பாடும் நிலா
பாடும் நிலா
“பாடும் நிலா” – மதுரை முரளி
“கான சரஸ்வதி” பெயர் பதிக்கப்பட்ட அந்தப் பங்களா வீடு.. பாடகர் கோபாலின் வீடு .
முகப்பில் பலவித இசைக் கருவிகள்.. பல வடிவங்களில்., சுவரை அலங்கரித்து, கோபாலின் மூச்சு.. இசை எனப் பார்வையிலேயே, பார்க்கையிலே அறிவிக்க,
டைனிங் டேபிளில் கோபால் பையன் மதன்.. நேற்றைய விழா நினைவுகளில் மூழ்கினான்.
அவன் முன்னால் இருந்த இட்லி சாம்பாரில் ஊறிக் கொண்டிருந்தது.
“ டேய்.. மதன், என்னடா அப்படி யோசனை? கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைன்னு சொல்றமாதிரி. சுடச்சுட இட்லி தட்டில இருந்தும், வாயில போடாம?” பாசமாய் அருகில் வந்து அம்மா சாவித்திரி மதன் தலையைத் தடவினாள்.
“ அ..அம்மா..அது” வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள,
பிச்சுப் போட்ட இட்லி பிடிவாதமாய் உள்ளே இறங்க மறுத்தது.. தொண்டையில்.
“ ஹக்..ஹக்” புரையேறி , இருமினான் பலமாய் மதன்.
பதறி.. அவன் முதுகையும், தலையையும் தட்டி தடவிய தாய் சாவித்திரி , அவன் கண்களில் வழிந்த கண்ணீரை கண்டு அதிர்ந்து போனாள்.
“ ஏன்? என்னாச்சு மதன்? “ தன் புடவைத் தலைப்பால் அவன் கண்களைத் துடைத்த அம்மா சாவித்திரி பதற,
“ அ.. அம்மா, நேற்றைய கச்சேரியில, நான் நல்லா பாடினனேனாம்மா? நேற்று ராத்திரி என்னையப்பத்தி அப்பா ஏதாவது குறை சொன்னாரா? “ கேட்கும்போதே குரல் கம்மியது மதனுக்கு.
“ டேய்.. ஏண்டா இப்படி தப்பாக் கற்பனை பண்ணிக்கிறே? நேற்றுதான் நீ, முதல் முறையா அப்பாகூட பாடினே. முதல்மேடை அனுபவம். .அருமையாத் தான் பாடின. அப்பாவும், பாராட்டத்தானே செஞ்சாரு. வீட்டுக்கு வந்ததும் உடனே உனக்கு திருஷ்டி சுற்றி போடச் சொன்னாரே! அப்புறம் என்ன?”
அம்மா சாவித்திரி எவ்வளளோ கூறியும், மனம் சம்மதிக்காமல் மீண்டும், மீண்டும் கேட்டான் மதன்.
“ அ..அம்மா., அப்பா பெரிய பாடகர். பல மொழிகள்ல ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி, நூற்றுக்கணக்கான விருதுகள் வாங்கியிருக்கிறாரு. அவரோட ஒரே பையன் நான்..இந்த மதன். அவரோட பெயரைக் காப்பாத்தலைன்னாலும், கெடுத்திட மாட்டேன் இல்லையாம்மா?”
அம்மாவின் கையைப் பிடித்து , அதில் தன் முகத்தில் பொத்தி அழத்தொடங்கினான்.
“ டேய், டேய்.. அடடா! அழாதடா. என்னால தாங்க முடியாதுடா. அப்பாவுக்கு தெரிஞ்சா அவரும் அழுதிடுவார். இப்பத்தானே பாட ஆரம்பிச்சிருக்கே.. நீ. அவருக்கு இணையா.. அவருடைய பெருமையை நிச்சயம் நீ நிலைநாட்டுவே.”
அவசர, அவசரமாய் தட்டில் இருந்த இட்டிலியை, விண்டு அவன் வாயில் ஊட்ட, சற்றே திணறலோடு விழுங்கினான் மதன்.
“ அம்மா.. தப்பா நினைக்காதம்மா. அப்பா.,அவர் பெரிய ஆலமரம் இந்த சினிபீல்டுல. பெரிய நடிகர்கள் எல்லாம் இவரோட குரல் மூலமா ரசிகர்கள் மனசுல வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. என்னால, அவரோட இமேஜையும் மீறி வெளில வர முடியுமா? எனக்கு ஆண்டவன் அந்த சக்தியை கொடுப்பானா?”
பேசும்போதே உடம்பு நடுங்கியது மதனுக்கு.
“ அடடா.. இதான் உன் கவலையா? பயமா? ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க திறமை, உழைப்புக்குத் தகுந்த உயர்வை நிச்சயம் கொடுப்பான். உன்னோட இடம்.. உன்னைத் தவிர வேற யாராலேயும் நிரப்ப முடியாது. புரியுதா?”
பாசமாய் அம்மா சாவித்திரி தட்டிக் கொடுக்க..
மெதுவாய் சமாதானமாகி, சாப்பிட்டு எழுந்து தன் அறையை அடைந்தான் மதன்.
“ஐ” பேடை உயிர்ப்பித்து காதில் ஹெட்போன் சொருகி புதிய சங்கதியைக் கவனிக்க தொடங்கியவன் பார்வையில்..
அப்பா கோபாலின் ஷீல்டுகள்.. அடுக்கடுக்காய் அலமாரிகளில்..அறை முழுவதும்.
கொலு பொம்மைகள் கணக்கில் கண்ணில் பட்டது.
சுற்றிலும் பார்வையை ஓட விட்ட மதன்,
அப்பா முன்னிலையில் தனது எட்டாவது வயதில் பாடிய போட்டோவைப் பார்க்க,
உள்ளுக்குள் உற்சாகம் பிறக்க.. மனம் பின்னோக்கி பறந்தது.
அப்பா.. எவ்வளவு அருமையான மனிதர். அவர் பாடத் தொடங்கிய நாட்களில், வசதியில்லாத வாழ்க்கையில் கச்சேரிகளுக்கு கால்நடையாய், சைக்கிள் பயணமாய்ப் போன அனுபவத்தை அடிக்கடி பகிர்வது பழக்கம்.
இன்று அதிகாலையிலேயே, இலண்டன் பறந்து போய் விட்டார்.. அங்கே..பாட்டுக் கச்சேரி.. .இவன் உறக்கம் உதிக்கும் முன்., முறிக்கும் முன்.
என்ன ஒரு உழைப்பு!. எவ்வளவு ஒரு ஈடுபாடு.. தொழிலில்!! ”
“ நீ.. உன்னை நேசிப்பது போல் உன் கனவை/ லட்சியத்தை நேசி. அல்ல சுவாசி.” அடிக்கடி அப்பா சொல்வதுண்டு.
மீண்டும், கேட்ட சங்கதிக்கு மனதைத் திருப்பி பத்து நிமிடம் பயிற்சி செய்ய..
“ அந்த”ப் படம் கண்ணில் பட்டது.
அப்பா, தன் குருநாதர் கோதண்டராமன் அவர்களது கையில் தன்னை ஒப்படைத்துக் கூறிய வார்த்தைகள், இப்போதும் காதில் ஒலிக்கிறது, மதனுக்கு.
“ குருவே.. என் வாழ்க்கையில் ஒளி ஏற்றி என்னுடைய இந்த புகழுக்கு முழு காரணம் நீங்க. எனக்கு எல்லாமே நீங்கதான். ”
“ ஆனா, அடிப்படையில எனக்கு சங்கீத ஞானம் கிடையாது. வெறும் கேள்வி ஞானம்தான். என் பையன் முறையா.. சாஸ்திரிய சங்கீதம் உங்ககிட்ட கத்துக்கணும் . என்னுடைய வேண்டுகோளும் கூட. அதன் மூலமா நல்ல ஒரு முழு தகுதியான கலைஞனாஅவன் வரணும். அதுக்கு உங்க ஆசீர்வாதமும், கல்வியும் வேண்டும்.” சொன்ன அப்பா சாஷ்டாங்கமாய்த் தன்னோடு, குருவில் காலில் விழுந்து நமஸ்கரிச்ச காட்சி மனக்கண்ணில் விரிய,
“ அப்பா.. யூ ஆர் ரியலி கிரேட்.” மானசீகமாய் வணங்கினான் மனதுக்குள் மதன்.
“ தட், தட்..” கதவு தட்டப்பட... திறந்தவன் பார்வையில்..
வாசலில் அம்மா சாவித்திரி.
“ என்ன.. இன்னமும் யோசனையா இருக்கே போல? “ மதனின் கையைப்பிடித்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்த,
கோழிக்குஞ்சு…கோழியின் பாச அரவணைப்பு வளையத்துக்குள் உணருகின்ற உணர்வு ..அவனுள்.
“ அம்மா.. எனக்கு அப்பாவை நிறைய மிஸ் பண்ற மாதிரி பீலிங் வருது. குடும்பத்துல நம்மளோட அவர் செலவு பண்ற நேரம் மிகக்குறைவு. எனக்கே.. வருத்தமா இருக்கு. அப்ப உங்களுக்கு எப்படி?”
மெல்ல சிரித்த சாவித்திரி,” டேய்.. இதுதான் புகழின் மறுபக்கம். அப்பா.. தன்னுடைய தனிமை, உரிமை, சுதந்திரம் இவற்றை இழந்ததோடு மட்டுமல்ல நம்மளோட செலவழிக்கிற நேரத்தையும் தொலைச்சு வருடங்கள் பல ஆச்சு. வாழ்க்கையில ஒண்ணை இழந்தால்தான் மற்றொன்றை அடைய முடியும் . ஆனா., அவர் உங்கப்பா வெளிநாடு போனாக்கூட நம்மளோட எப்போதும் தொடர்பில் தான் இருக்காரு. He is Gem. அவரால தான் நமக்கு இந்த அந்தஸ்து, வசதி , செல்வாக்கு எல்லாம்.. புரியுதா?”
அம்மாவின் அறிவுரை மதனுக்குப் புரிந்தாலும், மனம் ஏனோ.. அதை முழுமையாய் ஏற்க மறுத்தது .
“ நான் கூட.. அப்பா குரலில்தான் பாடறேன். இயற்கையாகவே அமைஞ்சிடுச்சு. ஆனா, அப்பா ரொம்ப கண்டிப்பு. என் பாணியில பாடாம, உனக்குன்னு ஒரு பாணியில பயிற்சி பண்ணுன்னு.. சத்தம் போட்டார். இல்ல?”
“ சரிதான். என்ன செய்ய? இயற்கையும், இறைவனும் கொடுத்த வரம் அவருடைய குரல் வளம்.. அப்படியே அது உனக்கு.” பாசமாய் அவனைத் தட்டிக் கொடுத்தாள் சாவித்திரி.
“ அம்மா.. நானும், சினிமா தயாரிப்பு, மியூசிக் கம்போசிங்னு முயற்சி பண்ணி, இப்ப திரும்ப அப்பா பாதிப்பில , அவரை மாதிரியே ,அவர் கூடவே பாட வந்துட்டேன். “ சந்தோசமாய் மதன் சிரிக்க,
“ சரி, சரி..அடுத்த வாரம் நீயும், அப்பாவும் சேர்ந்து பாடுற பெரிய நிகழ்ச்சி இருக்கு. இப்பவே, அதற்கு தயாராக ஆரம்பி “ சற்று கண்டிப்புடன் அம்மா கூற,
“ ம்..,புரியுது. அப்பா வேற.. இன்னைக்கு நைட்டு பாடச்சொல்லி கேட்பார். ம்., இதோ பயிற்சியைத் தொடங்கிட்டேன்.”
காதில் வழிந்த இசைக்கு தன் குரலைக் குழைத்து பாடத் தொடங்கினான் மதன்.
நேரம்.. எட்டு அடைந்ததைக் கடிகாரம் ‘குயில்’ குரலில் அறிவிக்க,
டி.வி.யில் ஐபிஎல் போட்டி.. மும்பை இந்தியன்ஸ் -- சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்.
நாடுகளைக் கடந்து உலகம் ஓரணியில்.
ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த மதன்,
“ மதன்., அப்பா வீடியோ கால். உன்கிட்டப் பேசணுமாம். ” அம்மா அழைக்க,
அவசரமாக எழுந்து ஓடி, அம்மாவை அடைந்தான்.
“ டேய், நானும் நாலு தடவை கூப்பிட்டேன். அப்படி என்னடா கிரிக்கெட் ? அப்பா.. பாவம் ஜெட் லாக்ல இருந்தாலும், உங்ககிட்ட பேச லைன்ல இருக்கார்.”
அம்மா சாவித்திரி கண்டிப்பு குரலில்.
“ அ..அப்பா, சாரி நான் கவனிக்கல. பயணம் எப்படி? லண்டன் போயிட்டீங்களா? “
“ ஆமா.. மதன். இங்கேயுள்ள பி.பி. சி. தமிழோசையில்தான், நான் இருக்கேன். எனக்கு ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு நேர்முகம் . அடுத்த முறை, உன்னையும் கண்டிப்பா அழைத்து வரச் சொல்லியிருக்காங்க. என்ன? “ மகிழ்ச்சியாய்க் கோபால் சற்று நிறுத்த,
“ சரிப்பா. நானும் இன்னும் பிரபலம் ஆகலை. “ இலேசாய்ச்
சங்கடப்பட்டான்.
“ மதன், டேய்.. நீ யாருடா? என்னையவிட பெரிய ஆளா வருவ. அதுவும் உனக்கு சாஸ்திரிய சங்கீதம் நல்ல அடிப்படை. ஹா..ஹா ” அப்பாவின் சிரிப்பில் அந்த அறையே அதிர்ந்தது.
கூடவே, அம்மாவின் முகம் மகிழ்ச்சியில் பூர்ணசந்திரனாய் ஒளிர,
மதன் கண்களின் ஓரத்தில் துளி நீர் எட்டி பார்த்தது.
“ மதன், இப்பதான் என் பேரன்.. அதான் உன் பையன் சரண் கிட்ட பேசினேன். மருமக காவ்யாகூடவும் இப்பதான் பேசினேன். வீடியோ கால்ல. சரணைப் பார்த்தேன். ஆமா.. நீ காலையிலிருந்து அவ கிட்ட பேசலியாமே. ஒரே புகார் மயம். என்ன நீ ரொம்ப பிஸியோ? “ சிரித்தவாறே கோபால் கேட்க,
“ இல்லப்பா. சரணுக்கும் ரெண்டு வயசு ஆயிடுச்சு இல்ல? நல்லா சிரிச்சு பேசுறான். காவ்யா இன்னும் பத்து நாள், ஊர்ல இருக்கணும்னு கேட்டா. அதான், எனக்கு காவ்யா மேல கோபம்.”
“ டேய், டேய்.. காவ்யாவும் ஒரே பொண்ணு. அவங்க அப்பா, அம்மாவும் பேசினாங்க. பத்து நாள் தானே இருந்துட்டு வரட்டும். காவ்யா எனக்கு மருமகள்இல்லை மகள். நமக்கு, நம்ம வீட்டு பொண்ணு. என்ன புரியுதா? சரண் வீட்டுக்கு வந்ததும், சீக்கிரமே அவனுக்கு நான் குட்டி, குட்டியா ஸ்லோகம் சொல்லித் தரப்போறேன். அதான்.. எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். “
“ ஆமா, ரொம்பத்தான் அவசரப்படாதீங்க.” அம்மா சாவித்திரி நடுவில் நுழைய,
ஒரே குஷியாய் ஓடிப் போனது ஒரு மணி நேரம்.. குதூகலமாய்.
ஒரு வாரம் ஓட்டமாய் ஓட,
கோபாலின் ஐரோப்பா பயணம் சிறப்பான வெற்றியுடன் இனிதே நிறைவடைந்தது.
மதன் ஏர்போர்ட்டில் அப்பாவை காரில் அழைத்து வர,
வழி நெடுக.. மனைவி, மகனிடம் ஐரோப்பா வார இசை நிகழ்ச்சி தொகுப்பை விரைவுச் செய்தியாய் வாசித்து முடித்தார் கோபால்.
அடுத்து வந்த மாதங்களில், தான் பாடிய மேடைக் கச்சேரிகளில் மகன் மதன் பாட வாய்ப்புகள் தானாக அமைய, மகிழ்ந்து போனார் கோபால்.
“ டேய் மதன், என்னோட புகழ் உனக்கு ஒரு ஏணியா இருக்கிறதை நான் விரும்பல. நான் ஒரேயொரு படியா.. முதல் படியாகத் தான் இருப்பேன். நான் எந்தவொரு பின்னணி பாட்டுக்கும் உன்னைய பரிந்துரைப்பேன்னு எதிர்பார்த்து ஏமாறாதே. உனக்குள்ளே ஒரு கலைஞன் இருக்கான். அவனுக்கு கதவு திறந்து , காட்சியைக் கொடு. காலம் வெற்றியைக் கொடுக்கும்” அப்பா சற்று கண்டிப்புடன் பேசிவிட,
“ என்னங்க.. நம்ம பையன். இவனுக்கு வளர்ற பாதையை நாம தான் ஏற்படுத்துணுமே தவிர, இப்படி பேசாதீங்க. “ மனைவி சாவித்திரி வருத்தப்பட்டாள்.
“ ஒண்ணு புரிஞ்சுக்கம்மா. அலையடிச்சு, அலை விலகாது. நிச்சியமா, நம்ம மதன் நல்ல பிரமாதமான பாடகரா வருவான். டோண்ட் ஒர்ரி “ மகனை முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு கோபால் வெளியே கிளம்ப,
மகனைப் பார்க்க சாவித்திரிக்கு சற்று தர்ம சங்கடமாய் இருந்தது.
“ டேய், அப்பா என்ன சொன்னாலும் அது உன் நன்மைக்கே. அத புரிஞ்சிக்க.”, சமாதானப்படுத்த முயல ,
“ ஆமா..அம்மா. இதாம்மா என் பிரசினை. என்னால வேறு ஒரு விஷயத்திலேயும் கவனம் செலுத்த முடியல. எந்த நேரமும், அப்போவட புகழ், நிழல் என் மேல. ஒர் அழுத்தமா ” பேசிக்கொண்டிருக்கும்போதே,
“ அப்பா.. இன்னைக்கு நாலு ஸ்லோகம் கத்துக்கிட்டேன் தாத்தா கிட்ட. “ ஆசையாய் மகன் சரண் மடியில் அமர,
“ போடா.. அம்மா கிட்ட போ. அப்பாக்கு வேலையாயிருக்கு ”
பொறுமை இழந்து மகன் சரணை இறக்கிவிட்டான் மதன்.
“ டேய்.., அவனுக்கு இன்னும் மூணு வயசுக் கூட முடியல. அதுக்குள்ள, எவ்வளவு அழகா, நல்ல ராகமா ஸ்லோகம், பாட்டு எல்லாம் பாடுறான். அவனைப் பாராட்டி கொஞ்சி மகிழாம ..ஏன்டா இப்படி நடந்துக்குறே? “
“ அ..அது.. என் நிலைமை தெரியாம நீங்க ஏம்மா? “
“ தப்புடா. எல்லாருக்கும் வாழ்கையிலே வருத்தம் இருக்கும், ஏமாற்றம் இருக்கும், தனிப்பட்ட முறையில் பல சந்தர்பங்களில . அதை எப்படி, மத்தவங்க மேல காட்ட நமக்கு உரிமை இருக்கு? போடா. போயி குழந்தையோட , குழந்தையா விளையாடு. காவ்யா ,குழந்தையையும், கூட்டிகிட்டு கார்ல ஒரு ரவுண்டு போயிட்டு வா. நான் அப்பாக்கிட்ட மென்மையா நடக்கச் சொல்றேன் ”
மகனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் சாவித்திரி.
மாதங்கள் மீண்டும் மறைந்து, ஆண்டுகளாக மாற…
மதனும் திரையுலகில் பாடகனாகத் தன் பயணத்தைப் பதிவு செய்தான்.
பல திரைப்பட பாடல்களைக் கோபாலுக்கு இணையாகவும், கோபாலோடு இணையாகவும் பாட, பாராட்டுகள் பல தேடி வந்தது. கூடவே, வாய்ப்ப்புகளும்..
உள்ளுக்குள் பெரிய மகிழ்ச்சி மதனுக்கு.
அதோடு, இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தனி ஆவர்த்தனம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.
அன்று இரவு டிவி ஃபிளாஷ் நியூஸ்.. மதனை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.
“ வணக்கம். கடந்த ஆண்டிற்கான மத்திய அரசின் பத்மபூஷன் விருதுக்கு பிரபல பின்னணி பாடகரான கோபால் தேர்வு. “
“ அம்மா.. அம்மா .. “ சந்தோஷப்பூரிப்பில் அலறி, அம்மா சாவித்திரியைத் தேடி ஓடினான் மதன்.
“ எ..என்னாச்சு? ” அதிர்ச்சியாய் அவள்.
“ அப்பாவுக்கு இந்த ஆண்டு பத்மபூஷன் விருதை, மத்தியஅரசு அறிவிச்சிருக்காங்க “
“ ஆமா., நானும் இப்பத்தான் பார்த்தேன் “மகிழ்ச்சியில் தொண்டை கட்டிக்கொண்டது சாவித்திரிக்கு .
கையிலிருந்த செல்போனில் வீடியோ காலில் கோபால் வேறு அழைக்க,
அழைப்பிற்கு பதில் சொல்ல , காற்றைத் தவிர வேறு பாஷை இல்லாது போனாள் சாவித்திரி.
மதன் “ பட்” டெனப் போனை வாங்கி,
“ அப்பா.. வாழ்த்துக்கள். அம்மாவுக்கு ஒரே ஆனந்தக் கண்ணீர். பேச்சே வரலை” இவனும் குரல் உடைய,
மறுமுனையில் கோபாலும் உடைந்தார்.
ஒரே “ பா” சீரியல், பழைய சீரியஸ் படமாய் மாறிப் போனது அந்த நிமிஷங்கள்.
“ சாவித்திரி, இப்பதான் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சொன்னாங்க. இந்த ஆண்டு எனக்கு “ பத்மபூஷன்” விருது. இறைவனுக்கும், உங்க எல்லோருக்கும் நன்றி. நான் என் மும்பை ரிக்கார்டிங்கை மாற்றி வைச்சிட்டு, சீக்கிரமே வீட்டுக்கு வந்துடறேன்” எனப் போனை வைத்தாலும்,
அடுத்தடுத்து வந்த வாழ்த்து அழைப்புகளில் , பேசியே களைத்துப் போனார் கோபால்.
பரபரப்பாய் நடந்து முடிந்த பத்ம விருது விழாவை தொடர்ந்து.,
கோபாலுக்கு ஒரு மாபெரும் மரியாதை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது தமிழ்த்திரை உலகம்.
உள்ளூர், வெளியூர் மீடியாக்களின் நேரடி ஒளிபரப்புக்கிடையில் விழா மேடைக்கு வந்தார் கோபால்.
மகன் மதனுடன் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர்,
அடுத்து வந்த பல மணி நேர இசை நிகழ்ச்சியில் பல பாடல்களைப் பாடி அசத்தினார்.
இறுதியில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த அவரது ஏற்புரை..
மேடையில் மீண்டும் ஏறத் தொடங்கிய கோபாலுக்கு, இலேசாய் சுவாசம் முட்டியது.
சமாளித்தவர், “ ம.. மதன், இங்கே வா.” பாதி பேச்சும், பாதி ஜாடையுமாய் அழைத்து , மைக்கப் பிடித்தவர்..
மயங்கி விழ,
விழா மேடை கலவரப்பட்டு போனது.
இன்றோடு இரண்டு மாதம் ஓடி விட்டது கோபால் சுயநினைவு இழந்து.
“ கோமாவில்” கோபால். அதீத சந்தோசம்., அதிக இரத்த அழுத்தம்.. காரணம். மருத்துவரின் கணிப்பு.
பிரபல தனியார் மருத்துவமனையில் , தனிச் சிறப்புப் பிரிவில் கோபாலுக்கு முதல் தளத்தில் இரு அறைகள்.
பல்வேறு மருத்துவ முயற்சிகளுக்கு இடையில் கோபால் பாடிய பாடல்கள், பக்திப்பாடல்கள் அவருக்கு முழு நினைவுத்திறன் கிடைப்பதற்காக... இசைக்கப்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் அவரது கை லேசாய்த் தாளமிட்ட செய்தி ..
இலட்சக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய்.
நாட்கள் நகர, நகர மருத்துவமனை முயற்சிகள் பலதரப்பட்ட கோணங்களில்.
இறுதிக்கட்ட முயற்சியாய் ..மீண்டும் அதே பாராட்டு மேடை. லட்சக்கணக்கான ரசிகர்கள் வேண்டுகோளின்படி, அவர்கள் முன்னால்
மகன் மதன் மேடையேறிப் பாடினன்.
உருண்டு வந்த கண்ணீருக்கு இடையில் கரைந்து, கரைந்து பாட...
மேடையின் ஒதுக்குப்புற அறையில் கோபால் சக்கர நாற்காலியில் மருத்துவர்கள் சுற்றிலும்.
அவனது அசைவுக்காக காத்திருந்தனர்.
நிகழ்ச்சியும், தனது இறுதி கட்டத்தை அடைந்து விட,
கோபால் மட்டும் உணர்வு இல்லாது அப்படியே.
விழா நிறைவு இறைப் பிரார்த்தனை பாடல்.
முன்னணி சங்கீத கலைஞர்கள் கோரஸாய் பாடி உருக, உருக்க,
ஒரு அசைவும் இல்லை கோபாலிடம் அப்போதும் .
சோகங்கள் அப்பிக்கொண்ட முகங்கள்..
சோதனையில் சோபிக்காத வருத்தத்துடன்,
விழாவின் பிரார்த்தனைப் பாடல் நிறைவுபெற,
திடீரென “முதாகராத்த மோதகம்..” பாடல்.
கோபால் பேரன் சரணின் குரலில்..பக்திமயமாய் ஓங்கி ஒலிக்க,
அரங்கில்... ரசிகர்களின் கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தது.
பெரிய எல்.சி.டி திரையில் சக்கர நாற்க்காலியில் தோன்றினார் கோபால்.
திடீரென கோபாலின் விரல்கள் லேசாய்த் தளம் போட, அவரது கண்கள் ஈரமாய் கசியத் தொடங்கிய காட்சியைக் கண்டு, இரசிகர்கள்
“ வாழ்க.. பாடும் நிலா. வா.. வா.. மீண்டு வா. மீண்டும்.. வா”
உற்சாகமாய், உணர்ச்சிப் பிழம்பாய் கோஷமிட,
அடுத்த பத்து நாளில்.. கோபால், சுயமாய் உட்கார்ந்து.. கைகூப்பி வணங்கும் காட்சி, நாடு முழுவதும்.. எல்லா சமூக தளங்களில்.
கூடவே, “ பாடும் நிலா” பாடுவார் விரைவில்… தலைப்புச் செய்தியுடன்.
