மாமல்லனின் காதலி
மாமல்லனின் காதலி
இளஞ்சூரியன் தன் கிரணக் கைகளை மெல்ல நீட்டி அனைவரையும் தட்டி எழுப்பும் இளங்காலை நேரம் பறவைகள் எல்லாம் ஆனந்த ராகம் இசைக்க மெல்ல உடலை முறுக்கி பஞ்சனையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் விம்மி விம்மி நொந்துக்கொண்டே எழுத்தாள் இவ்வளவு சீக்கிரமே விடிந்துவிட்டது என்று.
அவள் மெல்ல கால்களை எடுத்து கீழே தரையில் வைத்ததும் என்னவோ அந்த மருதாணி பூசிய பிஞ்சு கால்கள் நோகின்றன. அதற்கேற்றாற்போல கொலுசுகளும் சிணுங்குகின்றன. எழுந்து நின்றவுடன் ஏன் எழுந்தாய் என்ற பாவனையில் இடைவரை தொங்கிய கூந்தல் ஆடியாடி கேள்வி கேட்கிறது. அந்த இடுப்பு என்னவோ முறிந்துவிடுவது போல மூங்கிலாய் வளைந்து நிற்கிறத, மார்கச்சையில் இருந்து விம்மி விம்மி வெளியேவர தவழுகின்றன மாங்கனிகள்.
கழுத்திலே ஹாரங்களும் முத்து மாலைகளும் நிலை தடுமாறி எங்கிருக்கின்றன என்பதே தெரியாது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடிக்கொண்டு இருக்கின்றன. கோவைப்பழ சிவப்பு போல இதழ்கள், அந்த காலையில் கூட அவை மங்காது பிரகாசித்து இருந்தன. அந்த கண்களில் இன்னும் தூக்கம் களையவில்லை. தொங்கிய முடியை அள்ளி கொண்டை போட்டவள் திடீரென உற்சாகம் கொண்டவளாக வீட்டின் பின்கட்டை நோக்கி ஓடினாள்.
சிவகாமி என்னமா இவ்வளவு ஓட்டம் என நடுகூடத்தில் இருந்து அவளது அப்பா ஆயனர் கேட்க, ஒன்றுமில்லை அப்பா, இன்று என் அரங்கேற்றம் அல்லவா? அதற்குத் தயாராகப் போகிறேன். நீங்களும் சீக்கிரம் தயாராகுங்கள், இதோ நானும் வந்துவிடுகிறேன்.
அடுப்பிலே குளிக்க வெந்நீர் நல்ல சூட்டில் கொதித்துக் கொண்டு இருந்தது, அருகிலே இருந்த கிணற்றில் சடசடவென கயிற்றில் கட்டியிருந்த குடத்தைப் போட்டு நீரை இரைத்தாள்.
அந்த முருங்கைப்பிஞ்சு போன்ற கைகள் எப்படிதான் அத்தனை வேகமாகவும் லாவகமாகவும் இழுக்கிறது, கை நோகவில்லையோ என்னவோ... வெந்நீரையும் தண்ணீரையும் பதமான சூட்டுக்கு விளாவி, அருகில் இருந்த கல்லியே உட்கார்ந்து அப்படியே மெல்ல தலையிலிருந்து ஊற்றினாள். கருங்கூந்தல் தாண்டி வழிந்து மூக்கை நனைத்து கழுத்துவழி இறங்கி மார் தாண்டி இடை படித்து பாதம் வந்து பணிந்து சென்றது. உண்மையிலேயே அந்த வெந்நீர் தான் எவ்வளவு கொடுத்துவைத்தது.
குளித்து முடித்ததும் அகிலும் சந்னமும் புகைந்து அவள் மயிர் உலர்த்த காய்ந்து கொண்டு இருந்தன. அந்த மணம் வீடே கமகமத்தது. அம்மா சிவகாமி தயாரா? அதோ வாசலில் அரங்கு செல்ல வண்டி வந்துவிட்டது. மன்னரும் வந்துவிடுவார் சீக்கிரம் ஆகட்டும் அம்மா என்று விரைவுபடுத்தினார் ஆயனர்.
அதோ வந்துவிட்டாள் பாருங்கள், சுருள் சுருளாய் வரி படர்ந்தது போல நெற்றியில் அந்த முன் மயிர்கள் ஊஞ்சலாடுகின்றன, நெற்றியிலே நல்ல சிவந்த குங்குமம் பிராகசமாய் மின்னியது. கையில் வளையல்கள் கலகல பாட்டு பாடின, இடையில் மேகலை தொற்றிக்கொண்டு இருந்தது எப்போது கீழே விழுவோமென தெரியாமல்.
அவள் நிறத்துக்கு எடுப்பாக நல்ல அரக்கு நிற புடவை உடுத்தியிருந்தாள். கனகாம்பரமும் முல்லையும் கலந்து கட்டிய சரம் தலையை அலங்கரித்தது. முயல்குட்டி போல துள்ளித் துள்ளி ஓடிவந்தாள் வீட்டின் முற்றத்துக்கு.
வண்டி புறப்பட தயாராய் குதிரைகள் பூட்டி நின்றிருந்தது. ஆரண்ய வீட்டில் இருந்து புறப்பட்ட வண்டி நேரே காஞ்சி அரண்மனை நாட்டிய அரங்கத்தை நோக்கி புறப்பட்டது.
அரங்கத்தில் மலர் தோரணங்களும், குலை வாழை மரங்களும், மாவிலைகளும் கட்டி அலங்காரமாய் இருந்தது.
முழவு, மத்தளம், நதசுரம், குழல் என அத்தனையும் வாசிப்பவர்களும் அவர்களுக்குரிய இடத்துக்கு வந்தாயிற்று. தலைக்கோலும் உரிய இடத்தில் வைக்கப்பட்டு தயாராய் உள்ளது. ஊர் மக்களும், அமைச்சராகளும், மற்ற பிராதினிகளும் வந்தாயிற்று. இன்னும் அரங்கேற்றுபவளும், அரசரும் மட்டுந்தான் வரவேண்டும். அதோ குதிரைகளின் குளம்பொலி கேட்கிறது...
அதோ இரண்டு குதிரைகள் வருகின்றனவே... முதல் குதிரையில் வருவது சற்று வயசான ஒருத்தர் ஆனால் தோற்றம் அப்படி இல்லை நல்ல ஆஜானுபாகுவான கருத்த கேசத்துடன் இடையில் உடைவாளுடன், கூர்மையான பார்வையால் வரும் வழியை ஆராய்ந்து கொண்டே சிரித்த முகமாய் வருகிறார்.
அவர்தான் மகேந்திர பல்லவர். பின்னால் வருவது பத்தொன்பது வயது வாலிபன் வலுவான உடல், அங்கங்கே நல்ல கட்டுகள், குதிரையில் அமர்ந்திருக்கும் தோரணையே பார்ப்போரை கவர்ந்துவிடும். கூரிய நாசியும், ஆழ்ந்த கண்களும் வடிவான முகமும், வழிந்து தொங்கும் கேசமும் மதிமயக்கி இன்ப லோகம் கூட்டிச் செல்லும் எனலாம். அவன் பெயர் ஏதோ நரசிம்மனாம், ஆமாம் மாமல்லன் நரசிம்மனே தான்.
தந்தையின் பின்னே அடக்கமாய் வந்தது அந்த குட்டி. மண்டபத்தின் முன் வரிசையில் வந்து அமர்ந்தனர். அந்த நேரத்துக்குள் பின் வாசல் வழியே வந்து சிவகாமி ஒப்பனை அறையில் நுழைந்து ஏற்கனவே அழகாய் இருந்த தன் கண்கள், காதுகள், மூக்கு ஆகியவற்றுக்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டாள். இதோ முன் மண்டபத்துக்கு அழைப்பு வந்தாயிற்று.
காஞ்சி நகர மக்களே! இன்று நம் ஆயன சிற்பியின் மகள், அழகில் நிறைந்தவள், அறிவில் உயர்ந்தவள் சிவகாமி தேவி தன் நாட்டியக் கலையை அரங்கேற்றுகிறாள். அவளது தந்தை நாட்டை கற்சிற்பங்களால் அழகூட்டினார், இவளோ நாட்டியத்தால் பெருமை செய்கிறாள் என்று மகேந்திரர் முன் வந்து சபைக்கு அடக்கம் தெரிவித்தார்.
மருதாணி பூசிய கால்களில் சதங்கை கட்டி, கை நிறைய வளையல் அணிந்து, குங்குமத் திலகம் இட்டு அந்த வானத்து தேவதைகளே பொறாமை கொள்ளும் வண்ணம் அரங்கில் வந்து நின்று வணக்கம் வைத்தாள் சிவகாமி.
அவ்வளவு தான் மத்தளங்களும், ஜதி கட்டையும் ஒலிக்க மெல்ல அடி பெயர்த்து முத்திரை வைக்கத்தாள். அதுவும் தோடுடைய செவியன் என்ற பதிகத்தை திருநாவுக்கரசரே பாட அதற்கும் நாட்டியமாடி தன் திறமையை ஊருக்குப் பறைசாற்றினாள் சிவகாமி.
அவ்வளவு மக்கள் நிறைந்த சபையிலும் பெரியோர்கள் முன்நிலையிலும் மன்னவன் இருக்கையிலுமே அவளது கண்கள் நரசிம்மனையே அதிக நேரம் விழுங்கியது. அவனது கண்களோ அன்று முழுதும் ஆயுளுக்கும் தேவையான அளவு அவளை பார்வையாலே காதலித்தான்.
சந்திக்காத இடமில்லை, பேசாத வார்த்தை இல்லை, சொல்லாத வாக்கு இல்லை எல்லாம் காற்றோடு போனதோ தெரியவில்லை. இருவரின் காதல் அந்த இருவரைத்தவிர வேறு யாரும் அறிந்திடா வண்ணம் சிறு கூட்டுக்குள் பெருங்காதல் பறவையை அடைத்து பெருங்கொடுமை செய்தனர். எல்லாம் கௌரவம் என்ற மாயையின் பொருட்டு.
அவளுக்கு உயிரைத்தரும் அளவுக்கு இருந்த காதல் இவனுக்கு தகப்பனை விட்டு வெளியே வருமளவுக்குக் கூட இல்லை. உருகி மறுகி காதலித்து கடைசியில் உளம் சோர பிரியாவிடை பகர்ந்து பறந்து சென்றுவிட்டான்.
களத்தில் எதிர் நிற்பவரை பதைக்கச் செய்த மாமல்லன் அவன் இன்று காதல் களத்தில் புறமுதுகிட்டு ஓடிவிட்டான். அவளோ எதிரியிடம் அகப்பட்டு நீ இல்லையேல் உயிரில்லை என்று சபதமிட்டு சாதிக்க காத்திருக்கிறாள். ஆம் அவள் இன்றும் மாமல்லனின் காதலி தான்... அவளே சிவகாமி.