பாதை மாறிப் போச்சு!
பாதை மாறிப் போச்சு!
அந்த காலத்தில்.....
கட்டுச் சோற்றைக் கட்டிக்கொண்டு…
பிள்ளைக்குட்டிகளைக் கூட்டிக்கொண்டு…
கால்நடையா நடந்து காத தூரம் போனாலும்….
இளைப்பில்லை! களைப்பில்லை!
பார்த்த இடமெல்லம் பசுஞ்சோலைகள்…
சோலைகளுக்கு இடையே பயணப் பாதைகள்….
வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகள்…
அக்கம் பக்கம் ஓடைகள்….. கிணறுகள்…. மின்மோட்டார்கள்…
வயலில் நிற்கும் நாரைகள்…. ஆநிரைகள்….
வீசுகின்ற தென்றலும்… பேசுகின்ற பட்சிகளும்…
பூத்துக் குலுங்கும் செடிகளும்… காற்றில் ஆடும் கொடிகளும்….
ரீங்காரமிடும் வண்டுகளும்…. ஆங்காங்கே வேலை செய்யும் பெண்டுகளும்….
செல்வோர் சிந்தையைக் கவர்ந்துவிடும்! சிரமம் எல்லாம் பறந்து விடும்!
செல்லும் வழியில் எல்லாம்….
காரப்பழம்…. சூரப்பழம்… இலந்தைப்பழம்… நாவல்பழம்…
ஆலம்பழம்… அத்திப்பழம்… அழிஞ்சப்பழம்… ஈச்சம்பழம்..
கரும்பும்… இளநீரும்… நுங்கும்… வெள்ளரிப்பிஞ்சும்…
எத்தனை… எத்தனை வெள்ளாமைப் பண்டங்களும்…
தின்னத்தின்ன இனித்திடும்…. தின்றால் வயிறு நிறைந்திடும்!
பயணம் இனிதே முடிந்து விடும்! குற்றாலம்… கொடைக்கானல் தோற்றுவிடும்!
இன்றோ! காடு கரம்பை அழித்துவிட்டு…
வாய்க்கால் வரப்பைத் திருத்திவிட்டு…
கான்ட்ராக்டில் டென்டர் விட்டு விட்டு…..
பாதையெல்லாம் மாறிப்போச்சு! பளிங்கு போல மின்னலாச்சு!
வாகனங்கள் பெருகிப் போச்சு! விபத்துக்களும் கோரமாப் போச்சு!
பயணமெல்லாம் வேகமாப்போச்சு! பயண நேரம் குறைந்து போச்சு!
காணும் இடங்கள் எல்லாம் கட்டிடங்கள் வளர்ந்து போச்சு!
வளர்ந்து நின்ற மரங்கள் எல்லாம்… மண்ணோடு மண்ணாப்போச்சு!
காற்றெல்லாம் வறண்டு போய்… தென்றலும் தான் தீயாப்போச்சு!
கண்ணுக்கு எட்டிய தூரம் கானல் நீர் பரந்து போச்சு!
என்னதான்.. சொகுசு காரில்.. சுகமா சாய்ஞ்சிக்கிட்டு…
ஏ.சி. யை போட்டுக்கிட்டு…. இன்னிசைக் கேட்டுக்கிட்டு…
காசு கொடுத்து கண்டதை வாங்கி காரசாரமா கொறிச்சிக்கிட்டு….
ஆயிரம் செலவு பண்ணி… ஆங்காங்கே சுற்றி வந்தாலும்….
அந்த சுகம் வந்திடுமா? ஆனந்தத்தைத் தந்திடுமா?