வரைந்து வண்ணமிட்டான்
வரைந்து வண்ணமிட்டான்
ஓவியன் ஒருவன்
காட்சி ஒன்றை
தன் வெள்ளை தாளில்
மையிட்ட தூரிகையின் உதவியோடு
படம் பிடிக்க புறப்படுகிறான்.
நீர் வீழ்ச்சியின் நுனியில்
வெள்ளத்தில் அடித்து செல்லாமலிருக்கும்
ஓர் மர கட்டையை பார்க்கிறான்.
அக்கட்டையை
கீழ் விழாமல் தடுத்து வைத்திருக்கும்
தண்ணீர் அரிக்காத பாறையை
அதன்பிறகு பார்க்கிறான்.
மலை உச்சியில்
பச்சை புற்கள்
வேரில் பதுக்கி வைத்திருந்த
தண்ணீர் துளிகளை
விளையாட விடுவித்து விட்டது.
ஒன்று திரண்டு
உருண்டோடி வந்த நீர் துளிகள்
நின்று கொண்டிருந்த
மரக்கட்டைக்கு
ஏற்றம் காட்டி
மடைக்கட்டிய பாறையின்மீது ஏற்றின.
நீர்நிலையும் ஏறியது.
மரக்கட்டை
பிடிப்பில்லாமல்
நீர்வீழ்ச்சியிலிருந்து கீழ் விழுந்தது.
ஓவியன் அதனை காட்சிபடுத்துகையில்
காதலர்கள் இருவர்
தங்களது உறவை
சூழல் வந்து பிரித்து செல்வது போல்
வரைந்து வண்ணமிட்டான்.