STORYMIRROR

Sridhar Venkatasubramanian

Drama Inspirational Others

3  

Sridhar Venkatasubramanian

Drama Inspirational Others

காலம் மாறிப் போச்சு

காலம் மாறிப் போச்சு

2 mins
191


"ஏங்க , ஆட்டோக்காரனோடு என்ன சத்தம் போட்டுக் கொண்டு இருந்தீங்க ?"

ஆபீஸ் டூர் முடிந்து சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த மகாதேவனிடம் , அவர் மனைவி கேட்டதற்கு அவர்,

"வர வர மெட்ராஸ் ரொம்பக் கெட்டுப் போச்சு .சென்ட்ரல் ஸ்டேஷனில் ஆட்டோக்காரங்க ரொம்ப தொல்லை பண்ணறாங்க .மீட்டருக்கு மேலே 20-25 ரூபாய் கூசாமக் கேட்கறாங்க . கேட்டா பெட்ரோல் விலை ஏறிப் போச்சாம் .பத்தாதற்கு லக்கேஜ் சார்ஜ் வேற கொடுக்க வேண்டுமாம் "


"ஏங்க , இதற்காக அவங்களோட எதற்கு சண்டை போடறீங்க . கேட்டதை கொடுத்து விட்டு ஆபீஸ் டூர் பில்ல எழுதிடுங்க. ஆபீஸ்லே என்ன கேள்வியா கேட்கப் போறாங்க ."


"அபீஸ்லே பணம் கிடைக்கும் என்கிறதாலே கரெக்டான ஆட்டோ சார்ஜ் 50 ரூபாய்க்கு , 75ரூபாய் கொடுக்க வேண்டுமா . நாமும் உண்மையாக இருக்க வேண்டும் , அதே சமயம் மற்றவர்கள் அநியாயம் செய்வதையும் தடுக்க வேண்டும் " என்று முடிவாகக் கூறினார் மகாதேவன் .


மறு நாள் அபீஸ் சென்றவுடன் டூர் பில்லை மகாதேவன் , மானேஜரிடம் கொடுத்தார் .


"என்ன !, மிஸ்டர் மகாதேவன்,சென்ட்ரலிலிருந்து அடையாறுக்கு 50ரூபாய் போட்டு இருக்கீங்க. மீட்டருக்கு மேலே கொடுக்க வேண்டியிருக்கவில்லையா."


"எங்க சார் ! பயங்கர சண்டை சார் , ஆட்டோக்காரங்களோட சென்ட்ரல் ஸ்டேஷன்லே. போலீஸ் உதவியோட மீட்டர் சார்ஜ்க்கு மேலே ஒரு பைசா அதிகமா கொடுக்காம ஆட்டோ பிடிச்சு வந்தேங்க . வீட்டு வாசல்லே இறக்கி விட்டு திட்டி விட்டு போனான். ஆனா நான் இதுக்கெல்லாம் பயப்படற ஆள் இல்லீங்க. எனக்கு எதிலும் நியாயம் வேண்டும் . "


"மிஸ்டர் மகாதேவன் முதல்லே டூர் பில்ல ஆட்டோ சார்ஜ் 50 ரூபாயை மாற்றி 100 ரூபாயாக போட்டு கொண்டு வாங்க.இரண்டு நாள் முன்னாலேதான் நான் ஹெட் ஆபீஸுக்கு சப்மிட் பண்ணின என் பில்ல சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து அடையாரில் என் வீட்டுக்கு ஆட்டோ சார்ஜ் 100 ரூபாய் போட்டிருந்தேன்.நீங்க இப்படி சத்தியசந்தனா பில் சப்மிட் பண்ணினீங்க ,என் மானம் கப்பல் ஏறிடும்.பிசாத்து 50 ரூபாய்க்காக உங்களை மாதிரி ஆட்டோகாரங்களோட தெருவிலே சண்டை போட்டு திட்டு வாங்கினா, என் ஸ்டேடஸ் என்னவாகும். ஆபீஸ்லே பணம் கொடுக்கும் போது கௌரவமா வாங்கறதை விட்டுட்டு ,என்னய்யா , நியாயம் , தர்மம் என்கிறீங்க. மிஸ்டர் மகாதேவன்,காலம் மாறிப் போச்சு .பேசாம நான் சொல்ற மாதிரி பில் சப்மிட் பண்ணுங்க ."என்றார் மானேஜர் கோபமாக.


மகாதேவனுக்கு நின்ற இடத்திலேயே தலை சுற்றியது .

 

 

 

 

 

----------------------------------நிறைவு பெற்றது--------------------------------------



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama