உயிர்
உயிர்
பொங்கல் விடுமுறை தொடங்கியது. எல்லா போக்குவரத்து வழிகளும் நிரம்பி வழிந்தன. ஆனால் ரிசெர்வ்ட் சீட்டில் குதூகலமாக காளி வந்து அமர்ந்தான். சென்னையில் ஹார்ன் அடித்து, அந்த ரயில், பயணத்தை துவங்கியது. தஞ்சைக்கு செல்லும் வரை நீண்ட வயல் வெளி பயணம்.பேச்சு துணைக்கு யாரும் இல்லை. ஆனால் புறநகரில் ஏறிய வாசு என்றவர் என் எதிரில் வந்து பேச்சு துணைக்கு அமர்ந்தார். அவர் இரண்டு வருடங்களுக்கு முன் தான் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்வதாக கூறினார். வீட்டிற்கு சென்று அம்மாவை பார்க்க வேண்டும் என கூறினார். நானும் அதற்காக தான் அந்த ரயிலில் ஏறினேன். விடுமுறையின் போது தான் அனைவர்க்கும் தாய் பாசம் பொத்துக்கொண்டு ஊத்தும் போல. எனக்கும் தான். எதற்காக வந்தோம், யாருக்காக பணம் சேர்க்கிறோம், எங்கே கொண்டு செல்கிறோம் என எதுவும் தெரியவில்லை. ஆனால் வீட்டிற்கு செல்லும் இந்த ஒரு நாள் தான் மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. சிறு வயதில், அந்த வயல்வெளியில் ஒரு 30 size ஜட்டியை போட்டுகொண்டு Pump செட்டில் குளித்து விட்டு வீட்டிற்கு சென்று அமர்ந்ததும் அம்மா அடித்துவிடும் பவுடர் தரும் மகிழ்ச்சியை பணத்தில் பார்க்க முடியவில்லை. வாசுவிடம் தஞ்சையில் எந்த ஊரில் உள்ளார் என்று விசாரித்தபோது கும்பகோணம் என்றார். நானும் அங்கே தான் செல்கிறேன். ஊர் வந்தது. வாசு விடை பெற்றார். நான் வந்தேன். தெருவில் நடந்து வீட்டை அடைந்தேன். ஒரு ராட்சசன் என் கழுத்தை நெரிப்பது போல இருந்தது. பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள். பேச முடியவில்லை. வந்த அழுகையை அடக்கி ஒரு பெரியவரிடம் கேட்டேன், அம்மா இறந்துட்டாங்களா? அம்மா பையனா நீ, உள்ள போய் பாரு என்றார். ராட்சசன் இரண்டு கைகளையும் கொண்டு என் கழுத்தை நெரிப்பது போல இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது ராட்சசன் என்னைக் கண்டு அஞ்சி ஓடினான். வெளியே வந்தேன். அது அம்மா இல்லை. ஒரு நிம்மதி என் மனதில் பரவியது. அதே பெரியவரிடம், அய்யா இங்க மாரியம்மா? என்று கேட்டேன். அவங்களா தம்பி, அவங்க வீடு காலி பண்ணி பக்கத்து தெருக்கு போய் ரெண்டு மாசமாவுது என்றார். வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்த போது மனம் மேலும் மகிழ்ச்சியடைந்தது . அம்மா கட்டி அணைத்துக்கொண்டார். பையை தூக்கி எறிந்துவிட்டு, கட்டிலில் படுத்தேன். அம்மா சொன்னார், பக்கத்து தெருவுல ஒரு இழவு விழுந்திடுச்சி பா, கொஞ்சம் வரியா போய் பாத்துட்டு வரலாம்? என்று. களப்பா இருக்கு மா, நீ போய்ட்டு வா என்றேன். வா பா போலாம், இப்ப எல்லாம் கொஞ்ச தூரம் நடந்தாலே தல சுத்துது என்று கெஞ்சினாள். வாழ்க்க கொடுமை. சிறு வயதில் நாம் அம்மாவிடம் கெஞ்சுவோம், ஆனால் இப்பொழுது அம்மா கெஞ்சுகிறாள். சட்டென்று ஒரு சட்டையை போட்டுகொண்டு நடந்தேன். நான் முதலில் சென்ற அதே வீடு. உள்ளே வாசு சிலையை போல அமர்ந்து அந்த பிணத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் வேகமாக ஓடி சென்று அமர்ந்தேன். அழுதேன், அழுதேன், அழுதுகொண்டேயிருந்தேன்.அவனை விட அதிகமாக அழுதேன். ஒரு கணம் மனதில் தோன்றியது, சில்லறை உயிர் எப்படி ஒரு மனிதனை நிலை குலைய செய்கிறது!
