கோப்பெருஞ்சோழன்
கோப்பெருஞ்சோழன்
சங்க காலச் சோழ மன்ன புலவர்கள்
கோப்பெருஞ்சோழன்:
உறையூரைத் தலைநகராகக் கொண்டு உலகோர் போற்ற நாடாண்ட சோழ அரசர்களுள் கோப்பெருஞ்சோழனும் ஒருவன். நட்பின் இலக்கணத்திற்குச் சிகரமாக விளங்கிய இவன் பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய இருவருக்கும் உயிர் நண்பன். இவன் தன்பிள்ளைகள் இருவரோடு கருத்து வேறுபாடு தோன்ற பகைமை ஏற்பட்டுப் போர்செய்ய முற்படும்பொழுது புல்லாற்றூர் எயிற்றியனாரால் சமாதானம் செய்யப்பட்டான். இவ்வரசன் செய்யுள் இயற்றுவதில் வல்லவன். இவன் பாடியதாக ஏழு பாடல்கள் கிடைக்கின்றன. (குறுந்.20,53,129,147,
புறம். 214,215,216)
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும்.”
என்னும் குறளுக்கு இலக்கணமாய் விளங்கிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி வைக்கக் கூறினான். அப்பொழுது பிசிராந்தையார் வாரார் என்று கூறிய சான்றோரிடம் பிசிர் என்ற ஊரில் வாழும் என் நண்பன் என் உயிரைப் பாதுகாப்பவன் அவன் என்னிடத்து செல்வம் உள்ள காலத்து வராமல் இருப்பினும், எனக்குத் துன்பம் வந்த காலத்து வராமல் இருக்கமாட்டான் என்று நட்பின் ஆழத்தை
“செல்வக் காலை நிற்பஅல்லற் காலை நில்லலன் மன்னே”
என்ற புறப்பாடல் விளக்குகின்றது. மேலும் அவன் தன் பெயரைக் கூறும் பொழுது என் பெயர் பேதைமை கொண்ட சோழன் என்று என் பெயரையே தன் பெயராகக் கூறும் நெருங்கிய அன்புரிமை கொண்டவன் என்பதை,
“தன்பெயர் கிளக்கும் காலை, ‘என் பெயர்பேதைச் சோழன்’ என்றும்,
சிறந்த காதற்கிழமையும் உடையன”
என்று பிசிராந்தையாரைப் பாராட்டுகிறான். இத்துடன் இவன் தம் பாடல்வழி, நல்வினை செய்வதற்கு நெஞ்சத் துணிவு வேண்டும். உயர்ந்த குறிக்கோளில் மனதைச் செலுத்துவது நல்லது. நல்வினை செய்தால் வானுலக வாழ்க்கைக் கிட்டும் என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான அறச்சிந்தனைகளையும் எடுத்துரைத்துள்ளான்.
சங்க காலத்தில் தமிழரசர்களும் அறிவு நிறைந்த புலவர் பெருமக்களாய் உலகம் போற்ற நாட்டை ஆண்டனர். கல்வியின் பெருமை உணர்ந்த அவர்கள் அதனைப் போற்றி வளர்த்தனர். பொருளின் சிறப்புணர்ந்து அதை நல்வழியில் ஈட்டி அறவழியில் செலவழிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். மானம் அழிந்த பின் வாழ்வதை இழிவாகக் கருதி அரசாட்சி நடத்தினர். சுருங்கக் கூறின் எல்லாப் பண்புகளிலும் தலைசிறந்தவராய் விளங்கியுள்ளமையை அறிய முடிகிறது. இத்தகைய பண்புகளைப் பெற்ற அரசர்கள் பாடல் புனைந்து பாவலராயும் விளங்கினார்கள்.
சோழ அரசப் புலவர்கள் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்ற பெருமைக்குரிய சோழநாட்டை ஆட்சி செய்த சங்க காலச் சோழ மன்னர்களில் கோப்பெருஞ்சோழன், சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, சோழன் நல்லுருத்திரன், மாவளத்தான், வீரைவெளியன் தித்தன் ஆகிய அறுவரும் அரசப் புலவர்களாக காணப்படுகின்றனர்.