல்லி கொடுத்தது போல பல பேருக்கு நல்லது செய்திட்டு தான் இருக்கேன்".
"அது எத்தனை பேருக்கு தெரியும்?."
"உதவி செய்யுறது அடுத்தவங்களுக்கு தெரியாமல் தான் செய்யணும்னு நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க".
"அது அப்போ, இப்போ உனக்கு வெளியே பொது மக்களிடம் நல்ல பெயர் இருக்கா, உன்னை பார்த்து திட்டாதவங்க இருக்காங்களா?".
"அப்பா அது வெறும் நடிப்பு, நம்ம நடிகர் நம்பியார் இல்லையா அவ்வளவு கொடூரமான வில்லனாக இருந்து நல்லவனா வாழலையா. அது மாதிரி தான் இதுவும்".
"நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது, உள்ளே நல்லவனாவும், வெளிய கெட்டவனாகவும் தெரியுற மகன் எனக்கு வேண்டாம். தொழில் நீ இது தான்னு முடிவு செய்துட்டே, இதிலே கதா நாயகனா நடிச்சு நல்ல பெயர் எடுத்திட்டு வா. உன்னை ஏத்துக்கறேன்".
"அப்பா உண்மையிலேயே சினிமாவில் பல வில்லன் நடிகர் நிஜத்தில் நல்லவங்க தான், பல நல்ல பெயர் உள்ள கதாநாயகனும் உள்ளத்தில் கெட்டவனா இருக்கிறது உண்டு தானே. இதுக்கெல்லாம் சண்டை போடணுமா".
"நான் சொல்றதை சொல்லிட்டேன், நீ போகலாம்".
சேட்டன் கதவை மூடிவிட்டார். நொந்தபடி வெளியே வந்தான் சுகுமாரன். ஒரு ஹோட்டலில் தங்க தொடங்கினான். மலையாள பட உலகில் வில்லனாக நடிக்கமாட்டேன், கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அறிவிப்பு விடுத்தான். சில மாதத்தில் அவனுக்கு மலையாள பட உலகில் ஹீரோ அந்தஸ்தும் கிடைத்தது.
சுகுமாரன் ஹீரோவாக நடித்த முதல் மலையாள படம் படு தோல்வி அடைந்தது,நிலை குலைந்து போனான் சுகுமாரன், இதை எப்படி சரி கட்டுவது என்று புரியவில்லை, மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய தொடங்கினான், சில வருடத்தில் ஹீரோ அந்தஸ்தில் வெற்றியும் கண்டான். அவன் அப்பா சேட்டன் அவனை கட்டி அணைத்தார். அவனை மீண்டும் ஏற்றுக்கொண்டார். ஊர் அறிய அவனுக்கு திருமணமும் நடந்தது.
வருடத்திற்கு ஒரு படம், அல்லது இரண்டு படம் என்று நடிக்க தொடங்கினான், சில படம் தோல்வியானது அதை சரி கட்ட பல குறுக்கு வழிகளை தேட தொடங்கினான். ஹீரோ என்ற நல்ல பெயரை தக்க வைத்து கொள்ள பல கெட்ட வேலைகள் செய்ய தொடங்கினான். இப்போது வெளிப்புறம் நல்லவனாகும் உள்ளே கெட்டவனாகவும் மாறியிருந்தான் சுகுமாரன்!
ஒரு கட்டத்தில் அவன் ஹீரோ மார்க்கெட் மொத்தமாக சரிந்தது, இனி என்ன பண்ண என்ற குழப்பத்தில் இருந்தபோது அவன் அப்பா சேட்டன் அழைத்தார்.
"டேய் இந்த சினிமா வேண்டாம்னு சொன்னேன் நீ கேட்கலை,வில்லன் வேஷம் வேண்டாம்னு சொன்னேன் அதை மட்டும் கேட்ட, நீ வில்லனாக நடித்தபோது கூட பல நல்ல விஷயங்கள் செய்திட்டு இருந்த. ஹீரோ ஆன பிறகு பல போட்டி, பொறாமை, ஏமாற்றம்னு ரொம்பவே மாறிட்ட. இப்படி நீ துவண்டு போகவா உன்னை பெத்தேன். உனக்கு வில்லனாக நடிப்பது தான் சரியென்றால் அப்படியே செய். ஆனால் எப்போதும் நல்லவனாக தான் இருக்கனும் புரியுதா".
"புரியுது அப்பா, நான் எனக்கு எது சரியாக வருதோ அதையே செய்கிறேன். அப்போ தான் மனசும் நிம்மதியாக இருக்கும்".
மீண்டும் வில்லன் வேடம் நடிக்க ஒப்புக்கொள்ள ஆரம்பித்தான் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில், கால சக்கரம் இப்போது மீண்டும் அவனுக்கு நல்லதாய் சுழல தொடங்கியது. முன்பை விட அனுபவமும்,திறமையும் அதிகமானதால், அவன் இழந்த பெயரை இரண்டு மடங்காக மீட்டு எடுத்தான் அகம், புறம் இரண்டிலும் நல்லவனாக !
