மாய ஊஞ்சல்
மாய ஊஞ்சல்
"எப்பவும் அதே ராகி இட்லி, பச்சை பயறு தோசைதானா? வேற எந்த சமையலையும் உங்க அம்மா உனக்கு கத்துத்தரலையா? பக்கத்து வீட்டு காயத்ரி அக்கா தினமும் எவ்ளோ வரைட்டியா லஞ்ச் செஞ்சு சுப்பு அண்ணாவுக்கு குடுத்து விட்றாங்க தெரியுமா.. நீயும் 4 வருஷமா இதத்தான் செஞ்சு தர்ற" என்று சிவா அனுவிடம் தினசரி பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான். "அவருக்காகத்தான எவ்ளோ வொர்க் டென்ஷன் இருந்தாலும காலைல சீக்கிரமா எழுந்து, டிஃபன், லஞ்ச் செஞ்சு குடுத்து விடறேன்.. சாயங்காலம் ஆபீஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து டிஃபன் வேற செய்யறேன்... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி குறை சொல்றதுக்கு என்ன?? என்று இவளும் புலம்பிக் கொண்டே நாட்களைக் கடந்து விடுவாள்.
இருவருமே கோயம்புத்தூரில் IT கம்பனியில் பணிபுரிபவர்கள். இருவரும் ஒரே கம்பனி ஆனால் வேற வேற ஜாப். ஹோட்டல் உணவு உடம்புக்கு ஆகாது என்பதாலேயே அனு பெரும்பாலும் வீட்டிலேயே உணவைத் தயார் செய்து விடுவாள். தனது சமையல் சுவையாக இருப்பதைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே நினைப்பவள் அனு. ஆனால் சிவா அப்படியே அனுவிற்கு எதிர். உணவில் சுவை இருந்தால் மட்டுமே உணவை உண்பான். இல்லையேல் நண்பர்களுடன் வெளியில் சாப்பிட்டு வந்துவிடுவான். சாப்பாடு பிரச்சினை மட்டுமே அவர்களுக்குள் நடக்குமே தவிர, காதலுக்கும் அன்பிற்கும் சிறிதளவும் சண்டை வந்ததில்லை. சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக் கிழமையும் அவர்களுக்கானது. அந்த வாரத்தில் ரிலீஸான புதிய படங்களை பார்த்துவிடுவது, ஷாப்பிங், என்று அந்த வாரத்தில் விடுமுறையை தனக்கென செலவிடுவது அவர்களுக்கான வழக்கம்.
அன்று இருவரும் காலை உணவை முடித்து விட்டு ஆஃபீஸ் சென்றனர். லஞ்ச் டைமில் சிவா அணுவிற்கு கால் செய்தான். "அணு டார்லிங்! ஒரு குட் நியூஸ் டா! அய்யா அமெரிக்கா போக போறேன்! அடுத்த ஒரு வாரம் அங்கதான்.. ongoing project விஷயமா நானும் எங்க டீமும் ஒரு இண்டர்நேஷனல் கன்பெரன்ஸ் அட்டெண்ட் பண்ண போறோம் டார்லிங்..." என்றான் குஷியாக. அணுவும் சிவாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேற போவதைக் கண்டு மகிழ்ந்தாள்.
ஒரு வாரத்திற்கு தேவையான துணிகளுடன் சில பல பொடி வகைகளையும் எடுத்து வைத்து பேக்கிங் செய்தாள் அனு. அதை பார்த்த சிவா, "என்னடி இது? நா போகப் போறது அமெரிக்காவிற்கு... இந்த பொடியெல்லாம் எடுத்து வைக்காதாடி.. அங்க எனக்கு பிடிச்ச food items இருக்கும்டி" என்றான் நக்கலாக.
திருமணம் ஆனதில் இருந்து இருவரும் பிரிந்ததே இல்லை. இதுதான் அவர்களுக்கு முதல் பிரிவு என்பதால் அனு முகம் வாட்டம் கண்டது. அவளது அழகிய முகம் சுருங்கியதைக் கண்டு சிவா, " அடியே பொண்டாட்டி! எதுக்குடி இப்ப முகத்த தூக்கி வச்சிருக்க! மாமா ஒரு வாரத்துல வந்துடுவேன்.. இதுக்கு போய்....என்று அணைத்துக் கொண்டான். சரி உன்னோட ஞாபகமாக இந்த பருப்புப் போடிய வேணும்னா எடுத்துட்டு போறேன் என்றான். அன்று இரவு முழுவதும் பேசிக் கொண்டே கழிந்தது.
அடுத்த இரண்டாவது நாள் அமெரிக்கா வந்து சேர்ந்தான் சிவா. அவர்கள் கம்பனி உடன் இணைந்து வேலை பார்க்கும் கம்பனியில் இருந்து வந்தவர்கள் சிவாவையும் அவனுடன் வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். உணவு முடித்தவுடன் கன்பரன்ஸ் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தது. மூன்றாம் நாள் காலை, தன் மனைவியின் ஷாம்பூ வாசம் மிக்க கூந்தல் மணத்தை நினைவுபடுத்தியது. சுவையான இட்லி சாம்பாரின் வாசத்தை நுகர வேண்டும் என்று தோன்றியது.
சிறு சிறு நினைவுகள் தூறல் போட, தனது மனைவியின் ஏக்கம் நீண்டது. மீதியிருக்கும் இரண்டு நாட்களையும் கஷ்டப்பட்டு கடந்தான். பயணம் முடித்து வீடு திரும்பியதும், தன் ஆசை மனைவியை அணைத்துக் கொஞ்சினான். அடியே பொண்டாட்டி உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் என்று அன்பு மழை பொழிந்தான். சரி டி நா சாப்ட சூடா ரெண்டு இட்லி எடுத்து வைடி கூடவே ஒரு பத்து பதினஞ்சு முத்தங்கள் பார்சல் என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றான். அவனையே வியந்து பார்த்துக்கொண்டு நின்றாள் அனு.
நீண்ட தூரம் பயணம் செய்ய, சிறிது இடைவேளை மிகவும் அவசியம்
கணவன் மனைவிக்குள்..